குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
கவிஞன் ஆவேன் !
நானும் ஒருநாள் கவிஞன் ஆவேன் –
அழகிய கவிதைகள் ஆயிரம் படைப்பேன் !
அம்மா அப்பா பெருமை படும் விதம் –
அசத்தல் கவிதைகள் எழுதித் தருவேன் !
இயற்கை எழிலைப் பாடும் கவிதை –
இறைவன் பெருமை கூறும் கவிதை !
அன்னையின் அன்பைக் காட்டும் கவிதை –
ஆயிரம் நானும் படைப்பேன் பாரு !
உழைப்பவன் உயர்வைப் போற்றும் கவிதை –
ஊருக்கு நல்லது சொல்லும் கவிதை !
நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் கவிதை –
நலமாய் நானும் படைப்பேன் பாரு !
படித்தவர்க்கேற்ற பண்டிதக் கவிதை –
பாமரனுக்கேற்ற பலவிதக் கவிதை !
புதுப்புதுக் கருத்துகள் புகலும் கவிதை –
புதிதாய் நானும் படைப்பேன் பாரு !
படித்துச் சுவைத்திட ஓரிரு கவிதை –
பாடிக் களித்திட ஓரிரு கவிதை !
பள்ளிச் சிறுவர் பண்படக் கவிதை –
பாக்கள் பலவிதம் படைப்பேன் பாரு !
அண்ணன் தம்பி பற்றிய கவிதை –
அக்காள் தங்கை பற்றிய கவிதை !
வீட்டின் இன்பம் வெளிப்படும் கவிதை –
வரிசையாய் நானும் படைப்பேன் பாரு !
இலக்கணத்தோடு ஓரிரு கவிதை –
எளிமையாய் ஓரிரு புதுக்கவிதை !
வரமாய் வரும் ஒரு வசன கவிதை –
நிச்சயம் நானும் படைப்பேன் பாரு !
காற்றைப் பற்றி ஒரு கவிதை –
காடுகள் பற்றியும் ஒரு கவிதை !
ஆறு அருவியைப் பாடும் கவிதை –
சலசலவென நான் படைப்பேன் பாரு !
பாம்பைப் பாடும் ஒரு கவிதை –
பறவைகள் பற்றியும் ஒரு கவிதை !
நாயைப் பற்றிய கவிதையும் ஒன்று –
நலமாய் நானும் படைப்பேன் பாரு !
பாரதி மீசை பற்றிய கவிதை –
பார்த்தசாரதி கோயில் கவிதை !
வைரமுத்துவை வெல்லும் கவிதை –
ஒரு நாள் நானும் படைப்பேன் பாரு !
சித்தர்கள் போல ஞானக் கவிதை –
சிந்திக்க வைக்கும் சிறப்புக் கவிதை !
பக்தியைப் போற்றும் பழந்தமிழ்க் கவிதை –
திருவாசகம் போல் தருவேன் பாரு !
நானும் ஒருநாள் கவிஞன் ஆவேன் –
அழகிய கவிதைகள் ஆயிரம் படைப்பேன் !
அம்மா அப்பா பெருமை படும் விதம் –
அசத்தல் கவிதைகள் எழுதித் தருவேன் !
*************************************************
என்ன செய்யப் போகிறாய் ?
சின்னச் சின்னக் கண்ணனே – நீ
என்னவாகப் போகிறாய் ?
பள்ளி சென்று படித்துவிட்டு
என்ன செய்யப் போகிறாய் ?
சிரித்து மயக்கும் செல்லப் பெண்ணே – நீ
என்னவாகப் போகிறாய் ?
பட்டமெல்லாம் பெற்ற பின்னர்
என்ன செய்யப் போகிறாய் ?
விவசாய விஞ்ஞானியாய்
வளர்ந்து நிற்கப் போகிறேன் !
விஷ உணவைத் தடுத்துவிட்டு
இயற்கை உரம் நாடுவேன் !
விளைச்சலைப் பெருக்குதற்கு
விளைநிலத்தைப் பறிகொடேன் !
மண்வளத்தைப் பெருக்குவேன் –
மனித வளம் போற்றுவேன் !
கவிஞனாகவே வளருவேன் –
கற்பனையைப் போற்றுவேன் !
அற்பமாகப் பாட்டெழுதும்
அடிமைத்தனம் சாடுவேன் !
காதலைப் பாடினாலும்
கருத்தோடு பாடுவேன் !
கண்ணியம் நான் காப்பேன் –
கடமை என்றும் போற்றுவேன் !
பொறியாளனாய் நான் வருவேன் –
புதிய வழிகள் காணுவேன் !
எளிய மக்கள் ஏற்றம் பெற –
எந்திரங்கள் செய்குவேன் !
வேலை தேடி வேறு நாடு –
போவதையே மாற்றுவேன் !
தாய்நாட்டில் தழைத்துவிட –
தந்திரங்கள் செய்குவேன் !
உண்மையாகப் படித்து நானும் –
மருத்துவராய் வளருவேன் !
உடம்பு மனம் அத்தனைக்கும் –
வைத்தியங்கள் செய்குவேன் !
குறைந்த செலவில் பெரிய குணம் –
கொடுக்கும் மருந்து கலக்குவேன் !
நோய் இல்லாமல் நூறு வருடம் –
வாழும் வழியைக் காட்டுவேன் !
என்னைப்போலே நாளை நூறு –
சிறுவர் இருப்பர் அல்லவா ?
துடிதுடிப்பும் துறுதுறுப்பும் –
சிறகடிக்கும் அல்லவா ?
நம்பிக்கை வளர்க்கும் விதம் –
நல்ல கல்வி ஊட்டுவேன் !
ஆசிரியர் என்றால் மீண்டும் –
பெருமை கொள்ள வாழுவேன் !
தொழில் ஒன்று தொடங்கி நானும் –
அதிபராக வளருவேன் !
உழைக்கும் மக்கள் நூறு பேரை –
ஊக்குவித்து உயர்த்துவேன் !
உற்பத்தியில் உயர்நிலைகள் –
அடையும் வழிகள் தேடுவேன் !
ஊருக்கு உபயோகம் –
கிடைக்கும் வழியை நாடுவேன் !
பலருக்கும் வழியைக் காட்டும் –
அறிஞனாக வளருவேன் !
பாரம்பரியம் நமக்கு உண்டு –
பழைய கதைகள் கூறுவேன் !
உலகத்தை வழி நடத்தும் –
விஷயங்களைக் காட்டுவேன் !
இந்தியாவைப் பின்பற்றி உலகம் –
நடந்துவரச் செய்குவேன் !
எந்த வேலை என்றாலும் –
ஒழுங்காகச் செய்குவேன் !
படிப்படியாய் உயர்ந்து நானும் –
பாரதத்தை உயர்த்துவேன் !
அம்மா அப்பா போற்றும் விதம் –
வளர்ச்சி பெற்று வாழுவேன் !
நாளை உலகம் மெச்சும் விதம் –
நல்ல வழியில் செல்லுவேன் !
*****************************************************************