‘சாவை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும். தன் நண்பன் எங்கிடு அக்கால மரணம் அடைந்ததைப் போலத் தானும் மடியக்கூடாது. ‘ என்ற ஒரே ஆசையால் உந்தப்பட்டு வீட்டைவிட்டு நாட்டை விட்டு காடு மேடு மலை பள்ளம் வெப்பம் பனி குளிர் மழை எதையும் பொருட்படுத்தாமல் உலகத்தின் கோடிக்கே வந்தான் கில்காமேஷ். இடையில்தான் எத்தனை தடைகள். கடவுள்களும் அவன் முயற்சி வெற்றி பெறாது என்று வலியுறுத்திக் கூறினாலும் சாவை வென்ற உத்னபிஷ்டிமைக் காண ஓடோடிவந்தான். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றான்.
ஆனால் சாவை வெல்வதற்கு ஏழு நாட்கள் கண் மூடாமல் தூங்காமல் இருக்க வேண்டும் என்று உத்ன பிஷ்டிம் விதித்த கட்டளையை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. இரவுத்திருடன் அவனை மயக்கி செத்தவன் போல உறங்க வைத்துவிட்டான். இனி தானும் சாவின் கோரப்பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணரும் போது அவன் மனம் துடியாய்த் துடித்தது.
கில்காமேஷின் சோகத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத உத்ன பிஷ்டிம் அவனைத் திரும்ப அனுப்புவதிலேயே குறியாய் இருந்தான். அவனுடைய படகுக்காரனை அழைத்தான்.
“நீ கில்காமேஷை இங்கு அழைத்து வந்தது மாபெரும் தவறு. இனி இந்த சாவுக் கடலையும் சாவு நதியையும் கடக்கும் ஆற்றல் உனக்கு இருக்காது. அழைத்து வந்த நீயே அவனைத் திரும்ப அழைத்துக்கொண்டுபோய் அவன் படகில் ஏறிய காட்டுப்பகுதியில் விட்டுவிடு. உங்கள் இருவராலும் இனி இங்கு வர இயலாது. ஆனால் போகுமுன் அவனை நல்ல நீரில் குளிக்கச்செய்து அவனது மிருக ஆடைகளுக்குப் பதிலாக என்னுடைய நல்ல ஆடைகளையும் பூமாலையும் கொடுத்து அனுப்பு ‘ என்று உத்தரவிட்டான்.
தன் கணவனுக்கு கில் காமேஷிடம் இந்த அளவிற்காவது இறக்கம் இருக்கிறதே என்பதைப் புரிந்து கொண்ட அவன் மனைவி கில் காமேஷிற்கு ஏதாவது கொடுத்து அனுப்பவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
வெகுநேரம் யோசித்த உத்னபிஷ்டிம் முடிவில் அவன் படகில் கிளம்பும் போது .” ஓ கில்காமேஷ்! நீ பெரும் பயணம் மேற்கொண்டு பல கஷ்டங்களை அனுபவித்து இங்கு வந்திருக்கிறாய். உனக்குச் சாவை வெற்றிகொள்ளும் வழியைச் சொல்லும் அதிகாரம் எனக்கில்லை. என்னால் அதைத் தரவும் முடியாது. உனக்கு ஒரு சிறப்பான பரிசு கொடுக்கவேண்டும் என்று என் மனைவியும் சொல்கிறாள். உனக்காக ஒரு இரகசியமான விஷயம் சொல்கிறேன். கேட்டுக்கொள்! சாவுக்கடலுக்கடியில் இங்கே ஒரு செடி வளருகிறது. அதில் முட்கள் நிறைய உண்டு . உன் கைகளை அவை காயப்படுத்தும். ஆனால் அந்தச் செடியின் பூ மிகவும் சக்திவாய்ந்தது. இழந்துவிட்ட வாலிபத்தைக் கிழவர்களுக்குத் தரக்கூடிய வலிமை இருக்கிறது அந்தப் பூவிற்கு. இதுதான் நான் உனக்குத் தரக்கூடியது. அதையும் உன் முயற்சியால்தான் நீ எடுத்துக்கொள்ளவேண்டும்.” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தான். கில்காஷைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் இல்லம் சென்றான்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் கில்காமேஷின் உடம்பில் அதுவரையில் இருந்த தயக்கம் மறைந்தது. அவன் மனதை வாட்டிக்கொண்டிருந்த சோகத்தை விட்டு ஒழித்தான். அவனுடைய வீரக் களை மீண்டும் அவன் உடலில் புகுந்தது. கால்வாய்க் கதவுகளைத் திறந்துவிட்டு படகை அதன் மூலம் வந்த நீரின் வேகத்தில் மிதக்கவிட்டு வாய்க்காலில் போனான். கால்கள் இரண்டிலும் கனமான கற்களைக் கட்டிக்கொண்டு ஓடும் நீரில் குதித்தான். காலில் கட்டப்பட்ட கால்களில் எடை அவனை இழுக்கக் கடலின் அடிக்குச் சென்றான். அங்கே உத்ன பிஷ்டிம் சொன்ன செடி ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டான். பயங்கரமான முட்களுக்கு இடையே பூத்திருந்த அந்தப் பெரிய பூவைக் கண்டான். முள் குத்திற்று. ரத்தம் பீரிட்டது. சுத்த வீரனான அவன் அதைப் பற்றிய லட்சியம் செய்யாமல் அந்தச் செடியில் பூத்திருந்த பூவை நோக்கிச் சென்றான். பல சிரமங்களுக்கிடையே அந்தப் பூவைப் பறித்தான். பிறகுத் தன் கால்களில் கட்டியிருந்த கனமான கற்களைக் கத்தியைக் கொண்டு வெட்டி எறிந்தான். பிறகு தண்ணீருக்கு வெளியே வந்து கரையை அடைந்தான்.
தன்னை அழைத்துவந்த படகோட்டி தனக்காகக் காத்திருப்பதை அறிந்து அவன் அருகே சென்றான். அவனிடம் , ” படகோட்டியே! இதோ பார்! இந்த ஆச்சரியமான பூவைப் பார். இந்தப் பூவின் மூலம் கிழவன் இழந்த வாலிபத்தையும் பலத்தையும் மீண்டும் பெறுவான். நான் என ஊருக் நகருக்குச் சென்று இப்போது கிழவர்களாகப் போய் வாடி நிற்பவர்களுக்கு இதைப் பகிர்ந்து தருவேன். நானும் கிழப் பருவம் அடைந்தவுடன் இதை அருந்தி என வாலிபத்தை மீண்டும் பெறுவேன். இந்த மலரின் பெயர் என்ன தெரியுமா? ‘ இளமை திரும்பும் ‘.
மகிழ்ச்சியின் சிகரத்தில் இருந்தான் கில் காமேஷ் . சாவு வந்தால் வரட்டும். அது பற்றிய கவலை இல்லை. இருக்கும் வரை இளமையுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவனுக்கு ஆயிரம் யானைகளின் பலம் அளித்தது. படகுக்காரனும் அவனுக்கு புதிய ஆடைகளையும் மாலையையும் கொடுத்தான். அவற்றை உடுத்திக் கொண்ட கில்காமேஷுக்குப் புதிய உத்வேகம் பிறந்தது.
படகோட்டி படகைச் செலுத்தச் சாவு நீரைக் கடந்து சென்று கரையில் இறங்கினான். படகோட்டியிடம் ” உத்ன பிஷ்டிம் உன்னைத் துரத்திவிட்டதுபற்றிக் கவலைப் படாதே ! நீயும் என்னுடன் என் நாட்டிற்கு வா! உன் வாழ்நாள் முழுவதும் சௌகரியமாக இருக்க நான் ஏற்பாடு செய்து தருகிறேன். உனக்கு வயதானால் இந்தப் பூவையும் தருகிறேன்” என்று கூறினான். படகோட்டியும் மகிழ்ச்சியுடன் கில்காமேஷூடன் வர ஒப்புக் கொண்டான்.
இருவரும் கடற்கரை வனம் தாண்டி வந்த கதவு வழியே திரும்பப் போனார்கள். ஐம்பது காதங்கள் நடந்த பிறகு சற்று களைப்படைந்ததால் ஒரு பெரிய மரத்தின் அடியில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அருகில் ஒரு பெரிய கிணறு வேறு இருந்தது. களைப்பைப் போக்கிக்கொள்ள இருவரும் அந்தக் கிணற்றில் இறங்கிக் குளிக்க முடிவு செய்தனர். பூவைக் கரையில் வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கிக் குளிக்கச் சென்றனர். அந்தக் கிணற்றின் அடியில் ஓர் ஓரத்தில் ஒரு பெரிய பாம்பு வசித்து வந்தது. அதன் மூக்கை இளமை திரும்பும் பூவின் வாசம் தாக்கியது. மெல்ல ஊர்ந்து வந்து கிணற்றுக்கு வெளியே வந்தது. அந்தப் பூவைச் சுற்றிச் சுற்றி வந்தது. மெல்லத் தன் சட்டையை உரித்தது.
குளித்துவிட்டு இருவரும் மேலே வந்த போது அந்தப்பாம்பு இளமை திரும்பும் பூவைத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கில் காமேஷ் மிகுந்த கோபத்துடன் அந்தப் பாம்பைப் பிடிக்கச் செல்லும்முன் அது பூவை முழுவதுமாகச் சாப்பிட்டுவிட்டு வெகு வேகமாகக் கிணற்றுக்கு அடியில் இருக்கும் தன் புற்றில் சென்று மறைந்துவிட்டது.
திக்பிரமையில் நின்றான் கில் காமேஷ்!
(தொடரும்)