“துன்புறுத்தினாள்!” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

கணவன்-மனைவி - சுசிலா பாலன் | Dinamalar

அவசரமாக தொலைப்பேசியில் அன்று பேசியவன் தன்னைத் தினேஷ் என அறிமுகப் படுத்திக் கொண்டான். தன் உயிர்த் தோழன் ஸாகேத் சமீபகாலமாக இன்னலில் மாட்டிக் கொண்டு, ஆளே மாறிவிட்டான், அதற்கு ஒரு வழி காண என்னிடம் அழைத்து வருவதாக ஒரே மூச்சில் விவரித்தான். எங்களுடன் நிம்ஹானஸ் (NIMHANS) இன்ஸ்டிடியூட்டில் மனநலம் படித்த ஸைக்காட்ரிஸ்ட் ஒருவர், வட இந்தியாவில் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை புரிபவர். ஸாகேத்தின் குடும்பத்தினரின் ஊரில் அவர் மனநல முகாம் நடத்தி இருந்தார். அங்கே அவரைச் சந்தித்து ஆலோசித்த போது, அவர் சென்னையில் என்னைப் பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.

தன் ஊரில், சாகேத்தின் குடும்பம் மிகப் பிரபலமானவர்கள். ஆகையால் யாருக்கும் பிரச்சினை விவரங்கள் தெரியாமல் இருக்க, இவ்வளவு தொலைவில் உள்ள என்னை ஆலோசிக்க வந்தார்கள். எனக்கு ஹிந்தி மொழி நன்றாகத் தெரியும் என்பது இன்னொரு காரணம்.

இருபத்தி நான்கு வயதுள்ள ஸாகேத், ஜவுளி வடிவமைப்பு படித்திருந்தான். படிப்பு முடித்த கையுடன் ஜவுளி நிறுவனத்தை அமைத்தான். ஐந்து சக ஊழியர்களை நியமித்துக் கொண்டான். இவன் பெற்றோர் இதைப் பெருமையுடன் ஊக்குவித்தார்கள்.

தலைமுறை தலைமுறையாக அவர்கள் விவசாயிகள். பயிர், பழங்கள் மற்றும் பூ வகைகள் வயலில் பூத்துக் குலுங்கும். வீட்டில் அண்ணன்மார் இருவரும் தந்தையோடு விவசாயத்தைப் பார்த்துக் கொண்டனர். சிறுவயதிலிருந்தே ஸாகேத் உடைகளை, ஜவுளிகளை வடிவு அமைப்பதைப் பார்த்துப் பிரமித்ததுண்டு. அவன் ஜவுளி சம்பந்தமாகத் தொழில் செய்வான் என்பது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் துள்ளி ஓடும் அணில்களுக்குக் கூட தெரிந்ததே. தன் தொழில், வேலை என்று மட்டும் இல்லாமல் ஸாகேத் தினமும் இரண்டு மணி நேரத்திற்குப் பூக்கள், பழங்கள் வளர்ப்பிலும் ஆர்வத்துடன் பங்கு கொண்டான்.‌

தன் வீட்டினரைப் போலவே ஸாகேத்துக்கும் தாராள மனசு. உதவி செய்யும் மனப்பான்மை. இந்த சுபாவத்தைத் திவா என்றவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால் சாகேத்திற்குப் பல துன்பங்கள் நேர்ந்திருக்கிறது என்பது தினேஷின் கணிப்பு.

இந்த சங்கடத்தின் ஆரம்பம், திவாவின் மாமனார், ஆலோக் அவளுக்குப் பிரத்யேகமாகத் தாவரங்கள் நர்ஸரி ஆரம்பித்து வைத்ததில் தான்.

இருபத்தெட்டு வயதான திவா பட்டப்படிப்பை முடித்தபின் வேலை செய்து பார்த்தாள், பிடிக்கவில்லை. வீட்டில் பார்த்த மாப்பிள்ளை சிவா, அவளைப் பொருத்தவரை உப்பு சப்பு இல்லாதவன். இருந்தும் கல்யாணம் செய்து கொண்டாள். சமீபத்தில் புது வேலையில் சிவா சேர்ந்திருந்தான். எந்த வேலையிலும் ஓரிரு வருடத்திற்கு மேல் நிலையாக அவன் இருந்ததில்லை. அதனாலேயே அவனுடைய பெற்றோர் கல்யாணம் செய்ததுடன் ஒரு சொந்தத் தொழிலை அவன் மனைவிக்கு ஆரம்பித்துக் கொடுத்தார்கள். அப்படித் தான் இந்த பஸந்த் பஹார் நர்ஸரி உதயமானது.

வீட்டில், மாமனார் ஆலோக், தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா, வீடு மனை விற்பனை நிறுவனத்தில் மாமியார் நேஹா ஸுபர்வைஸர் வேலையிலிருந்தாள்.

நர்ஸரி பொறுப்பை மருமகள் திவாவிற்குச் சமர்ப்பித்தார்கள்.
தாவரங்கள் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாததால் தம் நண்பர்களாகிய ஸாகேத் குடும்பத்தினரின் உதவியைக் கேட்டார்கள். மறுபேச்சு இல்லை. முடிந்த வரை நர்ஸரி தாவரங்களைப் பற்றிப் பல தகவல்கள் சொல்லி, நர்ஸரியை அமைக்க உதவியாக இருந்தார்கள். உதவுவது ஸாகேத்தின் பொறுப்பு என்று தந்தை சொல்ல, அவனும் செய்ய ஒப்புக்கொண்டான்.

பத்துப் பதினைந்து நாட்கள், மிஞ்சினால் ஒரு மாதம் எடுக்கும் எனக் கணக்கிட்டான் ஸாகேத். ஆனால் பல மாதங்களுக்குப் பின்னரும் விடுபட இயலவில்லை. . வெளியில் சொல்ல முடியாத இன்னல்களால் தவித்தான் சாகேத்.

ஸாகேத் மிக அமைதி ஆவதைக் கவனித்த குடும்பத்தினர் என்ன ஏது என விசாரித்துப் பார்த்தார்கள். பதில் கிடைக்கவில்லை. உயிர்த் தோழனான தினேஷ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கவனித்தான். தர்மசங்கடமான நிலை. அப்போது தான் ஸைக்காட்ரிஸ்ட்டை சந்தித்துப் பேசினான். என்னிடம் அழைத்து வந்தான்.

முதல் முறை என்னிடம் வந்த போது, ஸாகேத், தான் அனுபவித்து வரும் தர்மசங்கடமான நிலையைப் பகிர வெட்கப் பட்டான். பொதுவாக வன்முறை, கொடுமைப் படுத்தல் அனுபவித்து வருவோர் இவ்வாறு நினைப்பார்கள். அவர்கள் உணர்வை அனுசரித்துப் போக வேண்டும். அவனுள் பொங்கிய வேதனை அவன் தோற்றத்தில் தெளிவாகத் தென்பட்டது. முதன்முறையாகப் பேச முயல, வார்த்தைகள் மிகக் குறைவு. உடல் நடுங்கி, கண்ணீர் ததும்பியது. சாகேத்திடம் வன்முறை சகிக்கும் போது இவ்வாறு நேரும் எனப் பல உதாரணங்கள் சொல்லி விவரித்தேன்.

ஸாகேத் பகிர வந்ததே பெரிய முன்னேற்றம் எனச் சொன்னேன். நடந்தவை தனக்குக் கேவலமாக இருப்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். செயலற்ற நிலை உணர்வதாகக் கூறினான். இங்கு வந்தது, இதிலிருந்து விடுபட ஆரம்ப நிலை என்றேன். ஊக்கப்பட்டான்.

அனுபவிக்கும் கட்டத்தைத் தாண்டிச் செல்லவே வந்திருக்கிறோம் என்ற திடமான உறுதி வந்ததும் பகிருவது சுலபமாகும் என்றேன். நான் மனநல பிரிவில், ஸைக்காரிக் ஸோஷியல் வர்கர். எங்களிடம் வருவோரின் நிலையை, பகிர்தலை யாரிடமும் சொல்ல மாட்டோம் (எங்கள் பாஷையில் confidentiality) என விளக்கினேன். இங்கு எழுதுவதைப் போல, மாணவர்கள், பொது மக்களுக்கு மனநலம் பற்றி விவரிக்க உபயோகித்தாலும், அடையாளங்களை மாற்றி வைப்போம்.

சொன்ன விவரங்களை ஸாகேத் விம்மி அழுது கொண்டே தலை ஆட்டி கேட்டுக் கொண்டான். சென்றான். இரண்டு வாரத்திற்குப் பிறகு மறுபடி தினேஷுடன் வந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மிக அவசரமான, தேவையுள்ள க்ளையன்டை மட்டுமே பார்ப்பேன். ஸாகேத் வெளியூரிலிருந்து வருவதால் சம்மதித்தேன். சாயங்காலம் விமானத்தில் வந்தார்கள். முழு பௌர்ணமி. அந்த சந்திரனின் வெளிச்சம் போல இவன் வாழ்வும் தெளிவு பெறவே இந்த நாளை தேர்ந்தெடுத்தது போல ஆயிற்று!

ஆரம்பிப்பதற்கு முன் அவனுடைய தற்போதைய நிலையை விளாவரியாக விளக்கச் சொன்னேன். தட்டுத் தடுமாறி ஆரம்பித்து, நடந்ததை முழுவதையும் விவரித்தான்.

திவாவிற்கு நர்ஸரி நடத்துவது சற்றும் தெரியாததால் அவளைப் பலமுறை சந்திக்க நேர்ந்தது. தியா கேட்ட கேள்விகள் அனைத்தையும் ஸாகேத் விளக்கினான். அவள் மறுபடி மறுபடி திடீரென வருவாள். சர்ரென்று வாகனத்தை வேகமாக அவன் அருகாமையில் ஓட்டி வந்து பயமுறுத்துவாள். தொட்டுத் தொட்டுப் பேசுவது ஸாகேத்திற்குப் பிடிக்கவே இல்லை. “செய்யாதே அக்கா” என்றால் தியா பதிலுக்கு “ஏய், அக்காவா? வெட்கமா?” என்று கேலி செய்து இன்னும் அருகில் நெருங்குவாள். சீக்கிரமே முடித்து விட வேண்டும் என்று துடித்தான். தியா கேட்டதற்கு விறைப்பாக விளக்கம் அளித்தான் ஸாகேத். அவள் முகத்தைச் சுளித்து, புரியவில்லை என்ற பாவனை செய்து “வந்து செய்து காட்ட முடியுமா?” என எல்லோரும் முன்னால் கெஞ்சினாள். இந்த நடத்தையை ஸாகேத்தின் குடும்பத்தினர் அவள் சகஜமாகப் பழகுகிறாள் என்றே எடுத்துக் கொண்டனர்.

தியா உள்ளுக்குள் குதுகலம் அடைந்தாள். அன்றிலிருந்து, அதிகபட்சம், “வந்து காட்டேன்” கோரிக்கையை விடுத்தாள். ஸாகேத் தன் வாழ்நாளில் முதன்முறையாக உதவுவதை வருந்தினான். அவ்வாறு நினைப்பதற்குத் தன்னையே நிந்தித்துக் கொண்டான். தியாவின் வருகை, அல்ல வரச்சொல்லி அழைக்கும் போது மனம் நடுங்கும். கடமைக்காகப் போவான்.

சாகேத்திற்கு தன்னுடைய இந்த மனமாற்றம் அன்னியதாகத் தோன்றியது. கடுகு அளவு கூடப் பிடிக்கவில்லை. விளைவாக அவனது வேலையில் பாதிப்பு வரத் துவங்கியது. இதை சரிப்படுத்தவும் வந்தேன் என்றான். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஸெஷனில் இந்த நிலையின் பல காரணி, சூழல், உணர்வு அவனுடைய நடத்தை, குறைகள் பற்றி யோசிக்க வைத்தேன்.

ஸெஷன்களில் முடிவானதின்படி, தன் உடற்மொழியை (body language) மேலும் கவனிக்கத் தொடங்கினான். மாற்ற ஆரம்பித்தான்.

தியா அவன் கையை உரசி அழைக்கையில், தேவையில்லாமல் இப்படிச் செய்கிறாள் என்று உணர்ந்தான். அவள் கால்களை அருகாமையில் கொண்டு வருவதை, விரல்கள், கைகளை தன் கையின் பக்கம் நீட்டுவதை ஸாகேத் கவனித்து, தன்னைச் சுதாரித்து, முடிந்த அளவிற்குத் தள்ளிப் போவான். அப்போது தியா அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, சிரிப்பாள்.

அவளுடைய அம்மா அங்கே இருந்து விட்டால், இருவரும் அவனைச் சீண்டி விட்டு நகைத்துக் கொள்வார்கள். அவளுடைய அம்மாவும் உடந்தையாயிற்றே! இருவரும் தன்னைவிட வயதில் அதிகம் வேறு. தடுக்க முடியாமல் தவித்தான். குற்ற உணர்வுடன் தத்தளித்தான்.

இதையே மறுமுறை ஸாகேத் வந்தபோது ஸெஷனில் ஆராய்ந்தான். ஸாகேத்தை அந்த தருணங்களில் தான் நினைத்துக் கொண்டதை, நடந்து கொண்ட விதத்தைப் பற்றி விளாவரியாக விவரிக்க, கதை சொல்லி புதிர் போட்டு, வரைந்து என விதவிதமான வகையில் பகிரச் செய்தேன்.

அவள் நடத்தைக்கு மறுப்பு தெரிவிக்காதது அவனுக்குக் குற்ற உணர்வை ஊட்டியது. தவிர்த்துவிட தான் ஏன் முயலவில்லை என வியந்தான்.

தன் செய்கைகளால் தியா கிலுகிலுப்பு அடைந்தாள்.

வன்முறை, புல்லியிங் (bullying) பற்றிய பல கட்டுரைகள் படிக்கக் கொடுத்தேன். ஏனெனில் தியாவின் செய்கையால் ஸாகேத்திற்கு தவிப்பு ஏற்பட்டது அவளுக்குக் கிளர்ச்சியைத் தந்தது. ஸாகேத் தன்னை விடுவித்துக் கொள்ளாதது அவளுக்கு வெற்றியானது. காயப்படுத்தியே ஸாகேத்தை தன்வசத்தில் வைத்தாள். பாதிக்கப்பட்ட நிலையை ஸாகேத் சுதாரிக்கத் தெரியாமல் படும் அவஸ்தை தியா போன்றவர்களுக்கு வெற்றி.

கட்டுரைகளில் இவை அனைத்தும் பல வர்ணனை வடிவில் இருந்தது. படித்து வந்தபின், முன்பைவிட ஸாகேத்திடம் ஒரு சுறுசுறுப்பு, கண்கள் பளிச்சென்று இருந்தது. அவனுக்குத் தெளிவு பிறந்தது போல எனக்குத் தோன்றியது. இந்த bibliotherapy (படித்து அறிவதின் மூலம் குணப்படுத்துவது) முறை, அனுபவித்து வருவதைப் பற்றிப் படிக்கையில், அதைப் பற்றிய சரியான தெளிவு புரிதல் வர உதவும், மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் தோன்றும். தோன்றியது!

அதன்படி, தியா மிக அருகில் நெருங்கி நிற்கும் போது ஸாகேத் “மன்னிக்கவும், மூச்சு விட இடம் கொடுத்து, கொஞ்சம் தள்ளி நிக்க முடியுமா”? என்றான். தியா திடுக்கிட்டுப் போனதாகச் சொன்னான். தன்னால் சொல்ல முடிந்தது என்பதே அவனுக்குத் தைரியம் கொடுத்தது. புது தெம்பு வந்தது.

தன் உதவி செய்யும் கொள்கையை தியா பயன் படுத்திக் கொள்கிறாள், தவறாக அணுகுகிறாள், தன் கொள்கையில் குறை இல்லை என்று புரிந்து கொண்டான். பிரச்சினையின் மையமே மற்றவர்கள் அவதிப் படுவாரோ என அஞ்சி “எனக்கு இதில் உடன்பாடு இல்லை”, “மாட்டேன்” என்று சொல்லாமல் இருப்பது. விளைவாக இத்தகைய சூழலில் நேர்கிற தவிப்புகள்.‌

தியா நெருங்கும் போது, ஸ்பரிசத்தைத் தவிர்க்க எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என வகுக்க ஆரம்பித்தான்.

ஸெஷன்களில் பயின்றவற்றை தியாவிடம் நடத்திக் காட்ட வேண்டிய நிலையில் தட்டுத் தடுமாறினான். தியா மேலும் கை போடுவது நேர்ந்தது. இதை வெல்ல, நண்பன் தினேஷை உடன் சேர்த்துச் செய்ய முடிவானது.

செய்ய ஆரம்பித்தார்கள். மடமடவென பல மடங்கு ஸாகேத் திடமானான். தியா அவனிடம் நெருங்கி வரும் தருணங்களில், நேரடியாக, “எதற்காக தியா, உன்னை நீயே இவ்வளவு தாழ்த்திக் கொள்கிறாய்? பெண்ணான உனக்கு இது அழகாக இல்லை. அருவருப்பைத் தான் தருகிறது” எனச் சொல்லி விலகினான்.

தியாவும் விட்ட பாடில்லை. ஸாகேத் அடுத்த நிலைக்குப் போக வேண்டிய நிலை வந்தது. அதைப் பல ரோல் ப்ளே மூலம் தயார் செய்தோம். ஓரிரு முறை ஸ்பரிசம் செய்ய முயலும் போது, அவள் கண்களைப் பார்த்தவாறு விலகிக் கொண்டான். திட்டவட்டமான குரலில் பேச, தியா தடுமாற்றம் கொண்டாள். ரிஸ்க் எடுத்து அவள் சறுக்கல் கண்டதைக் கேட்டு தியாவின் தாயார் அவளைக் கிண்டலாக பேசினாள்.

நல்லெண்ணத்தில் ஸாகேத் தியாவிடம் தன் போக்கை மாற்றிக் கொள்ள, என்னைப் பார்க்கப் பரிந்துரைதான். அவளுடைய இந்த செயலால் தனக்கு நேர்ந்த உபாதைகளை அவளிடம் வெளிப்படையாகக் கூறினான். அத்துடன் விடாமல் தான் மனநலனை திடப்படுத்திக் கொண்டதாகச் சொன்னான். தியாவும் இந்த நடத்தையைச் சுதாரித்துக் கொள்வதற்கு வழி வகுக்க என்னை அணுகச் சொன்னான்.

அவமானம், ஆச்சரியம் அடைந்தாள் தியா ஆனால் அந்த க்யூரியாசிட்டி அவளை, சிவா, ஆலோக், நேஹா, தன் அம்மாவுடன் என்னிடம் அழைத்து வந்தது.

தியாவுடைய அம்மாவைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட ரிஸ்க் எடுக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே தியாவை அபாயத்தில் கிளுகிளுப்பு உணர, இரு வாகனத்துக்கு நடுவில் ஸைக்கிள் விட அல்ல ஓட, சினேகிதி, நண்பர்களை, ஆசிரியர்களை கேலி செய்ய, சீண்ட ஊக்குவிப்பாளாம். பயமே தெரியாதாம். தானும் அதுபோல என்றாள் அவள் தாயார்.

கணவன் சிவாவோ மிக நிதானமானவன். பெற்றோர் எடுக்கும் முடிவின்படி அவன் போவது அவளுக்குச் சலிப்புத் தந்தது. இந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் ஆலோக் நேஹா ஜோடியை ஆதர்ச ஜோடி என எல்லோரும் கூறினார்கள். ஜோடிகள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். வெளி உலகிற்கு மட்டும் இந்த மாதிரி. இவர்கள் இடையே உள்ள கடும் அபிப்பிராய பேதங்கள், வாக்குவாதம், மனஸ்தாபம். அதைப் பார்த்து “ஆதர்ச” தம்பதியருக்கு தியா மரியாதை தர தனக்கு மனம் வரவில்லை என்றாள். ஆலோக் நேஹா தங்களைப் போன்ற “ஆதர்ச” தம்பதிகளாக இருக்க வலியுறுத்த, சிவா அதை ஆமோதிப்பதை வெறுத்தாள். ஏதோவொரு த்ரில் செய்ய மனம் ஏங்கியது. வேறு ஒருவரைத் தன் வலையில் சிக்க வைக்க தியா துடித்தாள்.

அம்மா தூண்டுதல் கூடியதாலும், தனக்குக் கிளுகிளுப்பு செய்ய, இந்த ஆதர்ச தம்பத்தியர் முகத்தில் கரியைப் பூச, தியா ஸாகேத்தை வசப்படுத்தப் பார்த்தாள். சீண்டி விட்டு மற்றவர்கள் அவதிப்படும் நிலையில் சுகம் பெறுவதற்காக. திவா, அவள் அம்மா இருவருக்கும் ஹை ரிஸ்க் பிஹேவியர். ஸாகேத்தை சீண்டிவிடுவதை விட்டு விடச் சிவா சொன்னான். பொறாமையா என்று திவா விவாதித்தாள். ஆலோக் நேஹா திடுக்கிட்டுப் போனார்கள்.

தியா செய்யும் சேட்டையில் அவளுடைய அம்மா இன்பம் அனுபவித்து, தூண்டி விடுவது பழக்கம். சிகிச்சை என்று போனால் என்னாவாகுமோ என நினைத்து, தியாவை அழைத்துக் கொண்டு அவள் வெளிநாட்டுக்குச் சென்று விட்டதாக தியாவின் தந்தை வந்து தகவல் சொல்லி விட்டுப் போனார். தியாவிற்கு ஏதோ புரிதல் இருக்கிறது என்றாலும், இருவருக்கும் என்றைக்காவது தாங்கள் செய்வதின் விளைவைப் புரிந்த பின்னரே உதவி நாடுவார்கள்.
******************************************

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.