பலவீனம் -ரேவதி

 

பலவீனம்

சிறப்பு சிறுகதை - ஏய்.. சீதா நில்லு..

 

காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வந்து பார்த்தேன், மணி எட்டு ஆகி இருந்தது.

ஒன்பதரை மணிக்குள் பெரம்பூரில் உள்ள என் ஆபிசுக்குப் போகவேண்டும்.  நேரமாகிவிட்டது. சரியாகக் கூட உலராத முடியை வாரிப் பின்னல் போட்டுக் கொண்டேன்.  முகத்திற்குப் பவுடர் போட்டு நெற்றியில் மை இட்டுக் கொண்டேன்.  மணி எட்டரை ஆகி விட்டது.  அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.

திருவள்ளுவர் சிலை ஸ்டாப்பிங்கில் வந்து நின்றேன்.  பஸ் அவ்வளவு சீக்கிரம் வருவதாகத் தெரிய வில்லை. 

என்னைப் போல பஸ்ஸின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞனின் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  என் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டேன்.

உர்…ர்… என்ற உறுமலுடன் ஒரு பல்லவன் வந்து குலுங்கலுடன் நின்றான்.  அதிலிருந்த சில இளைஞர்களின் கண்களும் என்னையே உற்று நோக்குவதைக் கண்டேன்.  சில மணிநேர இன்பம் போலும்.

உடம்பெல்லாம் கூசியது. சேலைத் தலைப்பை இறுக்கமாக இழுத்து கைப்பையுடன் சேர்த்துப் பிடித்துக் கொண்டு நின்றேன்.  அந்தப் பல்லவனும், அதிலிருந்து ஊடுறுவிய பார்வைகளும் சில நேரத்தில் மறைந்து விட்டன.

பகீரதன் தவம் செய்ததைப் போல என்னுடைய பஸ்ஸின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

இதோ நான் செல்ல வேண்டிய வண்டியும் வந்துவிட்டது.

அடேயப்பா, எவ்வளவு கூட்டம்.

இந்தக் கூட்டத்தில் எப்படி ஏறுவது?

திகைப்பைச் சில வினாடிகளில் பலவந்தமாக நீக்கிவிட்டு, வண்டியில் ஏறலாமென்று போய்க் கைப்பிடியைப் பிடித்தேன்.

அதென்ன, ஏதோ முதுகில் பலமாக மோதுகிறதே. எருமையைப் போல? ஒன்றுமில்லை. ஒரு இளைஞனின் தோள் தான்.  சமாளித்துக் கொண்டு ஏறினேன்.

கண்டக்டர் விசில் அடித்து விட்டார். வண்டியும் புறப்பட்டுவிட்டது.

`அப்பாடா’, என்று பெருமூச்சு விட்டேன்.

பஸ் பல்லவா தள்ளவா என்று கேட்கும் படியான நிலைமைக்கு வராமல் இருந்தால், லேட் இல்லாமல் ஆபிசுக்குச் சென்று விடலாம்.  மனத்திலே ஒரு திருப்தி.

`எங்கம்மா போகனும்’ என்றார் கண்டக்டர்

`பெரம்பூர் ஒன்னு’ என்றேன் நான்.

ஆள்காட்டி விரலை நாக்கில் வைத்து `ரின்ஸ்’ செய்தபின் ஒரு டிக்கெட்டைக் கிழித்துத் தந்தார் கண்டக்டர்.  அருவருப்புடன் வாங்கிக் கொண்டேன்.

`சார், டிக்கட்’ – என் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த இளைஞனிடம் கேட்டார் கண்டக்டர்.

`பெரம்பூர், ஒன்னு’ என்ற அவ்விளைஞன் பர்சை எடுக்க கைப்பிடியைப் பிடித்திருந்த கையை எடுத்து விட்டு பாக்கட்டில் கைவிட்டான் போலும், பஸ்ஸில் ஒரு குலுங்கல்.  மறுபடியும் ஒரு எருமை மோதல்.  கீழே விழ இருந்த நான் ஒரு சீட்டின் `பார்’ ஐப் பிடித்துக்கொண்டு தப்பித்தேன்.

`சாரி’ , பொய்மையான ஓரு வார்த்தை அந்த இளைஞன் வாயிலிருந்து உதிர்ந்தது.

இந்தக் காட்சியைப் பார்க்கத்தானோ என்னவோ முன்னால் இருந்த சில இளவட்டங்களின் பார்வை திரும்பியது.

அவ்வளவு தான், திரும்பிய பார்வைகள் திரும்பிய படியே நின்று விட்டன.

சில ஜோடிக் கண்கள் என் தலைமுதல் எது வரை பார்க்க முடியுமோ அதுவரை நோட்டம் விட்டன.

`சீ, இதென்ன வெட்கங்கெட்ட செயல், ஆண்டவா, ஏன்தான் என்னைப் பெண்ணாகப் படைத்து, இளமை கொழிக்கும் அழகையும் படைத்தாயோ’ – ஊமை அழுகையில் என் உள்மனம் அழுதது.

பொருட்காட்சியில் வைக்கப்பட்ட ஜீனஸ் சிலைக்கு கைகளும் வைத்து பஸ்ஸில் நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி நின்றிருந்தேன்.

குனிந்த தலை நிமிர வில்லை என்றாலும் அந்தப்பல ஜோடிக் கண்களின் பார்வைகள் இன்னும் என்னைவிட்டு விலகவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது.

பஸ் ஸ்டெர்லிங் ரோடு ஸ்டாப்பிங்கில் வந்து நின்றது.  வழக்கம்போல ஏற்றுமதி இறுக்குமதிகளைச் செய்து விட்டு வண்டி நகர்ந்தது.

இறக்குமதியானவைகளின் பார்வையிலிருந்து தப்பித்தோமென்று நான் நினைப்பதற்குள் ஏற்றுமதியானவைகளின் புதிய பார்வைகள் என் இளமையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டேன்.  பின்னால் ஓர் அம்மாள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கினாள். 

பசி வேளையில் கிடைத்த பஞ்சாமிர்தம் போல் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன்.  கொத்திய விழிகளின் கொடுமையிலிருந்து தப்பித்தோம் என்று என் மனம் மகிழ்ச்சியடைந்தது.

கடைசியாக பல்லவன் நான் இறங்க வேண்டிய இடத்தில் உறுமலுடன் நின்றான்.  வண்டியிலிருந்து இறங்கி ஆபீசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சற்றுதூரம் சென்றபிறகுதான் பின்னால் இருவர் என்னைப் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்தேன்.  அவர்கள் ஏதோ குறும்பாகப் பேசிக்கொண்டு வருவது என் காதுகளில் லேசாக விழுந்தது.

`சீதா அவுர் கீதா’ பாத்தியாடா.  அதுல ஹேமமாலினி எப்படி இருக்கா தெரியுமா’ என்றான் ஒருவன்.

`ஹூம், அவள் என்னடா அழகு. இந்த சிட்டுக்கிட்ட நிக்கக்கூட முடியுமா அவளால` என்றான் மற்றொருவன்.

`ஆமாம், உன் சிட்டு எங்கடா வேலை பாக்குது` என்றான் முதலில் பேசியவன்.

`பக்கத்திலதான்` என்றான் அடுத்தவன்.

அவர்கள் இருவரும் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று எனக்கும் புரிந்தது.  புரிந்தும் செய்வதறியாது என் போக்கில் விரைவாக நடந்தேன்.  நான் என்னுடைய ஆபிசை நெருங்கும்போது மணி ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது.

லேட் என்று தெரிந்திருந்தும், `என்னங்க லேட்டா? என்று வழக்கமான ஓர் அசட்டுச் சிரிப்புடன் கேட்டார் அக்கவுண்டண்ட்.  அந்த ஆள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தில் அசடு வழிய ஓர் இளி இளிப்பார். இந்தக் காட்சியைப் பார்த்தப் பார்த்து எனக்குப் புளித்துப் போய்விட்டது.

`ஆமாம்`, கொஞ்சம் லேட்டாயிடுத்து` என்று சொல்லிவிட்டு என் இடத்தில் போய் உட்கார்ந்தேன்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஹெட்கிளார்க் உங்களைக் கூட்பிடுகிறார் என்று பியூன் வந்து சொன்னான்.  கைப்பையை வைத்துவிட்டு ஹெட்கிளார்க் அறைக்குச் சென்றேன்.

என்னம்மா லேட்டு என்று கேட்டுவிட்டு ஒரு கடிதத்தை அவசரமாக டைப் அடித்துக்கொடுக்கும்படி என்னிடம் கொடுத்தார்.  கொடுக்கும் போது வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுக் கொடுத்தார்.  அவர் இப்படிச் செய்வதொன்றும் புதிதல்ல என்றாலும் எனக்கு என்னவோ போல் இருந்தது.

அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய சீட்டிற்கு வந்தேன்.

ஹெட்கிளார்க் கொடுத்த கடிதத்தை உடனே டைப் செய்து கொடுத்தனுப்பிவிட்டு என்னுடைய மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.  நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. 

மணி ஒன்று ஆனதும், கையில் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்குச் சென்றேன்.  அங்கு சகஊழியர்களின் கூட்டத்தில் ஒரே சத்தம்.  பலவிதமான பேச்சுக்கள்.

திடீரென்று ஞாபகம் வந்தவர்போல அக்கவுண்டண்ட், “”””நம்ம டைபிஸ்ட்டம்மா வீட்டு ஊறுகாய் அருமையாக இருக்குமே’’ என்று சொல்லிக் கொண்டே பாக்ஸ் மூடியுடன் என்னிடம் வந்து பல்லைக் காட்டினார்.

அவருடைய பாக்ஸ் மூடியில் இரண்டு துண்டு ஊறுகாயை எடுத்து வைத்தேன் வேண்டாவெறுப்பாக.  அவருக்கு அமிர்தமே கிடைத்து விட்டதைப் போல மகிழ்ச்சி.  `தாங்ஸ்` என்று மரியாதைக்காகச் சொல்லிவிட்டு அவருடைய டிபன் பாக்சிடம் சென்றுவிட்டார்.  அங்குபோய் தன் நண்பர்களிட்ம் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் காண்பித்தார்.

`உனக்கென்னப்பா தினமும் ஓசி ஊறுகாய் கிடைத்துவிடுகிறது.  எங்களைச் சொல்லு` என்று தங்களது வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார்கள். 

ஒரு வழியாக சாப்பாட்டை முடித்துக் கொண்டு, சாப்பாட்டறையின் புகைமூட்டத்திலிருந்து வெளியேறி என் இடத்தில் வந்து அமர்ந்தேன்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின் ஆபீசில் மீண்டும் வேலை துவங்கியது.  மாலை நான்கு மணிக்கு அக்கவுண்டண்ட் ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி என்னிடம் கொண்டு வந்தார்.

 “நம்ம கல்யாணராமன் கல்யாணத்திற்கு நம் ஆபீஸ் சார்பில் ஒரு பிரசண்ட் கொடுக்க வேண்டும், தொகையை எழுதி கையெழுத்துப் போடுங்கள்.  பணம் பிறகு கொடுக்கலாம்“, என்று  நீட்டினார்.

நல்லவேளை பணம் இப்போது கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டு, பத்து ரூபாய் எழுதிக் கையெழுத்துப் போட்டேன்.  அதற்கும் ஒரு `தாங்ஸ்` கிடைத்தது.

இப்படியாக ஆபீஸ் நேரம் முடிந்து ஐந்து மணிக்கு கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.  பஸ்ஸடாப்பில் வந்து நின்றேன்.

என் அருகில் என்னை இடிப்பது போல மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து நின்றது.  நான் சற்று பின்னால் நகர்ந்து கொண்டேன்.

அதை ஓட்டி வந்த கிருதா வாலிபன், `நீங்க எங்க போகணும்னு சொன்னீங்கன்னா நான் டிராப் பண்ணிடறேன்` என்று என்னிடம் கேட்டான்.

`நோ, தாங்ஸ்` என்றேன்.

கிருதா முகத்தில் அசடுவழிய நகர்ந்துவிட்டது.  என் பக்கத்தில் பஸ்ஸுக்காக, நிற்கக் கூட முடியாமல் நின்றிருந்த வயதான அம்மாளை ஏன் அந்த கிருதா கேட்கவில்லை? எனக்கு வியப்பாகவும் அதே சமயம் எரிச்சலாகவும் இருந்தது.

நான் எதிர்பார்த்திருந்த வண்டியும் வந்துவிட்டது.  ஒரே கூட்டம்.  தட்டுத் தடுமாறி ஏறிவிட்டேன்.  உள்ளே உட்கார இடமில்லையாதலால் தலைவிதியே என்று நின்று கொண்டிருந்தேன்.

மீண்டும் அதே எச்சில் டிக்கட், குலுங்கள்கள், கொத்தும் விழிகளின் கூரிய பார்வைகள், ஊறலெடுத்த மனித எருமைகளின் மோதல்கள் இவற்றினூடே பயணம்.  பெரம்பூரில் துவங்கி மயிலாப்பூர் வள்ளுவர் சிலையும் வந்து முடிந்தது.  வள்ளுவர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் போலும்!

சரியாக ஆறுமணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். விவிதபாரதியைத் திருப்பினேன்.  `பெண்ணினம் வாழ்கவே` என்ற பாடல் டிரான்சிஸ்டரிலிருந்து மிதந்துவந்தது.

முகத்தைக் கழுவிக் கொண்டு, காபி குடித்துவிட்டு படுக்கையில் ஓய்வாகச் சாய்ந்தேன்.  அன்றைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் தோன்றின.

   காலையில் பஸ்ஸ்டாப்பில் வைத்தகண் வாங்காமல் பார்த்த இளைஞனின் பார்வை;

   பஸ்ஸில் ஏறும் போது மோதிய இளைஞனின் மோதல்;

   பர்சை எடுக்கும் சாக்கில் இடித்தஇடி;

   என் இளமையை விழுங்கிய பார்வைகள்;

    பின் தொடர்ந்த இளைஞர்களின் கமண்ட்ஸ்;

    அக்கவுண்டன்டின் பல்லிளிப்பு;

    ஹெட்கிளார்க்கின் அநாவசியமான கைத்தீண்டல்;

    அறிமுகமில்லா கிருதாவின் அழைப்பு.

 

வேண்டுமென்றே இவற்றையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள்? இவற்றை நம்மால் திரும்பச் செய்ய முடியுமா?  இப்படிப் பல கேள்விகள்.  இறுதியாக ஓர் உண்மை புலப்பட்டது.

அவர்களைப் போலச் செய்வதற்கு என்னால் முடியவில்லை!

`வாழ்கவே பெண்ணினம்’ – என்ற பாடல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

 

இது கதை அல்ல.  பாதிக்கப்பட்ட ஒரு பெண்மனத்தின் மௌன வெளிப்பாடு, அவ்வளவே ஆனால் இதில் வரும் நிகழ்ச்சிகளை நினைத்து அவமானப்பட எல்லோருக்கும் உரிமை உண்டு.  அது அவரவர் சௌகரியம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.