“குற்ற உணர்வுடன் போராட்டம்” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

வாடின பூ, ஏனோ தானோ என்று வாரிய தலை, முகத்தில் சிறிது அளவும் சந்தோஷம் தென்படவில்லை. விரிந்த பெரிய கண்களில் முழுவதும் சோகம். முகமே வாடி இருந்தது. தன்னை இழுத்துக் கொண்டு வருவது போல வந்தாள் ப்ருத்வி, வயது பதினெட்டு.

அவளை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி, என் முன் அமர்ந்தார். ப்ருத்விக்கு சமிக்ஞை செய்தபின் அவளும் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அதிகாரி உடனே சுருக்கமாக விவரித்தார். அவள் வீட்டிற்கு சில காகிதங்களைத் தரச் சென்றிருந்த போது, இவள் அவரை அணுகி, மனநல ஆலோசகரைப் பற்றிக் கேட்க, அவர் எங்களைப் பற்றி விவரித்தார். கையோடு அழைத்து வந்ததாகக் கூறினார். எங்களது நிறுவனம் காவல்துறையில் இருந்ததால் நாங்கள் செய்வது, எங்கள் அணுகுமுறையைப் பற்றி இங்கு எல்லோருக்கும் நல்ல பரிச்சயம். அதனால் அழைத்து வந்தார். காவல்துறையின் உதவி, ஒத்துழைப்பு எங்களுக்கு என்றும் பெரிய தெம்பு.

அந்த காகிதங்கள் பற்றியும் ஒரு வரியில் விளக்கினார். ப்ருத்வியின் ஒன்பது வயது தம்பி, மிலிந்த் தற்கொலை செய்து கொண்டான் என்று. அவர் சொல்லும் போது, ப்ருத்வியிடம் பல மாற்றங்களைப் பார்த்தேன். அதிகாரியும் பார்த்து, “ஆமாம் மிகக் கஷ்டமான சூழ்நிலை. மனசைத் தளர விடாதே. நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்” என்றார். அவர் சொல்வதை ஆமோதித்து, தானாக உதவி கேட்டு, வந்ததே அவளுடைய தைரியத்தைக் காட்டுகிறது என்றேன். அவர் தலையை ஆட்டிக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

ப்ருத்விக்கு ஆசுவாசப்படுத்த எங்களின் குடும்ப மனநல சிக்கல்களைக் கையாளும் NGO பற்றி எடுத்துச் சொன்னேன்,  பல தகவல்களை அளித்தேன். அவளுடைய நிலை மிகவும் தர்மசங்கடமானதுதான் என்று ஆமோதித்தேன். மறு கணம் அவளும் பகிர ஆரம்பித்தாள்.

தம்பி மிலிந்த் அவளுக்கு உயிர். அம்மா வேலைக்குப் போவதால், தம்பியைச் சிறுவயதிலிருந்தே அதிக பட்சம் அவளே பார்த்துக் கொள்ளும் படி நேர்ந்தது.

அம்மா ஒரு ஜிம் நடத்தி வந்தாள். அதனால் வெகு காலையில் கிளம்பி மதியம் உணவு நேரம் வீட்டிற்கு வருவாள். மாலை ஐந்து மணிக்குக் கிளம்பி விடுவாள். சிறுவயதிலிருந்தே ப்ருத்வி வீட்டைப் பார்த்துக் கொண்டாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம்பியைப் பார்த்துக் கொள்வதும் சேர்ந்தது. அக்கறையாகப் பார்த்துக் கொள்வதால் எப்போதும் எந்த கேள்வியும் எழவில்லை. அப்பா வேலையிலிருந்து வந்தபின் அவருக்கு டீ போட்டு, டிஃபன் தருவதும் ப்ருத்வியே.

அவள் படிப்பில் கெட்டிக்காரி. மிலிந்த்திற்கு பாடத்தை கற்றுத் தருவது, வீட்டுப் பாடத்தில் உதவுவது என அவனுடைய முழு பொறுப்பை ஏற்றுச் செய்தாள். அம்மாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று முயலுவோம் என்றதாலும்.

இந்த விளக்கங்களைப் பகிர, பலமுறை ப்ருத்வி சொன்னது, அக்கா-தம்பி அவ்வளவு பாசமாக இருப்பதைப் பற்றி. இருவரும் அன்றாட பள்ளியில் நடந்ததைப் பகிர, ஒருவருக்கு ஒருவர் சமாதானம் செய்து கொள்வார்கள். அம்மா திரும்பி வர இரவு ஒன்பது மணி ஆகிவிடும். சோர்ந்து வருவதால், எதையும் சொல்ல மனம் வராது. அப்பா எட்டு மணிக்கு வந்தாலும் ஏனோ பகிர மனம் வந்ததில்லை.

தன் பொறுப்பில் இருப்பதால் அவன் நன்றாக வரவேண்டும் என்பதால் சலுகை கலந்த கண்டிப்பைக் கடைப்பிடித்ததாகக் கூறினாள். உதாரணத்திற்கு, மிலிந்த் விளையாடப் போகும் முன் எப்பொழுது திரும்பி வர வேண்டும் என்ற நேரத்தைச் சொல்லி விடுவாளாம். அதை கடைப்பிடிப்பது அவனுடைய பொறுப்பு என அவனுக்குச் சொல்லி விடுவாள். தனக்குப் பொறுப்பு கொடுத்ததால் அதைப் பரிபூரணமாக மிலிந்தும் செய்வானாம். நேரத்திற்கு வந்து பெருமையாகச் சொல்லிக் காண்பிப்பானாம். அதனால் தான் ப்ருத்வி எதையாவது தடை செய்தால்,  அதைப் பற்றி விளக்கம் தந்து புரிய வைப்பாள். ஏற்றுக் கொள்வானாம். இதனால் இருவருக்கும் சண்டை வராமல் பார்த்துக் கொண்டாள்.

இதுவெல்லாம் அம்மாவோடு ஷாப்பிங் போகும்போது தலைகீழாக மாறும். மிலிந்த் எதைக் கேட்டாலும் அம்மா வாங்கித் தந்து விடுவார்கள். கேட்பது ஏற்கனவே அவனிடம் இருக்கிறது என ப்ருத்வி எடுத்துச் சொன்னால், அம்மா-அப்பா அவளை முறைத்து “எங்களுக்குத் தெரியும். பெரிய மனுஷி போல பேசாதே. குழந்தைக்கு வாங்கறோம். பேசாம இரு” என்பார்கள். மிலிந்த் புன்னகை பூத்து அவளை கேலி செய்வான்.

அம்மா இதற்குத் தந்த விளக்கம்: தான் வீட்டில் இருப்பது இல்லை. மிலிந்த் ஏங்கிப் போகாமல் இருக்க இப்படி வாங்கித் தருவதாக. அதனால் தான் ப்ருத்வி தோசை சுட்டு தந்தாலும், அம்மா வந்தபின் பீட்சா கேட்பான். அவன் எந்த பீட்சா கேட்கிறானோ அம்மா வாங்கித் தருவாள், அவனுக்கு மட்டுமே.

ப்ருத்வி கணிப்பில், சலுகைகள் மெல்ல அதிகரித்தன. அத்துடன் மிலிந்த் இவள் பேச்சைக் கேட்க மறுத்து வந்தான். பாசத்தினால் அவளும் தாஜா செய்ய ஆரம்பித்தாள். மிலிந்த் மசிய மாட்டான். அம்மாவிடம் ஓடிடுவான்.

மிலிந்த் கேட்பதை, வாங்கித் தரவில்லை என்றால் திரும்பத் திரும்பக் கேட்பான், அப்படியும் வாங்கித் தரவில்லை என்றால் அழுகை ஆரம்பமாகும். அதன் பிறகு, ஒரு மூலையில் நின்று கொண்டு, அவளையே உற்றுப் பார்ப்பான். சில நிமிடங்களில் மனம் இறங்கி செய்திடுவாள். உடனே அவள் கழுத்தைக் கட்டி “செல்ல அம்மா” என்றதும் இருவரும் கொஞ்சுவார்கள். அம்மா “இதுக்கேன் உன்னை இப்படி தவிக்க வைக்க வேண்டும்” என்பாளாம்.

அதனால் தான் மிலிந்திற்கு ஐந்து ஆறு வயதிலிருந்து ப்ருத்வி செய்வதில் உடன்பாடு இல்லாதபோது அம்மாவிடம் ஓடுவான். முறையிடுவான். அவள் எல்லா ரூல்ஸ் மீறிச் செய்ய விடுவாள். ப்ருத்வியை கேலி செய்து மிலிந்த் ஓடுவான்.

நாளடைவில் மிலிந்த் கேட்டதை அம்மா வேண்டாம் எனச் சொன்னபோது அம்மாவைப் பயமுறுத்த, அம்மா முந்தானையைக் கழுத்தில் அழுத்திக் கட்டி, தரும்வரை செய்வான். சில நிமிடங்களில் அவன் கேட்பது கிடைக்கும்.

இவை நடக்கையில் இதைப் பார்த்திருக்கும் ப்ருத்வி மனதளவில் வருத்தப் படுவாள். யாரிடமும் கூறியதில்லை. 

ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் திடீரென மிலிந்த் தான் ஆசைப்பட்ட கைப்பந்து வேண்டும் எனக் கேட்டான். அம்மா அப்பாக்குள் அன்று வாக்கு வாதம். அது முடிந்தும் மிலிந்த் தனக்கு அந்த கைப்பந்து வேண்டும் என்றான். அப்புறம் என்றார்கள். அந்த பதிலை நிராகரித்து, மிலிந்த் திரும்பவும் கேட்டான். அப்புறம் என்றார்கள். “இரு என்ன செய்கிறேன்” என உள்ளே போய் தாளித்துக் கொண்டான். அரைமணி கழிந்தும் அவன் வெளியே வரவில்லை, ப்ருத்வி எழுந்தாள், பெற்றோர் இருவருமே அவளைக் கண்டித்து “நீ தர செல்லத்தில் கெடுகிறான், உட்கார்” என்றார்கள். ஒரு மணி நேரம் போயிருக்கும். அவன் நண்பர்கள் விளையாட அழைக்க, அம்மா அழைத்தாள்.

பதில் இல்லை. போய் பார்த்தாள். மூடியிருந்த கதவைத் திறக்கப் பார்த்தாள். முடியவில்லை. எல்லோரும் ஒருவிதமான மனநிலையில் திறக்க முயன்றார்கள். இவர்கள் அலறும் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் வந்து உதவ முயன்றார். எதுவும் பலனில்லை. யாரோ காவல்துறையை அழைத்தார்கள். அதற்குள் கதவு திறந்தது.

உள்ளே, மிலிந்த் நாற்காலியில் உட்கார்ந்து அம்மா புடவையைக் கழுத்தில் சுற்றி இருந்தான். பதட்டத்துடன் ஓடி வந்தார்கள் அவன் “வாங்கித் தரியா” என்றவனுக்கு “எதைக் கேட்டாலும் தரேன்” பதில் அளித்தாள் அம்மா, அப்பாவும் ஒப்புக்கொண்டார். வந்த காவல்துறை அதிகாரி எச்சரிக்கை செய்து சென்றார்.

இது நடந்த இரண்டாவது மாதம் இதே மாதிரி நடந்தது. மிலிந்த் கேட்க-ப்ருத்வி இல்லை என்றாள்-அம்மா அப்பாவைக் கேட்டான்- மறுத்தார்கள்-உள்ளே போய் விட்டான். போன முறை போல ஒரு மணி தாமதித்துச் சென்றார்கள். இந்த முறை முடிச்சு அழுத்தமாக இருந்ததில், உயிர் பிரிந்திருந்தது. மிலிந்த் பயமுறுத்தச் செய்தானே தவிர, தன் உயிர் போகும் என நினைக்கவில்லை போல் இருந்தது. காவல்துறையினர் வந்து பார்த்து, தகவல்களைக் கேட்டு. செய்ய வேண்டியதைச் செய்தனர்.

ப்ருத்வியால் இதைத் தொடர்ந்து பேச முடியவில்லை. அணை வெடித்தது போல் கண்ணீர் ஓடியது.

சமாதானம் ஆன பின் மறுபடியும் வரும் நேரம் குறித்துக் கொண்டு சென்றாள்.

மறுபடி ப்ருத்வி வந்தாள்.

பெற்றோர் இருவரும் மனம் உடைந்து இருப்பதைப் பார்க்கவே முடியவில்லை என்று ஆரம்பித்தாள். தன்னால் சமாதானம் செய்ய முடியவில்லை, என்ற குற்ற உணர்ச்சி உறுத்துவதாகப் பகிர்ந்தாள்.

ப்ருத்வி எல்லோரையும் காக்கும் பொறுப்பைத் தன்னை அறியாமல் ஏற்றுக்கொள்ள அவளுக்கு இவ்வாறு தோன்றியது. இவளுக்கே சமாதானம் செய்ய வேண்டிய நிலையிலிருந்தாள். ஆனால்….

மிலிந்த் மரணத்தைத் தான் தடுத்து நிறுத்திருக்கலாம் எனத் திரும்பத் திரும்பச் சொன்னாள். ஒரு வேளை இத்தனை கண்டிப்பாக இல்லாமல் இருந்திருந்தால்? மனக் குமுறலைப் பகிர விட்டேன்.

பல கேள்விகள் எழுந்தன. ப்ருத்வி தேடல், இவ்வாறு போய்க் கொண்டு இருக்கையில் நடுவில் ஓரிரு கேள்விகள் கேட்டேன். பதில் தர தன் தேடலின் பதில் கிடைக்க ஒரு கடுகு அளவு சமாதானம் ஆக ஆரம்பித்தது. 

மிக நிதானமாக தன் மேல் பழி சுமத்திக் கொள்வதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள். தனக்குச் சாட்டையடி விழுவதால் அந்த உணர்வு மேல் ஓங்க, இழந்த உறவைப் பற்றிய உணர்வைக் கையாளும் முயற்சி என்றதை அறிந்தாள்.

பல ஆண்டுகளாக ப்ருத்வி மிலிந்தைப் பார்த்துக் கொண்டாள். அவன், தன் பொறுப்பு என்பதாலும் வலி. பாசம் ததும்பும் ப்ருத்விக்கு தனது இழைப்பை எப்படிக் கையாளுவது எனத் தெரியவில்லை.

இதைப் பற்றி உரையாடும் போது அவளுக்கும் பெற்றோருக்கும் சுமுகமான உறவு இல்லை என வெளிவந்தது. அவர்கள் “மகன்” இழைப்பைப் பலரிடம் சொல்லி வருத்தப் பட்டார்கள். இவளை “பாரம்” எனச் சொன்னதால் ப்ருத்வி அழுதால், “எங்களுக்கு கொள்ளி வைப்பவன் போயிட்டான். நீ பாரம். உயிரோடு இருக்க” என்பார்களாம்.

இந்த முறை அவளுடைய தோழி வந்தாள்.

ப்ருத்வி ஏதோ எதிரும் புதிருமாகச் செய்வதைப் பற்றி விளவினாள். கவலைப் பட்டாள்.

இதுவரை ப்ருத்வி சரியான பாதையில் போய்க் கொண்டு இருந்தவள். திடீரென இழப்பு. பெற்றோரின் நிராகரிப்பு. ஏக்கத்தின் நிழல் அவளைக் கவ்வியது. அதனால் எதிர்மறையாகச் செய்தாள். அந்த நடத்தையின் மேல் கவனம் போகும். அதனால் தன்மேல் கவனம் எழும். நெகடிவ் அடேன்ஷன்.

தோழி, ப்ருத்வி செய்வதைக் கவனித்து உஷார் ஆனதை வர்ணித்தாள். இதிலிருந்து மீண்டு ப்ருத்வி மறுபடியும் தன்னைப் பாசத்துடன் பார்த்துக் கொள்ளப் பல உரையாடல் போனது.

ப்ருத்வி பார்க்க ஆரம்பித்தாள். தன் செயலுக்கும் மிலிந்த் அடம்பிடிக்கும் விதத்திலும் பல ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்தாள். அவன் செய்ததை நினைவூட்ட இவள் செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கையில் இருவிதத்தில் பயன்பட்டன. ஒன்று, மிலிந்த் நினைவலைகள் ஓட அவனை, அவர்கள் இருவரும் கூடச் செய்த பலவற்றை வர்ணித்தாள். நீர் மல்கும் கண்களில். இன்னொன்று, இந்த பகிர்தலில், தான் இப்போது செய்வது பற்றித் தெளிவு பெற ஆரம்பமானது. அது, தன் வழி இது அல்ல எனத் தெளிவானது.

வாழ்க்கையில் வெறிச்சோடி இருப்பதாக உணர்வதைப் பற்றிப் பேசினாள். வீட்டில் பெற்றோரின் ஆதரவு இன்னும் தடுமாறியது. இங்கு வந்து என்னைச் சந்திக்க மறுத்து விட்டார்கள். ப்ருத்வியினுள் பாசம் இன்னும் ததும்பியது. இதைப் பிரயோகித்து, பூ அலங்காரம் செய்வதென்று முடிவெடுத்தோம்.

இதற்கு, அவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு பூவேலை செய்யும் இடத்தில் தினந்தோறும் இரண்டு மணி நேரம் பணி செய்வது என முடிவானது. பல விதமாகச் செய்தாள். செய்ய ஆரம்பித்ததில் அவர்கள் விற்பனை பல மடங்கு வளர்ந்தது.

இதில், அத்தனை மனத்திருப்தி வரவில்லை என்றாள் ப்ருத்வி. அலங்காரம் எனும் வியாபாரம் என்ற எண்ணமோ? பாசத்தைச் செலவு செய்ய வேறு வழி தேடினாள். அங்குள்ள ஒருவர் நாய்களைப் பார்த்துக் கொள்பவள். அதாவது ஊருக்குப் போவோர்களின் வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால். அவர்களைக் கவனிப்பது.  சரியாகப் பார்த்துக் கொள்ள, நான்கு ஐந்து நாய்கள் மட்டுமே வைப்பாள். பலமுறை எங்களிடம் வரும் க்ளையன்டஸை நாங்கள் அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

ப்ருத்வி பாசம் உள்ளவள். இந்த தருணத்தில் அவளிடம் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் பாசம் காட்ட நாய்கள் தான் சரி என்று தோன்றியது. அந்தப் பணியில் ஈடுபடலாம் என்று அவளிடம் பரிந்துரைத்தேன். முதலில் செல்லப் பிராணிகளைப் பற்றி பயம் என்றாள். பாசத்திற்கு முன் பயம் எம் மாத்திரம்? சென்றாள், தயக்கம் பயம் எல்லாம் ஆரம்பத்தில். நாள் ஆக ஆகச் செல்ல பிராணிகள் பலன் அடைந்ததோடு ப்ருத்வியிடம் வந்த மாற்றங்கள் பல.

இவளிடம் கண்ட மாற்றமே அவளுடைய அப்பாவை வந்து என்னைப் பார்க்க வைத்தது. இரண்டு மாதமாக அவர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டார் எனத் தெரிய வந்தது. தனக்கு வேலையில் நாட்டம் இல்லை என்று ஆரம்பித்தார்…

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.