(வசுதேவன்-தேவகியின் எட்டாம் மகனால் கம்சனுக்கு மரணம் நேரும் என்று அசரீரி கூறவே கொதிப்படைந்த அவன் தேவகியைக் கொல்ல முற்படுகிறான். தடுத்த வசுதேவன், பிறக்கும் பிள்ளைகளைக் கம்சனிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறுகிறான்)
வசுதேவன் உறுதிமொழி
கூந்தல் பற்றித் தங்கையினைக்
கொல்லக் கீழே தள்ளியவன்,
ஏந்து வாளை மேலுயர்த்த,
இளமான் அனையாள் நடுநடுங்கிச்
சோர்ந்து கண்ணில் நீர்வழியத்
தொழுது கையால் கும்பிட்டாள்.
தேர்ந்தெ டுத்த சொல்தொடுத்தான்,
சிறந்த ஞானி வசுதேவன்.
“மணநாள் அன்றே தேவகியை,
மாய்த்துக் கொன்று, திருநாளும்
பிணநாள் ஆக உருவானால்,
பெருமை உனக்கு வருமோசொல்?
குணமா மறவா! பெண்கொலையால்,
குலமும் மேன்மை பெறுமோசொல் ?
அணிமா மலராள் உயிர்பறித்தால்,
அழியாப் பாவம் விடுமோசொல்?
ஆற்றல் மிக்க மைத்துனனே,
அன்புத் தங்கை என்செய்தாள்?
சாற்றும் உண்மை செவிமடுப்பாய்,
சற்றும் அவளால் உன்னுயிர்க்குக்
கூற்றம் வருமென்று அக்குரல்தான்
கூற வில்லை. கொன்றுவிட்டால்,
தூற்றிப் பழிக்கும் இவ்வுலகம்.
சூழும் மாறாப் பெருங்களங்கம்
எட்டாம் மகவால் உயிர்க்கிறுதி
என்றே குரலும் கூறிடினும்
தட்டாது எல்லாப் பிள்ளைகளும்
தரையில் வந்த மறுகணமே,
கட்டா யமுன்றன் கைகளிலே
கடிதில் கொண்டு சேர்த்திடுவேன்.
மட்டார் மலர்பெய் குழலாளை
மட்டும் கொல்ல எண்ணாதே!”
சொலல்வலான், சோர்வும் இல்லான்,
சொல்நயம் அறிந்த நல்லான்,
சிலவுரை, பழத்தில் ஊசி
செலுத்தலைப் போலச் சொன்னான்.
“இலையொரு துன்பம், பிள்ளை
எடுத்துநான் தருவ தாலே,
குலமுறை மீறி விட்டால்
குற்றமே விளையும்” என்றான்.
கம்சன் அவர்களைப் போக விடுதல்
வனமலர் மாலை சூடும்
வாய்மையோன் சொற்கள் கேட்டுச்
சினமது தணிந்த கம்சன்
செற்றிடும் எண்ணம் விட்டான்.
“உனைமிக நம்பு கின்றேன்,
உறுதியைக் காத்தல் வேண்டும்.
நனைவிழி துணையைத் தேற்றி
நாடுநீ செல்வாய்” என்றான்.
( செற்றிடும்— கொல்லும்)
கம்சன் மனநிலை
ஈறது பிள்ளை எட்டால்
இயன்றிடும் என்ற எண்ணம்
ஊறியே உளம்வ ருத்த,
ஒவ்வொரு நாளும் தேரில்
ஏறியே சென்று பார்த்தான்
ஏவலர் செய்தி கேட்டான்.
நீறது பூத்தி ருக்கும்
நெருப்பெனும் சினத்துக் கம்சன்.
( ஈறு — இறுதி /மரணம்)
முதல் குழந்தை பிழைத்தல்
வசுதேவன் மனைவியவள் மணிவயிற்றில் கருவுயிர்த்துச்
சிசுவொன்று பிறந்தவுடன் சிந்தைமிக வருத்தமுற,
வசையறியா வாய்மையெனும் வழக்கத்தால் எடுத்துப்போய்
இசைவின்றி அம்மகனை ஈந்தானே மாமனிடம்
அமைதிதவழ் முகம்கண்ட அரக்கமன மைத்துனனும்
“சுமையகன்றேன் மகிழ்ந்தேனுன் சொற்காக்கும் தன்மையினால்,
குமையேன்நான், இவன்முதலாம் குழந்தையென்ற காரணத்தால்,
இமையெனநீ காத்திடவே எடுத்துப்போ மீண்டு”மென்றான்!
(தொடரும்)
கண்ணன் கதையமது
எத்தனை முறை படித்தாலும்
தெகட்டாத தேனமுது
LikeLike