முன்கதைச்சுருக்கம்:
புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனதுஅரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு கேட்டுக்கொண்டபடி அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். பல காரணங்களால் அரசி லோகேஸ்வரிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; அதனைப் பலவாறு நிந்திக்கிறாள்.
நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். அரசன் பிம்பிசாரனையும் படுகொலை செய்ததாகப் பேசிக் கொள்கிறர்கள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்து புத்தமதத்தை அவமதிக்க இளவரசிகள் முனைகின்றனர். நகரெங்கும் கலவரம் தலைவிரித்தாடுகின்றது.
இனித் தொடர்ந்து படிக்கவும்:
————————————
வாசவி: ஐயோ! எத்தகைய கொடுமையான துயரம் இது!
ரத்னாவளி: மகராணி லோகேஸ்வரிக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டதா எனத் தெரியவில்லையே.
மல்லிகா: யாருக்கு தைரியம் வரும்? அச்செய்தியைக் கொண்டு செல்பவரை அவள் கொலை செய்யும்படி ஆணையிடுவாளல்லவா?
வாசவி: எத்தகையதொரு அரக்கத்தனமான கொடுமை! இது அரண்மனை முழுமையையுமே பாதிக்கும். தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயலின் பலனை அனுபவிப்பதிலிருந்து யாராலும் தப்பவே முடியாது.
ரத்னாவளி: திரும்பவும் வாசவி, நீ அந்த நாட்டியப்பெண்ணின் சிஷ்யை என்பதனைக் காட்டிவிட்டாயே! மனிதர்கள் மிகுந்த பீதியில் இருக்கும்போதுதான் இத்தகைய பொய்மையைத் தர்மம் எனக்கூறிக்கொண்டு எங்காவது அடைக்கலமடைய முயற்சிப்பார்கள்.
வாசவி: இல்லவே இல்லை! எனக்கு எதைக் கண்டும் பயமில்லை. ஆனால் நான் இப்போது ஓடிச்சென்று பத்ராவிற்கு இச்செய்தியைக் கூற வேண்டும்.
ரத்னாவளி: நீ இங்கிருந்து ஓடிப்போவதற்கான ஒரு சாக்காக இதைக் கூறுகிறாய்! நீ உண்மையிலேயே மிகவும் பீதியடைந்திருக்கிறாய்! எனக்கு இத்தகைய கோழைத்தனத்தைக் கண்டு அவமானமாக இருக்கிறது – அருவருப்பானவற்றுடன் நமக்கேற்பட்ட தொடர்பினால்தான் இது நிகழ்ந்துள்ளது.
வாசவி: நீ என்னைப் பற்றி அநியாயமாகப் பேசுகிறாய். எனக்கொன்றும் பயமில்லை.
ரத்னாவளி: அப்படியானால் அதை நிரூபிக்க, எங்களுடன் வந்து அசோக மரத்தடியில் நிகழப்போகும் நடனத்தைப் பார்ப்பாயா?
வாசவி: கட்டாயம் வருவேன். என்னைக் கட்டாயப்படுத்துவதாக ஒன்றும் நீ எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ரத்னாவளி: மல்லிகா, எங்களை இனிமேலும் தாமதிக்க வைக்காதே. ஸ்ரீமதி நடனத்திற்குத் தயாராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவளை உடனே கூப்பிடு. எல்லா இளவரசிகளும் இல்லாவிட்டால் என்ன? எல்லா வேலைக் காரிகளையும் அழை; இல்லையென்றால், இந்தக் களியாட்டத்தின் உற்சாகம் குறைந்துவிடும்.
வாசவி: இதோ! அவள் வந்துவிட்டாள்! பார், கனவில் நடப்பவள் போல வருவதைப்பார்- மதியத்தின் பளபளக்கும் கானல்நீர்போல, ஒரு நிலையற்ற காட்சியாக, தன் இருப்பையே அறியாதவளாக…..
ஸ்ரீமதி மெல்ல நடந்தபடி பாடிக்கொண்டே வருகிறாள்
ஓ தெய்வீக வாழ்வே!
ஓ உயர்வான சாவே!
நான் உன்னில் அடைக்கலம் புகுகிறேன்
உனது தீயில் நான் என் இருண்ட விளக்கை ஏற்றுவேன்!
உனது புகழ் எனது புருவங்கள்மீது பதிக்கப்பட்டு
எனது அவலங்கள் நிரந்தரமாக நீக்கப்படட்டும்.
ரத்னாவளி: பெண்ணே! இந்த வழியில் வா! அவள் நான் கூறுவதைக் கேட்கவில்லை போலிருக்கிறதே! இந்த வழியில் வா!
ஸ்ரீமதி தொடர்கிறாள்:
ஸ்ரீமதி: தங்களது பாதங்கள் தாம் அனைத்தையும் மாற்றும் நெருப்பு அவை எனது மாசினை மாற்றிப் பொன்னாக்கும். என்னிடம் உள்ள கெடுதல்கள் எல்லாம் நெருப்பாக எரியட்டும், தவறுகளின் முகத்திரைகள் கிழித்தெறியப் படட்டும்.
ரத்னாவளி: சிலை போல நிற்கிறாயே, வாசவி. என்னுடன் வா.
வாசவி: ஊஹும், நான் வர மாட்டேன்.
ரத்னாவளி: என்ன? இந்த வார்த்தைகள் ஏன் இப்போது?
வாசவி: நான் உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன் – என்னால் வர முடியாது.
ரத்னாவளி: நீ பயப்படுகிறாயா?
வாசவி: ஆமாம்.
ரத்னாவளி: இப்படி பயப்படுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை?
வாசவி: துளிக்கூட இல்லை. ஸ்ரீமதி, மன்னிப்பைக் கோரும் அந்த வாசகங்களை தயவுசெய்து பாடு!
ஸ்ரீமதி: எனது நெற்றியால் அவருடைய பாதங்களின் புழுதியைத் தொடுகிறேன் (வணங்குகிறேன்)
அவை புத்தரின் பாதங்கள், தூய்மையானவை; பாவங்களற்றவை;
அவர் எனது தவற்றினை மன்னிப்பாராக!
வாசவி: அவர் எனது தவற்றினை மன்னிப்பாராக!
அவர் எனது தவற்றினை மன்னிப்பாராக!
(அவர்கள் செல்கிறார்கள்)
******
அங்கம்- 4
காட்சி: அரண்மனைத்தோட்டத்தில் உள்ள அசோக மரத்தடியில் இருக்கும் உடைக்கப்பட்ட வழிபாட்டு மேடை.
ரத்னாவளி சில அரச தாதியருடனும் அரண்மனைக் காவலாளிகளுடனும் நுழைகிறாள்.
முதல் தாதி: இளவரசி, எங்கள் கடமைகள் அரண்மனையில் எங்களுக்காகக் காத்திருக்கின்றன. எங்களுக்கு விடைகொடுங்கள்.
ரத்னாவளி: இன்னும் சிறிதுநேரம் பொறுங்கள். மகாராணி லோகேஸ்வரி இங்குவர விருப்பம் தெரிவித்துள்ளார்; அவள் வரும்வரை நடனம் தொடங்க முடியாது.
2ம் தாதி: உங்கள் கட்டளைப்படி வந்துள்ளோம்; ஆனால் எங்கள் உள்ளங்கள் இந்தப் புனிதத் தன்மையைக் கெடுக்கும் செயலைக்கண்டு வருந்துகின்றன.
3ம் தாதி: இதே இடத்தில் நாங்கள் எங்களது வழிபாட்டை எங்கள் கடவுளுக்கு (முன்பொரு காலத்தில்) சமர்ப்பித்துள்ளோம். இப்போது தெய்வநிந்தனையான இந்த நடனத்தைக் காண வேண்டுமா? இத்தகையதொரு பாவத்தை எவ்வாறு போக்கிக்கொள்வது?
4ம் தாதி: இத்தகைய வெறுக்கத் தக்கதொரு செயல் இங்கு நிகழ இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. இல்லை; எங்களால் இங்கிருக்க முடியாது.
ரத்னாவளி: ஓ! பாவிகளே! தனது ஆட்சி உள்ள இடங்களிலெல்லாம் புத்தரை வழிபடுவதனை அரசர் தடுத்துள்ளார் என நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா?
4ம் தாதி: நாங்கள் கட்டாயம் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்: நாங்கள் வழிபாட்டை நிறுத்தி விட்டோம்; ஆனால் எங்கள் கடவுளை ஒருபோதும் அவமதிக்க மாட்டோம்!
முதல் தாதி: மேலும் அரண்மனை நாட்டியப் பெண்ணின் நடனம் இளவரசிகளுக்காக மட்டுமேயானது. எங்களுக்கானதல்ல.
(மற்ற தாதிகளை நோக்கிக் கூறுகிறாள்) நாம் நமது பணிகளைச் செய்யச் செல்லலாம்.
ரத்னாவளி: (ஒரு காவலாளியைப் பார்த்து) அவர்களைத் தடுத்து நிறுத்து.
(இன்னொரு காவலாளியிடம்) போய் அந்த நாட்டியப்பெண்ணை அழைத்து வா.
முதல் தாதி: இளவரசி, அந்தப் பாவம் அவளைச் சேராது; அது உனக்கானதே!
ரத்னாவளி: புது வழியிலான உங்கள் மதம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் பாவங்களைப்பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
2ம் தாதி: மனிதர்கள் உயர்வாகப் போற்றும் அன்பை அவமதிப்பது ஒரு குற்றமாகக் கருதப்படுவது உண்டல்லவா?
(தொடரும்)