இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல்.
கம்பர் எப்படி சட்டென்று தசரதனின் முடிவை நிர்ணயிக்கிறார் !
நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.
தசரதன் மீண்டும் தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?” என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்” என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.
இவ்வளவு டிரமடிக் ஆக காட்சியைக் காட்ட கம்பனைத் தவிர வேறு யாரால் முடியும்?
அடுத்தது ஜடாயுவின் மரணம். அதை சினிமாவின் இடைவேளைக்கு முன் வந்த காட்சி போல கம்பர் விஸ்தாரமாக அமைத்திருப்பார். இராவணன் சீதையை விமானத்தில் கடத்தி வான் வழியாகச் செல்லும்போது அவனைத் தடுக்க வரும் வயதான வீரனாக ஜடாயு வருகிறார். ஜடாயு இராவணனை தடுத்து நிறுத்துகிறார். அவனுக்கு அறிவுரை சொல்கிறார். வில்லன் கேட்பானா? ஜடாயுவை – அவர் வயதை எள்ளி நகையாடுகிறான்.
இருவருக்கும் போர் நடக்கிறது. இராவணனைத் தாக்கிக் கொண்டே சீதைக்கும் ஆறுதல் கூறுகிறார். தன்னால் ராவணனை ஜெயிப்பது கடினம் என்று ஜடாயுவிற்கும் தெரியும். இருந்தாலும் நாம் சண்டை போட்டு உயிர் துறப்பதற்குள் இராமன் வந்து சீதையை காப்பாற்றிவிட மாட்டானா என்ற நப்பாசை அவர் கண்களில் தெரியும். முடிவில் இராவணன் சிவன் வாளை உபயோகித்த பின்னரே அவரைக் கொல்லவும் முடிந்தது.
அதை கம்பர் மிகச் சிறப்பாக ஜடாயு உயிர் நீத்த படலத்தில் திரைப்படம் போல அமைத்திருப்பார்.
ஜடாயுவின் மரணத்தைக் காட்டும் பாடலில் சோகத்தை மீறி அவருடைய வீரமே புலப்படுமாறு கம்பன் படைத்திருப்பார்.
வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால் நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும் மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன் குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். –
சடாயு தன் வலிமையில் இராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி இராவணனின் வலிமை அல்ல. மேலும் சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும், விண்ணுலகத்திற்கு வேந்தனான இந்திரன் வச்சிரப்படை வீசச் சிறகுகள் அற்ற ஒரு மலைபோல் வீழ்ந்தான்.