பூர்ணம் விஸ்வநாதன்-நூற்றாண்டு.! -ஆர்க்கே.!

தன் பதினெட்டாம் வயதில் நாடக மேடையில் தடம் பதித்து நாடக உலகில் தனிப்பாதை அமைத்த சாதனையாளர் கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருதுகள் பெற்ற பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவினை பாரதீயவித்யா பவனில் பூர்ணம் விஸ்வநாதன் குடும்பத்தினர் பூர்ணம் நியூ தியேட்டர் குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 1995 கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் பாரதீய வித்யா பவனுடன் இணைந்து தனித் திருவிழாவாகவே மயிலாப்பூரின் மாட வீதி பாரதிய வித்யா பவனில் கொண்டாடியது.

கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்ட இந்த கண்கவர் விழா மிகச்சரியாக ஆறு மணிக்கு களை கட்டியது.

கலைமாமணி சி வி சந்திரமோகன் தனக்கே உரித்தான கவிதைத் தமிழுடன் விழா இணைப்புரை பொறுப்பேற்க முத்ரா பாஸ்கர் அளித்த
“முத்ரா” தயாரிப்பிலான பூர்ணம் விஸ்வநாதன் குறித்து தயாரித்திருந்த ஒரு சிறப்பான ஆவணப் படம் திரையிடப்பட்டது.

“தரையிலிருந்து திரைக்கு” என நம் கவனத்தை தமிழ்ச்சுவை ஈந்து திரையிடலின் முன் நம் கவனம் ஈர்த்தார் இனிப்பு இணைப்புரையாளர் சி வி சி.

அந்த ஆவணப்படத்தில் கலாநிலையம் கே எஸ் நாகராஜன், பூர்ணத்துடன் பல காலம் இணைந்து நடித்த கூத்தபிரான், முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ நடராஜன், திருமதி சுசீலா பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் அவருடைய சிறப்பினை இயல்பாக பகிர்ந்துகொண்டனர். பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பங்க்ச்சுவாலிட்டி, வசன உச்சரிப்பிற்கு அவர் காட்டும் சிரத்தை, பயிற்சியில் பங்களிப்பாளர்களின் குறைகளை தனியே அழைத்துப் பேசும் நல்ல குணம் பற்றி பகிர, பூர்ணம் நியூ தியேட்டரின் சீனியர் நடிகர்கள் எம் பி மூர்த்தி அவரின் சிறந்த நிர்வாக திறன் பற்றி சொல்ல, விஸ்வநாதன் இரமேஷ் பூர்ணம் நாடகக் களங்களாக அவர் எடுத்துக்கொண்ட சமுதாய சிந்தனையை சிலாகித்தார். அவர் தம்முடைய கண்களை தானம் செய்ததையும் இறுதிப்பயண யாத்திரையில் தனக்கு நாடக மேக்கப் போட்டு நிறைவேற்றவேண்டும் என்ற அவரின் விருப்பத்தையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திருமதி பூர்ணம். பூர்ணம் விஸ்வநாதன் டெல்லியில் இசை விமர்சகர் சுப்புடுவுடன் நடித்தவர். முத்ரா ராம்கியின் குரல் வளத்தில் ஆவணப்படம் ஒரு பூரண அறிமுகம் தந்தது அவருடைய கலைப் பயணத்தை.

இறை வணக்க பாடலாய் கஜவதனாவை வணங்கிப் பாடினார் பூர்ணம் நியூ தியேட்டரின் சீனியர் அங்கத்தினரான உஷா ரவிச்சந்திரன். குருகுலம் கல்கத்தா எஸ் இரமேஷ் எல்லோரையும் சிறப்பாக வரவேற்று வரவேற்புரை வாசித்தார்.

பாரதிய வித்யா பவன் டைரக்டர் கே என் ராமசாமி விழாவின் தொடக்க உரையாற்றினார். பன்மொழி நாடகங்களை சிலாகித்து தமிழ் நாடகங்கள் இன்னும் சிறக்க வாழ்த்தினார். தாம் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பிற்கு ரசிகன் என்றும் திரைப்பட நடிப்பை விட நாடகத்தை அதிகம் நேசித்தவர் பூர்ணம் என்றும் குறிப்பிட்டார். அவர் உரையில் நாடகத்திற்கான முழு ஒத்துழைப்பையும் தர பாரதிய வித்யா பவன் சென்னை தயாராக இருப்பதாக மகிழ்வுடன் தெரிவித்தார். நாடக ஒத்திகைக்கான இலவச இடம் (மைக் வசதியுடன் கூடிய பிரத்யேக நான்காம் மாடியில்) நாடக நிகழ்த்துதலுக்கான சன்மானம் மற்றும் பாரதிய வித்யா பவனின் இலவச அரங்க பங்களிப்பு என தமிழ் நாடகக் குழுக்களின் வயிற்றில் கலையார்வப் பால் வார்த்தார்.

சிறப்புரையில் நாடகத்துறையிலிருந்து காத்தாடி இராமமூர்த்தி பூர்ணத்தின் நடிப்பு ருசியை சிலாகித்தார். நாடக மற்றும் திரைத்துறையில் அவருடனான தம் பயணத்தை
தனக்கே உரிய பாணியில் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாக பேசினார்.

திரைத்துறையிலிருந்து வந்து சிறப்புரை ஆற்றிய நல்ல பல திரைப்படங்கள் இயக்கிய திரை ஆளுமை வஸந்த் எஸ் சாய் தான் சிறு வயதில் பார்த்து வியந்த பூர்ணத்தை தொடர்ந்து தன் மூன்று படங்களில் பூர்ணம் ஸாரை நடிக்க வைத்ததை பெருமை பொங்க சொன்னார். தினத்தந்தி பேட்டி ஒன்றில் பிடித்த இயக்குனர்களில் பாலசந்தர் பாலுமகேந்திரா வஸந்த் என்று பூர்ணம் விஸ்வநாதன் பதில் சொன்னதை தனக்கான கௌரவம் எனக் குறிப்பிட்டார்.

ஒரு எஸ் வி ரங்காராவ் ஒரு எம் ஆர் ராதா ஒரு பூர்ணம் விஸ்வநாதன் என அவர் முத்தாய்ப்பாய் முடித்தது நடிப்பின் மூன்று தெய்வங்களின் குறியீடு போல இருந்தது. குருவைக் கொண்டாடும் குருகுலத்தை வாழ்த்திய விதம் தனித்துவம்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழா விருது நாடகத்தை வாசிக்கும் சுவாசிக்கும் விசுவாசிக்கும் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்/ஷ்ரத்தா நாடகக்குழுவின் T D S என அழைக்கப்படும் T D சுந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது. ராஜ கமலம் ட்ரஸ்ட் சார்பாக தரப்படும் அந்த விருதினை நிறுவி அளித்தவர் ஐ பி எஸ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் அவர்கள். பூர்ணம் விஸ்வநாதன் அவருடைய சித்தப்பா என்பது அனைவரும் அறிந்ததே. கலை இலக்கிய குடும்பம் அவருடையது என்பது அடுத்து பேசிய அவர் உரையில் தெரிந்தது. ஒரே நாளில் நாலு காட்சிகள் தொடர்ந்து நடித்த அவரை சிலாகித்தார் அவர். அவருடைய இசையார்வம் பற்றியும் சொல்லத் தவறவில்லை.

அடுத்ததாக பேசிய பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் மகன் ராஜா என்கிற சித்தார்த் தன் அப்பாவைப்பற்றி கலைஞனாக தந்தையாக என இரு பார்வையில் பூர்ணத்தை பற்றி சுவைபட பேசினார். இந்த விழாவே தன் குடும்ப விழா போன்ற உணர்வை தருவதாக சிலாகித்தார். அவரின் டைரி எழுதும் வழக்கத்தை விசேஷமாக குறிப்பிட்டார். தினசரி வாழ்க்கையில் அவருடனான ஹாஸ்டல் தருணங்களை பகிர்ந்து கொண்டார். இந்திய சுதந்திர தின அறிவிப்பையும் அதன் பொன்விழா அறிவிப்பையும் அவர் வானொலியில் அறிவித்ததை பெருமையுடன் குறிப்பிட்டார். குருகுல குழுவினரின் உறுப்பினர் அனைவருமே அவரின் குழந்தைகள் போலத்தான் என்றும் குறிப்பிட்டார். மற்ற குழுக்களின் நாடகத்தை அவர் விரும்பி பார்ப்பதையும் இசைக் கச்சேரிகளில் அவர் வந்தால் அவருக்கு பிடித்த ரேவதி ராகத்தை பாடுவதையும் குறிப்பிடத் தவறவில்லை.

இயக்குனர் வஸந்த் வேண்டுகோள் வைத்து மொத்த அரங்கமும் திருமதி சுசீலா பூர்ணத்திற்கு எழுந்து நின்று கரவொலி தந்து நன்றி கூறிய விதம் மனநெகிழ்வு.!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் செக்ரட்டரி ராஜகோபால் சேகர் பூர்ணம் விஸ்வநாதன் வசன உச்சரிப்பு உடல்மொழி குறித்து மகிழ்வுடன் பேசினார்.

விருது பெற்ற T D சுந்தர் ராஜனை சக நாடகக் குழுக்கள் கௌரவிக்க ஏற்புரையில் விருது பெற்ற சுந்தர்ராஜன் உணர்வு பூர்வமாக சொன்னால் பிரிக்க முடியாத உறவு நாடகமும் பூர்ணமும் என்றார். தனக்கு கிடைத்த விருதினை நாடகத்துறை சம்பந்தப்பட்ட அனைவருக்குமான கௌரவம் என நெகிழ்ச்சியுடன் சமர்ப்பணம் செய்தார். இந்த வருட நாடக பத்மம் விருது பிரம்மகான சபாவால் இவருக்கு வழங்கப்பட இருப்பது காத்(து) தாடி ‘வாக்கில்’வந்த கூடுதல் சந்தோஷ இனிப்புத் தகவல்.

நடிகர் சிவகுமார் மற்றும் நாடக உலக ஏ ஆர் எஸ்ஸின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டன.

குருகுலத்தின் இளைய தலைமுறை பங்களிப்பாளரான கார்த்திக் கௌரிசங்கர் நன்றியுரை நவில, பூர்ணம் சுஜாதா காம்பினேஷனின் கிளாஸிக் ஓரங்க குறு நாடகமான “வந்தவன்” நாடகம் சிறப்புமிக்கதாய் நிகழ்த்தப்பட்டது.

ஒரு விழா பூரணத்துவமாய் பூர்ணம் விஸ்வநாதன் எனும் நாடக பிதாமகர் அவர்களின் நூற்றாண்டு விழாவை பல்லாண்டு காலம் நினைவு கொள்ளும் வகையில் நடந்து சிறந்தது குருவருள் அன்றி வேறென்ன.?

ஸ்ரீ குருப்யோ நமஹ.!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.