சின்னஞ் சிறு சிறகுகளுடன்
சிறு தீக்குச்சி அளவேயான
கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்தது ..
என் வீட்டின் சமையலறை சன்னலில்.
ஐந்தரை அடி உயரத்தில் நான்..
அலறி அடித்து ஓடினேன் வெளியே!
காற்றில் பறக்கும் தூசி போல,
ஒரே ஒரு கொசு வட்டமிட்டுப் பறந்தது
தூங்க விடாமல் படுத்தியது…
ஒரு மணி நேரப் போராட்டத்தில்
வென்றது தூசிக்கொசு…
தோற்றது மாமனிதத் தூக்கம்!
கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்
தண்ணீருடனும், காற்றுடனும்
எனக்கே தெரியாமல், என்..
எண்சாண் உடம்பினுள்…!
வீரியமாய் அவைகள், நானோ
பலவீனமாய்…தும்மிக் கொண்டும்
இருமிக் கொண்டும் …
இத்தனை இருந்தும்..
இன்னும் பேசுகிறோம் ..
அஃறிணை நீ என்றும்… உயர்திணை நானென்றும் …
சின்ன நூல் கண்டா, சிறைப் பிடித்தது நம்மை என்றும் ….!