சரித்திரம் பேசுகிறது! –யாரோ

பல்லவர் முடிவு

அன்று – பல்லவன் பல்லவி பாடினான் – பல்லவ வம்சம் பிறந்தது.
பின்பு – பல்லவன் சரணம் பாடினான் – பல்லவ வம்சம் சரித்திரத்தில் நிலைத்தது.
முடிவில்- பல்லவன் மங்களம் பாடினான் – பல்லவ வம்சம் மறைந்தது.

 

 

ஆதி ஒன்று இருக்குமானால் அந்தம் அன்று இருக்கத்தானே வேண்டும்?
மூன்றாம் நூற்றாண்டில் சோழரை வென்று ஆட்சியை அமைத்த பல்லவர்-
ஒன்பதாம் நூற்றாண்டில் அதே சோழரால் அழிந்த கதை இது.

அந்த முடிவுக்கு முந்திய கிளைமாக்ஸ் காட்சிகளை இன்று காணலாம்.
அந்த நாட்களில் – தமிழகத்தின் ஒரு ஐம்பது வருடச் சரித்திரம் பலவாரியாகக் குழம்பியிருந்தது. சரித்திர ஆய்வாளர்கள் டி வி மகாலிங்கம், கே ஆர் ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் இந்தக் காலச் சரித்திரத்தை அலசிப் பலவிதமான மாறுபட்ட முடிவுகளைக் கூறியுள்ளார்கள். அவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருவது இந்தக் கதை:

மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவி ‘சங்கா’. இவள் இராட்டிரகூட மன்னன் அமோகவர்ஷனின் மகள். இருவருக்கும் பிறந்த மகன் ‘நிருபதுங்கவர்மன்’.

மூன்றாம் நந்திவர்மனின் இரண்டாம் மனைவி ‘கந்தன் மாறம்பாவை’. இவள் பழுவேட்டரையரின் புதல்வி. இவர்களுக்குப் பிறந்த மகன் ‘கம்பவர்மன்’.

நந்திவர்மன் தனது ஆட்சிக்காலத்திலேயே நிருபதுங்கவர்மனை யுவராஜாவாக நியமித்து அவனைக் காஞ்சியின் மன்னனாகவே வைத்திருந்தான். கம்பவர்மனை வடபுலத்திற்கு ஆளுனராக நியமித்திருந்தான். கம்பவர்மன் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் இளவரசி விஜயாவை மணம் செய்திருந்தான். இவர்களின் மகன் அபராஜிதவர்ம பல்லவன்.

மூன்று பல்லவர்களை அறிமுகம் செய்து வைக்கிறோம்.

  • .நிருபதுங்கவர்மன்
  • கம்பவர்மன்
  • அபராஜிதவர்மன்

இப்பொழுது சரித்திரச் சதுரங்கம் தொடங்குகிறது.

பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மூன்றாம் நந்திவர்மனுடன் புரிந்த போர்கள் குறித்து நாம் முன்பே அறிவோம். பாண்டியன் ஸ்ரீவல்லபன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று இலங்கை மன்னன் சேனாவை வென்று வந்தான். பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் முயற்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு அவனைத் தூண்டினான். ஆக.. சேனாவின் மருமகன் -இரண்டாம் சேனா – பாண்டியனைப் பழிவாங்குவதற்குப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். ஸ்ரீவல்லபன் தோல்வியுற்று போர்க்களத்திலிருந்து படுகாயங்களுடன் தப்பி ஓடினான். விரைவில் மரணமடைந்தான். இலங்கை மன்னன் மாயப் பாண்டியனை மதுரையில் ஆளும்படி வைத்துத் திரும்பினான். ஸ்ரீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுணன் – பல்லவன் நிருபதுங்கவர்மனது துணையை நாடினான். தந்தைகள் எதிரியாகப் போரிட்டிருந்தாலும் – தன் தேவைக்காகப் பல்லவனின் நட்பை நாடினான். பல்லவனுடைய கடற்படையைக் கோரினான். இருவரும் சேர்ந்து மாயப் பாண்டியனைத் துரத்தி விட்டு – இலங்கைக்கும் சென்று வென்றனர். கி பி 862 இல் இரண்டாம் வரகுணன் பாண்டிய மன்னனாக முடி சூடினான். இரண்டாம் வரகுணனும் நிருபதுங்கவர்மனும் நண்பர்களானர்.

நீங்கள் நினைக்கலாம்!
தென்னிந்தியா தான் அமைதியாகி விட்டதே!
மன்னர்கள் நண்பர்களாயினரே!
இனி என்ன பிரச்சினை?
சுபம் என்று போட்டு படத்தை முடிக்க வேண்டியது தானே!

ஆனால் தமிழகம் பெரும் புரட்சிக்குத் தயாரானது. தமிழக வானில் பழைய மேகங்கள் சில அலைந்து கொண்டிருந்தன. அவை ஒரு புதிய புயலாக மெல்ல வலுவடைந்து வந்தது. அந்தக் கதையை விரிவாகப் பிறகு சொல்வோம். இங்குச் சற்றே கோடி காட்டுவோம்.
விஜயாலய சோழன் பல்லவ – பாண்டிய அரசர்களுக்கு அடங்கிய சிற்றரசன். அவன் மகன் ஆதித்தன் மாபெரும் வீரனாக வளர்ந்தான்.

கி பி 877: சற்று பல்லவ அரசியல் பேசுவோம்.

நிருபதுங்கவர்மன்-வரகுணன் கூட்டணி – வளர்ந்து வரும் சோழர்களைத் தோற்கடித்தது.

கி பி: 884: கம்பவர்மன் நிருபதுங்கவர்மனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான்.
இருவரில் யார் காஞ்சியில் எப்பொழுது ஆட்சி செய்தனர் என்பது சர்ச்சைக்குள்ளது. ஆனால் கம்பவர்மனது மறைவுக்குப் பிறகு அவன் மகன் இளவரசன் அபராஜிதன் பல்லவ அரசனானான். நிருபதுங்கவர்மனும் அபராஜிதனும் இருவரும் பல்லவ நாட்டை போட்டி போட்டுக் கொண்டு ஆண்டனர். அது எப்படி என்பது சரித்திரத்தில் பதியப்படவில்லை. இருவருக்கும் பகை முற்றியது.

இந்நிலையில் – பாண்டியன் – தமிழகத்தில் விஜயாயலயனின் ஆதிக்கம் வலுத்துவருவதை ஒடுக்கச் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தில் சோழர்களைத் துரத்தியடித்தான். விஜயாயலயன் அபராஜிதனிடம் உதவி நாடினான்.

கூட்டணிகள் அமைக்கப்பட்டன.
பகை மேகங்கள் கருக்கத் தொடங்கின.
இடி-மின்னல் வர ஆயத்தமானது

கி பி 879:
முதல் கூட்டணி:
நிருபதுங்கவர்மன் + பாண்டியன் வரகுணன்.

இரண்டாம் கூட்டணி:
அபராஜிதன் ஒரு மெகா கூட்டணி அமைத்தான்:
அதில் விஜயாலய சோழன் சேர்ந்தான். அபராஜிதனின் தாய் கங்க நாட்டு இளவரசி . அதனால் கங்க நாட்டு அரசன் முதலாம் பிரீதிவிபதி அவன் கூட்டணியில் சேர்ந்தான்.

 

திருப்புறம்பயம் போர்:

No photo description available.
இந்த பேரைக் கேட்டாலே தமிழக சரித்திரம் சற்று அதிரும்.
தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதிய போர்க்களம். திருப்புறம்பியம் என்ற ஊர். கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது. அங்கு அந்தப் பெரும் போர் நடந்தது. முதுமையின் காரணத்தால் விஜயாலய சோழனுக்குப் பதிலாக இளவரசன் முதலாம் ஆதித்த சோழனின் தலைமையில் சோழ படைகள் போருக்கு வந்தன. இந்தப் போரில் நிருபதுங்கவர்மனின் பங்கு என்ன என்பது சரியாகப் பதியப்படவில்லை. (அபராஜிதன் நிருபதுங்கவர்மனின் மகன் என்றும் சில ஆராய்ச்சியாளர் கருத்து – ஒரே குழப்பம்!!)

இருதரப்பிலும் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் மாண்டனர்.
அரசர்களது பேராசையால் தான் எத்தனை மனிதர்கள் காலங்காலமாக அழிந்துள்ளனர்!
இந்தப் போரில் மடிந்தது பெரும்பாலும் தமிழரே!

Image result for திருப்புறம்பியம் போர்

கங்க மன்னன் பிருதிவிபதி பாண்டியர் படைகளைச் சூறையாடினான். இதைக்கண்ட பாண்டியன் சீற்றம்கொண்டு அவன்மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால் மாள்வதற்குள் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்திற்கே வெற்றியளித்துவிட்டான். கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டி, ‘தன் உயிர் விட்டும் அபராஜிதனை (வெல்ல இயலாதவன் என்பது அப்பெயரின் பொருள்) அபராஜிதனாகவே ஆக்கிவிட்டான் என்று குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவிபதியை அடக்கம்செய்து நிறுவப்பட்ட பள்ளிப்படைக் கோயில் உள்ளது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கிப் பின்வாங்கினர்.

 

இந்தக் கூட்டணிப் போர் முடிவில் ஆதாயம் யாருக்கு?
பாண்டியர் தோல்வியுற்றுத் தளர்ந்தனர்.
வெற்றி பெற்ற பல்லவரும் பல வீரர்களைப் பலி கொடுத்துத் தளர்ந்தனர். பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது
கங்க மன்னன் இறந்து கங்கர்களும் தளர்ந்தனர்.
சோழன் மட்டும் சிறிய படை மட்டுமே அனுப்பியிருந்தான்.
ஆகவே.. சோழனுக்கு மட்டும் நட்டம் குறைவு. போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜிதன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். ஆதித்தன் சோழநாடு முழுவதையும் மீட்டுக் கொண்டான். போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். “உதிரம் வடிந்த தோப்பு” என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது.

திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தைத் தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறைப் போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்தப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல், இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது.

ஒரு நண்பன் பகைவனாக எத்தனைக் காலம் பிடிக்கும்? சரித்திரம் காலம் நேரம் எதுவும் பார்ப்பதில்லை. வளர்ந்து வரும் சோழர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்வது அபராஜித பல்லவனுக்குப் பிடிக்கவில்லை. பல்லவன் ஆளும் காலம் வரை சோழர் ராஜ்யம் வளர வாய்ப்பில்லை என்பது ஆதித்தனின் எண்ணம். உங்கள் ஊகம் சரிதான்.
போர்!
திருப்புறம்பியப் போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான (?!!) அபராஜிதவர்மனின் மேல் போர் தொடுத்தான். கீழைச் சாளுக்கிய வெங்கி மன்னன் அவனுக்கு உதவினான். ஆதித்தன் – அபராஜிதன் ஏறியிருந்த உயர்ந்த யானை மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றான். பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

பழிக்குப் பழி:

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றி கி.பி. 890 வரை, அதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர். என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

பல்லவர்கள் இந்தியச் சரித்திரத்திலிருந்து மறைந்தனர். நாமும் அவர்களது நீண்ட ஆட்சிக்கு அஞ்சலி செய்து அவர்களுக்கு சரித்திரத்திலிருந்து விடை கொடுப்போம்.

சரித்திரம் நகர்கிறது.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.