அன்று ஏன்? இப்படி மழை பெய்தது. பூமியும் சற்றே ஆச்சர்யப்பட்டு இருக்கும். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
அந்த பலமண் குளமும் அப்படித்தான் நீர் நிரம்பி இருந்தது.
பெயருக்கு ஏற்றார் போல் அது; பல மண்ணாலான குளம்தான். மணல், கழிமண், செம்மண் எனக் கோர்த்துக் கிடக்கும் செம்புலப் பெயல் நீர் சூழ்ந்த இடம்.
தேங்கி நிற்கும் நீர்; மஞ்சள் நிறத்தில் குளங்களாகத்தான் இருந்தது.
ஊர்க்காரர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்தக் குளம் நீர் நிரம்பி எத்தைக் காலம் ஆகிவிட்டது. தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.
அந்தக் குளத்தில் கால் வைத்தால் வழுக்கும், அதனால் செருப்பு இல்லாமல்தான் இறங்குவார்கள். உழவு மாடு, எருமை மாடு என அனைத்துக் கால்நடைகளும் அதில்தான் குளிக்க வைத்து சுத்தம் செய்வார்கள்.
அந்தக் குளத்தை நம்பி எத்தனையோ உயிர்கள் வாழ்கிறது. அதில் மனிதர்களும் அடங்குவர். காலைக் கடனைக் கழித்து கால் அலம்புபவர்கள் ஒருபக்கம். நீர் தேங்கியதால் ஆழ்துளை கிணறுகள் அதிக நீர் ஊர ஆம்பிக்கும் என விவசாயிகள் ஒரு புறம் மகிழ்ந்தனர். மண்ணை எடுத்து பாண்டங்கள் செய்வோர் மறுபக்கம். குறும்புத்தனம் மிக்க சுட்டிக் குழந்தைகள் தங்களுடைய திறமைக்கு ஏற்ப பிள்ளையார் சிலைகள் செய்து விளையாடினர்.
இப்படி அந்தக் குளத்தில் கிடக்கும் மண் குதிரையாய், சிலையாய், பானையாய், இன்னும் பல கலைநயமிக்கப் பொருளாய்ப் பரிணமிக்கும்.
நம்மை இப்படி பயன்படுத்துகிறார்களே! என்பதை மண் அறியுமா?
மண்ணியல் வாழ்வு காந்திய வாழ்க்கையாகத்தான் அமைகிறது.
ஆம்! மண்ணுக்குத் தெரியும் எப்படியும் இவர்கள் நம்மை வந்தடைவார்கள் என்று. அதனால்தான் என்னவோ; தன்னை துன்புறுத்துபவர்களை விட்டு வைக்கிறது.
அப்போ; இதைக் காந்திய வழி எனச் சொல்வதில் தவறில்லை.
அந்தக் குளத்தின் கரையில் சிறுகுடிசை. குடிசையின் வாசலின் வயது முதிர்ந்த ஓர் உருவம். சக்கரத்தின் அருகே அமர்ந்திருந்தது. தலையில் வழுக்கை, காதோரம் நரைத்த முடி. குயவனின் வயிறு உடம்போடு ஒட்டிக் கிடந்தது. இன்று ஒரு பானை உற்பத்தி செய்துவிட்ட மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிந்தது. அருகே செம்மண்; மிதிபடுவதற்கு தகுந்தாற்போல் நீர் தெளித்து வைக்கப்பட்டு இருந்தது.
அவ்வழியாக நடைபயணம் வந்த இளைஞன் ஒருவன், குயவனைப் பார்த்ததும் நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்த குயவன்; என்ன தம்பி அப்படிப் பார்க்கிறாய் என்றான்.
ஒன்றும் இல்லை அய்யா; இது என்ன? வெறும் சக்கரத்தில் இப்படி ஒரு உருவம்.
இதைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு காலத்தில் பெருமையாகப் போற்றபட்டு வந்த மக்களின் பயன்பாட்டுப் பொருள். இதன் பெயர் மண் பானை.
அகலம், நீளம், வட்டம் என்று சொன்னாலே மண் பானையின் வடிவம்தான் நினைவுக்கு வரும். அதனுள் நீர் ஊற்றி வைத்தால் குளிர்ச்சியையும் சுவையையும் வெளிக்காட்டும் ஆற்றல் அதற்கு உண்டு. இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவையும் சமைக்கலாம்.
மண்ணோடு வாழ்க்கை நடத்தும் மக்கள். மண்ணை வெறும் பொருளாதாரத் தேவையாக மட்டுமே கருதுகிறார்கள். அதனால்தான் மண்ணாலான பொருட்களை பயன்படுத்தவும் தவறிவிட்டார்களோ?
அவசர கால நவீன வாழ்கையில் மனிதர்களையே மனிதர்கள் தேவைக்காகத்தானே பயன்படுத்துகிறார்கள். மண்பானை இதில் என்ன விதிவிலக்கா?
ரப்பரும் சில்வரும் ஆளுமை கொண்ட மனிதச் சமூகத்தில் மண்பானைகள் அனாதைகளாய்க் கிடக்கிறது. நானும் இன்று; அப்படித்தான் இருக்கிறேன். காலமாற்றம் எவ்வளவோ நிகழ்வுகளை என் கண்ணெதிரே கொண்டுவந்து விட்டிருக்கிறது. அவற்றையும் தாண்டி இந்தத் தொழிலை விடாமல் நான் செய்வதற்கு காரணம் உண்டு. அது! இந்த மண் பானை என்னிடம் பேசிய வார்த்தகள்தான்.
என்ன? மண்பானை பேசுமா?
ஆமாம் தம்பி.
ஒரு நாள் இந்தக் கரையில் அமர்ந்து கொண்டு பானைகளை உற்பத்தி செய்து; அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு பானை என்னை அறியாமல் தவறி விழுந்து உடைந்துவிட்டது. அய்யோ! என்று வருத்தத்தோடு வேலையைத் தொடர்ந்தேன். திடீரென ஒரு பானை என் முகத்தைப் பார்த்தது.
அனுதாபம் தேவையில்லை மானிடனே!
என்னை சற்றேனும் பேச விடு என்று மண் பானை கேட்டது.
மனிதன் பாவம்; பொருளாதாரம் தேடி ஓடும் உலகில் மண் பானை வைத்து அடுப்பு மூட்டி விரகில் சமைக்க நேரம் ஏது. அது அவன் குற்றமில்லை. அவனை வழிநடத்தும் சமூகத்தின் குற்றம். குக்கர் உணவும் சுகர் வாழ்க்கையும் பழகிப்போன மனிதர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.
பாவம்; உனக்கும் ஏக்கம் வரத்தான் செய்கிறது.
குறுக்கிடாதே மானிடனே! என்னைப் பேசவிடு.
மண்ணை வெட்டி எடுத்து மிதித்து, அடித்து, துவைத்துத் தட்டி எடுத்து எனக்கு உருவம் கொடுக்கும் மனிதன் கோவணம்தான் கட்டியிருக்கான். என்னை விற்பனை செய்ய.
அவனே! சில்வர் பாத்திரத்தில்தான் கஞ்சி குடிக்கிறான்.
பொருளாதாரத்தின் தேவையாய் என்னை கருதுகிறான்.
என் உருவம் ஓவிய ஆசிரியரின் பயிற்றுக் கல்வியோடு நின்றுவிடுகிறது.
சாலை ஓரங்களில் என்னைப் பார்ப்போர் வேடிக்கையாய்ப் பார்க்கிறார்கள்.
நான்; மண் பானை என்பதால்.
என்னை விற்பவனோ தலைவலி என்று மாத்திரை போடுகிறான். வாங்க வந்தவனோ வெகு நேரம் பேரம் பேசிவிட்டு மருந்துக் கடையில் வாய்மூடி பணம் கொடுத்துவிட்டு மருந்தை வாங்கிச் செல்கிறான்.
நானோ! புறம் தள்ளும் பொருளாய்க் காத்துக் கிடக்கிறேன்.
நான் தழியாய் இருந்தபோது, என்னுள் எத்தனையோ மனிதர்கள் புறம் தள்ளப்பட்டனர்.
வீதியில் உருவம் கெட்டு மண்ணாய்க் கரைந்தாலும் என்னுள் எத்தனை வேடிக்கை மனிதர்கள்.
உணர்வே இல்லாத உருவில் இருக்கும் எங்களை கல்லறையில் வைக்கிறார்கள். தோளில் சுமந்து முச்சந்தியில் உடைக்கிறார்கள். சமையலறையை அலங்கரிக்க வேண்டிய எங்களை இறப்புச் சடங்குகளில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ரப்பர், சில்வர் பொருட்களை மதிப்புடையது என நினைத்து மங்கள நிகழ்வுகளில் பரிசுப் பொருளாய்க் கொடுக்கிறார்கள். அவையெல்லாம் காலம் கடந்த உழைப்பைத் தருகிறதாம்.
நான் ஏன்? இங்கு இழிவுப் பொருளானேன்.
இந்த மனிதர்கள் காலம் கடந்து வாழ்வதை ஏன்? மறந்து விடுகிறார்கள்.
சமைப்பது, உண்பது, குடிப்பது அனைத்தும் மண் பாண்டங்களுக்கு மாற்றாய் அமையும் போது, மானுடம் எப்படி நலம் பெறும்.
மண்ணை எடுத்து உருவம் கொடுத்ததால் பானையானேன். வெறும் மண்ணாய்க் கிடந்திருந்தால் என்னை கூறுபோட்டு விற்றுவிடுவார்கள் இந்த; ரியல் எஸ்டேட்காரர்கள்.
குடிக்காரனுக்குப் போதைவரவில்லை என்றால்; நான் என்ன செய்வேன். அவன் மனைவி எனக்குள் சேர்த்து வைத்த பணத்திற்காக தூக்கிப்போட்டு உடைத்து விடுகிறான். சிலர் பக்கத்துவீட்டு சண்டைகளில்கூட எங்களைத்தான் போட்டு உடைக்கிறார்கள்.
நாங்களா? உழப்பைத் தரவில்லை. நீங்கள்தான் எங்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டீர்கள்.
காலில் முள்ளைக் குத்திக்கொண்டு; முள் காலில் வந்து குத்திவிட்டது என்று சொல்பவர்களாச்சே நீங்கள். எப்படி தங்கள் மீது குற்றம் என்று ஒத்துக்கொள்வீர்கள்.
முற்காலத்தில் உடைந்த ஓடாய் நான் கிடந்த போது எழுதிப் பழகினர்.
இன்று! அதை அகழாய்வு செய்து போற்றுகின்றனர்.
எனது பெருமை இப்படியல்லவா! தொடங்குகிறது. இது எத்தனை பேருக்குத் தெரியும். முதுமக்கள் தழியாய் நான் பெற்ற பேரு; இவ்வுலகம் அறியும்.
இது என்னுடைய பெருமைக்காக அல்ல மானிடனே! உனது சிறுமை குணத்திற்கு ஒளியாய்.
இன்றைய அறிவியல் உலகில் எதையெல்லாம் நீ உயர்வாகக் கருதுகிறாயோ; அதை உற்பத்தி செய்ய உன்னுடைய நீர், நிலம், காற்று அனைத்தும் மாசடைவதை உணரவில்லையா?
என்னைத் தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் நீங்கள் உயர் மானிடப் பிறப்பு; உங்கள் வாழ்வோடு கலந்த நான் சாதாரண மண் குடம் (பானை).
உடல் முழுதும் காற்றை அடைத்துக் கொண்டு வாழும் மானிடனே! உன் பொருள் தேடும் ஓட்டத்தை நிறுத்து.
எத்தனை முறை உனக்கு நன்மைகள் செய்தாலும் என்னை சாதாரணப் பொருளாய்ப் பார்க்கிறாய். அதை இன்றோடு விட்டுவிடு.
உன்னை உன் மனதை என்னுள் புகுத்து. என்னுள் இருக்கும் சக்தியை உனக்குத் தருகிறேன். போலிச் சாமியார்கள் தேடி அலைய வேண்டாம். பணம் பிடுங்கும் மருத்துவம் தேவையில்லை. நல வாழ்வை நான் தருவேன்.
சுவையாய் நான் தரும் ஆகாரம். என்றும் நீ வாழலாம் நெடுந்தூரம்.
நான் பேச வேண்டிய கட்டாய காலத்தில் இருந்தேன்.
பேசிவிட்டேன். மானிடா நீ பேசலாமே! என்று சொல்லி முடித்தது.
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் பானையைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். எதை நான் பேசுவேன். உயர்வாய்ப் பேன வேண்டிய உன்னை உதாசீனப்படுத்திய நாங்கள் கண்ணிருந்தும் குருடர்களானோம். ‘உணர்வுள்ளவற்றை உணராத மனிதர்கள் உன்னை எப்படி போற்றுவார்கள்’.
தவறாக எண்ணிவிடாதே; தெய்வ வாழ்வே! என்னை மன்னித்து விடு. உனக்குள் நான்; எனக்குள் நீ; ஒன்றாய் வாழ்வோம். நீ மண் பானை அல்ல; மான்பான வாழ்வைத் தரும் உயிரில்லா உருவம். மண் பானை வாழ்வைத் தேடி மானுடம் அலையும் காலம் எதுவோ! அதுவே பொற்காலம்.
குயவனின் வார்த்தைகளை செவிமடுத்த அந்த இளைஞன் வாயடைத்து நின்றான். அவனுக்குள் ஏதோ! ஒரு மாற்றம் வரத்தான் செய்தது.
அய்யா! உண்மையில் மண்பானையின் தேவையும் உங்களுடைய உழைப்பும் உலகோர் அறிவார் அய்யா; என்று கூறிவிட்டு, கையில் இருந்த செல்போனில் சக்கரம், பானையுடன் குயவனையும் சேர்த்து செல்பி எடுத்து முகநூலில் பதிவேற்றினான். ஆயிரத்திற்கு மேல் லைக்குகள் கிடைத்தது.
குயவனும் மண்பானையும் சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக உலா வருகின்றனர்.
இளைஞனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.