காலை ஏழுமணிக்குத்தான்
தெருக்குழாயில் குடிநீர்வரும்.
ஆனால் ஆறுமணியிலிருந்தே
வெல்லத்தை மொய்த்திருக்கும்
எறும்புகள் போலச்
சுற்றிலும் குடங்களின் முற்றுகை
அதிலும் தமிழ்நாட்டின்
இருப்பைப்போல்
பல்வகைப் பிரிவுகள்;
நெகிழி பித்தளை
மண் மற்றும் எவர்சில்வர்
எல்லாமே யாரோ ஒருவரால்
உருவாக்கப்பட்டவை
ஒழுக்கம் விழுப்பம் தருமென
ஒருவரிசையாகத்தான் நிற்பர்.
தண்ணீர் வந்ததும்
ஒரு கல்பட்ட
தேனீக்கூடு கதைதான்;
பிறகென்ன?
தமிழின் இடக்கரடக்கல்
இல்லாமலே பலசொற்கள்
மொழியப்பட்டன.
வந்தவற்றை வாங்கிப்படித்துப்
புதிய ஆயுதங்களாய் வீசினர்.
வாங்கும் கவளத்தொரு சிறிது
வாய்தப்பின் துயருறாத்
தூங்கும் களிறு போல
தண்ணீர் சிந்தி வழிந்தோடுவது
பற்றிக் கவலைப்படாத பிடிகள்
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு
அமைதியாகக்காத்திருந்தது
கன்றை ஈன்ற பசுமாடு