கதவு திறந்திருந்தாலும்
பறக்க மறந்தது
பழகிப் போய்விட்டது.
கம்பிகளைக் கடித்துக் கடித்து
அலகெல்லாம் வலிக்கிறது.
ஒரு நெல்லுக்காகக்
கழுத்து நோக
முப்பது சீட்டுகளைக்
கலைக்க வேண்டிஉள்ளது.
வெளியில் தெரியும்
வானமெல்லாம்
விரிந்து கிடக்கும்
கானல்நீர்தான்.
காலை முதல்
யாருமே வராததால்
முழங்கால்களுக்கிடையில்
முகம் புதைத்திருக்கும்
இவனும் பாவம்தான்.
எதிர்மரக்கிளையில்
இருக்கின்ற இணையே!
இன்றும் உன்னைக்
கனவில்தான்
கலக்கவேண்டும் போலிருக்கிறது.