.முன் கதைச் சுருக்கம்
பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.
ஒருநாள் ஊடலின் போது. அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.
இருவரும், அங்கொரு மலையில் குலதெய்வக் கோயிலில் படையிலிட்டு வழிபட்டனர்.
பிறகு இயற்கை அழகைக் காணலாம் என்று கூறி மலை உச்சிக்கு அழைத்துச் சென்றவன்,அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகவும்.நகைகளைக் கழற்றித் தருமாறும் கூறுகிறான்……..
. பத்திரையின் எண்ணம்
காதலித்துக் கைப்பிடித்த கணவன் காளன்
கறைமனத்துக் கயவனெனக் கண்டாள் அந்தோ!
வாதுசெயும் நேரமிலை வன்ம னத்தான்
வஞ்சகத்தைத் தந்திரம்தான் வெல்லும் அன்றோ?
பேதையர்கள் யாருமவன் வலையில் வீழ்ந்து
பெருந்துயரம் இனியடைதல் தடுக்க எண்ணிக்
கோதுநெறிக் கொடியவனாம் முள்ளை வேறோர்
கூர்முள்ளால் களைந்தெறிய உறுதி கொண்டாள்.
(கோதுநெறி — குற்ற வழி )
. கவிக்கூற்று
பொறுத்திடும் பூமித் தாயும்
பொறுமையின் எல்லை மீறி
வெறுத்திடும் போது பொங்கி
வெடித்துயிர் விழுங்கல் உண்டு.
முறத்தினால் புலியைத் தாக்கும்
மொய்வரைப் பெண்ணும் உண்டு
கறுத்தவன் இன்னா செய்தால்
காரிகை பூவா கொய்வாள்?
( கறுத்து- சினந்து/ வெறுத்து)
(இன்னா – துன்பம்)
பத்திரை நிலை
இடிக்கும் உரலில் விட்டதலை,
இருப்பு லக்கை தப்பிடுமோ?
கெடுக்கும் கீழ்மைக் குணமுடையோன்
கேள்வன் என்றால் மங்கையவள்
உடுக்கும் புடைவை பாம்பன்றோ?
உண்ணும் கீரை நஞ்சன்றோ?
தடுக்க இயலாத் துயரத்தாள்
தளர்ந்தாள், நொந்தாள், சினமுற்றாள்
( கேள்வன் – கணவன் )
புகைந்திடும் உளச்சி னத்தைப்
பூமுகம் மறைக்க, வேங்கைக்
குகையினில் சென்ற மானாய்க்
குமைந்தனள் பத்தி ரையாள்.
நகைகளைக் கழற்றிப் போட்டாள்;
நாயக, உனக்கே! என்றாள்.
தகவிலான் கொடுமை தீர்க்கத்
சடுதியில் வகுத்தாள் திட்டம்.
( தகவிலான்- தகுதி இல்லாதவன்/ நல்லொழுக்கம் அற்றவன்)
( சடுதியில் – விரைவில்)
கணவனிடம் வரம் கேட்டல்.
மெல்லியலார் என்றெண்ணிப் பெண்க ளுக்கு
மெய்வருத்தம், மனவருத்தம் கொடுக்கும் தீயக்
கல்லியல்புக் காளையர்க்குப் பாடம் சொல்லக்
காரிகையாள் திடம்கொண்டாள், பிறகு சொன்னாள்,
“வல்லவனே நான்வணங்கும் தெய்வம் நீயே,
வலம்வருவேன் மூன்றுமுறை இறக்கும் முன்னே.
இல்லறத்தாள் நான்விரும்பும் இவ்வ ரத்தை
எனக்களித்தால் என்பயணம் இனிதாய் ஆகும்”.
காளனின் ஆணவப் பேச்சு
மேலாடை தனில்நகைகள் கட்டிக் கொண்டான்.
“மேலுலகம் செலும்பெண்ணே வரத்தைத் தந்தேன்
காலாலே கணவன்மார் இட்ட வேலை
காரிகையார் தலையாலே செய்தல் வேண்டும்
நூலோர்கள் சொல்நெறியை இன்று ணர்ந்தாய்
நுனிமலையில் மூன்றுமுறை என்னைச் சுற்றி
மேலான கதியடைவாய்” என்றான், மங்கை
விரைவாகச் சுற்றியவன் பின்னே நின்றாள்.
. பத்திரை அவனைக் கீழே தள்ளுதல்
ஊன்றக் கொடுத்த தடியாலே
உச்சி மண்டை பிளப்பானை,
ஈன்ற தாயின் நல்லாளாம்,
இல்லாள் கொல்லத் துடிப்பானை,
சான்றோர் பழிக்கும் வினைசெய்யச்
சற்றும் தயங்கா மனத்தானை,
ஆன்ற பள்ளம் தனில்வீழ
ஆங்கோர் நொடியில் தள்ளினளே
( ஆன்ற – வாய் அகன்ற)
. கவிக்கூற்று
தற்கொல்லி எனவந்த தன்கணவன் தனைத்தள்ளி,
முற்கொல்லி எனவுலகோர் மொழிகின்ற பெயர்பெற்றாள்,
இற்செல்வி, எழிற்செல்வி் இழுவிதியின் கைச்செல்வி,
கற்சிலையாய் நின்றவளின் கையறவை என்சொல்வேன்!
(கையறவை-கணவனை இழந்த நிலை/ துன்பம்/ இயலாமை)
(தொடரும்)
கவி நயம் -அருமையோ அருமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை.
LikeLike
மிக அருமை
LikeLike
Migavum nanaraga erukkiradhu.
LikeLike