பாண்டி பஜாரில் ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு விஜயா தெருவின் இருபுறமும் பார்த்துவிட்டு நேராக ஒரு கடைக்குள் சென்றாள். வங்கியில் மேனேஜராகப் பணி புரியும் விஜயா ஒரு மணி நேரம் பெர்மிஷன் வாங்கியதால், நிதானமாகத் துணிகளை ஆராய்ந்தாள். சுஜாவிற்கு சர்ப்ரைசாக ஒரு சுடிதார் வாங்க வேண்டும் என்று எண்ணியவாறே, கடைக்காரரிடம், “ஏம்பா, அந்த ரோஸ் கலரை கொஞ்சம் காட்டுங்க, மீடியம் சைஸ்தான், செட்டாக காட்டுங்க என்றாள்.” அவரும் அதை எடுத்து விரித்துக் காண்பித்தார். விஜயாவிற்கு அது மிகவும் பிடித்து விடவே அதை பேக் செய்யச் சொல்லிவிட்டு , புடவை செக்ஷனுக்குள் நுழைந்தாள். தோழி மாலாவிற்கு அடுத்த வாரம் பிறந்த நாள் அவளுக்கு ஒரு அழகான பிரிண்டட் சில்க் சாரி வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டும் என்று மனதுற்குள் நினைத்துக் கொண்டு ஒரு ஆரஞ்சு கலர் புடவையை செலக்ட் செய்து பில் போட செக்ஷனுக்குள் நுழைந்தாள்.
அப்போது “ஏய் விஜயா, உன்னைப் பார்த்து வருஷங்கள் ஆச்சு, எப்பிடி இருக்க ? என்ற குரல் வந்த திசையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டாள் விஜயா.
யாரை வாழ்நாள் முழுவதும் மறக்க நினைத்தாளோ, அந்த பெண் மீனா கண்ணெதிரில் நின்றால் எப்பிடி இருக்கும் ?
அவளுக்கு பழைய நினைவுகள் வந்து போயின. பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது விஜயாவிற்கு தமிழ், ஆங்கிலம் நன்றாக வரும். கணக்கு வரவே வராது. இந்த மீனாதான் க்ளாஸ் லீடர். எல்லோரையும் குச்சி வைத்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் சில சமயம் அடிக்கவும் செய்வாள். ஒரு முறை விஜயா கணக்கில் ஃபெயில் மார்க் வாங்கியதைப் பார்த்து. நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர, மாடு மேய்க்கப் போ என்று ஓங்கி குச்சியால் ஒரு அடி போட்டாள். விஜயா தொப்பென்று விழுந்து விட்டாள். வலது கையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
உடனே ஆசிரியரிடம் சென்று மற்ற தோழிகள் முறையிட்டதும், மீனாவை க்ளாஸ் லீடர் பதவியிலிருந்து விடுவித்து இவளை வீடுவரை வந்து ஆசிரியர் விட்டுவிட்டு சென்றார். அந்தக் காலம் அல்லவா, என் அப்பாவும் “ஃபெயிலானா பின்ன அடிக்காம, கொஞ்சுவாங்களா? என்று சொல்லி, சரி சரி, இத பெரிசு பண்ணாம, அடுத்த பரீட்சையில் பாஸ் பண்ற வழியப் பாரு” என்றார். மருத்துவர் ஆதலால் அவரே ஊசியும் போட்டு விட்டு மருந்து தடவினார். ஒரு வாரத்தில் சரியாகி விட்டது. அன்றிலிருந்து மீனாவைப் பார்த்தாலே , அவளுக்கு பயத்தில் கை, கால்கள் உதறும். காலங்கள் உருண்டோடின.
விஜயாவும் நன்கு படித்து, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று இப்போது வங்கியில் அதிகாரியாக இருக்கிறாள்.
சடாரென்று நினைவுலகத்துக்கு வந்தாள் விஜயா. மீனாவை நிமிர்ந்து பார்த்தாள்.அதே முகம். ஆனால் இருவருக்கும் வயது ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டது அல்லவா ? அங்கங்கே நரைத்த முடி முதுமையின் வரவைப் பறை சாற்றியது.
மீனா எப்பிடி இருக்க? உன்னை மறக்க முடியுமா ? இப்ப என்ன பண்ணற ? சென்னையில்தான் இருக்கியா ? நான் முப்பது வருஷமா சென்னையில்தான் இருக்கேன். எனக்கு ஒரே பெண், வேலை பார்க்கிறாள், அவளுக்கு கல்யாணம் பண்ணனும். உன்னைப் பற்றி சொல்லு, என்றாள் விஜயா.
ஓ, விஜயா, நான் எஸ்.எஸ்.எல்.ஸி. க்கு பிறகு படிக்கவே இல்லை. உனக்கே தெரியும், எனக்கு மூணு அண்ணன்கள், ரெண்டு அக்கா, ரெண்டு தங்கை என்று பெரிய குடும்பம். நான் பள்ளிப் படிப்பு முடித்த உடனே என் அப்பா இறந்து விட்டதால், எங்கள் எல்லோர் படிப்பும் நின்று விட்டது. என்ன, வீட்டு வேலை செய்வதும், இப்போது சம்பளம் இல்லா வேலைக்காரியாக அண்ணன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறேன், என்று சொல்லி ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டாள். அவள் தோற்றமும் மிக பரிதாபகரமாகத்தான் இருந்தது. இப்போது கூட அண்ணியின் குழந்தையைப் பார்த்துக் கொள்ளத்தான் இவளை கடைக்குக் கூட்டி வந்திருக்கிறார்கள் என்று சொன்னாள். என் மனது மிகவும் வலித்தது. கொடுமைக்காரி என்ற இத்தனை நாள் பிம்பம் மெல்ல மறைந்து ஒரு அபலைப் பெண் தோற்றம் வர ஆரம்பித்தது.
காலம்தான் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வருகிறது?
திருமணமும் ஆகாமல், அடிமையாக அவள் அண்ணன் வீட்டில் படும் கஷ்டங்களை நினைத்தபோது, விஜயாவிற்கு மனது நொறுங்கிப் போனது. கடவுளே, இந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்து, என்று மனமுருக வேண்டிக் கொண்டாள் விஜயா.
அந்த வெறுப்பு, த்வேஷம் எல்லாம் அடியோடு போய் , அவளை அன்போடுஅணைத்துக் கொண்டே சொன்னாள், “மீனா, பரவாயில்லை இந்தா, என் கார்ட், என் ஃபோன் நம்பர் இதில் இருக்கு , நீ என்னை ஒரு சண்டே வந்து பார். உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன், நீயும் சுதந்திரமாக வாழ முடியும்” என்றாள் விஜயா.
மீனாவின் கண்கள் சற்றே கலங்கின. அன்போடு என் கையைப் பற்றினாள். அவளிடம் அன்று அடி வாங்கிய அந்தக் கை இப்போது அவளை நேசத்துடன் அணைத்துக் கொண்டது. மீனாவின் கண்ணீர் விஜயாவின் தோளை நனைத்தது.
கிரிஜா அவர்கள் கதைகளில் எப்போதும் மின்னும் நல்லெண்ணம், நேயம், பகைமை அற்ற பார்வை இந்தச் சிறுகதையிலும் சுடர் விடுகிறது. அருமை.
வேணு
LikeLike
Shoury & sweet
LikeLike