செல்வம் சார் – எஸ் எல் நாணு

கணக்கு பகுதி 3 - Tamil Oli

”லிஸன் டு போர்ட்”

இதைக் கேட்டாலே செல்வம் சார் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அவர் வகுப்பில் எல்லா மாணவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். இப்போது செல்வம் சார் எங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..

செல்வம் சாருக்கு இருபத்தி எட்டு வயதிருக்கலாம். ஐந்தடி உயரம். மாநிறத்துக்கும் குறைவான நிறம். பக்கவாட்டில் வாரப் பட்ட அடர்த்தியான கருப்பு முடி. நெற்றியில் மெலிதான விபூதிக் கீற்று.. (அதெப்படி மாலை வரை அழியாமல் இருக்கிறது என்பது முனைவர் பட்டத்துக்கு ஆராயப் பட வேண்டிய டாபிக்), அழகாக ட்ரிம் செய்யப் பட்டு நாசிக்கிக்குக் கீழே வழிந்திருக்கும் மீசை.  அதன் கீழே நிரந்தர புன்னகை.. அவர் எப்பவும் அணிவது அரைக் கைச் சட்டை தான். டக் செய்திருப்பார்.. காலில் செர்ரி ப்ளாஸம் தயவில் பளிச்சிடும் ஷு..

பிளஸ்-டூ வகுப்புகளுக்கு செல்வம் சார் தான் கணக்கு டீச்சர். அவர் வகுப்பில் கடைசி பெஞ்ச் அடாவடி அளகேசன் கூட சேட்டை எதுவும் செய்யாமல் அவரையேப் பார்த்துக் கொண்டிருப்பான்.. காரணம் செல்வம் சாரின் ஆங்கிலம்.. அவருடைய பாடி லேங்குவேஜ்..

“லிஸன் டு  போர்ட்”

என்று விரைப்பாக போர்டைப் பார்த்து ஒரு எபவ் டர்ன் கொடுத்துத் தான் செல்வம் சார் பாடம் ஆரம்பிப்பார்.

ரென் அண்ட் மார்டின் பார்த்து, கூகிள் சர்ச் பண்ணினாலும் ”லிஸன் டு போர்ட்”க்கு அர்த்தம் கிடைக்காது.. தொடர்ந்து அவர் வகுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் அது புரியும்..

“லிஸன் டு போர்ட்” என்றால் கவனமாகக் கேளுங்கள் என்று அர்த்தம்.

அதே மாதிரி “லெஸ்ஸன் யுவர் டால்க்” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.

திடீரென்று ஒரு கணக்கை போர்டில் எழுதி..

“இதுக்கு யாரு சரியான ஆன்ஸர் கண்டு பிடிக்கிறாங்களோ.. அவங்களை ஐ வில் ஈட் யு ஸ்வீட் டுமாரோ”

என்று பயமுறுத்துவார். அதாவது அந்தக் கணக்கை சரியாகப் போடுபவர்களுக்கு மறுநாள் அவர் ஸ்வீட் கொடுப்பதாக அர்த்தம்.

இப்படி செல்வம் சாரின் ஆங்கிலப் புலமையை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆங்கிலம் தான் கொஞ்சம் ஜகா வாங்குமே தவிற கணக்கில் செல்வம் சார் புலி. பல குழப்பமான கணக்குகள்.. நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு விடை கிடைகாமல் திண்டாடும் கணக்குகள்.. இறுதியில் செல்வம் சாரிடம் தஞ்சம் புகுவோம்..

”இது தானே.. லிஸன் டு போர்ட்”

என்று வழி காட்டுவார். அதைப் பார்த்த பிறகு.. ஃபூ.. இவ்வளவு தானா? இதற்காகவா மண்டையைக் குழப்பிக் கொண்டோம் என்று எங்களுக்கு அவமானமாக இருக்கும்..

ஆனால் என்ன.. ஒவ்வொரு ஸ்டெப் முடிந்தவுடனும் “ஸ்டாண்ட் அப்டு த ஸ்டெப்” என்பார். அதாவது இந்த ஸ்டெப்பை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

அவர் சொன்ன ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அவர் பாஷையிலேயே நாங்கள் “ஸ்டாண்ட் அப்” பண்ணினதுனால் தான் பின்னாளில் வாழ்க்கையில் நாங்கள் ஸ்டாண்ட் பண்ண முடிந்தது என்பது என் கான்க்ரீட் நம்பிக்கை..

செல்வம் சாருக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.. தனிக் கட்டை.. ரொம்பவே சுமார் நிறம்.. அதோட ரொம்பவும் குட்டை.. அதனால் தான் பார்க்கும் பெண்களெல்லாம் ரிஜக்ட் செய்து விடுகிறார்கள் என்று மாணவர்கள் மத்தியில் ஒரு வதந்தி உலாவியது. அது உண்மையா இல்லையா என்று ஆராய எனக்குப் பிடிக்கவில்லை.. காரணம் திருமணம் என்பது அவர் தனிப் பட்ட விஷயம் என்று நான் நம்பினேன்..

பன்னிரெண்டாவது மாணவர்களை பள்ளியிலிருந்து எங்கேயாவது டூர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த முறை பெங்களூர் போவது என்று தீர்மானிக்கப் பட்டது. கோவா போக வேண்டும் என்று போராடிய சில மாணவர்களும் பெங்களூருக்கு ஒப்புக் கொண்டனர்.. காரணம் செல்வம் சார் தான் டூர் ஹெட்..

ரயிலிலும்.. பெங்களூரில் தங்கியிருந்த விடுதியிலும்.. கப்பன் பார்க், லால் பாக், விதான் சௌதா, பிருந்தாவன் கார்டன் என்று நாங்கள் சுற்றிய போதும்.. செல்வம் சார் எங்களுள் ஒருவராகவே மாறி விட்டார்.. கேலியும் கிண்டலும்.. பாட்டும்.. நடனமும்.. (செல்வம் சாருக்குள் இப்படி ஒரு திறமையா?.. அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல்..)

எங்கள் வகுப்பு ராகவன் பிரமாதமாக மிமிக்கிரி செய்வான்.. அதுவும் அவன் செல்வம் சாரைப் போல் மிமிக்கிரி செய்து காட்டியபோது அதை ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தது செல்வம் சார் தான்..

இவ்வளவு ஜாலியாக ராகவனின் மிமிக்கிரியை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும் செந்தில் மட்டும் முகம் தொங்கப் போட்டு ஓரமாக நிற்பதை கவனித்து அவன் அருகில் சென்றேன்..

“என்ன செந்தில்.. எல்லாரும் ஜாலியா இருக்காங்க.. நீ மட்டும் இங்க நிக்கறே? நீயும் கலந்துக்க.. வா”

செந்தில் என்னைக் கெஞ்சலாகப் பார்த்தான்.

“வேண்டாம்.. நான் இங்கயே இருக்கேன்.. என்னை விட்டுரு”

“ஏன்.. ஏதாவது பிரச்சனையா?”

செந்தில் சிறிது நேரம் மௌனமாகத் தரையைப் பார்த்தான். பின் மெதுவாக..

“டேய்.. உனக்கேத் தெரியும்.. எங்கப்பா குடிகாரர்.. எங்கம்மா நாலு வீட்டுல வேலை பண்ணி குடும்பத்தைக் காப்பாதறாங்க.. செல்வம் சார் எங்க தெருவுல தான் இருக்கார்.. எங்க நிலமை தெரிஞ்சு அவர் தான் எனக்கு ஸ்கூல் பீஸ் கட்டிப் படிக்க வெக்கறார்.. இதோ.. இந்த டூருக்குக் கூட அவர் தான் எனக்காக காசு கொடுத்திருக்கார்.. அவர் எனக்கு தெய்வம் மாதிரி.. அவரைக் கிண்டல் பண்ணும் போது எனக்கு மனசு ரொம்ப வலிக்கறதுடா.. அதான் ஒதுங்கி வந்திட்டேன்”

செந்தில் இதைச் சொன்னவுடன் என்னையுமறியாமல் திரும்பிப் பார்த்தேன்.. சந்தோஷமாக மற்றவர்களுடன் சிரித்துக் கொண்டிருந்த செந்தில் சார் உண்மையிலேயே விஸ்வரூபியாகத் தான் தெரிந்தார்.

செல்வம் சார் ஆசைப் பட்டது போலவே பிளஸ்-டூ பரிட்சையில் எங்கள் வகுப்பிலிருந்து ஏழுபேர் கணக்கில் செண்ட்டம் வாங்கினோம்.. தொண்ணூறு சதவிகிதம் பேர் தொண்ணூறுக்கு மேல்.. மீதி சில எண்பதுக்கு மேல்.. தேறவே மாட்டார்கள் என்று மற்ற ஆசிரியர்களால் தலை சுற்றி ஒதுக்கப் பட்ட அடாவடி அளகேசன் போன்றவர்கள் கூட கணக்கில் ஐம்பது மார்க் வாங்கி அசத்தியிருந்தார்கள்..

நாங்கள் எல்லோரும் சேர்ந்து செல்வம் சாருக்கு ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டோம்.. ஆனால் எப்படியோ இதைத் தெரிந்துக் கொண்ட செல்வம் சார் உடனே எங்களைக் கூப்பிட்டு எந்த கிப்டும் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். மாறாக அவர் எங்கள் எல்லோருக்கும் ஸ்ரீ மிட்டாய் காஜு கட்லி கொடுத்து அசத்தினார்..

”ஐ வில் ஈட் யு ஸ்வீட் டுமாரோ”

செல்வம் சாரின் குரல் என் காதில் மைண்ட் வாய்ஸாக ஒலித்தது. என்னையுமறியாமல் என் இதழ்கள் விரிந்தன..

நான் ஸ்கூல் டாப்பர் என்பதால் என்னைத் தனியாக அழைத்து “கங்ராட்ஸ்.. யு ஸ்டேண்ட் அப்” என்று ஒரு பார்க்கர் பேனாவைப் பரிசாகக் கொடுத்தார். (”யு ஸ்டேண்ட் அப்” என்றால்.. கரெக்ட்.. இந்நேரம் உங்களுக்கேப் புரிந்திருக்குமே.. நீ சாதித்து விட்டாய் என்று அர்த்தம்).

பிட்ஸ் பிலானியில் அட்மிஷன் கிடைத்து நான் அந்த கிராமத்துக்கு இடம் பெயர்ந்த பிறகு செல்வம் சாருடன் டச் விட்டுப் போனது. காரணம் ஆரம்பத்திலிருந்தே வாட்ஸ்-ஏப், பேஸ்-புக் இது எதிலும் அவர் நுழைந்தது கிடையாது.. செல் போன் கூட பழைய நோக்கியா மாடல் தான்.. ஆண்ட்ராய்ட் கிடையாது..

ஒரு முறை அவரிடம் பொறுக்காமல் கேட்டேன்..

“என்ன சார் இன்னும் பழைய மொபைலயே வெச்சிட்டிருக்கீங்க.. ஆண்ட்ராய்ட் வாங்கிக்குங்க சார்.. வாட்ஸ்-ஏப், பேஸ்-புக் எல்லாம்..”

என்று நான் முடிப்பதற்குள் செல்வம் சார் குறுக்கிட்டார்.

“வேண்டாம்பா.. அந்த வம்பே வேண்டாம்.. போன் எதுக்கு? எடுத்துப் பேச.. அவ்வளவு தான்.. நான் அந்த கண்றாவியெல்லாம் வெச்சுக்க மாட்டேன்.. யு டெலீட் திஸ் டாக்”

இதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன்,

இருந்த நம்பரையும் செல்வம் சார் மாற்றியிருக்க வேண்டும்.. காரணம் சில நாட்களுக்குப் பிறகு அவருடைய நம்பர் “நாட் இன் யூஸ்” அறிவிப்பு சொன்னது..

பிலானியில் கணக்கு சொல்லிக் கொடுத்த புரொபஸர் ஒரு ஜீனியஸ். ஆனால் அவருக்கு ஒரு மாணவனின் லெவலுக்கு இறங்கி வந்து பாடம் சொல்லித் தரத் தெரியவில்லை.. அல்லது பொறுமையில்லை..

என் மனம் செல்வம் சாரை நினைத்து ஏங்கியது..

“ஸ்டாண்ட் அப்டு த ஸ்டெப்”

செல்வம் சாரின் கணீர் குரல் கேட்டது. அவர் வழியிலேயே தான் பிலானியில் பாடம் கற்றேன்.

பிலானியில் ஐந்து வருடம் டூயல் டிகிரி முடித்து கோல்ட் மெடல் வாங்கிய கையோடு டெல்லியில் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்து சேர்ந்து விட்டேன். நான்கு வருடங்களில் இரண்டு பர்பார்மென்ஸ் பிரமோஷன் கிடைத்தவுடன் எனக்கு திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணி விட்டார்கள் என்னைப் பெற்றவர்கள். ஷாலினி.. எம்.சி.ஏ… அவளும் டெல்லி தான்..

சென்னையில் தான் கல்யாணம். பத்திரிகை வந்தவுடன் எடுத்துக் கொண்டு எங்கள் பள்ளிக்கு ஓடினேன்.

பள்ளி நிறையவே மாறியிருந்தது. வாசலில் வாட்ச்மேன் மணிக்கு பதிலாக செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆள் யூனிபார்மோடு நின்றிருந்தார். ஹிந்திக் காரர். நான் பேசிய வட நாட்டு ஹிந்தியில் மயங்கி என்னை உள்ளே அனுமதித்தார்.

சுற்று முற்றும் பார்த்தேன். நாங்கள் ஓடித் திரிந்த இடங்களிலெல்லாம் புது கட்டிடங்கள் முளைத்திருந்தன. பார்க்கக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது..

மாணவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். யூனிபார்ம் கூட நிறம் மாறியிருந்தன.

ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தேன்.

எல்லாம் தெரியாத முகங்கள். இந்த ஒன்பது வருடங்களில் எல்லோரும் மாறிவிட்டார்களா? அப்ப செல்வம் சார்..

பியூன் மாரி மட்டும் அடையாளம் தெரிந்தான்.

“மேனேஜ்மெண்ட் மாறினதுல அல்லாரும் மாறிட்டாங்க தம்பி.. பழைய ப்ரின்ஸி கிடையாது.. டீச்சருங்க கிடையாது.. அல்லாம் புதுசு.. நான் ஒரு ஆளு தான் தப்பிப் போய் பழசு”

“அப்ப செல்வம் சார்..”

“அவரு தான் மொதல்ல வெளில போனாரு..”

“எங்க போனார்? இப்ப எங்க இருக்கார்?”

“தெரீலயே தம்பி.. அவருக்குக் கண்ணாலம் ஆயிருச்சுன்னு மட்டும் யாரோ எப்பவோ சொன்னதா நாபகம்”

செல்வம் சாரை சந்திக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. என் வகுப்பில் படித்த சிலரைப் பிடித்து அவர்களிடமிருந்து செல்வம் சாரைப் பற்றிய தகவல் கிடைக்குமா என்று முயன்றேன்.. சிக்கிய சிலரும் வெளிநாட்டில் இருந்தனர். அவர்களும் செல்வம் சாரா என்று புருவம் உயர்த்தினர்.

செந்தில் நினைவுக்கு வந்தான்.. அவனுக்கு நிச்சயம் செல்வம் சாரைப் பற்றி தெரிந்திருக்கும்.. உடனே அவன் குடும்பம் வாடகைக்கு இருந்த முத்து முதலி தெரு வீட்டுக்குப் போனேன்.. ஆனால் அந்தத் தெருவில்  இருந்த வீடுகளெல்லாம் பிளாட்டுகளாக மாறியிருந்தன.. செந்திலைப் பற்றி விசாரித்தேன்.. யாருக்கும் எதுவும் தெரியவில்லை..

செல்வம் சார் இல்லாமலே என் திருமணம் நடந்ததில் எனக்கு வருத்தம் தான்.

ஷாலினிக்கு டெல்லியில் மெட்ரோ பிராஜெக்ட் ஐ.டி. பிரிவில் வேலை. இருவரும் செட்டில் ஆகி இரண்டு வருடத்தில் பிரஜஸ் பிறந்து.. வளர்ந்து..

பிரஜஸை பள்ளியில் சேர்க்கும் தருணம் எனக்கு மறுபடியும் செல்வம் சார் நினைவில் வந்தார். அவர் கொடுத்த பார்க்கர் பேனாவை லாக்கரிலிருந்து எடுத்துப் பார்த்தேன். என்னையுமறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. ரயில் சிநேகம் மாதிரி அந்த உறவு முடிந்து விட்டதே என்று என் மனதில் எப்பவுமே தீராத குறையுண்டு..

ரஜோரி கார்டன் பகுதியில் இருந்த அந்த தனியார் பள்ளியில் பிரஜஸுக்கு அட்மிஷன் கிடைத்தது. கொஞ்சம் காஸ்ட்லி தான்.. இருந்தாலும் நல்ல பள்ளி என்று பெயர் வாங்கியிருந்தது..

பீஸ் கட்டி அட்மிஷன் ஊர்ஜிதம் செய்துக் கொண்டு பள்ளி காரிடாரில் நடந்து வந்தேன்..

வகுப்புகள் நடந்துக் கொண்டிருந்தன. எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன.. திடீரென்று..

“லிஸன் டு போர்ட்”

பக்கத்து அறையிலிருந்து கணீரென்று குரல் கேட்டது.

மின்சாரம் பாய்ந்தது போல் எட்டிப் பார்த்துத் துள்ளிக் குதித்தேன்..

கொஞ்சம் வயதான செல்வம் சார் கம்பீரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.