தமிழ்த்திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்

08-10-2017 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 58ஆம் ஆண்டு நினைவுநாள் -. புகழ் வணக்கம் - YouTube

தமிழ்த் திரை உலகில் கதாநாயகர்கள், நாயகிகள் மட்டுமல்ல, நகைச்சுவை நடிகர்கள், நடிகைகள், கதை வசன கர்த்தாக்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என பட்டியல் மிகவும் நீளம். எந்த மொழித் திரைப் பட உலகையும் விட, தமிழ்த் திரைப்பட உலகம் கொஞ்சம் அதிகம் பங்களிப்பை தந்திருக்கிறது என்பதே உண்மை.

அந்த வகையில்,தமிழ்த் திரை உலகம் அளித்த ஒவ்வொரு கவிஞரின் பங்களிப்பு பற்றி, இந்தத் தொடரில் நாம் காணலாம்

பாரதி, பாரதிதாசன், பாபநாசம் சிவன் எனத் தொடங்கி, கம்பதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, தாமரை, முத்துக்குமார், கபிலன் என எல்லாக் கவிஞர்களையும், இந்தப் பதிவில் தொடர்ந்து நாம் பார்க்கலாம். எனக்கு தெரிந்து, சுமார் 70 கவிஞர்களை நாம் இந்தத் தொடரில் நாம் சந்திக்கலாம்.

பாட்டுக்கோட்டை .என்று அழைக்கப்பட்டு, 30 வயதிற்குள் மறைந்துவிட்ட, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடன் துவங்குவோம். 29 வயதில், சைனஸ் என்று, காலை மருத்துவமனை சென்றவர், மாலையில், இறந்துவிட்டார். மருத்துவரின் கவனக்குறைவால் நடந்தது என்பதே உணமைத் தகவல். பள்ளி சென்று படிக்காதவர். . குறுகிய காலத்தில் , அற்புதப் பாடல்கள் எழுதியவர். , உழைப்பு, நேர்மை, பொதுநலம் இவை இணைந்த பொது உடமைக் கொள்கைதான் இவருடையது. கடவுள் மறுப்புக் கவிஞர் அல்ல.

இவர் எழுதிய சௌபாக்யவதி என்ற திரைப் படப்பாடல், ஒன்றைப் பார்த்தால், அவரின் ஆன்மிகம் அப்படியே இழையும்.

தில்லை அம்பல நடராஜா – செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா , வா வா அமிழ்தானாவா

என்று TM சௌந்தரராஜன் பாடிய பாடல், தேவாரப்பாடல் போல, ஆன்மிகம் இருக்கும் வரை எல்லாக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

கவிஞரின் சமுதாயக் கருத்துக்கள், தனிச் சிறப்பு வாய்ந்தவை மட்டும் அல்ல, அவரின் பாடல் வரிகள், படித்தவர், பாமரர் எல்லோரையும் சேர்ந்து அடைந்தன. கண்ணதாசன் மிகவும் நேசித்த, புகழ்ந்த, இன்னும் கூறப்போனால் நன்றி கொண்ட கவிஞர் பட்டுக்கோட்டையார் அவர்கள். கண்ணதாசனே எழுதி இருக்கிறார். பாகப்பிரிவினை போன்ற படங்களில்,இந்த வகைப் பாடல், என்னைவிட, கண்ணதாசன் நன்றாக எழுதுவார், அவரிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறும் பரந்த மனம் கொண்ட கவிஞர் அவர். எத்தனை விதைப் பாடல்கள் தந்தவர்.

அமுதவல்லி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற,

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

என்ற பாடல், அருணகிரிநாதரின் சந்தம் போன்ற அழகு. ஆடை,மேடை,ஓடை,ஜாடை என ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழ் இலக்கியத்தை தோரணம் கட்டி தொங்க விட்ட பட்டுக்கோட்டை, நிறைவில் கூறுவார்.

*வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை*

வழக்கு தமிழிலேயே, தமிழ் இலக்கிய நடையை எதுகை மோனைக்குள் கொண்டு வந்து விடும் அற்புத படைப்பிறகு இது ஒரு உதாரணம். இந்தப்பாடல், அவர் மணமுடிக்க இருந்த பெண்ணைப் பார்த்துவிட்ட வந்தபின், நண்பர்கள் கேட்ட கேள்விக்கு, பதிலாக சொன்னது என்று ஒரு தகவல் உண்டு. அது தான் அப்படியே படத்தில் உருவானது.

சிற்றிலக்கியங்களில் தூது விடும் பாடல்கள் நிறைய உண்டு ; காளிதாசன் மேகத்தை தூது விட்டான் – தமிழ் இலக்கியங்களில், புறா, கிளி, மயில், காற்று, அன்னம் என பலவகையில் தூதுப் பாடல்கள் உள்ளன. பதிபக்தி படத்தில், ஆணும் பெண்ணும், கோழியையும் சேவலையும் தூதாக வைத்துப் பாடுவதாக எழுதி இருபப்து மிக அழகு. மெல்லிசை மன்னர்கள் இசையில் TMS, ஜிக்கி குரல்கள் – அதுவும் ஜிக்கியின் கொக்கரக்கோ கொக்கரக்கோ என்றே கூவுவது காதில் ரீங்காரமாக ஒலிக்கும்

கொக்கர கொக்கரக்கோ சேவலே .
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினால் தேவலே

குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே

இருவரும் சேவல் மற்றும் கோழியை தூது வைத்து பாடுவதை நம்மால் மறக்க முடியாது. இப்படி, காதலில் பல அற்புத பாடல்கள் தந்தவன் – நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் என்ற இரும்புத்திரைப் படப் பாடலில், காதலைப்பற்றிக் கூறும்போது, நாயகி கேட்பாள்.

மலர்க்கொடி தலையாட்ட
மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி
ஆனதும் ஏனோ – அதற்கு நாயகன் பதிலாக,

இயற்கையின் வளர்ச்சி முறை
இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏன் என்று நீ கேட்டால்
நான் அறிவேனோ என்பார்.

அதேபோல, ஆளுக்கொரு வீடு என்ற படத்தில்,

அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா,
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா, என்று நாயகன் பாட, நாயகி, பதிலாக,

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும், புரியாமல் போகுமா என்பாள்,

பெண்கள் , அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும் என்கிறான் கவிஞன் திரைப்படப் பாடல் மூலம்.

ஸ்ரீதர்,-பட்டுக்கோட்டை, மஹேஸ்வரி, விடிவெள்ளி, கல்யாணபரிசு எனத் தொடர்ந்த கூட்டணி, மீண்ட சுவர்க்கம் படத்திற்கு பாடல் எழுத முடிவெடுத்த ஒரு வாரத்தில், கவிஞர் மரணம் அடைந்தார்.

ஸ்ரீதரின், கல்யாணப்பரிசு படப் பாடலான, வாடிக்கை மறந்ததும் ஏனோ என்ற பாடல் மிக அழகு.. நாயகனுக்கு, பதில் கூறுவதாக ,

நான் கருங்கல் சிலையோ,
காதல் எனக்கில்லையோ,
வரம்பு மீறுதல் முறையோ , என்றும்

பொறுமை இழந்திடலாமோ ,
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ , என்றும் எழுதுவார்.

பொதுவுடமைக் கவிஞர் என்பதால், வார்த்தைகள் வந்து விழுவதை பாருங்கள் – வரம்பு மீறுதல், பெரும் புரட்சி என்று. அதேபோல, தங்கப்பதுமை படத்தில் வரும் முகத்தில் முகம் பார்க்கலாம் என்ற காதல் பாடலில் கூட பொதுவுடைமைக் கருத்து வரும்.

இகத்தில் இருக்கும் சுகம்
எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாகலாம், என்பார்.

ஸ்ரீதர், பட்டுக்கோட்டையிடம் சென்று, கல்யாணப்பரிசு கதையை முழுவதும் சொல்லி முடித்து, இதுதான் கதை என்று பெருமூச்சுடன் முடிக்க, கவிஞர் ,

காதலிலே தோல்வி உற்றாள்
கன்னி ஒருத்தி
கலங்குகின்றாள் அவனை
நெஞ்சில் நிறுத்தி

இதுதானே உன் கதை எனக்கூற, ஆடிப்போய் விட்டாராம். இந்த வரிகளுடன், பாடல் ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அந்தப்பாடல் வந்தது.

ஆசையிலே பாதி கட்டி அன்பை விதைத்தாள்
அல்லும் பகலும் காத்திருந்து பயிர் வளர்த்தாள்
பாசத்திலே பலனை பறி கொடுத்தாள்
கனிந்தும் கனியாத உருவெடுத்தாள் என்ற வரிகள் climaxலும் பாடப்பட்டு, ரசிகர்கள் மனதில் நின்றது.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற படத்தில் இடம் பெற்ற, என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே என்ற பாடல் – TG லிங்கப்பா இசையில் TMS அவர்களின் குரலில் அற்புதப்பாடல் . காதலன், நிலவை, காதலிக்கு , தூது விடுவதாக பட்டுக்கோட்டைஅவர்கள் எழுதியிருக்கும் அற்புதப் பாடல் இது.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலவா

கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உனை காவல் காக்கும் தோழிகளோ வெண்ணிலாவே
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே
உன் காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே

3 அல்லது 5 நிமிட திரைப்பட பாடலில் வந்த மொழி அழகு – தமிழ் அழகு – இசை அழகு – என எத்தனை எத்தனை!

தாரகைகள் , அதாவது நட்சத்திரங்கள் தான் நிலவின் தோழிகளாம். நிலவில் உள்ள கருமைக்கு காரணம், காதலன் கிள்ளியதாம். அப்புறம், நிலவிடம், காதலியிடம் இருக்கும் காதலனின் இதயத்தை அவள் தரமாட்டாள் – நீயே பறித்துக் கொண்டுவந்துவிடு. அதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் – அவள் அப்படித் தானே செய்திருக்கிறாள் – இதுவும் அவள் தந்த பாடம் தான் என்று, அந்த ஊடல் நிறைக் கோபத்துடன் நாயகன் பாடுவதாக, கவிஞர் எழுதி இருப்பது மிகச் சிறப்பு.

காதல் மட்டும் அல்ல,, சமுதாய அக்கறை மிகுந்த பல பாடல்கள் தந்தவன். திருடாதே படப் பாடல், வரிகள் மற்றும், அற்புத இசையுடன் பட்டி தொட்டி எல்லாம் பாடப்பட்டது. இன்றைக்கும் பொருந்தக் கூடிய வரிகள்.

வறுமையை நினைத்து பயந்து விடாதே
திறமை இருக்கு – மறந்து விடாதே

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டு இருக்குது – அதைச்
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரிகள் அபாரம். அத்துடன், உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா, கெடுக்கிற நோக்கம் வளராது, என்பார் திருடாதே படத்தில்.

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளுடா, என்ற அரசிளங்குமரி படப் பாடலில் ,

வேப்பமர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க,
உந்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே என்ற வரிகள், வேத வரிகள்.

அவரின் அறச் சீற்றம், அப்படியே கொப்புளிக்கிறது. வேலையற்ற வீணர்கள் – மூளையற்ற வார்த்தைகள் – வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே என்ற வார்த்தைகள் மூலம்.

நல்ல பொழுதை எல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்,
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார்

சிலர் அல்லும் பகலும் வெறும்
கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று
அலட்டிக் கொண்டார்
என்று பாடியவர்,

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்,
உன் போல் குறட்டை விட்டாரெல்லாம் கோட்டை விட்டார் என்பார்.

அதேபோல, பதிபக்தி எனும் படத்தில், அற்புதமான பாடல்.

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி

என்ற வரிகள் அப்படியே, பொது உடைமை வரிகள். இன்றும் அது பொருந்துவதுதான் கவிஞரின் தீர்க்க தரிசனம்.

சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி , பாடலில்,

காடு வெளஞ்சன்னா மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம் என அவள் குறைப்பட்டுக் கொள்ள, நாயகன்,
காடு விளையட்டும் பெண்ணே
நமக்கு காலம் இருக்குதே பின்னே என்பான்.

உழைப்பு அதன் பலனைத் தரும் என்கிறார். நிறைவில்,

நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்துடும் திட்டம்
அது நாடு நலம் பெரும் திட்டம் என்பார்.

அதேபோல, கைத்தறியை மையப் படுத்தி எழுதிய இவரின் புதையல் படப்பாடல், நெசவுத் தொழிலின் உயர்வைக் கூறும்.

சின்னச் சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறி சேலையடி
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி

குழந்தையை வாழ்த்திப் பாடும் உன்னைக் கண்டு நான் பாட்டில் கூட,

எண்ணத்தில் உனக்காக
இடம் நான் தருவேன்
எனக்கு நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
என்பார்.

நகைச்சுவைப் பாடலும் நிறைய தந்திருக்கிறார்.

பிள்ளையார் கோயிலுக்கு
வந்திருக்கும் பிள்ளை யாரு
இந்தப் பிள்ளை யாரு ?

தனக்கு ஒருத்தி இல்லாம
தனித்து இருக்கும் சாமியிடம்
எனக்கு ஒருத்தி வேண்டும்
என்று வேண்ட வந்தாரா , என்று கிண்டல் வரிகளாக எழுதி இருப்பார்.

வாழ்க்கையின் எதார்த்தத்தை, ஆதி சங்கரர் வார்த்தைகளை போல,

குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி மாட்டிக்கிட்ட குறவனுக்கு சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடி தான் சொந்தம் என்றும்,

ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

என்றும் எழுதி இருப்பார்.

ஒரு பெண்ணின் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்போது,

காணாத நிலையை கண்டதினாலே
தங்கு தடை இன்றி
பொங்கு கடல் போலே ஆனேனே –
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் , என்பதுடன்,

கண் நிறைந்த கணவனுடன் வாழ்வு தொடங்கும்போது,

இன்று நமதுள்ளமே பொங்கும் புது உள்ளமே
என்று பாடி இருப்பது கொள்ளை அழகு.

இப்படியெல்லாம், காதல், சிரிப்பு, வாழ்க்கை, பொதுவுடமை, பாமர மக்கள், , விவசாயிகள் எனப் பாடியவர் , இன்னொரு பாடலில் கூறுகிறார் –

செய்யும் தொழிலே தெய்வம்
திறமை தான் நமது செல்வம்
கையும் காலும் தான் நமக்குதவி
கொண்ட கடமை தான் நமக்கு பதவி , என்று.

பொதுவுடைமை மட்டும் அவரின் கருத்து அல்ல. இறை, இயற்கை, இந்த மண்ணின் பண்பாடு, உழைப்பு என்றே அவரின் பாடல்கள் அமைந்திருக்கின்றன. பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக்கோட்டை. அதில் இருந்து, சில துளிகள் தான் இங்கே நாம் பார்க்கிறோம்.

இது போலச் சுவைக்கனிகள், திரையில் ஏராளம். அடுத்த பதிவில், இன்னொரு கவிஞரின் கவிதைக் கனியுடன் சந்திப்போம். .

 

2 responses to “தமிழ்த்திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்

  1. “உன்னைக் கண்டு நான் ஆட” (கல்யாணப் பரிசு) பாடலில் “கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா” என்று எழுதியிருப்பார். கடன் என்றால் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் “நீ கொடுத்தால் நான் உனக்குத் ஒன்று திருப்பிக் கொடுப்பேன்” என்று பொருள் என்று சொல்வார்கள். இது சொல்லாமல் சொன்ன பட்டுக் கோட்டையாரின் இலக்கிய நயம்.
    அதே படத்தின் இன்னொரு பாடலில் ” ஆசையிலே பாதி கட்டி, அன்பை விதைத்தாள்” என்று எழுதி இருக்கிறது. “ஆசையிலே பாத்தி கட்டி” என்று இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    Like

  2. பட்டுக் கோட்டையாரின் சினிமா பாடல்களை பட்டியல் போட்டுத்தந்து நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட பதிவுக்காக தென்காசி கணேசன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். இதைப் போன்ற தொடரைப் பிரசுரம் செய்யும் குவிகம் பத்திரிக்கைக்கும் நன்றிகள் பல.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.