‘சித்தார்த்தா’  – ஹெர்மன் ஹெஸ் – அழகியசிங்கர்  

Siddhartha: illustrated edition by Hermann Hesse, Paperback | Barnes &  Noble®

முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பதற்கு முன் பக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன்.  இந்தப் புத்தகத்தை எத்தனை நாட்களில் படிக்க முடியும்? இதைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்றெல்லாம் பார்க்கிறேன்.  என் மனசில் எப்படிப் படுகிறதோ அப்படியே புத்தகம் பற்றிச் சொல்கிறேன்.  இதில் எந்தத் தியரியையும் இணைக்கவில்லை.  உண்மையில் தியரி புத்தகத்தையும் படித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.

இரண்டு நாட்களாகப் படித்த புத்தகம் ‘சித்தார்த்தா’  என்ற புத்தகம்.  ஹெர்மன் ஹெஸ்ஸின் புகழ்பெற்ற நாவல் இது.  தமிழில் மொழி பெயர்த்தவர் ஜெகதா.   பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் இந்த நாவலைப் படித்திருக்கிறேன்.  எல்லாம் மறந்து விட்டது.  சில நாவல்களை நாம் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அது மாதிரியான நாவல்களில் இது ஒன்று.

ஜெகதா நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார், சிறுகதை, நாவல், கவிதை, சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு என்று பல துறைகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

பிரபஞ்ச ரகசியங்களை அதன் அடையாளங்களை நதியிடமிருந்து கற்றுக்கொள்ளும் படகோட்டியாய் இந்த நாவல் எல்லையற்ற ஞானவெளியில் நம்மையெல்லாம் மாணவ நிலையில் அமரச் செய்கிறது.

சித்தார்த்தாகவும் கோவிந்தனும் நண்பர்கள்.  பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருவரும் வசிக்கிறார்கள்.  சித்தார்த்தனுக்குக் கடவுளுக்கு ஹோமம் செய்வது நைவேத்தியம் படைப்பது வணங்குவது எதுவும் பிடிக்கவில்லை.  மனோவலிமை பெற்றவனே ஆத்ம தரிசனம் பெறுவான் என்று நம்புகிறான் சித்தார்த்தா.  அப்பாவிடம் வலுக்கட்டாயமாக அனுமதி பெற்று பைராகிகளுடன் ஞானத்தைப் பெறப் பயணம் செய்கிறான்.  அவனுடன் கோவிந்தனும் வருகிறான்.

உலகம் மாயையாகத் தோன்றியது.  எல்லாவற்றிலும் போலித்தன்மை தெரிந்தது.  வாழ்க்கையின் சகலத்திலும் வஞ்சம் நிறைந்திருப்பது போல் தோன்றியது.  அழிவும் வேதனையும் வாழ்க்கை அவதாரமாகக்  கொண்டதாக சித்தார்த்தன் நினைத்தான்

.                    பைராகிகளோடு திரியும் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது.  ஓய்வு என்பதே இல்லாது ஒரே அலைச்சலாக இருந்தது. ‘நான்’ என்ற உணர்வைத் துறப்பதற்கு மிருகத்தைப் போலவும் மரக்கட்டை போலவும்  நீண்ட காலத்தைச் செலவழித்த பின்னரும் மீண்டும் அந்த “நான்” என்ற வாழ்க்கை வளையத்திற்குள்தான் வரவேண்டியுள்ளது.

 

சித்தார்தாவிற்கு பைராகிகளோடு சுற்றுவதும் பிடிக்கவில்லை. கோவிந்தனும் அவனும் 3 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.  பைராகிகளிடமிருந்து விடுதலை பெற நினைக்கிறார்கள் சித்தார்தாவும் கோவித்தும்.

பிறகு அவர்கள் புத்தரைச் சந்திக்கச் செல்கிறார்கள்.  புத்தர் முன்பாகப் போய் நின்று, üஉங்களது உபதேசங்களை முழு மனதுடன் ஏற்று தங்களது சீடனாக நான் விரும்புகிறேன்.ý என்கிறான் கோவிந்தன். புத்தரும் அவன்  விருப்பப்படி அவனைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறார்.  சித்தார்த்தனுக்கு அப்படிச் சேர விருப்பமில்லை.  தனியாக வந்து விடுகிறான்.

ஆற்றின் மறுகரைக்குக் கொண்டு சென்று விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டான் சித்தார்த்தன் படகோட்டியிடம்.

படகோட்டி சித்தார்த்தனிடம் சொல்கிறான் : “இந்த நதி அழகுடையதுதான் இந்த உலகத்தில் யாவற்றையும் விட இந்த நதியை நான் மிகவும் விரும்புவேன்.  அலைகள் ஒவ்வொன்றும் புதிய புதிய செய்தியை எனக்குச் சொல்லியிருக்கிறது.  மனித வாழ்வின் துயரப் போராட்டங்களுக்குத் தீர்வு சொல்லக்கூடிய ஞானத் திரவியங்கள் இந்த நதியின் ஆழத்தில் உள்ளது,” என்கிறான் படகோட்டி.

‘நான் ஒரு பைராகி.  படகுப் பயணம் வந்ததற்கு என்னால் எதுவுமே கொடுக்க இயலாது,’ என்கிறான் சித்தார்த்தா.

மூன்றாவதாகத் தேவதாசி கமலாவைச் சந்திக்கிறான்.   பைராகி தோற்றத்தைத் துறந்து ஷேவ் செய்துகொண்டு புத்தம் புதிய தோற்றத்துடன் போய்ப் பார்க்கிறான் சித்தார்த்தா.

“எனக்குக் கவிதை எழுதத் தெரியும்.  நான் கவிதை சொன்னால் நீங்கள் எனக்கு முத்தம் தருவீர்களா?” என்று சித்தார்த்தன் தேவதாசி கமலாவிடம் கேட்கிறான்.

“நீங்கள் சொல்கிற கவிதை எனக்குப் பிடிக்க வேண்டும்.  பிடித்திருந்தால் முத்தம் தர ஆட்சேபனை இல்லை,”என்கிறார் கமலா.

கவிதை அவளுக்குப் பிடித்துப் போகிறது.  உதட்டில் முத்தமும் கிடைக்கிறது சித்ததார்தனுக்கு.

சித்தார்த்தாவை காமசாமி என்கிற பணக்கார வியாபாரியைப் பார்க்கச் சொல்கிறாள்.

‘காமசாமிக்கு இணையாகப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  பணமும் செல்வாக்கும் உள்ள அவரை அடிமை கொள்ளுங்கள்,’ என்கிறாள் கமலா.

“வசீகர சக்தி உங்களிடம் ஏதும் உள்ளதா சித்தார்த்தா?”என்று கேட்கிறாள் கமலா.

“எனக்குக் காத்திருக்கவும், சிந்திக்கவும், உபவாசம் இருக்கவும் தெரியும்,” என்கிறான் சித்தார்த்தா.

தேவதாசி கமலாவுடன் லௌகீக வாழ்க்கையில் முற்றிலுமாய் கரைந்து சித்தார்த்தான் அனுபவித்துத்தான் வந்தான்.  ஆனாலும் அவனுள் ஒரு நிம்மதியற்ற தவிப்பு  தொடர்ந்து இருந்துகொண்டேயிருந்தது.

வியாபாரத்தில் சித்தார்த்தன் நிறையா சம்பாதித்தான்.  மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி அவனுக்குள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் வழக்கமாக இருந்தது.  பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கமாகக் கொண்ட அவன், மிகச் சராசரி மனிதனாக மாறிவிட்டான்.

ஒருநாள் மாடமாளிகைகள், நகருக்குள் இருந்த ஆடம்பர மாளிகை வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்பட்ட படுக்கை அறையும்  விதவிதமான உணவுப்பொருட்களையும் விட்டுவிட்டு சித்தார்த்தன் பட்டணத்தை விட்டுக் கிளம்பி விட்டான்.

சித்தார்த்தன் காணாமல் போய்விட்டான் என்பதை அறிந்தவுடன் மறுநாளிலிருந்து தனது தாசித்தொழிலை விட்டுவிட்டாள்.  அதற்காகப் பயன்படுத்திய அறையையும் பூட்டி விட்டாள்.  கடைசி முறையாகச் சித்தார்த்தனுடன் கொண்ட உடலுறவில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்.

காட்டில் சித்தார்த்தன்  சுற்றிக் கொண்டிருக்கும்போது அவனுடைய நண்பன் கோவிந்தனைச் சந்திக்கிறான்.  கோவிந்தனோ புத்தரோடு ஐக்கியமாகிவிட்டான்.  திரும்பவும் முன்னே சென்ற ஆற்றங்கரைக்கு வருகிறான்.  எஞ்சியுள்ள தன்னுடைய வாழ்நாளை  இந்த ஆற்றங்கரையிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று சித்தார்த்தன் நினைக்கிறான்.

ஆற்று நீரின் சலசலப்புச் சத்தம் சித்தார்த்தனின் அந்தராத்மாவின் மீண்டும் ஓங்கார நாதத்தின் மந்திர தொனியை மீட்டுகிறது.

நதி ஒரு  ரகசியத்தை   மட்டும் சித்தார்த்தனுக்குச் சொல்கிறது.

இந்த ஆற்று வெள்ளம் நிரந்தரமானது என்றாலும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு துளியும் புதியது என்ற உண்மையை புரிந்து கொண்டான்  சித்தார்த்தன்.

 

ஏற்கனவே அந்த ஆற்றில் இருக்கும் படகோட்டியைத் திரும்பவும் பார்க்கிறான் சித்தார்த்தன்.  ஆடம்பரமாய் தரித்திருக்கும் தன் உடைகளைப் படகோட்டியிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறான் சித்தார்த்தன்.  அவனை ஆச்சரியத்தோடு பார்த்த  படகோட்டி அவனைச் சித்தார்த்தன் என்று அடையாளம் காண்கிறான்.  படகோட்டி தன்னை அறிமுகப்படுத்துகிறான் வாசுதேவன் என்று.

கடைசி வரை சித்தார்த்தன் எதிலும் திருப்தி இல்லாமல் இருக்கிறான் சித்தார்த்தன்.  தன்னுடைய பழைய கதைகளை எல்லாம் சித்தார்த்தன் வாசுதேவனிடம் சொல்கிறான்.  பின் வாசுதேவன் சித்தார்த்தைப் பார்த்துச் சொல்கிறான்.”நதி உங்களிடம் பேசியிருக்கிறது. உங்கள் மீது அன்பு காட்டியிருக்கிறது.  நீங்கள் என்னுடன் தங்கலாம்.  என்னுடைய மனைவி இறந்து பல ஆண்டுகளாகி விட்டது.  இந்தக் குடிசையில் நான் மட்டும் இருக்கிறேன்.  நீங்களும் என்னுடன் தங்கலாம்”என்கிறான் வாசுதேவன்.

வாசுதேவனுடன் சேர்ந்து படகு கட்டுவதைக் கற்றுக்கொள்கிறான்.  தோட்டத்தில் செடிகொடிகள் போடுகிறான். காட்டுக்குப் போகிறான். இப்படி எல்லா விதங்களிலும் உதவியாய் இரூக்கிறான் வாசுதேவனுக்கு.

எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிறது நதி.  எல்லாவற்றையும் மறந்து கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் மனம் சஞ்சலமடையாதத் தன்மையும் நதி சொல்லிக் கொடுக்கத்தான் செய்கிறது.  ஒருமுறை புத்தர் பிரான் நோய்வாய்ப்பட்டுப் படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  அவரைப் பார்க்கப் புத்த பிட்சுகள் மஞ்சள் உடை அணிந்து சாரி சாரியாக வருகிறார்கள்.

அவர்களுடன் தேவதாசி கமலாவும் அவள் பையனை அழைத்துக்கொண்டு வருகிறாள்.  புத்தர் பிரானைப் பார்க்க.  தேவதாசி கமலா அவளுடைய எல்லா செல்வத்தையும் புத்தர்  பிரானுக்கு அர்ப்பணித்து விடுகிறாள்.  அவளுடைய பையனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.  ஏன் இந்தக் கிழவனைப் பார்க்க இவ்வளவு தூரம் வருகிறாய் என்று திட்டுகிறான் அம்மாவை.

சித்தார்த்தனும் மரணப்படுக்கையில் இருக்கும் புத்தர் பிரானைப் பார்க்க வருகிறான்.  அவன் கமலாவையும் தன் மகனையும் பார்க்கிறான்.

தன் பையனின் தொந்தரவு தாங்கமுடியாமல் போகிற வழியில் ஒரு இடத்தில் தங்குகிறாள்.  ஒரு புல்தரையில் அவளை அறியாமல் தூங்கி விடுகிறாள்.  அப்போது ஒரு கரும்பாம்பு அவளைத் தீண்டி விடுகிறது.  ஓ என்று கத்துகிறாள்.  அவள் பையன் துடித்துவிடுகிறான்.  அந்த இடத்தில் யாருமே இல்லை.  படகுக்காரன் வாசுதேவன் வேற வழியில்லாமல் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து படகில் கிடத்துகிறான். அவளை தன் குடிசைக்கு அழைத்து வருகிறான்.

கமலாவைச் சித்தார்த்தன் சந்திக்கிறான்.  கமலாவிற்கு  ஆச்சரியம் சித்தார்த்தனைச் சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  பால சித்தார்த்தனைச் சித்தார்த்தனிடம் விட்டுவிட்டு கமலா இறந்து விடுகிறாள்.

அம்மாவின் மரணம் பால சித்தார்த்தனுக்குப் பேரிழப்பாக இருக்கிறது.  அவளைச் சிதை மூட்டிய குன்றுப் பகுதிக்குச் சென்று ஓவென இடைவிடாது அழுதான்.

சித்தார்த்தனை இதுவரை பார்த்ததில்லையாதலால் பால சித்தார்த்தனுக்குத் தந்தை பாசம் என்று எதுவும் ஏற்படுவதில்லை.   அவனைச் சரியாகக் கமலா வளர்க்கவில்லை என்பதை சித்தார்த்தன் உணர்ந்தான்.  அவனுக்கு எந்தக் காரியம் செய்வதற்கும் உதவியாள் தேவைப்பட்டது.

ஒருமுறை சித்தார்த்தனைப் பார்த்து பால சித்தார்த்தன் சொல்கிறான் : “உங்களைப் பழி வாங்க ஒரு கொலைகாரனாக மாறி நான் நரகத்திற்குப் போவேன்.  நீங்கள் என் அம்மாவுடைய காதலன் மட்டுமே.  நீங்கள் ஒரு போதும் என் அப்பாவாக முடியாது.”

மறுநாள் காலை பால சித்தார்த்தான் அங்கிருந்த படகை எடுத்துக்கொண்டு அக்கறைக்குப் போய்விட்டான்.  படகில் உள்ள துடுப்புகளை நாசம் செய்து விட்டுப் போய்விட்டான்.  தன் பையன் தன்னை விட்டுப் போனதைச் சித்தார்த்தனால் மறக்க முடியவில்லை.  அவனையொத்த பையன்களைப் பார்க்கும்போது அவன் பையன் ஞாபகம் வருகிறது

‘இப்போது நதி பேசுகிறது.  முடிவு மற்றும் தொடக்கம் என நதி கருதுவதெல்லாம் நிஜமாகவே நிகழ்கிறது.  சந்தோஷம், துயரம் எல்லாமே ஒன்றுதான் என்று நதி தீர்மானித்தது.’

சின்ன வயதில் தன் அப்பாவை விட்டுவிட்டு வந்ததைச் சித்தார்த்தன் ஞாபகப்படுத்திக்கொள்கிறார் .  அவன் முழுவதும் மாறி விடுகிறான்.  வாசுதேவன் அவனை விட்டு, குடிசையை விட்டுவிட்டு, ஓட்டிவந்த படகை விட்டு விட்டு காட்டுக்குப் போய் விடுகிறான் இன்னும் ஞானத்தைத் தேடி.

ஆற்றங்கரையில் படகோட்டியாக  அருளொளி ததும்பிய யோகீஸ்வரர் ஒருவர் இருப்பதாகக் கோவிந்தனிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  கோவிந்தன் அந்த யோகீசுவரரைப் பார்க்க  வந்திருக்கிறான்.

சித்தார்த்தனுக்கு அவன் கோவிந்தன் என்று அடையாளம் தெரிந்து விடுகிறது.  கோவிந்தனுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.

கோவிந்தனைப் பார்த்துச் சொல்கிறான் சித்தார்த்தன். ‘தேடுபவர்கள் எல்லாம் தாங்கள் தேடுவதை மட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள்.  அதனை மட்டுமே உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்கவும் புரிந்துகொள்ளலுமான தங்களது வலிமையை இழந்து விடுகிறார்கள்.’

 

கோவிந்தன் சித்தார்த்தனுடன் குடிசையில் தங்குகிறான்.  வாசுதேவன் விட்டுச் சென்ற கட்டிலில் படுத்துக்கொள்கிறான்.  காலையில் எழுந்து விடை பெறும்போது, சித்தார்த்தன் அவன் நெற்றியில் முத்தம் இடச் சொல்கிறான்.

தான் முத்தமிட்ட அந்தக் கருணை பொங்கும் முகத்தைக் கோவிந்தன் அசைவற்று பார்த்தபடி அவன் பாதம் தொட்டான்.

ஹெர்மன் ஹெஸ்ஸியின் இந்த நாவல் உலகப் பிரசித்துப் பெற்ற நாவல்.  ஒவ்வொருவரும் இதை அவசியம் படிக்க வேண்டும்.  ஒரு முறை மட்டுமல்ல பல முறை படித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சித்தார்த்தின் அலைச்சல் நமக்குப் புரியும்.  நம்மிடம் கூட சித்தார்த்தின் தன்மை இருக்கிறது.  இது ஒரு ஆன்மிக நாவல். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த நாவல் பல விஷயங்கள் மூலம் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம். படிப்பவரையே புரட்டிப் போடக் கூடிய நாவல் இது.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.