சரித்திரம் பேசுகிறது! –யாரோ

அரிஞ்சயன்

Arinjaya Chola - Younger Son Of Parantaka Chola I

பராந்தகன், இராஜாதித்தன், கண்டராதித்தன் அனைவரும் சென்றபின் சோழ நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இனி வருவது காண்போம்.

பல அரசர்கள், ஆண்டு பல ஆண்டு, சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.

சில அரசர்கள், ஆண்டுகள் சிலவே ஆண்டும், சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.
அரிஞ்சயன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவன்.
அவன் காலம் – சோழர்களுக்கு ஒரு சோதனைக் காலம்.

கண் பெற்று இழந்தவன் நிலை அது!
விஜயாலயன் காலத்தில் கண் பெற்று, பராந்தகனின் இறுதிக்காலத்தில் கண் போன நிலை அது! அடுத்து வந்த கண்டராதித்தன் நாட்டைக் காபந்து பண்ணுவதிலேயே கவனமாக இருந்தான். சிவ வழிபாட்டிலே தனது நாட்களைக் கழித்தான்.
சுற்றி நின்ற பகைகள் சிரித்துக் கொண்டிருந்தது!
சோழவளநாட்டைத் தின்பதற்குத் துடித்திருந்தனர்.  
கண்டராதித்தன் அரிஞ்சயனை கி பி 954 ல் யுவராஜாவாக அறிவித்திருந்தான். கி பி 957ல் கண்டராதித்தன் மரணம் அடைந்தான். கண்டராதித்தனின் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், அரிஞ்சயன் பட்டம் பெற்றான்.

இவன் பரகேசரி பட்டம் பெற்றவன். இவனுக்கு வீமன்குந்தவியார் ,கோதை  பிராட்டியார் என மனைவிகள் இருந்தனர். அதைத்தவிர இன்னொரு மனைவி கல்யாணி. அவளை வைத்துக் காவியமே எழுதலாம்.

சரி.. ஒரு குறுங்கதையாவது புனைவோமே!
அந்நாளில் தென்னிந்தியா முழுதும் பேசப்பட்ட இளவரசி கல்யாணி. திருமுனைப்பாடியில் அரசாண்ட வைதும்பராயருடைய புதல்வி அவள்.
அழகு என்றால் அப்படியொரு அழகு. எல்லா நாட்டு இளவரசர்களும் அவளை அடைவது எப்படி என்று அறையில் தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். சோழ நாட்டு இளவரசர்களும் அதற்கு விதிவிலக்கல்லர்.

இராஜாதித்தனும், அரிஞ்சயனும் அந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தனர். ஆனால், வைதும்பராயருக்கும், பராந்தகனுக்கும் ஒத்துப்போகவில்லை. முக்கியமாக, வைதும்பராயருக்கு பராந்தகன் மீது வெறுப்பு. பராந்தகன் வைதும்பராயரைக் கப்பம் கட்ட சொன்னான். வைதும்பராயன் மறுத்தது மட்டுமல்லாமல், விரோதம் பாரட்டத் தொடங்கினான். சோழ எதிரியான இராட்டிரக்கூட மன்னன்  கிருஷ்ணனுடன் கூட்டு வைத்துக்கொண்டான்.

ஏற்கனவே இரண்டு மனைவிகளிருந்த போதும், அரிஞ்சயன் துணிந்து விட்டான்.
‘தப்பாமல் நான் உன்னைச் சிறையெடுப்பேன், இரண்டு மூன்றாக இருக்கட்டுமே’ என்று மனத்துக்குள் ராகம் பாடினான் கல்யாணியின் மனநிலையை யாரோ அறிவர்.
கல்யாணியைக் கவர்ந்து பழையாறை அரண்மனையில் வைத்தான். பராந்தகன் அரிஞ்சயன் செயலை முழுமனதோடு ஆதரிக்கவில்லை. ஆயினும், கல்யாணியின் வரவு, வைதும்பராயரை சோழக்கூட்டணிக்கு வரவழைக்கும் என்று நினைத்திருந்தார். அவரது கணக்கு தவறியது. வைதும்பராயரது பகைமை விரிந்தது. கல்யாணியை கல்யாணம் செய்து கொண்ட ஒரு வருடத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. பராந்தகன் என்றே பெயர் வைத்தனர். அழகில் மன்மதன் போல விளங்கிய அந்தக் குழந்தை பராந்தக மன்னனின் செல்லப்பேரனாயிற்று. அவனை ‘சுந்தரா’ என்று அழைத்தான்.

சுருங்கிய நாட்டை சுருங்கிய நாட்களே ஆண்டான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன கால கட்டத்தில், அரிஞ்சய சோழன் தொண்டை மண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். தன் மகள் அரிஞ்சிகைப்பிராட்டியை வாணர் குல மன்னனுக்கு மணம் செய்து கொடுத்து வாண நாட்டை நட்பு நாடாக்கினான். போர் நிகழ்த்தி மேல்பாடி அருகில் உள்ள ஆற்றூர் என்னும் இடத்தில் இறந்தான்

வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று “ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி” என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி. பின்னாளில் சுந்தரன் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயர் வைத்தது, இந்த ராணியின் பெயரைத்தான். கல்யாணி வைதும்பராயனின் மகள் . நான்காவது பூதி ஆதித்த பிடாரி கொடும்பாளூர் நாட்டின் இளவரசி.

இந்த அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும் .அதற்கு  முன் பள்ளிப்படை என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். பழங்காலத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த மாவீரர்களின் ஞாபகமாக வீரக்கல் நட்டு கோயில் கட்டுவது மரபு .வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நட்டிருந்தால் அது  “நடுகற் கோயில் ” என்று கூறுவார்கள் .அத்துடன் ஏதாவது தெய்வத்தின் சிலையை நிறுவியிருந்தால் அது “பள்ளிப்படை” என்று அழைக்கப்படுகிறது.

அரிஞ்சயன், தன் மகன் சுந்தரனால் சோழ நாடு நல்ல நிலைக்கு வரும் என்று நம்பினான். அந்த நினைப்புடன் போர்க்காயங்கள் ஆறாது ஆற்றூரில் காலமானான்.

Sri Arinjaya Cholan Pallipadai | India Temple Tour

(அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை) 

ஆனால் அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. தனது சந்ததியினர் கொடிக்கட்டிப் பறந்து தரணி எல்லாம் ஆளுவர் என்று எண்ணவே இல்லை. அந்தக்கதைகளை விரைவில் எதிபார்க்கலாம்.

தொடரும் .. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.