மூலம் : சந்திரிகா பாலன்
தமிழில் :தி.இரா.மீனா
ரத்னாகரனின் மனைவி
ஒரே கதையில் இரண்டு பாத்திரங்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தால், கதாசிரியருக்கு அது ஒரு பிரச்னையாக இருக்கும். வாழ்க்கையிலும் கூட
உறவில் நெருக்கமான இருவர் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் அதுவும் பிரச்னைதான்.ஒரு பாத்திரத்தின் பெயரைக் கதாசிரியர் ஏன் மாற்றி
வைக்கக் கூடாதென்று நீங்கள் கேட்கலாம். கதையைப் படித்துக் கொண்டு போகும் போது அதன் காரணம் உங்களுக்குப் புரியும்.
இந்தக் கதையில் இடம் பெறும் இரண்டு ரத்னாகரன்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
ஒரு ரத்னாகரனின் டிரைவர் இன்னொரு ரத்னாகரன்.
ரத்னாகரன்களின் மனைவியருக்கு வெவ்வேறு பெயர்கள்.டிரைவர் ரத்னாகரனின் மனைவி இந்து லேகா, அவள் அரசு நடத்தும் அங்கன்வாடியில் துப்புரவுத் தொழிலாளியாகவும், ஆயாவாகவும் இருப்பவள்.
இப்போது இந்துலேகா சாதப் பானையை அடுப்பிலிருந்து கீழே இறக்கிவைத்து விட்டு,சுத்தம் செய்து ,மிளகாய்ப் பொடி மற்றும் உப்பால் மேல்பூச்சு செய்யப்பட்டிருந்த மீன்களை வாழை இலையில் சுற்றி நெருப்பில் வைத்து சுடுகிறாள். வாழை இலையில் சூடு சரியாகப் படும்படி அதைப் போட்டு திருப்புகிற போது அவள் மகள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறாள்.
“அம்மா, அந்தக் கொள்ளைக்காரன் எப்படி புலவன் ஆனாரென்று சொல்லேன்.”
“எனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டேனே” இந்துலேகா மகளைக் கோபமாகப் பார்க்கிறாள்.
“அப்படியானால் நான் என்ன செய்யட்டும் அம்மா?இது எனக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட ப்ராஜக்ட்.நான் இதை வகுப்பில் நாளை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டும்.”
“அப்பா வந்த பிறகு அவரிடம் கேள்.” சொல்லிக் கொண்டே இந்துலேகா தன் பழைய கவுனையும், துண்டையும் எடுத்தாள்.வாழை இலையைத் திருப்பி வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே இருக்கிற தனித்த பகுதிக்குப் போனாள்.
மகளுக்கு எரிச்சலும், கோபமும் உண்டாயின.
தனித்த பகுதி என்பது கழிவறையும்,குளியலறையும் சேர்ந்தது.எல்லாக் கழிவறைகளையும் போல இதுவும் நான்கு சுவர்கள்,மேற்கூரை உடையதுதான்,ஆனால் ஒரு குறிப்பிட்ட வித்தியாசம், சிமெண்ட் தரை பிளந்து அதிலிருந்து புல் வளர்ந்து அது புல்வெளி போலிருப்பது தான். ஒரு தடவை, ஒரு மஞ்சள் பாம்பு புல் பகுதியிலிருந்து வந்து விட்டது.அது சாதாரணப் பாம்பில்லை, விஷப்பாம்பு. அதைப் பார்த்ததும்
இந்துலேகா அலறிக் கொண்டே வெளியே ஒடி வந்து விட்டாள்.
வராந்தாவில் உட்கார்ந்திருந்த ரத்னாகரன் ஓடி வந்து அதை அடித்துக் கொன்றான். இந்துலேகா பாம்பு ஒளிந்து கொண்டிருக்கிறதா என்று கவனமாகப் பார்த்து விட்டு, இல்லையென்று உறுதி செய்து கொண்டு நிம்மதியாக குளிக்க ஆரம்பித்தாள். ஆட்டம் காணும் படிகளில் ரத்னாகரன் ஏறி வருவதற்கு முன்னாலே அவள் குளித்தாக வேண்டும்.கழிவறையின் மட்டமான தரை பற்றி அவள் எப்போதெல்லாம் பேசுகிறாளா ,அப்போது இந்த மாதிரியான ஒரு வீட்டைக் கட்ட அவன் எத்தனை பாடுபட்டு
இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது என விளக்கம் தருவான்.
தாய் வெளியே வருவதற்காக மகள் கழிவறையின் வெளியிலேயே காத்திருந்தாள். இந்துலேகா வெளியில் வந்தவுடன் “அம்மா, இப்போது நான் லிஜியின் வீட்டிற்குப் போய் வரட்டுமா? சீக்கிரம் திரும்பி வந்து
விடுகிறேன். லிஜியின் அப்பா கல்லூரியில் வேலை பார்ப்பதால் கொள்ளைக்காரன் எப்படி புலவர் ஆனார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.”
ஆனால் தான் வாழ்கிற சமுதாயத்தில், திருடர்களின் உலகம் எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கும் அம்மா, சிறிய பெண்ணாக இருந்தாலும் கூட இருட்டு நேரத்தில் எப்படித் தன் மகளை இன்னொருவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பாள்? மகள் திரும்பி வரும்வரை அம்மாவால் நிம்மதியாகக் காத்திருக்க முடியுமா ?
”வேண்டாம், அப்பா வரும் வரை பொறு” என்று கடுமையாகச் சொல்லி விட்டு வீட்டிற்குள் போனாள்.
இரண்டாவது ரத்னாகரனின் மனைவி பிரவீணா இப்போது கழிவறையில் இருந்து வெளியே வந்தாள்.அவளுடைய கழிவறைத் தரையிலும் புல் வளர்ந்திருந்தது என்று கதையாசிரியர் சொன்னால் ,அது ஆச்சர்யகரமான ஒன்றாக இருக்கலாம்,ஏனெனில் ரத்னாகரனின் வீடு பெரிய முற்றத்துடன் கூடிய ஆடம்பரமான, அதிநவீனமான மூன்று மாடிக் கட்டிடம்.அதனால் அவர்கள் வீட்டுக் கழிவறையிலுள்ள புல், பிளந்த தரையில் வளர்ந்தில்லை;
அது ஐந்து நட்சத்திர ஓட்டலில் கவனத்துடன் போஷாக்காக வளர்க்கப்பட்ட ஒன்று.எந்தப் பாம்பும் அங்கு வந்து எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி விளையாட முடியாது. அவள் கழிவறையிலிருந்து சமையலறைக்குள் போன போது, எந்தக் குழந்தையும் அவளைப் பின் தொடர்ந்து கொள்ளைக்
காரன் எப்படி புலவர் ஆனார் என்று கேட்கவில்லை. அவளுடைய இரண்டு குழந்தைகளும் ஊட்டியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர்.
எவ்வளவு பெரிய புலவராக இருந்தாலும், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்குக் கூட அனுமதிக்கப்பட மாட்டார். சமையலறையில் , இரவில் அங்கே நடக்கப் போகும் விருந்துக்காக, பரபரப்பாக சமையல்காரி ரோஷன் நெய் சாதம்,வாத்து வறுவல், மீன் கறி என்று பல வகையான பதார்த்தங்களை செய்து முடித்திருந்தாள். இப்போது பிரவீணா பாலப்பம் செய்கிறாள் . ரோஷன் முகக்கவசமும் ,கையில் வெள்ளை உறைகளும் அணிந்திருந்தாள். அப்ரானும்,தலையில் தொப்பியும் அணிந்திருந்தால் ,அவள் தொழிலில் தேர்ந்த சமையல் நிர்வாகியாக இருந்திருப்பாள்.
“உன் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு போ,” பிரவீணா அவளிடம் சொன்னாள். ரத்னாகரனும், அவன் நண்பர்களும் வருவதற்கு முன்னால் ரோஷனை அனுப்பி விட விரும்பினாள். அவள் அப்படிச் செய்வதற்கு அவளவில் காரணங்களிருக்கலாம்.நவீன சமையலறையின் அமைப்பு வரவேற்பறையில் உள்ளவர்களும் கூட சமைப்பவரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்ததுதான் என்பது கதாசிரியரின் யூகம். ஆனால் மனைவியரின் மனதில் பல விதமான எண்ணங்களிருக்குமே.
வீட்டின் ஒரே அறை இரண்டாகப் பிரிந்து ஹாலாகவும் ,சமையலறை ஆகவும் என்று, இன்னொரு ரத்னாகரனின் சமையலறையும் நவீன அமைப்புத்தான். தன் பொருளாதாரப் பற்றாக் குறையில் ஹாலின் குறுக்கே சிறிய சுவரெழுப்பி சமையலறையாக்கியது சமகால பாஷனை ஒட்டியது. சில விஷயங்கள் எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்டவை. மனிதனோ அல்லது அவனுடைய பொருளாதார ஏற்றத்தாழ்வோ எதையும் மாற்றி விடமுடியாது.
டிரைவர் ரத்னாகரன் பென்ஸ் காரை ஓட்ட பிரவீணாவின் கணவன் ரத்னாகரன் தனது கை கால்களைப் பரப்பிக் கொண்டு பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தான். பிரவீணா முகத்தில் சிரிப்பேயில்லாமல் கதவைத் திறந்து விட்டாள். அவன் அவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு
கோபமாகக் கத்தினான்,“கட்டிக் கொள்ள உனக்கு வேறு புடவையே இல்லையா? இன்று வரப் போகிறவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று உனக்குத் தெரியுதா? அல்லது ,என்னை அவமானப் படுத்த நினைத்திருக்கிறாயா?” கடந்த முறை மும்பைக்குப் போன போது வாங்கி வந்த டிசைனர் புடவையை அணிந்து கொள்ளச் சொன்னான்.பேசும் போது அவன் ரோஷனை கடைக்கண்ணால் பார்ப்பதை பிரவீணா விரும்பவில்லை. அதனால் எல்லா பாத்திரங்களையும் மேசையில் வைத்து விட்டு உடனடியாகப் போகும்படி கோபமாகச் சொன்னாள்.
டிரைவர் ரத்னாகரன் தன் பேச்சைக் கேட்டு விடக் கூடாதென்பதற்காக கதவைச் சாத்தினாள்.
ஆனால் டிரைவர் ரத்னாகரனுக்கு, பிரவீணாவின் குடும்ப வாழ்க்கை ரகசியங்ககளுக்குள் நுழைய எந்த விருப்பமுமில்லை; அதற்கு பதிலாக அவன் அவளுடைய சமையலறைக்குள் நுழைய விரும்பினான். அதனால் அவன் வீட்டின் பின்பகுதியை நோக்கி நடந்தான். கணவனும், மனைவியும் மாடிக்குப் போய் விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு ரோஷன் தன் முகக் கவசத்தை நீக்கினாள். அவள் அழகாக இருந்தாள். தன் அழகான முகத்தில் மயக்கும் புன்னகையை வரவழைத்துக் கொண்டு பின்பக்க வழியில் போய் ,அங்கிருந்த ரத்னாகரனிடம் ஒரு பெரிய துண்டு வாத்து வறுவலைக் கொடுத்தாள் அவன் அதை வேகமாகத் டிரவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு,அவள் மூக்கை விளையாட்டாகத்
திருக முயற்சித்தான்.அவள் விலகிக் கொண்டு ஒரு சிரிப்போடு“இன்றைக்கு இரவு சந்திக்கலாமா?”என்று கேட்டாள். “இல்லை, முடியாது“ என்று
வெளிப்படையான ஏமாற்றத்தோடு சொன்னான்.
“மணலை ஏற்றிக் கொண்டு நான் லாரியில் போக வேண்டும்.”என்றான்.ரோஷனுக்குத் தெரியும் அது
நியாயமற்றது என்று தெரிந்தாலும் ,தனது அந்தரங்க லாபத்திற்காக தனது போலியான வருத்தத்தை வெளிப்படுத்தினாள். திடீரென அருகே காலடிச்
சத்தம் கேட்க, சமையலறைக்கு விரைந்தாள். ரத்னாகரன் கார் ஷெட்டிற்குள் ஓடி, காரின் பின்னால் ஒளிந்து நின்று, வாத்து வறுவலை அனுபவித்துச் சாப்பிட்டான். சமையல்காரப் பெண்ணை காதலிப்பதிலுள்ள இன்பம் அலாதியானதுதான் என்று அவனுக்குத் தெரியும்.பிறகு கார் சாவியை ஒப்படைத்து விட்டு வேகமாக நடந்து சாராயக் கடையின் நீண்ட வரிசையில் சேர்ந்து கொண்டான்.
அவன் வரிசையில் சேர்ந்து கொண்ட நேரத்தில்,ஒரு மோட்டார் பைக் வேகமாக வந்து கடையின் எதிரில் நின்றது. ஜீன்ஸ் அணிந்திருந்த இரண்டு பெண்கள் வண்டியிலிருந்து இறங்கி, வரிசையை சட்டை செய்யாமல் கவுண்ட்டர் அருகே சென்றனர்.வரிசையில் நின்றவர்கள் அவர்களை ஆர்வத்தோடு பார்க்க, அவர்களில் ஒருவன் மட்டும் கத்தினான்:
“நீங்கள் பெண்களாக இருப்பதாலேயே வரிசையைப் புறக்கணிக்க முடியாது. காத்திருக்கும் நாங்கள் எல்லோரும் முட்டாள்களா?” என்று கேட்டான்.
கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த பெண்“ சகோதரரே, பெண்களுக்கு என்று ஒதுக்கீடு இருக்கிறது. வரிசையில் உங்களுக்குப் பின்னால் நாங்கள் நின்றால், பத்திரிக்கைகாரர்கள் எங்களைச் சூழ்ந்து கொள்வார்கள். பிறகு கடையை மூட வேண்டியதுதான். நாம் எல்லோரும் நஷ்டப் படுவோம் அல்லவா?” என்றாள்.
அதற்குள் பாட்டிலை வாங்கிக் கொண்டு விட்ட இன்னொரு பெண், வேகமாக ஓடி வந்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு “எங்கள் பாட்டிக்கு மிக மோசமான வயிற்றுக் கோளாறு,அதனால் அவசரமாக வாங்கிக் கொண்டு போகிறோம். நாங்கள் வேகமாகப் போக வேண்டும்” என்றாள்.
“ஆமாம், வேகமாகப் போகவேண்டும். பாட்டி, பேத்தியின் வயிற்றுக் கோளாறு குணமாகட்டும்“ என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.
பைக் போய் விட்டது.தனக்குள் ஒரு புதிய சக்தி வருவது போல ரத்னாகரன் உணர்ந்தான். பெண்கள் இப்படித்தானிருக்க வேண்டும்.
சமையலறையின் அழுக்கு முழுவதும் முகத்தில் படர்ந்திருக்கும் பெண் யாருக்கு வேண்டும்?” என்று நினைத்தான்.
“அம்மா, உன் முகம் முழுவதும் கருப்பு புள்ளி களிருக்கின்றன” மகள் அம்மாவிடம் சொன்னாள்.கவுனால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட அம்மா “இப்போது போய்விட்டதா?”என்றாள்.இயந்திரத்தனமாக தலையை
ஆட்டிய மகளின் மனதில்,ஆஜானுபாகுவான ,கருப்பான கொள்ளைக்காரன் தரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான்.
ஒரு ரத்னாகரன் தன் விருந்தினர்களுக்கு பாட்டில்களை உடைத்து கொடுத்துக் கொண்டிருக்க,மற்றொரு ரத்னாகரன் கைகளைச் சுழற்றியவாறு பாடியபடி வீட்டிற்குள் நுழைந்தான்.அவன் வருவதைப் பார்த்ததும் மகள் தன் கேள்வியோடு அவனைப் பார்த்து ஒடி வந்தாள்.
“எந்தத் திருடன்? வால்மீகியா?” மகளை அணைத்தபடி கேட்டான்.
“ஆமாம்,அப்பா,வால்மீகிதான் அவரது பெயர்” மகள் மகிழ்ச்சியில் குதித்தாள்.ஆசிரியர் அந்தப் பெயரைத்தான் சொன்னார். நாம் மறந்து விட்டேன்.அப்பா ,ஒரு பத்தி எழுதினால் போதும்.நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா?”
ஆனால் தினமும் விளக்கேற்றி வைத்து பாட்டி ராமாயணம் படித்ததைப் பார்த்திருப்பதால் ரத்னாகரனுக்கு ராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி என்பது மட்டும் தெரியும்.பல இடங்களில்,பக்கங்கள் கிழிந்து போயிருந்த புத்தகம் அது. பாட்டியைத் தவிர யாரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க மாட்டார்கள்.பாட்டி படித்ததால் அவனுக்கு ராமன்,சீதை ஏன் ராவணன் பற்றியும் அதிகம் தெரியும், ஆனால் வால்மீகி… ஆனால் ஏன் வாசகர்களுக்கு ஆசிரியர் பற்றித் தெரிய வேண்டும்? ஏன் ஒரு குறிப்பிட்ட
மனிதர் ஆசிரியராக ஆனார் என்பதை நாம் ஏன் அறியவேண்டும்? இன்னும் சொல்லப் போனால், வாசகர்களுக்கு அந்தப் புத்தகம் பற்றிக் கூட முழுதாகத்
தெரியாது.
“ வால்மீகி. .ராமாயணத்தை வால்மீகி தான் எழுதினார் .”ரத்னாகரன் மகளிடம் சொன்னான்.
“ஆசிரியர் அதையெல்லாம் சொல்லி விட்டார்.வால்மீகி ஒரு திருடன், எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் அவர் பெரிய புலவர் ஆனார். எப்படி? அதுதான் கேள்வி.
”புலவராவதற்கு ஒருவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியமா என ரத்னாகரன் நினைத்தான்.அவனுடைய நண்பர்களில் சிலர் படிக்காதவர்களாக இருந்தாலும்,அவர்கள் மிகுந்த குடி போதையில் இருக்கும் போது, பிரயத்தனமில்லாமலேயே கவிதை சொல்வார்கள். திரைப்படப் பாடல்களைப் போல அழகான கவிதைகள்.
“சாப்பாடு எடுத்து வைக்கவா?” இந்துலேகா கேட்டாள்.கைப் பகுதியில் அவள் உடை கிழிந்திருப்பது கண்ணில் பட அவனுக்குக் கோபம் வந்தது. எடுத்து வைக்கச் சொன்னான். கழிவறை அருகே போன அவன் மண்டிக் கிடந்த புல்லின் அருகே தான் கொன்ற பாம்பின் உறவினர்கள் யாராவது
இருக்கிறார்களா என்று பார்த்தான்.
“ஒரு சிறிய புல்வெளிப் பரப்பு போல உங்கள் கழிவறை மிக அழகாக இருக்கிறது. ரத்னா.இது உன் மனைவியின் எண்ணமா?”என்று ரத்னாகரிடம் நண்பர் கேட்டார். “ஹா.ஹா..என் மனைவிக்கு அழகு,கருத்து எதுவும் கிடையாது.” சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தான். நண்பன் ரத்னாகரனின் மனைவியை இரக்கத்தோடு பார்க்க, அவள் சமையலறையில் வேலையாயிருப்பது போல பாவனை காட்டினாள்.அவள் முகம் தெரியவில்லை.அழகான புடவையில் வந்த போது அவள் அழகு மிக வெளிப்படையாகத் தெரிந்து.ரத்னாகரனுக்கு அவள் ஏற்றவளில்லை என்பதை நண்பன் புரிந்து கொண்டான். நண்பனின் பார்வையைப் புறக்கணித்து விட்டு அவள் டேபிளை அலங்காரம் செய்த போது ஒரு சிநேகிதி அவளையழைத்து “ என்ன செய்கிறீர்கள் சமையலறையில்? வாருங்கள் “ என்று தங்களோடு வந்து உட்கார வேண்டினாள்.
ஒரு பெரிய பெட்டியை அறைக்குள் தூக்கிக் கொண்டு போன ரத்னாகரனுக்கு இது எதுவும் காதில் விழவில்லை.
இன்னொரு ரத்னாகரன் மணலைத் திருட்டுத்தனமாக கடத்து ம் லாரியின் டிரைவராக உட்கார்ந்திருந்தான். இன்று பணம் கிடைத்தவுடன் இந்துவிற்கு இரண்டு கவுன்களும், ரோஷனுக்கு ஒரு சேலையும், மகளுக்கு ஒரு டிரஸ்ஸும் வாங்க வேண்டுமென்று நினைத்தான்.பிறகு மளிகைக் கடைக்கும், காய்கறிக் கடைக்கும் கொடுக்க வேண்டிய கடனில் கொஞ்சம் கொடுத்து விட வேண்டும். லாரியை வேகமாக ஓட்டினான், அவன் கைது செய்யப்படப் போகிறான்.
ரத்னாகரன் நன்றாகக் குடித்து விட்டு போதையிலிருந்தான். வீட்டில் இனிமேல் பார்ட்டிகள் எதுவும் நடக்கக் கூடாதென்றும், ஹாஸ்டலிலுள்ள குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரப் போவதாகவும்,அம்மாவின் மானத்தை அவர்களாவது காப்பாற்றுவார்கள் என்று இப்போது பிரவீணா ரத்னாகரனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் விரும்பிய போல நடந்து கொள்ள இது அவள் அப்பாவின் வீடு இல்லை என்று பதில் சொன்னான் .தன் அப்பா கறை படிந்தவரில்லை என்று அவள் சொல்ல,குடும்பத்திற்காக தான் பாடுபடுவதாகச் சொன்னான். கறை படிந்த எதுவும் தமக்கு வேண்டாமென்று கத்தினாள். போதையின் உச்சத்திலிருந்த அவன் தனிமையாக உணர்ந்து பிதற்றியபடி சோபாவில் விழுந்து உறங்கிப் போனான்.போர்க்களம் போலக் கிடந்த சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்யாமலே அவளும் அறைக்குள் போய்ப் படுத்தாள்.தூக்கம் வரவில்லை.
ரத்னாகரனின் நண்பன் சில்லுவண்டித்தனமாக நடந்து கொண்டது அவளுக்கு வலித்தது. கையில் விலங்கோடு ரத்னாகரனை அவன் வீட்டிற்கு இரண்டு போலீஸ்கார்கள் அழைத்து வந்தனர்.மேஜையில் அவன் உதவியோடு
எதையோ தேடினர். கிடைத்தும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
“சார்,என்ன இதெல்லாம் ? அவர் என்ன தவறு செய்தார்?”என்று இந்துலேகா கேட்டாள்.
“இனிமேல் உங்கள் கணவர் சிறைக்குள்ளே மணல் திருடலாம் .”என்றனர். ஜாமீனுக்காக வக்கீலைப் போய் பார்த்து வரும்படியும், குடும்பத்திற்காகத் தான் இந்த செயல்களைச் செய்ததாகவும் சொல்லி அவன் கெஞ்சினான்.
“நான் எதுவும் செய்ய மாட்டேன்.செய்த தவறுக்கு தண்டனைஅனுபவிக்க வேண்டும்” என்று ஆத்திரமாகச் சொன்னாள்.அழும் மகளிடம்,“ நாளை பள்ளிக்குப் போக வேண்டும். படுத்துக் கொள்.” என்றாள்.
“அப்பா வரும் வரை பள்ளிக்குப் போக மாட்டேன்”மகளை அணைத்துத் தூங்க வைத்தாள்.
தாறுமாறாகப் படுத்திருக்கும் கணவனை சட்டை செய்யாமல் பிரவீணா வராந்தாவிற்கு வந்தாள். வேலைக்கு வந்த இந்து லேகா அவளுக்கு உப்புமாவும், தன் மகளுக்கு தேநீரும் தந்தாள். சோர்ந்திருக்கும் மகளிடம் சிறிது சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்பினால் லிஜியின் அப்பாவிடம் பேசி
சந்தேகத்தை சரி செய்து கொள்ளலாமென்கிறாள்.மகள் உற்சாகமாகக் கிளம்புகிறாள்.
கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் லிஜியின் அப்பா ஆர்வத்தோடு தன்னிடம் விளக்கம் கேட்க வந்திருக்கும் சிறுமியிடம் “அந்தத் கொள்ளைக்காரன் புலவரானதற்குக் காரணம் ஒரு பெண்தான்—- அவன் மனைவிதான்.ஒரு பெண் வேண்டுமென்றே வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டாள் ! ஒரு சக்தி வாய்ந்த உருவகம்.! ”இப்படித்தான் அவர் பதில் சொல்வார். அவர் சொல்வது ஒன்றும் அந்தச் சிறுமிக்குப் புரியாது.ஆனால் என்ன செய்ய முடியும்? கல்விசார் அறிஞர்கள் சிறு குழந்தைகளிடம் கூட இப்படித்தான் பேசுகிறார்கள்.
——————————————–
சந்திரிகா பாலன்,ஆங்கிலப் பேராசிரியை. பதினைந்து சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஆறு பொது நூல்களும் எழுதியவர். கேரள சாகித்ய அகாதெமி விருது,பத்மராஜன் விருது பெற்றவர்.