கேள்விக்குறி – டி வி ராதாகிருஷ்ணன்

Image result for விவசசாயியின் தற்கொலை

அந்தக் காட்சியை விடியலில் மச்சக்காளை தான் முதலில் பார்த்தான்.

சுப்பிரமணியம் ஊருக்கு வெளியில் ஒரு மரத்தில் தன் வேட்டியின் ஒரு முனையை மரத்தின் கிளையில் கட்டி..மற்றொரு முனையை தன் கழுத்தில் சுருக்காக்கி  அண்டர்வியருடன் தொங்கிக் கொண்டிருந்தான்.

தீப்பொறிபோல செய்தி பரவி ஊரே குடி விட்டது மரத்தருகே

“நல்லவனுக்கு இந்தக் காலத்திலே இதுதான் கதி”

“சுப்பிரமணிக்கு இப்படி ஒரு சாவு வர வேண்டாம்.”

ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கதிரவன் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்தன் தட்சணாயனப் பாதையில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

உச்சி வேளையில்தான் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.ஜீப்பிலிருந்து ஒரு
போலீஸ்காரர் இறங்கிக் கூட்டத்தை விரட்டியடிக்க ஆரம்பித்தார்.

அவருக்கு பயந்து ஓடுவது போல ஓடிய கூட்டம் அவருக்குப் போக்குக்
காட்டிவிட்டு மீண்டும் சேர்ந்தது.

போலீஸ் விசாரணை ஆரம்பித்தது..”இதை முதல்லே பார்த்தது யார்?” அதட்டல்
குரலில் கேட்டார் ஜீப்பில் வந்திருந்த போலீஸ் அதிகாரி.

“மச்சக்காளைதேன்..மச்சக்காளைதேன்..”எனக் கூட்டத்தினரிடையே ஒரு சலசலப்பு ஏற்பட..அந்தக் கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு அந்த அதிகாரி முன் வந்து நின்றான் மச்சக்காளை.

“நான்தாங்க பார்த்தேன்..காலையில வெளிக்கு வந்தேனா அப்போதான் பார்த்தேன்”.

அந்த அதிகாரி அவன் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்டாரா என்று தெரியவில்லை.

அதற்குள் சுப்பிரமணியின் உடலை இறக்கிய இரு போலீசார்..அதைக் கீழே
கிடத்தி..இரு சாக்குப்பைகளைக் கொண்டு வரச் சொல்லி அதன் மேல் போர்த்தினர்.

இந்த அதிகாரி எப்போ விசாரணையை முடிச்சு, உடலை எப்போ பிரேத பரிசோதனைக்கு எடுத்துட்டுப் போய்…எப்போ நம்மக்கிட்டே கொடுப்பாங்க என்று பஞ்சாயத்துத் தலைவர் கவலைப்பட ஆரம்பித்தார்.

திடீடென போலீஸ் அதிகாரி, “இங்க பஞ்சாயத்துத் தலைவர் யாருய்யா?” எனக்
கேட்க பலவேசம் முன்னால் வந்தார்.

“என்னய்யா..நீர் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறீர்..யார் மேல் உமக்கு சந்தேகம்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடும்..உம்..அதுக்கு முன்னாலே நாலு இளநீ வெட்டி கொண்டு வரச் சொல்லு”

“ஐயா..இது தற்கொலைதானே..இதுக்கு யார் மேலே சந்தேகப்பட முடியும்?”
பலவேசத்தின் குரல் அவருக்கேகிணற்றின் உள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது.

‘ஓய்..இது கொலையா..தற்கொலையான்னு நாங்கதான் சொல்லணூம்..எதுக்கு
படிச்சுட்டு இந்த வேலைல இருக்கோம்..சரைக்கறதுக்கா?”

பலவேசம் சற்றே பயந்து விட்டார்,

அதைக் கவனித்த அதிகாரி..தன் தொனியைச் சற்றே குறைத்து “சரி..சரி..இறந்து
போன ஆளைப்பத்தி உமக்கு என்ன தெரியும்?.அவங்க குடும்பத்தைப் பத்திச்
சொல்லும்”என்றார்.

“ஐயா..சுப்பிரமணியம்..”போலீஸ்காரர் புருவத்தை உயர்த்த..”அதுதாங்க..இறந்து
போனவருடைய பெயர்.அவங்க குடும்பம் பரம்பரை..பரம்பரையாய் இந்தக்
கிராமத்தில்தான் இருக்காங்க”

பலவேசம் சொல்ல ஆரம்பித்தார்.

மாரிமுத்து கவுண்டர் அந்தக் கிராமத்திலேயே பெரிய நிலச்சுவான்தார்.அந்தக்
காலத்திலேயே பாதி பேருக்கு மேல் அவருடைய வயல்கள்தான் சாப்பாடு
போட்டன.பரம்பரைப் பணக்காரன்னாலும் அவரது மனம் லேசானது.ஏழ்மையை
உணர்ந்தது.மனித நேயம் மிக்கது.யார் இல்லை என்று வந்தாலும் வாரி வாரி
வழங்குவார்.அவர் வயலில் விதை விதைப்பதே ஒரு அழகு.முதலில் விதை
முகூர்த்தம் பார்ப்பார்.

முதலில் அவரது குடும்ப சோதிடர் பாம்பு பஞ்சாங்க சாஸ்திரிகளிடம்
போவார்.அவர் பஞ்சாங்கத்தைப் புரட்டு..புரட்டு எனப் புரட்டிப் பாத்துவிட்டு மனசில் பல கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார்.உதடுகள் மட்டும்
அசையும்.பின் ஒரு நல்ல நாளையும்..நேரத்தையும் குறித்துக் கொடுப்பார்.அது
கிட்டட்தட்ட காவிரியில் தண்ணீர் பொங்கி வரும் நாளை ஒட்டித்தான் வரும்.

சாஸ்திரிகள் தெரிந்துதான் நாள் குறிச்சுத் தருவாரா என்று தெரியாது.

நாள் குறித்து வந்த அன்று மாரிமுத்து ரொம்ப சந்தோஷமாக
இருப்பார்.வீட்டுக்குவந்து பெரிய பெண்ணானாலும் இன்னும் சின்னப்
பொண்ணுன்னு பெயரைத் தாங்கிக் கிட்டிருக்கும் மனைவியைக் கூப்பிட்டு..

“புள்ளே..பசிக்குது தட்டு வை” என்று சொல்வார்.

சின்னப் பொண்ணு தட்டு எடுத்து வைத்து..ஒரு லோட்டாவில் தண்ணீரும்
வைத்துவிட்டுச் சோறுப் போடுவாள்.”நீயும் உட்காரு..சேர்ந்தே சாப்பிடுவோம்” என அவளையும் பிடிவாதமாகச் சாப்பிட உட்காரவைத்துவிடுவார்.

விதை முகூர்த்தம் அன்று விடியலில் கணக்குப்பிள்ளை வந்து குரல்
கொடுப்பார்.சின்னப்பொண்ணு மாரியை எழுப்பி விடுவாள்.அவர் எழுந்து
கணக்குடன் காவிரியை நோக்கிச் செல்வார்.போகும் வழியிலேயே ஏதாவது ஒரு
ஆலமரத்திலிருந்து குச்சியை ஒடித்து பல்லை விளக்கிக் கொண்டே செல்வார்.

பொங்கிவரும் பொன்னியில் இறங்கி இடுப்பளவு தண்ணீர் உள்ள பகுதிக்குச்
செல்வார்.சூரியதிசையைப் பார்த்து மூழ்கி எழுவார். இடுப்புத்துணியை
அவிழ்த்து பிழிந்து தலையைத் துவட்டிக் கொள்வார். மெல்லக் கரையேறி அவசர..அவசரமாகத் துணியை இடுப்பில் கட்டிக் கொள்வார்.

படித்துறையை ஒட்டியுள்ள கோவிலுக்குச் சென்று கொஞ்சம் விபூதியை எடுத்து
வருவார்.அதை இடது உள்ளங்கையில் கொட்டி குனிந்து ஆற்றிலிருந்துப்சிறிது
நீரை வலது கையில் எடுத்து ஓரிரு சொட்டுகள் விபூதியில் இட்டுக் குழைத்து
நெற்றியில் மூன்று பட்டைகளாக இட்டுக் கொள்வார்.

நூல் வைத்தாற்போல இவரால் இப்படி விபூதி வைத்துக் கொள்ள முடிகிறதுஎன
வியந்து உடன் இருக்கும் கணக்கும் முயன்று பார்ப்பார்.அரிசிக் கஞ்சியை
நெற்றியில் வைத்துக் கொண்டாற் போலத்தான் இருக்கும்.

நெற்றி நிறைய விபூதியுடன் “முருகா” என கிழக்குத் திசையைப் பார்த்து பக்தி
சிரத்தையுடன் அவர் கும்பிடும்போது..என்றாவது ஒருநாள் விண்ணிலிருந்து
மயில் மீது முருகன் மாரிமுத்துவைக் காண இறங்கி வந்தாலும் வந்துவிடுவார் என கணக்கு நினைப்பார்.

முருகப் பெருமானிடம் அவருக்கிருந்த பக்தியால்தான் ஒரே குழந்தைக்கும்
சுப்பிரமணியம் என்று பெயரிட்டார்.

“முருகா இன்று விதை விதைக்கிறோம்..எந்த வித பாதிப்பும் இல்லாமல்..அமோக
விளைச்சலைத் தரணும்” என மனமுருக வேண்டுவார்.

வீட்டுக்கு வந்ததும்..குளித்து முடித்து விட்டு மஞ்சள் பூசிய முகத்துடன்,
தலைநிறையப் பூவுடன் சின்னப்பொண்ணு, குழந்தை சுப்பிரமணியையும்
தயார்ப்படுத்திவிட்டு நிற்பாள் கோயிலுக்குச் செல்லத் தயாராக.

“கோயிலுக்குப் போறதுக்கு முன்னால..ஒரு தம்ளர் நீராகாராமாவது
சாப்பிடுங்க..திரும்ப வர நேரமாயிடும் இல்ல”

“வேணாம் புள்ள..சாமி கும்பிட வெறும் வயித்தோடத்தான் போறது விஷேசம்”

“அப்ப..புறப்படலாம்னு கொல்லைக்கதவு நாதாங்கியைச் சாத்திவிட்டு  வாசல்கதவையும் பூட்டிவிட்டு ஊர் காக்கும் ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்வார்கள்.

கோவில் குருக்கள் இவர்களுக்காகவே சீக்கிரமாக வந்திருந்து கோவிலைத்
திறந்திருப்பார்.அதற்கும் முன்னமேயே கட்டைவண்டியில் அமாவாசை விதை
மூட்டைகளுடன் வந்திருப்பான்.குருக்கள் அர்ச்சனையை முடித்து தீபாராதனை
காட்டுவார்.இதன் நடுவே ஒரு படி அளவிற்கு விதைநெல்லைக் கோவில்
வாசல்படியில் அமாவாசை வைத்திருப்பான்.

பின் வண்டி வயலை நோக்கி விரையும்.மாரிமுத்து வயலின் கிழக்கு மூலைக்குச்
சென்று களைக்கொத்தியை ஓரடிக்கு ஓரடி நிலத்தைக் கொத்துவார்.

திருமணத்திற்குத் தயாராக இருக்கும் இளநங்கையைப் போல வயல் விளைச்சலுக்குத் தயாராயிருப்பதால் சுலபமாகக் கொத்தவரும்.

பின் கை..கையாக விதை நெல்லை எடுத்து வயம் முழுதும் தூவுவான் அமாவாசை.

அமாவாசையின் குடும்பம்தான் பரம்பரை பரம்பரையாக மாரிமுத்து கவுண்டரின் வயல்களில் விதை விதைக்கும் வேலைகளைச் செய்து வந்தது.

சாதி மதம் பார்க்காத அதிசய கிராமமாகவே அந்தக் கிராமம் திகழ்ந்தது.

காவிரியில் நுங்கும் நுரையுமாக புதுத் தண்ணீர் வர ஆரம்பிக்கும் சிலு..சிலு..என காற்று அடிக்க ஆரம்பிக்கும்.

நாளாக நாளாக நடவு நட்டு முடித்து நாற்றுகள் வேர்விடத் தொடங்கும்
மார்ழி.தை மாதங்களில் கதிர்கள் முற்றி வயல்கள் மரகதப் படுக்கையாகக்
காட்சி அளிக்கும்.

அறுவடை முடிந்ததும் தனக்கு வருஷத்திற்கு தேவையான நெல்லை
வைத்துக்கொண்டு,தன் வயல்களில் உழைத்த அனைவருக்கும் மீதத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்.அவர்கள் வேலைக்கு எனத் தனிச் சம்பளம் கிடையாது.இருபது மூட்டை நெல்லை அன்னதானத்திற்காகக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்.

காலச்சக்கரம் யாரையாவது கேட்டுக் கொண்டா சுழல்கிறது..சுழன்றது.

மாரிமுத்து கவுண்டர், சின்னப்பொண்ணு வயல்களை எல்லாம் சுப்பிரமணியமும் அவனுக்கு வந்த மனைவி தேவயானையும் பார்த்துக்
கொண்டனர்.

ஆனால் மாரிமுத்துக்கு இருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.எல்லாமே தலைகீழ்.

வருடத்திற்கு சில தினங்களே யானைக்குக் கோவணம் கட்டியது போல ஆற்றில்
தண்ணீர் ஓடுகிறது.எல்லாப் பாசனக் கிணறுகளிலும் மணல்தான் தெரிந்தது. வயலுக்குத் தேவையானபோது தண்ணீர் கிடைப்பதில்லை.ஆடிப்பெருக்கு
அன்றுகூட வாய்க்காலாகத்தான் நீர் ஓடுகிறது.புகுந்த வீட்டின் மீது அந்த
காவிரிப் பெண்ணிற்கு என்ன கோபம் என்றே தெரியவில்லை.

வறுமை..கிராமங்களில் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது.கணக்குப்
பிள்ளை,அமாவாசை குடும்பங்கள் எல்லாம் வேறு வேலைத்தேடி நகாங்களுக்குச்
சென்றுவிட்டனர்.

எல்லோருக்கும் அள்ளி..அள்ளிக் கொடுத்த மாரிமுத்துவின் மகன்
சுப்பிரமணியமோ, குடும்பச் செலவுகளுக்காக நிலங்களை கொஞ்சம் .கொஞ்சமாக விற்க ஆரம்பித்தான்.காவிரியையும் நம்பமுடியாது..விண்ணையும் நம்ப முடியவில்லை வானம் பார்த்த பூமிக்கு.நிலங்கள் அடிமாட்டு விலைக்கே போயின.

பல நூறு ஏக்கர்கள்..இன்று ஏக்கரில் வந்து நின்றது.அதிலும் சுப்பிரமணியால்
விதைக்க முடியவில்லை.

சீதை, அக்கினிப்பிரவேசம் செய்த போது..பூமி பிளந்து அவளை உள்வாங்கிக்
கொண்டதாம்.இப்போது யார்..யாரை உள் வாங்குவது எனத் தெரியாமல் வயல்
முழுதும் பூமித்தாய் பிளந்து காணப்பட்டாள்.

ஆடுமாடுகள் வைக்கோல் ,தண்ணீர் இன்றி இறந்து விழ ஆரம்பித்தன.தமிழக
கிராமங்களில் சோமாலியா மக்கள் கண்ணில் தென்பட ஆரம்பித்தனர்.

இளமையில் வறுமை என்பதே என்ன என்று தெரியாத சுப்பிரமணியம்,மனைவி
தேவயானை..குழந்தைகளை காப்பாற்ற வழி தெரியாது விழித்தான்.

நீண்ட நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான் சுப்பிரமணியம் பஞ்சாயத்துத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி..கண்ணில் பட்ட
மூக்கனிடம் கொடுத்து அவரிடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு வீட்டை விட்டுப்
புறப்பட்டான்.

அடுத்த நாள் காலையில் மரத்தில் தொங்கும் அவனை மச்சக்காளைப் பார்த்தான்.

 

வியர்வை வழியும் தன் வழுக்கை மண்டையைக் கர்சீப்பால் துடைத்துக் கொண்டார் போலீஸ் அதிகாரி. பின், “எங்கேய்யா.. அவன் உங்ககு எழுதின கடுதாசு” என்றார் பலவேசத்தைப் பார்த்து.

பலவேசம் தன் ஜிப்பாவின் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்துக்
கொடுத்தார்.அதைப் படிக்க ஆரம்பித்தார் அதிகாரி..

அன்புள்ள தலைவர் அவர்களுக்கு,

என்னுடைய தகப்பனார் யார் பசி என்று வந்தாலும் இல்லையெனக் கூறாது ஊருக்கே அன்னம் படைத்தவர்.”சோழ நாடு சோறுடைத்து” “தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம்” என்பதெல்லாம் பொய்யாகி விட்டது. சோற்றுக்கே தஞ்சைத் தரணி தடுமாறத் தொடங்கிவிட்டது.

இவ்வளவு நாட்கள் என்னால்,தேவானையையும்,என் குழந்தைகளையையும் கௌரவத்தை விடாமல் காக்க முடிந்தது.இனியும் என்னாலதுபோல இருக்க முடியாது போல இருக்கு.இரந்தும் உயிர்வாழ வேண்டாதவன் நான்.அதனால் என் உயிரை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன்.

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது..என் உடலைத்தான் நீங்க பார்ப்பீங்க.

என்னை நம்பி வந்த தேவானியையும்,குழந்தைகளையையும் எப்படிடா விட்டுப்போக உனக்கு மனசு வந்த்து என நீங்க கேட்பீங்க..

எனக்குத் தெரியும்..என்னோட சாவுக்கப்புறம் ,அரசாங்கம் என் மனைவிக்கு
எதாவது பணம் தரும்.விவசாயி உயிரோட இருக்கப்போதைவிட செத்தாத்தானே
இன்னிக்கு மதிப்பு.அந்தப் பணத்தை வைச்சு அவ பொழச்சுப்பா.

ஆனாலும்..என் ஆத்மா இந்த கிராமத்தைத்தான் சுத்திக் கிட்டு
இருக்கும்…என்னிக்காவது பழய நாட்கள் திரும்பி வராதான்னு
ஆதங்கத்துடன்.அப்படி ஒருநாள் வருமேயானால்..இந்தக் கிராமத்தில் எதாவது ஒரு வீட்டில் நான் பொறந்திருப்பேன்.

உங்களுக்கும்..என் கிராம மக்களுக்கும் வணக்கம் கூறி..உலகத்துல இருந்து
விடை பெறுகிறேன்

இப்படிக்கு

சுப்பிரமணியன்

அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு அதை மடித்துத் தன் சட்டைப் பையில்
வைத்துக் கொண்டார் போலீஸ் அதிகாரி.

“ஐயா..அது எனக்கு எழுதிய கடிதம்”

“அது எனக்குத் தெரியும்..இது என் கிட்டேயே இருக்கட்டும்”

அதற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வண்டிவர சுப்பிரமணியம் என்ற பெய்ரைத்
தாங்கியிருந்த அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

மறுநாள் உடலை ஈமக்கிரியைக்கு தெய்வயானையிடம் ஒப்படைத்தனர். பலவேசமும் உடன் சென்றிந்தார்.

குடியைப் பற்றியே அறியா சுப்பிரமணியம் அதிகம் குடித்துவிட்டு வயிற்றுவலி
தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான் எனபோஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்
சொல்லியிருந்தது.

பல கேள்விக்குறிகள் பதில் இல்லாமல் கேள்விக்குறிகளாகவே நின்று விடுகின்றன.

One response to “கேள்விக்குறி – டி வி ராதாகிருஷ்ணன்

  1. சாதாரண சொற்களில் தினமும் பார்க்கும் செய்தியை மனதை பிழியும் கதையாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.