இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்.

கலைச்செல்வி

Image result for கிராமத்தில் ஒரு குடும்பம் பாட்டி பேத்தி

திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி இலக்கியச் சிந்தனையின் 2017 ஆண்டிற்கான சிறந்த சிறுகதை விருதினைப் பெற்றவர். ‘இரவு’, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’, ‘வலி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுடன் இவரது ‘புனிதம்’ என்னும் புதினமும் இவரது பங்களிப்புகள். இவரது சிறுகதைகள் மேலும் சில தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.

*** *** *** *** ****

இவரது ‘கனகுவின் கனவு’ என்னும் கதை

“புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி அரிசி போட்டா சரியாயிருக்குமாத்தே..?” கனகுவிடம் கேட்டாள் நல்லமுத்துவின் மருமகள். “எக்கா சோத்தை வடிச்சு வுட ரெண்டு தட்டு கூடை போதுமில்ல..?” என்ற தேவானையை நல்லமுத்து அதட்டினான்.

என்று வளைகாப்பு நிகழ்வின் பின்னணியில் நடக்கும் உரையாடல்களோடு தொடங்குகிறது.

கணக்கு ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. பணி ஓய்வுக்கு பிறகு கணவனும் இறந்து விட மகள் தீபாவின் வீட்டிற்கு வந்து விட்டாள். ஆரம்பத்தில் மகள் வீட்டிற்கு வந்து விட்டோமே என்ற தயக்கம் தான் இருந்தது, ‘எப்படா கிராமத்துல எதாவது விசேஷம் நடக்கும். ஓடுலாம்னு நினைப்பு வரும்.. இப்ப முட்டிவலியும் முதுகுவலியும் வந்தததுலேர்ந்து ஊருக்கு போய்ட்டு வர்றதுங்கறது பெரிய அவஸ்தையா மாறி போச்சு.’ தீபாவின் வேலை நேரம் வேறு மாறிக் கொண்டேயிருப்பதால் நினைத்து வைத்தது போல் ஊருக்கு போக முடிவதில்லை.

பங்காளி வீட்டுல் ஒரு சாவு. கட்டாயம் போயிருக்கவேண்டும். மூட்டுவலியுடன் அம்மாவை பேருந்தில் ஏற்றிவிட மகளுக்கு விருப்பமில்லை. தானும் கூடப் போகலாமென்றால் லீவு போடுவதில் சிக்கல். பேத்தி நித்யாவின் ‘டான்ஸ் ப்ரோக்ராம்’ அடுத்த வாரம். அதற்கு லீவு தேவைப்படும். கருமாதிக்கு போய்க்கொள்ளலாம் என்றார்கள் மகளும் மருமகனும்.

கருமாதி ஞாயிறன்று வந்தது. தீபாவிற்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை. அதிலும் சனிக்கிழமை அலுவலகம் சம்பந்தமாகவே கழிந்து விடுகின்றன. ஞாயிறும் இப்படிப் போய்விட்டதென்றால் அடுத்தவாரம் ‘ஓடுகிற’ தெம்பே போய்விடும் என்று சொல்லிவிட்டாள். தீபா.

கணவன் ராமசாமியின் உடன்பிறப்புகளில் எஞ்சியிருந்தவர் கொழுந்தன் நல்லமுத்துதான். இரண்டு மகன்களும் ஒரு மகளுமாய் குடும்பஸ்தன் ஆனவர். ராமசாமி மோட்டார் ரூமில் ‘ஷாக்’ அடித்து சிமென்ட் தரையில் விழுந்துவிட்டார். செலவிற்காக மனைவியின் நகைகளைக் கூட விற்கத் தயாராகி, ‘காரு வச்சு மெட்ராசுக்கு’ கூட்டிப்போய் சிகிச்சை அளிக்கச் செய்தவர் நல்லமுத்து.

பதினைந்து நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை முடித்து அண்ணனை மீண்டும் அண்ணியிடம் ஒப்படைத்த கொழுந்தனை தெய்வமாகவே பார்த்தாள் கனகு.

நாளைக்கு கொழுந்தன் நல்லமுத்துவின் மகளுக்கு வளைகாப்பு. கட்டாயம் போயாக வேண்டும். இங்கிருந்து ஒரு மணி நேர பயணம். அங்கிருந்து ஆறேழு கிலோ மீட்டர் உள்ளடங்கி இருக்கும் கிராமம். காத்திருந்தால் ஊருக்குள் செல்லும் பேருந்து அரை மணி நேர பயணத்தில் கொண்டு சேர்த்து விடும். ‘இந்த பயணமாவது தள்ளி போகாம இருந்தா சரி..’ எண்ணிக் கொண்டாள்.

வளைகாப்பு மறுநாள் மகளும் கூட வருவதாகச் சொல்லியிருந்தாள். ஆனால் அதே நாள் கணவனின் தங்கை மகளின் ‘மஞ்சள் நீராட்டு’ நிகழ்விற்கு போகாமல் இருக்கமுடியாது. குழந்தை பிறந்ததும் போகலாமே என்றாள் தீபா

“வேற யாரு வீட்டுல தேவைன்னாலும் போவாம இருந்துக்கலாம்.. இது சொந்த கொழுந்தனாச்சேப்பா..” மருமகனிடம் தணிந்து பேசினாள்.

தங்கச்சி வீட்டுக்குப் போகவேண்டும். கொலீக் வீட்டில் பர்த் டே பார்ட்டி என மருமகன் முரளிக்கு ஜோலிகள்.

“உங்க சித்தப்பனுக்கு இந்த உடம்ப செருப்பா கூட தைச்சு போடலாம்.. நான் கட்டாயம் போகணும்…” உள்ளறையில் இருந்த மகளிடம் கிசுகிசுப்பாக பேசினாள் கனகு.

கனகுவின் மூட்டுவலி மற்றும் தான் கூட வரவியலாத நிலை இரண்டையும் காரணம் காட்டுகிறாள் மகள். பேருந்திலும் போக முடியாது. தனியொருத்தியாக காரில் போய் இறங்குவதும் நன்றாக இருக்காது.

போன் செய்தாவது நல்லமுத்துவிடமும், அவர் மனைவி தேவானையிடமும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள்.

“நான் தான்டீ அக்கா பேசறன்.. நேத்துலேர்ந்து முதுவு வலி தாங்க முடியிலடீ.. படுக்கையவுட்டு எழுந்துக்க முடியில.. பத்தாததுக்கு ரெண்டு முட்டியிலயும் பெல்ட் போட சொல்லியிருக்காரு டாக்டரு.. “

என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தாள். உங்கள் கொழுந்தனுடனேயே பேசிக்கொள்ளுங்கள் என்று தேவானை சொல்லிவிட்டாள்.

“… நான் காரு பேசி அனுப்பிவுடறன்.. உம்மவனையும் கூடவே அனுப்பறன்.. நீ படுத்துக்கிட்டே வந்து சேந்துருண்ணீ.. எம்பொறந்தவன் இருந்தா வுட்டு குடுத்துவாரா..? இல்ல நீதான் ஊர வுட்டு போயிருப்பியா..?” நல்லமுத்துவின் கரிசனத்தில் உரிமையும் கலந்திருந்தது.

‘ஊர்லேர்ந்து யார் பேசுனாலும் பாட்டி அழுதுடறாங்களே. ஏன்?’ என்பது தியாவின் சந்தேகம்.

‘முதுகு வலி நிமிர முடியவில்லை, தரையில் தலைகாணி இல்லாமல் மல்லாக்கப் படுத்திருக்கிறேன்.’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி பிள்ளைத்தாய்ச்சியை வீட்டில் கொண்டுவந்து விட்டால் தனது வீட்லேயே பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொல்லிவிட்டாள்.

“கடவுளே.. அடுத்த வாரம் இதுங்க ரெண்டுக்கும் வேறெந்த வேலையும் வர கூடாதே..” மனம் மௌனமாக பிரார்த்தித்துக் கொண்டது.

“நித்திக்குட்டீ.. வாம்மா.. பாட்டீ பாவாடை கட்டி வுடறன்..” பேத்தியை அருகே அழைத்தாள் கனகு.

 என்று முடிகிறது கதை.

**** ***** ******

இதுபோன்ற உறவுமுறை நடைமுறைச் சிக்கலை மையமாகக் கொண்ட ‘நெனப்பு’ மனதில் நிற்கும் ஒரு சிறுகதை.

கதைக்கு நடுவில் பேத்திக்கு வகுத்தல், ஈவு, மீதம் என்று கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, ‘மீந்து போனா கீழ தான் கெடக்கணும் போலருக்கு..’ என்று கனகு தனக்குள் சொல்லிக்கொள்வது இந்தக் கதையின் மையமாகத தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.