மனம் ஒரு மாயமான்….
எதையெல்லாம் எண்ணங்கள் தேடி ஓடுகிறதோ..
அங்கெல்லாம் வெறுமையான
அட்சய பாத்திரத்தை தூக்கிக் கொண்டு
ஓடுகிறது இந்த மாயமான் …
எதைத்தேடுகிறோம் எனப்புரியாமல்
அங்குமிங்கும் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு..
இரைக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஓநாயைப் போல்
வெற்றிடத்தில் …..
ஊளையிட்டு……
ஊனமாய்……
ஊமையாய்…..
நிர்வாணமாய்….
இன்னும் நுரைதள்ளிக்கொண்டு….
ஓடும் முயலைத் துரத்திப்பிடிக்கும்
வேட்டை நாயாய்…
எத்தனை வேடமிடுகிறது.. தன்
தேவைகளுக்காக…..
மாயமானே..
தூங்கும்போதும் விழித்துக்கொண்டிருக்கிறாய்..
அதைத்தேடு.. இதைப்புசி..
எனமனக்கண்ணால் கட்டளையிட்டு விட்டு
சப்புக்கொட்டி கவண் கல் கொண்டு குறி
பார்த்து அடித்ததை
விழுங்கி விட்டு ஏப்பமிடக்காத்திருக்கிறாய்…
உன்னை யானையின் அங்குசமாய்
ஆக்கிகொண்டால்.. மலை யானை
ஆனாலும்…ஆணைக்கு
அடிபணிந்து…….
நன்றி கொண்ட நாயாய்
வாலாட்டிக்கொண்டே பின்னால்
உலவுவாய்…
இல்லையெனில் புலிவால்
பிடித்த மூடனாய்
நீ போகும் திசையெல்லாம்
இழுத்துப் போவாய்
மாயக்கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டே…..