வீட்டினிலே பெற்றோரைப் போற்றிவைக்க இயலாது
வேறெங்கோ தள்ளிவைக்கும் வீணர்களின் இடையினிலே
நாட்டினிலே அரசியல்முன் னேற்றமெனும் வேட்டையிலே
நற்குணமாம் பண்பிழக்கும் நயவஞ்சகர் நடுவே
ஏட்டினிலே பேர்வரவே ஏராளம் செலவழித்து
இல்லாதார்க் குதவாத இருளோர்கள் இருக்கையிலே
மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி
மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்
ஏடெடுத்துக் கல்விகற்று ஏற்றமுற்ற பின்னாலே
எல்லோரும் நலம்வாழ எண்ணாதோர் மனந்தெளிய
பாடுபட்டு உழைப்பாலே பாழ்நிலத்தைச் சீராக்கும்
பாட்டாளியைப் போற்றாத பணக்காரர் பரிவுகொள
காடுவயல் கழனியிலே உழல்கின்ற உழவரது
நீடுதுயர் நீக்காத ஆட்சியினர் நெறியுணர
மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி
மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்
தனித்தமிழில் பேசாமல் தமிங்கிலத்தைப் பேசுகின்ற
தமிழர்தம் அறிவினிலே மொழிநேயம் வளர்ப்போம்
தமிழ்பேசும் அனைவருமே தமிழரெனும் உணர்வில்லா
சாதிமத வெறியரிடை இனநேயம் வளர்ப்போம்
காடுகளில் ஆறுகளில் காணுகின்ற இயற்கைவளம்
கருதாத மூடரிடம் புவிநேயம் வளர்ப்போம்
மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி
மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்!