உலக இதிகாசங்கள் எஸ் எஸ்

Humbaba is Coming! What will you do? | Welcome Travelers...

 

ஹம்பாபா என்ற அந்த  எதிரியைக் கொல்வதுதான் தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி வீர வசனம் பேசி துணிச்சலுடன் வந்த மாவீரன் கில் காமேஷ் அதற்கான முதல் தாக்குதலைத் தொடங்கியவுடனே மயங்கி விழுந்ததைக் கண்ட  எங்கிடு கவலையில் ஆழ்ந்தான்.

ஆனால் அது மயக்கம் அல்ல, அவனது தாயில் மடியில் முகம் புதைத்துக் கொண்டு கனவு காணும் நிலை என்பதை உணர்ந்துகொண்டான். மெதுவாக அவனை அசைத்து ‘உன் தாய் பெருமை கொள்ளும் நேரம் வந்துவிட்டது! எழுந்து வா நண்பா” என்று கூறினான். அதைக்கேட்ட கில் காமேஷ் ஆயிரம் யானைகளின் பலம் பெற்றவனைப்போல் எழுந்து போருக்குத் தயாரானான்.

என்  தாய் நிம்சீன் மீது ஆணை ! என் தந்தை லுகல் பண்டாவின் மீது ஆணை ! என் எதிரி மனிதனோ தேவனோ யாராயிருந்தாலும் சரி , அவனை வெற்றி கொள்ளாமல் ஊருக் நகருக்குத் திரும்பமாட்டேன் ” என்று மீண்டும் ஆணையிட்டுக் கூறினான்.

அப்போது செடார் காட்டின் அதிபதி மிகக் கொடிய அரக்கன் ஹம்பாபா அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து மிகப் பயங்கரமாக நின்றான்.

Gilgamesh and the Cedar forest

அப்போது கில் காமேஷ்  எங்கிடுவிடம் உற்சாகம் பொங்கக் கூறினான்.

“வா! எங்கிடு! நாம் தாக்குதலைத் தொடங்குவோம்!  அவனுக்கு ஏழு மாய உருவங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  அதில் ஒன்றைத்தான் இப்போது காண்கிறோம். அவன் அவனுடைய பலமான காட்டுக்குள் ஓடிவிட்டால் அவனை வெல்லுவது என்பது மிகக் கடினம்” என்று கூறி முன்னேறினான்.

“என்  சூரியக் கடவுளே ! காமாஷ்! எனக்குச் சக்தி கொடு! என்னைக் காப்பது உன் கடமை” என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு ‘ஹோ ‘ என்று  பலமாகக் கத்திக்கொண்டு கில் காமேஷ் பாய்ந்தான்.

சூரியக் கடவுளும் அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து கில் காமேஷுக்குத் துணையாக இருக்க பெருங்காற்றுகளை ஏவி விட்டான். வட காற்று,  சுழற்காற்று , பனிக்காற்று, சூறாவளி, தீக் காற்று எல்லாம் இறக்கை முளைத்த பாம்புகள் போல கில் காமேஷுக்குத் துணையாக வந்தன.

தன்னுடைய கட்டளையின் கீழ்  இருந்த அந்த பயங்கர காற்று ஆயுதங்களை ஹம்பாபா  மீது கில்காமேஷ் ஏவி விட்டான்.

தீ போல பிரளயம் போல மின்னல் போல அந்தக் காற்றுப் பாம்புகள் ஹம் பாபா மீது ஒருங்கே  பாய்ந்தன. அவன் கண்களை அந்தக் காற்று குருடாக்கின . அவன் கால்களை  முன்னே பின்னே நகர விடாமல் கட்டிப் போட்டன.

“ஹம்பாபா! கொடிய அரக்கனே! உன் கொடூரத்திற்கு இன்று முடிவு வந்துவிட்டது! மனிதனான நான் அதைச் செய்யப்போகிறேன்! ” என்று சொல்லி அவனுடைய  பலமான – உயிருக்கும் உயிரான செடார் மரங்களில் ஒன்றை வெட்டி வீழ்த்தினான் கில் காமேஷ்! 

காற்றுக்களால் கட்டிப்போடப்பட்ட ஹம்பாபா  மிகவும் கோபாவேசத்துடன் “இந்த மானிடர் இருவரும் என் அருகில் வரட்டும்.  அவர்கள் இருவரையும் ஒரே நொடியில்  அழித்து விடுகிறேன்” என்று காத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் கில் காமேஷும்  எங்கிடுவும்  அவன்  அருகில் செல்லாமல் அவனுடைய உயிர் நாடியான  செடார் மரங்களை வெட்டுவதிலேயே குறியாய் இருந்தார்கள். ஏழு மரங்களை வெட்டினார்கள்.  ஒவ்வொரு மரம் வெட்டப்படும் போதும் ஹம் பாபா சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தான். அவர்கள் மீது பாய்ந்து அழிக்கப் பிரயாசைப்பட்டான். நகர முடியாத அவன், தன்  கண்களால் தீயை எழுப்பி அவர்கள் இருவர் மீதும் ஏவி விட்டான்.

கில் காமேஷும்  எங்கிடுவும் லாவகமாக அவன் அனுப்பிய தீ அம்புகளிலிருந்து தப்பினார்கள்.  அந்தத் தீ அணையும் போது  அவன் அருகில் நெருங்கினார்கள். அசைய முடியாத ஹம்பாபா அவர்களை அருகில் பார்த்ததும் ஆவேசத்துடன் தன் தொடையைத் தட்டினான். இடி மின்னல் போல அது ஒலித்தது.

அதற்குப் பின் தொடர்ந்தது இரு மனித வீரர்களில் மாபெரும் தாக்குதல். 

கில் காமேஷ் மற்றும் எங்கிடு தங்களிடமிருந்த அத்தனை ஆயுதங்களையும் ஹம் பாபா  மீது பிரயோகித்தார்கள்.   அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வேதனையில் துடித்தது . வனத்தின்  அதிபதி என்ற திமிரில் தான் செய்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு செய்ய இந்த இரு வீரர்கள்  வந்துவிட்டாகள் என்பதைப் புரிந்து கொண்டான். தன்னுடைய இறுதிக் காலம் வந்துவிட்டதோ என்று கவலைப்பட்டான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. முகம் வெளுத்தது.  அவன் கில்காமேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“ஓ கில்காமேஷ்! நீ மிகவும் பலசாலி என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் மலையின் வனத்தின் அதிபதி!  காட்டைக் காக்கக் கடவுள் படைத்த மாபெரும் மலை நான்! மலைக்குப் பிறந்தவன்! என் தாய் மலைதான்! ஆனால் தாய் அன்பைப் புரிந்துகொள்ளாத பாவி நான்! வேதனைகளை மற்றவர்களுக்கே எப்போதும்  கொடுத்தவன்  நான்!  இன்றுதான் அதன் கொடுமையை உணர்கிறேன். என்னை விட்டுவிடு! சுதந்திரமாகப் போகவிடு! நான் உன் அடிமையாகிவிடுகிறேன். இந்த வனத்தில் உள்ள அத்தனை மரங்களையும் உனக்கே தருகிறேன். நல்ல செடார் மரங்களை வெட்டி உனக்கு நானே அரண்மனை கட்டித்தருக்கிறேன். என்னை இந்தக் காற்று வலைகளிலிருந்து விடுவித்துவிடு!! என்னை என் தாயுடன் இருக்க விடு! அவளுடைய மடியில் முகம் புதைத்து இருக்கவே விரும்புகிறேன்! இனி எந்த மனிதருக்கும் தீமை செய்யமாட்டேன்  ” என்று கண்களில் நீர் வரக் கூறினான்.  

தாய் அன்பு என்ற ஹம்பாபாவின் வார்த்தையைக் கேட்டதும் கில்காமேஷின் மனம் இளகியது. சிறைப்பட்ட அவனை விடுவிப்பதே நியாயம் என்று அவனுக்குத் தோன்றியது. 

காடு மாலை வனம்  என்றே இருந்த  எங்கிடுவிற்கு ஹம்பாபாவின் குணம் நன்றாகவே தெரியும். அதனால் அவன் கில்காமேஷிடம் , “நண்பா! செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாதவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் வீழ்ந்து விடுவான் என்பதை உணர்ந்து கொள்! சிறைப்பட்ட பறவையையும் பிடிபட்ட கைதியையும் விடுவிப்பது வேடனுக்கும் வீரனுக்கும் அழகல்ல!   நாம் இப்போது ஹம்பாபாவின்  வனத்துக்குள் வந்திருக்கிறோம். அவன் அழியாவிட்டால்  நம்மால் நம்  ஊருக்குத் திரும்பச் செல்ல இயலாது. வனத்தின் தன்மை அப்படி! இவனை நீ முடித்தாக வேண்டும்! அதுதான் உன் தாயின்  கட்டளை! ”  என்று கூறினான். 

அதைக்கேட்ட ஹம்பாபா, ” அடேய் ! எங்கிடு! நீ அடிமை! உனக்குப் பேச உரிமையில்லை! அதுமட்டுமல்லாமல் உனக்கு கில்காமேஷ் மீது பொறாமை! அதனால் அவன் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்கிறாய்!” என்று ஆத்திரத்தோடு கூறினான். 

கில்காமேஷ் மனமும் தடுமாறியது. சிறைப்பட்ட ஒருவனைக் கொள்வதில் என்ன வீரம் இருக்கிறது. அது புகழுக்கு இழுக்கல்லவா ?  என்று எண்ணினான். 

Killing Humbaba – By Common Consent, a Mormon Blog

அவன்  எண்ண  அலையை  நன்கு புரிந்துகொண்ட எங்கிடு ,”  நண்பா! ஹம்பாபாவின் கதை முடிந்துவிட்டது. அவன் உன் கையால் அழியப் படவேண்டியவன். அவனை விடுவித்தல்  என்பது தற்கொலைக்குச் சமம். புகழையும் பெருமையையும் எப்போது வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் உயிர் போனால் போனதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக இவனை வதம் செய்வது உனது கடமை ! நீ செய்த சத்தியம்!  எந்த யோசனையும் செய்யாமல் அவனை முடித்துவிடு” என்று ஆணித்தரமாகக் கூறினான். 

கில் காமேஷ் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து கொண்டான்.

ஹம் பாபாவுக்கு   விடுதலை அளிக்கத் தீர்மானித்தான்!

காற்றுத் தளையிலிருந்தா? இல்லை ஒரேடியாக உலகத்திலிருந்தா? 

தன் வாளையும் கோடாலியையும் இரு கரங்களில் எடுத்துக் கொண்டு ஹம் பாபா அருகே நெருங்கினான்.

(தொடரும்) 

 

2 responses to “உலக இதிகாசங்கள் எஸ் எஸ்

  1. கதை விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. மிக நன்று.

    Like

  2. சிறப்பாகச் செல்கிறான் கில்காமேஷ். சிறப்பாகச் சொல்கிறார் சுந்தரராஜன்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.