பண்பு – பி.ஆர்.கிரிஜா-

 

மல்லிகா வேகமாக எழுந்து மணி பார்த்தாள். ஆறு அடித்து ஐந்து நிமிடங்கள் ஆகி விட்டது. ஐயோ, சீக்கிரம் போகாவிட்டால், அந்த கழனி அதிகாரி கிட்ட வசவு வாங்கணுமே என்று வேக வேகமாக புடவையை சரி செய்து கொண்டு தலை முடியை அள்ளி கொண்டையாகப் போட்டுக் கொண்டாள். அவள் கணவன் சண்முகம் குடித்து விட்டு வந்து குப்புறப் படுத்திருந்தான். வெறுப்பும், சலிப்புமாக வந்தது மல்லிகாவிற்கு.

“மணி, எழுந்திருடா” என்று மகனை எழுப்பினாள்.  “ என்னம்மா, இவ்வளவு சீக்கிரம், எங்க கிளம்பிட்ட ? ‘ என்றான்.

“ஆமாண்டா, கழனி ஐயா வேல்சாமி கூப்பிட்டுருக்காரு. இன்னிக்கு முழுசும் வேல இருக்காம், அதான் கிளம்பிட்டேன். சட்டியில பழைய சோறு இருக்கு, சாப்பிட்டு ஸ்கூல் கிளம்பு, நான் வாரேன் என்று சொல்லி விட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் வேக வேகமாக நடையைப் போட்டாள்.

அங்கு கழனியில் எல்லோரும் மும்முரமாக வேலை செய்யத் துவங்கிவிட்டனர். அவளும், “ஐயா, நான் மல்லிகா வந்திருக்கேன்” என்று சொல்லி வேல்சாமி முன் போய் நின்றாள்.

“சரி, சரி, வேகமா வேலையப் பாரு போ” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். மல்லிகாவும் தன் தோழி செல்வியைத் தேடினாள். அவளும் மல்லிகாவைப் பார்த்து, “வா மல்லிகா, நான்தான் ஐயா கிட்ட சொல்லி உன்ன கூப்பிடச் சொன்னேன். சீக்கிரம் களையெடுக்க ஆரம்பி, மதியத்துக்கு மேல மத்த வேலைய பாக்கலாம் “ என்றாள். இருவரும் பேசிக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தனர். செல்வி தான் கொண்டு வந்த கஞ்சியை மல்லிகாவிற்குக் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன்தான் மல்லிகாவிற்கு தெம்பே வந்தது.

பிறகு இருவரும் ஒரு மணி வரைக்கும் வேலை செய்து விட்டு , பின் தாங்கள் கொண்டு வந்திருந்த பழைய சோற்றை சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தனர்.           மல்லிகாதான்  ஆரம்பித்தாள் : “என்ன செல்வி பண்ணறது, தினம் குடித்துவிட்டு வந்து விழுந்து கிடக்கு சண்முகம் . ஒரு பைசா வீட்டுக்குக் கொடுக்கறதில்ல, மணிப்பய வேறு பள்ளிக்கூடத்துக்கு போகுதே தவிர ஒழுங்கா படிக்க மாட்டேங்குது. அங்கு சோறு போடறாங்க , அதுக்காக அவன் ஒழுங்கா போறான். போகட்டும், அதுக்காவது ஒரு வேளை சோறு ஒழுங்கா கிடைக்குதேன்னு நானும் சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்”. என்று செல்வியிடம் புலம்பித் தீர்த்தாள்.

“விடு மல்லிகா, இந்த வேல்சாமி ஐயா மிகவும் நல்ல மாதிரி. வாரத்தில ஒரு அஞ்சு நாள் நாம நல்லா வேல செஞ்சோம்னா, நல்லா காசு தரேன்னு சொல்லியிருக்காரு. நீ கவலைப்படாதே. சுடு சோறே ஆக்கி சாப்பிடலாம், பேசாம வேலையப் பாரு” என்றாள் செல்வி.

மாலை மணி ஐந்தரை. இருவரும் வேலைய முடித்து விட்டு ஐயாவின் முன் போய் நின்றார்கள்.

அவரும் கழனியை நன்றாகப் பார்த்து விட்டு, “ம்…. நல்லாத்தான் செஞ்சு இருக்கீங்க… களையை எல்லாம் பிடுங்கி பாத்தி கட்டி, வரப்பு பக்கம் சுத்தம் பண்ணி , நல்ல வேலை திருத்தமா இருக்கு” என்று சொல்லி ஆளுக்கு ஒரு நூறு ரூபாயை கொடுத்தார்.

“ ஐயா, ஒரு இருபது ரூபா சேர்த்து கொடுங்க ஐயா, வீட்டில ஒரு சாமான் கூட இல்ல” என்றாள் மல்லிகா.

“சரி… சரி… இந்தா பிடி” என்று ஒரு இருபது ரூபாய்த் தாளை இருவருக்கும் கொடுத்தார்.

இருவரும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பினர்.

மணி ஆறு இருக்கும். போகும் வழியில் மக்கள் கூட்டம். எல்லோரும் மைதானத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

“எல்லோரும் எங்கே போறீங்க ?” என்று கேட்டாள் மல்லிகா.

“ அதுவா…. நம்ம ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். அவர் ரொம்ப நல்லா பேசுவாராம். அதான் எல்லோரும் போறாங்க” என்று சொல்லிக் கொண்டே சென்றாள் ஒரு வயதான பெண்மணி.

மல்லிகாவுக்கும், செல்விக்கும் ஆசை வந்தது. நாமும் தான் போய்ப் பார்ப்போமே என்று இருவரும் வேகமாக மைதானத்தை நோக்கி நடை போட்டனர்.

ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக, நீண்ட தாடியுடன், நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி பூசிக் கொண்டு, வெள்ளை வெளேரென்று அங்கியும், மேல் துண்டும் அணிந்து கொண்டு மிகவும் களையாக இருந்தார் அந்த சாமியார். அவரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் அளவிற்கு அவர் முகத்தில் பொலிவு.

அவர் பேசிக் கொண்டே போனார். “ ஒரு மனிதனுக்கு அன்பும், அமைதியும், இன்பமும் எதில் கிடைக்கிறது ? அவனுடைய செயல்களினால்தான். அவன் மனம் பண்பாட்டால், நல்ல செயல்களை அவனால் செய்ய முடியும். உதாரணத்திற்கு, ஒரு கல் வழியில் கிடக்கும் போது, எல்லோரும் அதை அலட்சியப்படுத்துவார்கள். அதில் இடறினால், கல் குத்திவிட்டது என்று சொல்லி அதை அப்புறப்படுத்துவார்கள். அதே கல் சிற்பியின் கை வண்ணத்தில் ஒரு தெய்வச் சிலையாக மாறும் போது, அதை கோவிலில் வைத்து பூஜிப்பார்கள். நம் மனமும் அத்தகையதுதான். நம் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்தால், நாம் நல்லதே செய்ய ஆரம்பிப்போம். என் தகப்பனார் அடிக்கடி சொல்வார்,: படிப்பில் உனக்கு மேலிருப்பவனைப் பார், அவனைப் போல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படு. பணத்தில், உனக்கு கீழ் இருப்பவனைப் பார். நாம் நன்றாக இருக்கிறோம், இவர்களைப் போல் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும்.”

“ அதையேதான் நான் இப்போது உங்களுக்கு கூறுகிறேன். பிறருக்கு உதவி செய்தால், அதில் கிடைக்கும் இன்பம், நிம்மதி….. அதை அனுபவித்தால்தான் தெரியும்”. என்று மேலும் மேலும் ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தார் அந்த சாமியார்.

எல்லோரும் அமைதியாக அவர் சொல்வதையே கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது மல்லிகாவிற்கு. அவளுக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தாற்போல இருந்தது. என்றுமில்லாமல் அவள் மனதில் ஒரு அமைதி நிலவியது. செல்வியிடம் விடை பெற்றுக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வழக்கம் போல் அவள் வீட்டுத் தெருக்கோடியில் அந்த காலில்லாத பிச்சைக்காரர் படுத்துக் கொண்டிருந்தார். கொஞ்சமும் தாமதிக்காமல், அவர் அருகில் சென்று ஐயா கொடுத்த அந்த எக்ஸ்ட்ரா இருபது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தாள் மல்லிகா.

அவர் இவளை ஆச்சர்யமாகப் பார்த்து, “ நீ நல்லா இருக்கனும்மா..”.. என்று வாழ்த்தி வாங்கிக் கொண்டார்.

மல்லிகா வீட்டை நெருங்கும்போது அவள் நடையில், ஒரு கம்பீரம், நம்பிக்கை தெளிவாய்த் தெரிந்தது.

 

2 responses to “பண்பு – பி.ஆர்.கிரிஜா-

  1. சிறுகதையின் வடிவமைப்பைப் புரிந்துகொண்டிருக்கிறார் கிரிஜா. வாழ்த்துகள். உள்ளடக்கத்தில் இனிக் கவனம் செலுத்தவேண்டும். ‘கழனி அதிகாரி’ என்பவர் யார்? நான் பார்த்த கிராமங்களில் அப்படி ஒருவரும் இருந்ததில்லை. புதிய அரசாங்கம் உருவாக்கிய பதவியோ?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.