பிரளயம் .. பிரளயம் .. மனித இனம் என்றைக்கும் சந்திக்கக் கூடாதது. அதைக் கடவுளர்களின் கொடுமை என்பதா இல்லை மனிதனின் கொடுமைகளுக்கு கடவுள் தரும் தண்டனை என்பதா என்று புரியாத புதிர் அது.
ஈயா கடவுளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதால்தான் அந்தக் கொடூர பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்தேன் என்று கில்காமேஷுக்கு உத்தானபிஷ்டிம் விளக்கி மேலும் கூறலானான்.
“ஆறுநாட்கள் கோரதாண்டவம் ஆடிய பிரளயம் இனி அழிப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் வந்ததும் அமைதி கொண்டது. படகிலிருந்து மிகுந்த தயக்கத்துடன் வெளியே வந்தேன்.பிரளயத்துக்குப் பின் அமைதி அதி பயங்கரமாக இருந்தது. பட்சிகளும் மிருகங்களும் தைரியமாக வெளியே போய் எந்தவித ஆபத்தும் இல்லாமல் இருந்ததை உணர்ந்து நானும் என் சகாக்களுடன் வெளியே வந்தேன். அந்த மலை உச்சியிலேயே அத்தனைக் கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பலியிட்டுப் பூசையும் செய்தேன்.
ஏழு கொப்பறைகளில் மதுவையும் எண்ணையையும் சேர்த்து கடவுள்களுக்கு நன்றிக் கடன் செலுத்தினேன். மது மாமிச வாசனை உணர்ந்த அனைத்துக் கடவுளர்களும் பலியை ஏற்றுக்கொள்ள வந்தனர். கடைசியாகக் காதல் தேவதை இஷ்டாரும் வந்தாள். அவள் சக தேவதைகளை விளித்துச் சொன்னாள்.
“ இப்படி மனித குலம் அழிந்து நான் பார்த்ததே இல்லை! இந்தப் பலி விருந்துக்கு எல்லாக் கடவுள்களும் வரட்டும். ஆனால் இவ்வளவு கொடுமையான முறையில் மனித குலத்தை நசித்த என்லில் மட்டும் வரக்கூடாது. நான் உயிருக்கு உயிராக நேசித்த என் மக்களைக் கொஞ்சமும் சிந்திக்காமல் இரக்கமின்றி பிரளயத்தின் மூலம் கொன்ற அவனை என்னால் மன்னிக்கவே முடியாது” என்று கூறினாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக என்லில் அங்கே வந்தான். ஒரு மனிதன் அவன் குடும்பம் மற்றும் பட்சி பறவை காட்டு வீட்டு மிருகங்கள் இவை அனைத்தும் தப்பிவிட்டதை அறிந்து மிகவும் கோபப்பட்டான். குழப்பத்துக்கும் சப்தத்துக்கும் காரணமாயிருந்த மனித இனப் பெருக்கத்தை முழுவதும் அழைக்க இயலாமல் செய்தது யார் என்று கடவுளர் அனைவரிடமும் கேட்டான்.
நீர்த்தேவதை நினுர்த்தா என்லிலிடம் கூறினான்.” என்லில்! நீ கோபப்பட்டு பிரயோஜனமில்லை ! இது அனைத்தும் ஈயா கடவுளின் அனுக்கிரகம். தப்பியவன் ஈயாவின் நண்பன். ஈயாவுடன் அறிவிலும் யுக்தியிலும் யாரும் போட்டி போட முடியாது. எல்லா விஷயங்களும் எப்படி நடைபெறவேண்டும் என்று அறிந்தவர் ஈயா ஒருவர்தான்.”
அதுவரை அமைதிகாத்த ஈயா வாய்திறந்து , ‘வீரனே என்லில்! புத்திசாலியான நீ இப்படி புத்தியில்லாத காரியத்தை ஏன் செய்தாய்? இப்படிப் பிரளயத்தை அனுப்பி மக்களை மாய்க்கலாமா? மக்கள் இல்லையென்றால் நமக்கு யார் பலி தருவார்கள்? பாபம் செய்தவன் மேல் பாவச் சுமை ஏறட்டும். தவறு செய்தவன் தவறு செய்தனவனாகவே இருக்கட்டும். தவறு செய்தவனைத் தண்டி! ஆனால் இப்படி ஒரேடியாக எல்லோரையும் அழிக்கலாமா? எல்லா மக்களுமா பாபம் செய்தார்கள்? ஓநாய்களையும் நரிகளையும் மனிதர்கள் மேல் ஏவலாம். பலர் தப்பி விடுவார்கள். பஞ்சத்தையும் பட்டினியையும் அனுப்பலாம். சிலர் தப்பிவிடுவார்கள். நோய் நொடி கொடுத்தாலும் சிலபேர் தப்பிவிடுவார்கள். பிரளயத்தை ஏவலாமா? இதிலிருந்து யார்தான் தப்பி உயிர்வாழ முடியும்? அதனால்தான் ஒருசிலரையாவாது காப்பாறவேண்டும் என்று யோசித்தேன். நானும் இந்த மனிதனுக்குக் கடவுளர்களின் ரகசியத்தைச் சொல்லவில்லை. அவன் ஏதோ கனவு கண்டு பிரளயத்திலிருந்து தப்ப அவனே வழி அமைத்துக்கொண்டான். இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து கொள்ளுங்கள். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. “ என்று ஆணித்தரமாகக் கூறினார்.
இதைக் கேட்ட என்லில் என்னை அழைத்துக் கொண்டு என் படகுக்கு வந்தார். நான் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவர் பின் சென்றேன்.அவர் என்னையும் என மனைவியையும் அவருக்கு இரு புறத்திலும் மண்டியிடச் செய்தார். எங்கள் முன்னுச்சிகளைத் தன் இரு கைகளால் தொட்டுக்கொண்டு ஆசீர்வதித்தார்.
பின்னர் அவர் ஒரு அறிவிப்பு செய்தார்.
“ இதுவரையில் உத்னபிஷ்டிம் மனிதர்களில் ஒருவனாக இருந்தான். இன்றுமுதல் அவனும் அவன் மனைவியும் தேவர்களாக தூரத்தில் நதியின் வாய்க்கருக்கில் வசிப்பார்கள். “
“ கில் காமேஷ்! இப்படியாகத்தான் என்னைக் கடவுள்களின் ஒருவனாகச் செய்தார்கள். அன்றுமுதல் நான் இந்த நதிக்கரையில் வசித்து வருகிறேன். இப்போது சொல் ! உனக்காக யார் கடவுள்களைக் கூட்டி வந்து நித்தியத்துவத்தை உனக்குப் பெற்றுத் தருவார்கள்? சாகாத வாழ்வு வேண்டுமென்றால் சில காரியங்கள் செய்யவேண்டும். முதல் படியாக ஆறு நாட்கள் ஏழு இரவுகள் கண்களை மூடாமல் தூங்காமல் இருக்கவேண்டும். முடிகிறதா பார்! “ என்று சொன்னார்.
தனக்காக எந்தக் கடவுள் சாகா வரத்தைத் தர உதவக்கூடும் என்று கில்காமேஷ் தடுமாறி நின்றான். உத்னபிஷ்டிம் சொல்வதுபோல முதல் படியை முயற்சி செய்வோம் என்று அவன் நினைக்கும்போதே தூக்க மயக்கம் அவனை ஆட்டிப் படைத்தது. இலேசாக ஆடி வழியத் தொடங்கினான். பஞ்சுப் போர்வையால் போர்த்தப்பட்டவன் போல அவன் மூச்சு விட்டான். சுகமாக நித்திரை வந்தது.
உத்னபிஷ்டிம் தான் மனைவியிடம் கூறினான். “ இதோ பார் கில்காமேஷை! பல நாட்கள் தூங்காதவன் இன்று உறங்குகிறான். இவனுக்கு எப்படி சாவில்லாத வாழ்வு கிடைக்கும்? முதல் படியிலேயே தடுக்கி விழுந்துவிட்டான். இவனுக்கு எப்படி அந்த வரம் கிடைக்கும்?”
அவன் மனைவி, “ தயவுசெய்து அவனை எழுப்புங்கள்! அவன் தூங்காதிருக்கட்டும். அவன் ஊர் திரும்பி தன் ஊருக்குச் செல்லட்டும். இல்லையென்றால் இங்கேயே அவன் இறந்துபோவான்” என்று கெஞ்சினாள்.
“ எல்லா மனிதர்களும் ஒருவகையில் ஏமாற்றுக்காரர்கள்தான். நான் மனிதனாக இருந்ததால் இதைப் பற்றி ஆணித்தரமாக என்னால் கூறமுடியும். இவன் முடிந்தால் நம்மையும் ஏமாற்றக்கூடும். அதனால் அவன் தூங்கும் நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒரு ரொட்டி சுட்டு அவன் தலைமாட்டில் வைத்துவிடு! அதைப்பார்த்து அவன் எத்தனை நாள் தூங்கியிருக்கிறோம் என்பதை அவனால் கணக்குப் பார்த்துக் கொள்ள முடியும். சுவற்றிலும் புள்ளி வைத்து கணக்கிடு!” என்று உத்நபிஷ்டிம் தன் மனைவியிடம் கூறினான்.
ஆறுநாள் தூங்கிய கில்காமேஷ் ஏழாம் நாள் இலேசாகக் கண்விழித்தான்.. உத்நபிஷ்டிம் வந்து எழுப்பியதும் “ இப்பொழுதுதானே தூங்க ஆரம்பித்தேன். அதற்குள் ஏன் எழுப்புகிறாய்?” என்று கேட்டான்.
“கில்காமேஷ் ! நீ உன் உடலில் பலம் வரத் தேவையான அளவிற்கு ஆறு நாட்கள் தூங்கியிருக்கிறாய். இங்கு பார் ஆறு நாள் ரொட்டிகள் வீணாகிக் கிடக்கின்றன. இனி நீ உன் ஊருக்குப் புறப்பட்டுச் செல்லவேண்டியதுதான்.” என்றான் உத்னபிஷ்டிம்.
கில் காமேஷிற்கு மனதில் சொல்ல முடியாத அளவிற்குத் துக்கம் பீரிட்டெழுந்தது.
“ என நம்பிக்கைக்கு உரிய உத்னபிஷ்டிம்! இனி நான் என்ன செய்வது என்று சொல் ! இரவுத்திருடன் என் உடலை மயக்கி என்னை செத்தவனாக்கிவிட்டான். என் உடலில் சாவு குடியிருக்கிறது. சாவின் கோரப்பிடியிலிருந்து தப்ப எனக்கு நீயும் உதவ மறுக்கிறாய்! நானும் செத்து மடியவேண்டியதுதானா? “ என்று மனம் உருகும்படி கேட்டான்.
இதைக் கேட்ட உத்னபிஷ்டிமின் மனம் சற்று இளகுவது போல இருந்தது. அதைக் கவனித்த அவன் மனைவி.” கில்காமேஷ் மனம் நிறைய நம்பிக்கையுடன் மிக நீண்ட பயணம் மேற்கொண்டு இங்கு வந்திருக்கிறான். அவன் அலுத்துப்போய் வெறுங்கையுடன் வீடு திரும்பக்கூடாது. ஏதாவது அவனுக்குத் தந்துதான் அனுப்பவேண்டும்” என்று கூறினாள்.
அதைக்கேட்ட கில்காமேஷின் மனத்தில் நம்பிக்கை கொஞ்சம் பிறந்தது.
(தொடரும்)