“என் சீமந்தத்திற்கு உங்க பாட்டி தூக்குத் தூக்கா ஸ்வீட் பண்ணிட்டு அதை எறும்பு கிட்டேயிருந்து காப்பாத்த என்ன பாடுபட்டா தெரியுமாடீ?” தன் இரண்டாவது பெண்ணின் சீமந்தத்திற்கு லட்டு பிடித்துக் கொண்டிருந்த ஜலஜா, மும்பையிலிருந்து முன்னதாகவே தங்கையின் சீமந்தத்திற்காக தன் ரெண்டு குழந்தைகளுடன் வந்திருந்த முதல் பெண் சுஜாவிடம் சொன்னாள்.
“ஏம்மா? அந்த காலத்தில எறும்புப் பொடி, எறும்பு சாக்பீஸ் எல்லாம் இல்லியா?” சுஜா ஆச்சரியமாகக் கேட்டாள்.
“இல்லையே! ஸ்வீட் வச்சிருக்கிற ஒவ்வொரு தூக்கையும் ஸ்வாமி அறையில தரையில வச்சு அதைச் சுத்தி மஞ்சள் பொடியில ஒரு வட்டம் போடுவாங்க. சாதாரணமா மஞ்சள் பொடி வாசனைக்கே எறும்பு வராது. ஆனா அதைத் தாண்டியும் எறும்பு வந்துடுமோன்னு ஒவ்வொரு தூக்கோட வெளிப்புற வயத்துப் பாகத்திலேயும், அதாண்டீ பாத்திரத்தோட நடுப்பாகம், விளக்கெண்ணையை சுத்தித் தடவி விடுவாங்க. என்ன ஐடியா பாரு? எறும்பு தூக்கில ஏறினா கூட விளக்கெண்ணையைத் தாண்டி ஏற முடியாம வழுக்கி விழுந்துடுமாம்.” ஜலஜா சிரித்தாள்.
“இப்போ பாரேன்! அரவிந்த் பிரட் சாப்பிட்டுட்டு மிச்சம் வச்ச தட்டுல ஒரு எறும்பாவது வந்திருக்கான்னு. நானும் எத்தனை நாளா பார்க்கிறேன், பிரட், பிஸ்கெட், சர்க்கரை, கோதுமை மாவு ஒரு சாமான்லேயாவது எறும்பு வருதான்னு. அது மட்டுமல்ல. காய், பழமெல்லாம் வாங்கினா ரெண்டு நாள் வச்சிருந்தா முன்னாடியெல்லாம் கெட்டுப் போயிடும். இப்போ ஒரு வாரம் கூட அப்படியே இருக்கே? ஊஹ¨ம்! எல்லாத்திலேயும் என்ன பூச்சிக் கொல்லி ரசாயனம் போடறாங்களோ தெரியல! அதெல்லாம் வயத்துக்கு எவ்வளவு கெடுதல்!” ஜலஜா அலுத்துக் கொண்டாள்.
“ஏம்மா? கடையில ஆர்கானிக்குன்னு போட்டு சாமானெல்லாம் விக்கிறாங்களே. அதை வாங்கிப் பார்க்கிறதுதானே?” என்றாள் சுஜா.
“அம்மா!” இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அரவிந்த் உள்ளறைக்குச் சென்று விட்டுத் திரும்ப ‘தட தட’ வென்று ஓடி வந்தான் மூச்சிரைக்க.
“இங்கே வந்து பாரேன்! தம்பிப் பாப்பா ஆர்கானிக்குன்னு நினைக்கிறேன்!”
“என்னடா சொல்ற?” ஒன்றும் புரியாமல் சுஜா அவன் பின்னாலேயே ஓடினாள்.
உள் அறையில் கீழே பாயில் படுத்திருந்த ஐந்து மாதக் குழந்தையைச் சுற்றி ஒரு வரிசையில் கறுப்பு எறும்புகள் போய்க் கொண்டிருந்தன.
பதறிப் போய் சுஜா குழந்தையைத் தூக்கினாள். பால் குடித்து முடித்து வாயோரம் பால் ஒழுகத் தூங்கிப் போன குழந்தையைச் சுற்றி அந்தப் பால் வாசனைக்காக எறும்புகள் வந்திருக்கின்றன என்று தெரிந்ததும், எறும்புகளைத் தட்டி விட்டு விட்டு குழந்தையின் சட்டையைக் கழற்றி உடம்பில் எங்கேயாவது எறும்புகள் இருக்கின்றனவா என்று பதட்டத்தோடு பார்த்தாள்.
“நான் சொன்னேனில்ல தம்பிப் பாப்பா ஆர்கானிக்குன்னு. இப்ப நீயே பாரு பாட்டி! ஆர்கானிக்குன்னா தானே எறும்பு வரும்?” ஐந்து வயது அரவிந்த் சீரியசான முகபாவத்தோடு சொல்ல பிரமித்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஜலஜாவும், சுஜாவும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.
அருமை
வேணு
LikeLike