ஊனிலே வைத்து நம்மின்
உயிரினை வளர்த்த தாயும்
ஏனைய உறவு்க் கெல்லாம்
மேலையாம் மனைவி, தோழி
கூடவே பிறந்த தங்கை
கொஞ்சியே வளர்த்த அக்கா
தேடியே வந்த டைந்த
தெய்வ மகள்கள் என்றே
மண்ணிலே பெண்மை இல்லா
மாண்புகள் ஏதும் உண்டோ?
நுண்ணிய கிருமி நம்மை
நொந்திடச் செய்த போதும்
மண்ணிலே நம்மைக் காத்த
மருத்துவர் செவிலி யர்கள்
கண்ணிலே கண்ட தெய்வம்
காலமும் போற்று வோமே!
பெண்களைக் கொடுமை செய்யும்
பேய்களை அழிப்போம் இன்றே
பெண்களைக் கேலி செய்யும்
புல்லரை ஒழிப்போம் நின்றே
பெண்களை வணிக நோக்காய்
பின்னிடும் மடமை போக்கி
பெண்களைக் காத்து நிற்போம்
பெருமையாம் ஆண்மை அஃதே!
மானுடம் தழைக்க நன்று
மாதவம் நிலைக்க என்றும்
நானிலம் ஓங்க வென்று
நலமெலாம் பெருக நின்று
வானவர் போற்ற நீண்டு
வையமும் வாழ்த்த என்றும்
தானிகர் அற்ற மாதர்
சக்தியை வணங்கு வோமே!
மகளிர் தினக் கவிதை அருமை
LikeLike