சரித்திரம் பேசுகிறது – யாரோ

பராந்தகன்

கள்ளர் மரபினரின் வரலாறு: மாமன்னர் ஸ்ரீ முதலாம் பராந்தக சோழத்தேவர்

முதலில் வாசகர்களுக்கு ஒரு இலக்கணக் கேள்வி.
‘பராந்தகன்’ என்பதின் பொருள் என்ன?.
‘அயலாரை முடித்தவன்’ (பர -அந்தகன்) என்று பொருள்.
இனி யாரேனும் ‘மதுராந்தகன்’ என்றால் என்ன என்று கேட்டால் – நீங்கள் ‘ஞே’ என்று விழிக்க வேண்டாம். ‘மதுரையை முடித்தவன்’ – என்பது தான் பொருள் என்று ‘டாண் டாண்’ என்று சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளலாம்!
இந்தப் பதவுரை – பொழிப்புரை சமாச்சாரம் எல்லாம் நமக்கு எதற்கு? கதைக்குச்செல்வோம்.

கி பி 907: தொண்டைமானுர்.

இன்றைய ஆந்திராவிலிருக்கும் காளஹஸ்தி. சோழமன்னன் ஆதித்தன், தன் மகன் பராந்தகனிடம் : “சோழர்களின் எதிர்காலம் உன் கையில்” – என்று கூறி விட்டு இறந்தான். அதற்குச் சில வருடம் முன்பே ஆதித்தன், பராந்தகனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் செய்திருந்தான். பராந்தகனின் இயற்பெயர் ‘வீர நாராயணன்’. யுவராஜாவாகும் சமயத்தில் அவன் பராந்தகனானான்!

ஆதித்தன் இறந்த செய்தி காட்டுத்தீபோலத் தென்னிந்தியா முழுவதும் பரவியது. பொதுவாகவே ஒரு சக்தி வாய்ந்த மன்னன் இறந்தால் – சுற்றியிருக்கும் மன்னர்களுக்குக் குளிர்விட்டுப் போய் எல்லைப்புறப்பகுதிகளை ஆக்கிரமிக்க முற்படுவர். உள்நாட்டில் கலகம் விளைவித்து அந்த அரசைக் குலைக்க முற்படுவர். வரப்போகும் அரசனுடைய பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பர். இம்முறை அப்படிப் பெரிதாக நடக்காததற்குக் காரணம் – அந்த அண்டை நாட்டு மன்னர்களெல்லாம் போரில் பெரிதாகத் தோற்று, நஷ்டப்பட்டு, வெந்து நொந்திருந்திருந்தார்கள்.

பராந்தகன், நாட்டு நிலைமையை நன்கு உன்னிப்பாகக் கவனித்துப் படித்தான். தந்தையார் விரிவு படுத்திய அரசை மேலும் விரிவுபடுத்துமுன் – முதலில் இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் – என்று நினைத்தான். முதலில் தஞ்சாவூர் சென்று சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொள்ளவேண்டும். தான் யுவராஜா ஆக இருந்த போதிலும் – அரசனாகத் தடை ஒன்றுமிருக்கக்கூடாதல்லவா!

ஆதித்தன், இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் மகளை (இளங்கோ பிச்சி) மணந்து அவளை பட்டத்தரசியாக்கியது நீங்கள் அறிந்ததே. மகாராணி இளங்கோ பிச்சியின் மகன் இளவரசன் கன்னரதேவன். அவன் பராந்தகனை விட வயதில் இளையவன். ‘ஒரு வேளை, அவன் சோழ மன்னனாக வர முயற்சி செய்வானோ?’ – என்று பராந்தகன் மனதில் ஒரு எண்ணம் மின்னல் போலத் தோன்றியது.

பராந்தகன் தஞ்சாவூர் சென்றவுடன் முதல் வேலையாகப் பெரியன்னை இளங்கோ பிச்சியை அரண்மனையில் சந்தித்தான். ஆதித்தன் மரணத்தை நினைத்து இருவரும் கண்ணீர் பெருக்கி அழுதனர். பராந்தகன் – மகாராணியிடம் – ஆட்சிப் பொறுப்பைப் பற்றி எப்படிப் பேசுவது என்று சற்றேத் தயங்கினான். அதற்கு முன்பே மகாராணி பேசினாள்:

“நாராயணா! நீ உடனடியாக சோழ நாட்டு மன்னனாக முடி சூட்டிக்கொள்ள வேண்டும். உன் தந்தையின் உழைப்பு வீண் போகலாகாது. உன்னைத்தான் அவர் நம்பியிருந்தார்”. இதைக்கேட்டு பராந்தகனின் கண்கள் பனித்தன.
“தாயே! உங்கள் ஆசிகளும் தந்தையின் அருளும் இருக்கும் போது நமக்கு என்ன குறை” – என்றான்.

பட்டாபிஷேகம் அடுத்த வாரம் நடந்தது. இளங்கோ பிச்சியின் தகப்பனார் – இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், பட்டாபிஷேகச் செய்தி கேட்டுப் பொங்கினான். ‘என் மகள் – மூத்த சோழ ராணி – பட்டத்து ராணி -இளங்கோ பிச்சியின் மகன் கன்னரதேவன் தானே சோழ நாட்டுக்கு அரசனாக வேண்டும். இது என்ன சதி!’. என்று பொருமினான். ஆனால் – காலம் கனியப் பொறுத்தான்.

பராந்தகன் அரியணை ஏறினான். ‘பரகேசரி’ என்ற பட்டம் கொண்டான். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடத்தில் படையைப் பலப்படுத்தினான். அண்டை ராஜ்யங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தான். பாண்டிய நாடு தோல்வியினால் சிதறிப் போயிருந்தது. பாண்டியன் இராஜசிம்மன் கடந்த பலப்போர்களில் ஏற்பட்ட தோல்விகளால் துவண்டிருந்தான். மேலும் உள்ளூரில் கிளர்ச்சி செய்த சிற்றரசர்களை அடக்குவதிலும் அவனது நேரமும், பொருளும் செலவாயிற்று. பராந்தகனுக்கும் இராஜசிம்மனுக்கும் பலப்போர்கள் நடந்தது. அவற்றிலெல்லாம் வெற்றிபெற்ற பராந்தகன் இராஜசிம்மனை மதுரையிலிருந்து துரத்தி ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டப்பெயரைக் கொண்டான். ஆயினும் பாண்டிய நாட்டை முழுமையாகத் தன்னாட்சிக்குக் கொண்டு வரப் பல ஆண்டுகள் நீடித்தது. இந்தக்கதைகளை விவரமாகச் சொல்லும் முன்னர் – அதாவது முதல் பாண்டியப்போர் முடியும் சமயம் .. இன்னொரு சம்பவம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

கி பி 909: சோழ உளவாளிகள் இராட்டிரகூடத்திலிருந்து போர்ச்செய்திகள் கொண்டு வந்தனர். இளவரசன் கன்னரதேவன் பராந்தகனிடம் சென்றான்: “அண்ணா! என் பாட்டனார் கிருஷ்ணன் தவறு செய்கிறார். நமது தந்தை தங்களை அரசாளத் தேர்ந்தெடுத்து யுவராஜாவாக்கினார். அவர் வாக்கு தான் நமக்கு என்றும் வேதம். தாங்களும் மகாராஜாவாக்கிச் சிறப்பாக ஆட்சி செய்கிறீர்கள். என் பாட்டனின் இந்தத் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும். நமது படையின் ஓரங்கமாக நானும் வருகிறேன்” – என்றான். தாய் இளங்கோ பிச்சி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். கன்னரதேவனை நோக்கி : “மகனே! என் வயிறு இன்று தான் குளிர்ந்தது. உன் தகப்பனின் ஆணைப்படி நடப்பது தான் நீ அவருக்குச் செய்யும் அஞ்சலி. சென்று வா. வென்று வா!” என்று வழியனுப்பி வைத்தாள்.

பராந்தகன் அதற்கு ஒப்பவில்லை.
“கன்னரதேவா! உன்னை முன்னிருத்தி இராட்டிரக்கூடர்களை சந்திப்பதில் என் மனம் ஏற்கவில்லை. உனக்கு ஆபத்து நேரிடலாம்.” – என்றான்.

இதற்குள் ஒரு சம்பவம் நடந்தது. இராட்டிரக்கூட அதிரடிப்படை ஒன்று மாறுவேடத்தில் தஞ்சாவூரிலிருந்து கன்னரதேவனை கடத்திக்கொண்டு இராட்டிரகூடத்துக்குக் கொண்டு சென்றது. இரண்டாம் கிருஷ்ணன் கன்னரதேவனை சோழ நாட்டு அரசனாக்க – போருக்குப் புறப்பட்டு வந்தான். தன் அதிகாரத்திலிருந்த வாணர் படைகளையும் சேர்த்துக்கொண்டிருந்தான். வடமேற்குத் திசையிலிருந்து சோழ நாட்டைத் தாக்கினான். பராந்தகன் கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிரதிவீபதி உதவி பெற்றான். திருவல்லம் என்னுமிடத்தில் போர் மூண்டது. போரில் இரண்டாம் கிருஷ்ணனும் அவன் உதவியாளரும் படுதோல்வியடைந்தனர்.

பராந்தகனின் அரியணை மீண்டும் உறுதியானது. நாற்பத்தெட்டு வருடம் அரசாண்டு – போர்க்களத்திலேயே வாழ்ந்து, இரத்தக்காற்றை சுவாசித்த மன்னனின் அந்தப்புரம் காலியாக இருக்கும் என்று நினைத்தால் – நீங்கள் ஏமாந்தே போவீர்கள்.
அந்தப்புரம் படு பிஸி. அந்த அந்தப்புர அந்தரங்கள் இதோ:

பராந்தகன் ஏறத்தாழப் பன்னிரு மனைவியரைப் பெற்றிருந்தான். அவர்களில் கோக்கிழான் அடிகள், சேர அரசன் மகள் முதலியோர் ஆவர்.
பிள்ளைகள் : (1) இராசாதித்தன் (2) கண்டராதித்தன் (3) அரிகுல கேசரி (4) உத்தமசீலன் (5) அரிஞ்சயன். வீரமாதேவி, அநுபமா என்பவர் பெண்மக்கள். வீரமாதேவி கோவிந்த வல்லவரையன் என்னும் சிற்றரசனை மணந்திருந்தாள்; அனுபமா கொடும்பாளுர் முத்தரையனை மணந்திருந்தாள். இராசாதித்தன் தாய் கோக்கிழான் அடிகள்; அரிஞ்சயன் தாய் சேரன் மகளாவாள், அரிகுலகேசரி என்னும் இளவரசன் கொடும்பாளுர் அரசன் மகளான பூதி ஆதிக்க பிடாரி என்பவளை மணந்திருந்தான். இத்தகைய கொடுக்கல்-வாங்கல்களால் சேர அரசனும் முத்தரையரும் பராந்தகனுக்கு உறுதுணைவராக இருந்தனர். இவருடன் கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி உற்ற நண்பனாக இருந்தான். கூட்டணி வலுவாக இருந்தது.

பராந்தகன் ஆட்சியில் நடந்தது – இன்னும் நிறையக் கதைக்க வேண்டியிருக்கிறது.
பாண்டியர் கதை பாக்கி உள்ளது.
ஈழம் தமிழத்தில் போர்க்கொடி கட்டியது.
இராட்டிரகூடர் கதையும் நம்மை உறங்கவிடாது.
அக்கதைகள் விரைவில்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.