( இந்த நாடகம் மகான் தாகூர் அவர்கள் எழுதித் தயாரித்த நாட்டிய நாடகம். NATIR PUJA என்பது அதன் பெயர். 1932 இல் ஒரு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது . தாகூர் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தில் படச் சுருள் நெருப்புக்கு இரையாகிவிட்டது என்ற செய்தி நம் மனதில் வருத்தத்தை வரவழைக்கிறது. குவிகத்தில் இதன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்) )
iஇதன் முதல் பகுதியைப் படிக்க விரும்புவர்கள் இந்த இணைப்பில் செல்லவும்)
உத்பலா செல்ல எத்தனிக்கிறாள்; ஆனால் அரசி அவளைத் திரும்ப அழைக்கிறாள்.
அரசி: பிட்சுணியே, கேள். எனது மகன் சித்ரா ஒரு புதுப்பெயரைத் தரித்துக் கொண்டுள்ளானாமே, அது என்ன என்று உனக்குத் தெரியுமா?
பிட்சுணி: ஆம்! குசலசீலா என்பதே அது.
அரசி: (தனக்குத்தானே) தனது தாய் இட்டு அழைத்த பெயர் புனிதமற்றது என்று நினைத்தானோ என்னவோ- வெகு சுலபமாக அதனை உதறித்தள்ளி விட்டான்!
பிட்சுணி: மகாராணி, தாங்கள் விரும்பினால், தங்களைக் காண அவனை அழைத்து வருகிறேன்.
அரசி: நான் விரும்பினாலா? என்ன வெட்கக்கேடு. அவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்த நானே உன்னிடம் ‘அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா’ எனக்கூற வேண்டுமா?
பிட்சுணி: அப்படியானால், நான் சென்றுவரட்டுமா?
அரசி: கொஞ்சம் இரு. நீ அவனை சிலசமயம் பார்ப்பாய் அல்லவா?
பிட்சுணி: ஆம்.
அரசி: சரி- ஒருமுறை மட்டும்… அவன் மட்டும் சரி என்றால் – இல்லை, வேண்டாம்; ஒன்றுமில்லை!
பிட்சுணி: நான் அவனிடம் சொல்கிறேன். அப்போது ஒருவேளை நீங்கள் அவனைக் காண முடியும்.
உத்பலா செல்கிறாள்.
அரசி: ஒருவேளை! ஒருவேளை! நான் எனது இதயத்தின் ரத்தத்தை அவனுக்கு ஊட்டியபோது ‘ஒருவேளை’ என ஒன்று இருந்ததில்லையே! ஒரு தாயிடம் பட்ட கடனுக்கான உரிமை இத்தனை சுருங்கி, ‘ஒருவேளை’யில் தொக்கி நிற்கிறதே!
இதுவே அவர்களின் மதம்! (கூப்பிடுகிறாள்) மல்லிகா!
(மல்லிகா உள்ளே வருகிறாள்)
மல்லிகா: மகாராணி!
அரசி: இளவரசன் அஜாதசத்ரு பற்றிய செய்தி ஏதேனும் உண்டா?
மல்லிகா: ஆம். அவர் தேவதத்தனை அழைத்துவரச் சென்றுள்ளார். மூன்று ரத்தினங்கள் எனும் மதத்தின் ஒரு சிறு துரும்பைக்கூட அவர் இந்த நாட்டில் விட்டுவைக்க மாட்டார்.
அரசி: கோழை! அரசாளத் தைரியமற்ற அரசன்! புத்தரின் போதனைகள் வலிமையற்றவை என்பதற்கு எனது வாழ்வே சான்றாக நிற்கின்றது. இருப்பினும் அவனுக்கு, பிரயோசனமற்ற அற்பனான தேவதத்தனைக் கூப்பிடாமல் அவற்றை எதிர்க்கத் திராணியில்லை.
மல்லிகா: யாரிடம் அதிகம் பொருள் உள்ளதோ அவர்களிடமே பயமும் மிகுதியாக உள்ளது, மகாராணி. அவர் இந்த நாட்டுக்கு உரிமைகொண்டவராக இருப்பதனால் வலிமையுள்ள மற்றவர்களுடன் சமாதானமாக இருப்பதனையே தைரியமற்ற அவர் விரும்புகிறார். புத்தபிரானின் சீடர்களுடன் அவர் மிகவும் இணக்கமாக இருப்பதனால், பயம்கொண்டு, தேவதத்தனின் சீடர்களுடனும் மேலும் இணக்கமாக இருக்க விழைகிறார். விதியின் வலிமையைத் தகர்க்க இரட்டைப் பாதுகாப்பை இரு பக்கங்களிலிருந்தும் பெற நினைக்கிறார்
அரசி: ஐயோ! எனது விதி இவ்வாறு ஒன்றுமில்லாமல் போயிற்றே! என்னிடமும் ஒன்றுமில்லை; பொய்மையைத் துணைக்குச் சேர்த்துக்கொள்ளும் கோழைத்தன்மையும் எனக்கு வேண்டியிருக்கவில்லை!
மல்லிகா: மகாராணி, தாங்கள் இப்போது நமது பிட்சுணியைப் போலப் பேசுகிறீர்கள். ‘நமது ராஜ்யத்தின் அரசி ஆசிர்வதிக்கப்பட்டவள்; ஏனெனில் அவள் புத்தபிரானின் கருணையால் நம்மை மாயைகளுடன் பிணைக்கும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டவள்,’ என அவள் கூறுவாள்.
அரசி: இந்த வார்த்தை ஜாலங்கள் எனக்குக் கோபத்தையே வருவிக்கின்றன! இந்தப் பொய்மையான உண்மைகளை நீயே நினைத்து மகிழ்ந்துகொள், என்னை மண்ணுடன் பிணைக்கும் தொடர்புகளைத் திரும்பக் கொடுத்துவிடு. அதன்பின்பு நான் எனது விளக்குகளை அசோகமரத்தினடியே உள்ள வழிபாட்டுப் பீடத்தில் ஏற்றுகிறேன்; திரும்பவும் நூறு பிட்சுக்களுக்கு உணவளிக்கிறேன்; அவர்களுடைய ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு நாளும் எனது அரண்மனையில் ஒலிக்கட்டும். அதனைச் செய்ய முடியாவிட்டால் பின்பு தேவதத்தன் வரட்டும்; அவன் உண்மையுள்ளவனா இல்லையா என எனக்கு அக்கறையில்லை. நான் சென்று, காணும் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் வருகிறார்களா எனப் பார்க்கிறேன்.
அவர்கள் செல்கிறார்கள்.
நாட்டியமங்கை ஸ்ரீமதி தனது வீணையை ஏந்தியபடி வருகிறாள். தனது விரிப்பினைப் புல்தரையின்மீது விரித்தவள், தனது மாணவிகளை அழைக்கிறாள்.
ஸ்ரீமதி: நேரமாகி விட்டது. வாருங்கள் (அவள் அமர்ந்து கொண்டு பாடுகிறாள்)
இரவின் மௌனமான அமைதியில் என்ன ரகசியம் என்னை வந்தடைந்தது!
நான் அறியேனே!
அது விழித்திருத்தலா, அது உறங்கியிருத்தலா?
நான் அறியேனே!
மாலதி என்னும் கிராமத்துப் பெண்ணொருத்தி நுழைகிறாள்.
மாலதி: நீங்கள் தான் ஸ்ரீமதியா?
ஸ்ரீமதி: ஆம். உனக்கு என்ன வேண்டும்?
மாலதி: உங்களிடமிருந்து நான் சங்கீதம் கற்றுக்கொள்ளலாமென்று சொன்னார்கள்.
ஸ்ரீமதி: நான் முன்பு எப்போதாவது உன்னை இந்த அரண்மனையில் பார்த்திருக்கிறேனா?
மாலதி: நான் இப்போதுதான் எனது கிராமத்திலிருந்து வருகிறேன். என் பெயர் மாலதி.
ஸ்ரீமதி: எதற்காக வந்தாய், குழந்தாய்? உனக்கு மிகுதியான நேரம் இருக்கின்றதா? அங்கு நீ பூஜைக்குரிய மலர்போல இருந்தாய்; கடவுள்களும் மகிழ்ந்தனர். இங்கு கேளிக்கை எனப்படும் மாலையில் தொடுத்த ஒரு பூவாக இருப்பாய்; வக்கிரமான பிசாசுகள் உன்னைப்பார்த்து நகைக்கும். நீ பாடல்களைக் கற்றுக்கொள்ளவா வந்திருக்கிறாய்? நீ வேண்டுவது அதுமட்டும்தானா?
மாலதி: நான் உண்மையைக் கூறட்டுமா? எனது எதிர்பார்ப்புகள் மிக அதிகமானவை; ஆனால் அதைப்பற்றிப்பேச என்னால் இயலவில்லை.
ஸ்ரீமதி: ஓ! அப்படியா? ஒருநாள் அரசியாகும் வெற்றுக்கனவினைக் காண்கிறாய்! உனது முந்திய பிறவியின் பாவங்கள் போதுமானவையாக இருந்தால், அக்கனவு பூர்த்தியானாலும் ஆகும். கானகத்துப் பறவை ஒன்று தங்கக்கூண்டிலிருக்க ஆசைப்பட்டால், கெட்ட தேவதைகள் அதன் சிறகுகளில் குடியேறும். உனது காட்டிற்குத் திரும்பிப் போய்விடு! இன்னும் தாமதம் செய்யாதே!
மாலதி: சகோதரி, சொல்வது எனக்குப் புரியவில்லை!
ஸ்ரீமதி: மகிழ்ச்சியற்ற பெண்ணே! கையிலணியும் ஒரு கங்கணத்திற்காக பிணிக்கும் சங்கிலியை ஏன் தேடியலைகிறாய்?
மாலதி: நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்! நான் விளக்குகிறேன். புத்தபிரான் இந்த நந்தவனத்திற்கு ஒருமுறை வந்து இந்த அசோகமரத்தடியே அமர்ந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இடத்தில் மகாராஜா ஒரு வழிபாட்டு மேடையைக் கட்டினார்.
ஸ்ரீமதி: உண்மைதான்!
மாலதி: ஒவ்வொருநாள் மாலையிலும் இளவரசிகள் தங்கள் நிவேதனப் பொருள்களுடன் அங்கு வருகின்றனர் எனவும் கூறுகிறார்கள். அத்தகைய உயர்வான சலுகையை நான் எதிர்பார்க்கவில்லை; ஆனால் நான் அந்த வழிபாட்டு மேடையைப் பெருக்கிச் சுத்தமாக வைக்கலாம் அல்லவா? அந்தவொரு நம்பிக்கையே உங்களுடைய பாடும்பெண்களின் குழுவில் சேர்வதற்கு என்னை இங்கு அழைத்து வந்தது.
ஸ்ரீமதி: வா சகோதரி, நான் மகிழ்ச்சியடைகிறேன். இளவரசிகளின் வழிபாட்டு தீபங்கள் வெளிச்சத்தைவிட அதிகமாகப் புகையையே வெளிவிடுகின்றன; அவை உனது புனிதமான தொடுதலுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் எது உன்னை இவ்வாறு எண்ணவைத்தது?
(தொடரும்)