சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் “வாத்ஸல்யா ”(“Vatsalya” for Human Enrichment)” என்ற மனநல நிறுவனத்தை ஆரம்பித்திருந்த காலகட்டம். கூடவே எங்கள் ஸோஷியல் வர்க் பாடப் படிப்பின் ஒரு பிரிவிற்கு விரிவுரையாளராக (guest lecturer) உயர் கல்வி கல்லூரி ஒன்றிலும் பணியாற்றி வந்தேன். அங்கு முதுகலைப் பாடம் நடத்தும் ஆசிரியர் குமார் அவருடைய மாணவியைப் பற்றி ஆலோசிக்க என்னிடம் வந்தார்.
மாணவி பெயர் ப்ரீதம், இரண்டாம் வருட முதுகலை பட்டப்படிப்பு. சில வாரங்களாக இவள், முறையாக வகுப்புக்கு வருவதில்லை, எப்போதும் ஏதோ நினைத்துக் கொண்டு நகைக்கிறாள், கவனம் சிதறுகிறது என்று பல மாற்றங்களைக் கவனித்தார். கவலையுடன் என்ன செய்யலாம் என ஆலோசிக்க என்னிடம் வந்தார். மாணவியிடம் என்னைச் சந்திக்கச் சொல்ல முடிவானது.
சில நாட்களுக்குப் பின்னர், நான் வண்டியை விட்டு இறங்கியவுடன் இரு இளம் வயதினர் என்னை நிறுத்தி, கன்ஸல்ட் பண்ண வேண்டும் என்றார்கள். இருவரின் விழிகள் இங்கே அங்கே எதையோ தேடுவது போலத் தோன்றியது. அவளுடைய கழுத்தில் ஃப்ரெஷாக கட்டிய தாலிக் கயிறு. அவள் அவன் கையைப் பற்ற, அவன் உதறிவிட்டுக் கொண்டதைக் கவனித்தேன். அன்றைய முதல் க்ளயன்ட் தாமதமாக வருவதாகச் சொன்னதால், இவர்களையே முதலில் பார்க்க ஆரம்பித்தேன்.
இவர்கள் ப்ரீதம், ப்ரேம். குமார் சார் விலாசத்தைத் தந்ததாக அறிமுகம் செய்து கொண்டார்கள். எடுத்த உடனேயே சமீபத்தில் தங்களது திருமணத்தைப் பெற்றோருக்கு அறிவித்தோம் எனச் சொன்னார்கள். இரு தரப்பிலும் இப்படிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். ப்ரேம் ஒரு வயது இளையவன். ப்ரீதம் இருபத்தி இரண்டு, ப்ரேம் இருபத்தி ஒன்று.
ஒரே கல்லூரியில் படிக்கும் போது பல கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானது. “செம்ம ஜோடி” எனக் கல்லூரியில் கேலியாகச் சொன்னது நாளோட்டத்தில் தோழமையாகி, காலம் முழுவதும் சேர்ந்து வாழ முடிவு செய்தார்கள்.
வீட்டில் ஒப்புதல் தரமாட்டார்கள் என எண்ணி, பதிவு கல்யாணம் செய்து கொண்டனர். படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகே கல்யாணத்தை
பற்றிச் சொல்லலாம் என்று முடிவு. ஆனால் தற்செயலாக ப்ரீதம் அம்மா தாலிக் கயிறைப் பார்த்து விட்டு ஆவேசப் பட்டதில், சொல்ல வேண்டியதாக ஆயிற்று. குழப்பம் தவிப்பானது. அப்போது தான் ஆசிரியர் பரிந்துரை செய்ய, என்னிடம் வந்தார்கள்.
ப்ரீதம், ப்ரேம் ஸெஷனில் தங்களுடைய இப்போதையைக் கல்யாண வாழ்வைப் பற்றிய விவரத்துடன் துவங்கினேன். பேசப் பேச இருவரும் தங்களது கோட்பாட்டைக் கெட்டியாக கடைப்பிடிப்பதை உணர ஆரம்பித்தார்கள். கையை கோர்த்துக் கொள்ளாமல், தனது உறவு நெருக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வந்ததில் இருவரும் திருப்தி, சந்தோஷம் உணர்வது தெளிவானது. மாணவர்களாக நிலை நீடிக்கும் வறையில் இவ்வாறு என்று உருதி கொண்டிருந்தார்கள். இருவரின் பெற்றோருமே இதை நம்பவில்லை, சந்தேகப் பார்வையில் பாவிப்பதாகப் ப்ரேம் சொன்னான்.
இறுதிப் பரிட்ச்சை இருப்பதால் அதை முடித்துவிட்டு மறுபடி வருவதாக முடிவானது.
திரும்பி வந்ததும் அவர்களது கட்டுப்பாட்டைக் காக்கும் விவரங்களை எடுத்துக் கொண்டோம். அவைகளைச் சொல்லச் சொல்ல தங்களது முடிவுகளை ஆராய்ந்து வர அவர்களால் முடிந்தது. நிர்ணயம், மற்றவர்களுக்காக அல்ல என்று. இதை ப்ரேம் முழுக்க உணர்ந்தான். ப்ரீதம் தத்தளித்தாள்.
இந்த நிலையை ப்ரீதம் புரிந்து கொள்ள அவளுடன் ஸெஷன்களை தொடர்ந்தேன். எடுத்த உடன், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் செய்வது அவள் பெற்றோருக்குப் புதிது அல்ல என்றாள். அம்மாவும் இவ்வாறே செய்து கொண்டாளாம். இப்படிச் செய்து கொண்டதை மிகப் பெருமையாக அவளிடம் அம்மா சொல்லிக் கொள்வாள். அதே போல நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடமும்.
கேட்கக் கேட்க வாயைப் பிளந்து அம்மாவை ப்ரீதம் பார்ப்பாளாம். பாட்டியுடன் உறவைத் துண்டித்து விட்டிருந்தும் அம்மா கவலை இல்லாமல் இருப்பதைப் பார்த்து, இவ்வாறு செய்வது தப்பில்லை என ப்ரீதம் எடுத்துக் கொண்டாள். அவளுடைய இந்த முடிவைப் பல கோணங்களில் ஆராய்ந்தோம். தன் உள்மனத்தின் தூண்டுதலைப் ப்ரீதம் புரிந்து கொண்டாள். அவளுக்கு அம்மா போலச் செய்ய வேண்டும், அந்த சந்தர்ப்பம் வந்ததும், தானும் செய்தாள்.
ப்ரீதம் ஒருவர் ஏதேனும் சொன்னால் அது சரி என எடுத்துக் கொண்டு, தனக்குச் சரியா என்று ஆராயாமல் செய்வதைப் பெருமையாகக் கூறினாள். அதிலிருந்து பலவற்றை ஆராய, பல ஸெஷன்களில் ப்ரீதம் ஒருவர் நாலைந்து முறை இவ்வாறு செய் என்றதும் “நான் செய்து விடுவேன்” என்றாள்.
எந்த சூழலில் இவ்வாறு செய்வது நன்கு என அவளாகப் புரிந்து கொள்ள, அடுத்த மூன்று வாரங்களுக்குத் தான் எடுக்கும் முடிவுகளின் வழிமுறைகளை, விளைவுகளைக் கவனித்து, குறித்து வரச் சொன்னேன்.
கூடவே, ப்ரேமுடனும் ஸெஷன்களைத் தொடர்ந்தேன். குமார் சாரைச் சந்தித்தேன். பலமடங்கு ப்ரீதமிடம் கண்ட மாற்றத்தை விவரித்தார்.
ப்ரேம் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பகிர, அவனுடைய தவிப்பு தெளிவானது. குறிப்பாக நெருக்கமான இரு தோழர்களும் பிரேமை ப்ரீதம் வயது வித்தியாசமாக இருந்ததைப் பற்றி உஷார் செய்தார்கள். இங்கிருந்தே ஸெஷன்களை ஆரம்பித்தேன்.
அதன் தாக்கத்தைக் கவனித்த தருணங்களைக் குறித்து எழுதினான். அதை ஆராய, ப்ரேம் தன்னைவிட ப்ரீதம் யோசிக்கும் விதத்தில், புரிதலில் சில வித்தியாசங்களைக் கவனித்ததாகச் சொன்னான். அவர்களுக்கு அது சாதகமாக இருந்ததாம். தனக்கு ஏன் இவ்வகையான முதிர்ச்சி இல்லை என்று வினவினான். சில கட்டுரைகளைப் படிக்கப் பரிந்துரை செய்தேன். தான் விதிவிலக்கு அல்ல எனப் புரிய, ஆண்களைவிடப் பெண்கள் உளவியல் ரீதியாக முதிர்ச்சி சீக்கிரமே பெறுவார்கள் என்றதை அறிந்ததும் ஆறுதல் பெற்றான்.
அதற்குள் வருடத்தின் அரைப் பரிட்சை வந்து விட்டது. அது முடிந்ததும் ப்ரேமுக்கு ஒரு நிறுவனத்தில் தினந்தோறும் நான்கு மணிநேரம் வேலை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஸெஷன்களுக்கு வருவது கடினமானது. அவன் சுயத் திறனை மேம்படுத்த விரும்பினான். அதற்கான பல வழிகளைப் பட்டியலிட்டு, எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்துவது என்றதையும் நிர்ணயித்துக் கொண்டோம். வகுப்பு முடிந்த கையோடு வேலைக்குச் சென்று விடுவான். சிறிய ஸ்டைப்ஃண்ட் கிடைத்ததில், முக்கால் பணம் வீட்டிற்குக் கொடுத்து மீதியை தன் குடும்பத்திற்கும் சேமிக்க ஆரம்பித்தான்.
காலத்தவணை முடிந்ததும் தான் எடுத்துக் கொண்ட பயிற்சி தாள்களுடன் ப்ரீதம் வந்தாள். வந்ததும் தனக்கு அரசாங்க வேலை அழைப்பு வந்ததை மகிழ்ச்சியாகக் கூறினாள். வேலை இடம் சில நாட்களில் தெரியவரும் என்றாள்.
பட்டியலில் முதன்முதலில், தான் சோப் வாங்கியதே விளம்பரத்தால் எனத் துவங்கினாள். முடிவுகள் எடுக்கும் விதத்தைக் கவனித்ததை, அதில் எவ்வாறு தான் சிந்திக்காமல் மற்றவர்கள் சொன்னதால் செய்தாள் என்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாள். அவளது கணக்குப்படி மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது நன்கு. ஏற்றுக் கொள்ள வேண்டும். தம் சூழலுக்கு எவை உதவும் என எடை போடாததே சிக்கலானது. சிந்தனை செய்யும் விதத்தில் குறிப்பாக “க்ரிடிக்கல் தின்க்கிங் (critical thinking)” உள்ள பாதிப்பைப் பார்க்க வரும் ஸெஷன்களில் துவங்க முடிவானது.
ப்ரீதம் மறுபடி வருவதற்குக் காத்திருக்கையில் ஒரு நாள் என்னை ஆண்-பெண் ஜோடி ஆலோசிக்க வந்தார்கள்.
அவர்கள் பெண் வருவதாக இருந்ததாகவும் அவளை வீட்டில் விட்டுவிட்டு அவசரமாகத் தகவல் ஒன்றைப் பகிர்வதற்குத் தாம் வந்ததாகவும் சொல்லி, தங்களை அபிநயா-ராஜா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். தற்போது தங்களது மகள் முதுகலைப் பட்டத்துப் பரீட்சை முடித்துவிட்டு அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாகத் தெரிவித்தார். கல்யாணப் பேச்சை எடுத்தால் கூச்சல் சத்தம் போட்டு பேச்சைத் திசை மாற்றி வைக்கிறாள், ஒருவனைக் காட்டி கணவன் என்று சொல்கிறாள் என்றார். உடனடியாக இதை மாற்றி அமைக்க கௌன்சலிங் உபயோகப் படும் என நினைத்து மகளை என்னிடம் அழைத்து வருவதாகச் சொன்னார்கள். பெற்றோரின் ஆதங்கம் புரிந்தாலும் அதில் நாங்கள் ப்ரோஃபெஷனலாக அணுகுவதைப் பற்றி விவரித்தேன்.
பெண்ணின் பெயர் சொன்னதும் ப்ரீதமின் பெற்றோர் தான் எனப் புரிந்து கொண்டேன். அவளை நான் அறிந்த விஷயத்தை எங்களது துறையின் விதிமுறைகள் பிரகாரம் பகிரவில்லை. ப்ரீதம் இங்கு வருவதை அவளாகப் பகிர விட்டு விட்டேன்.
அபிநயா, ராஜா தவறான எதிர்பார்ப்பை வைக்கக் கூடாது என்பதற்காக எங்களது செய்முறையை எடுத்துக் கூறினேன். அபிநயா, ராஜா தங்களது மொழியில் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அந்த மொழி எனக்குப் பரிச்சயம் இல்லை. அபிநயா தனது தாயாரின் சாபம் தான் ப்ரீதம் கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்ளாததிற்குக் காரணம் எனத் தான் நம்புவதாகக் கூறினாள். அம்மா சொன்னது நினைவு வர, அது பயத்தைத் தருவதாகக் கூற, ராஜா தலையைத் தீவிரமாக ஆட்டி ஆமோதிப்பதைத் தெரிவித்தான்.
அபிநயா தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். பட்டப்படிப்பை இரண்டாவது வருடத்தில் நிறுத்தி கொண்டாள். வீட்டில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தான் விரும்பியவனைத் திருமணம் செய்து கொண்டதால் இப்படி. வீட்டில் ஏழு மாதத்திற்குப் பிறகு அவள் கழுத்தில் தாலியைப் பார்த்து வெலவெலத்துப் போனார்கள். அபிநயா வீட்டை விட்டு வெளியேறினாள். ராஜா, அபிநயா குடும்பங்களின் இடையே இருந்த நட்பு உறவு முறிந்தது.
தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர, சம்பாத்தியத்திற்காகச் சிறு தொழில்கள் செய்வதாக அபிநயா கூறினாள். கணவர் ராஜா நீதிமன்றத்தில் வரும் நபர்களுக்கு உதவி செய்து சம்பாத்தியம். இதுவரை இருவரின் பெற்றோர், சகோதரர் சகோதரிகளிடம் உதவி கேட்கவில்லை. அவர்களுக்கு ப்ரீதமை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துக் காட்டக் காத்திருந்தார்கள். இது அனைத்தையும் அபிநயா ராஜாவின் நண்பனான சுதீப் அறிந்திருந்தான். தேவையில்லாமல் தலையிடாதவன்.
மறுநாள் வரும்போது ப்ரீதம் என்னை அணுகியதைப் பற்றி இருவரிடமும் விவரித்ததாகச் சொன்னார்கள்.
அபிநயா வியந்து, தன்னைப் பார்த்து ப்ரீதம் திருமணம் செய்ததைச் சொன்னாள். பலமுறை அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றிய புகழாரம் பேச்சு வந்ததைப் பற்றி விளக்கி விவரிக்கச் சொன்னேன். விவரங்களைத் தரத் தர, ராஜா அபிநயா இருவரும் உணர்ந்தார்கள். சிறுவயதிலிருந்தே
குழந்தைகள் முன்னால் தாம் கல்யாணம் செய்து கொண்ட முறை, உறவைத் துண்டித்ததைப் பெருமையாகப் பேச, ப்ரீதம் மனதில் அப்படியே செய்ய ஆர்வம் ஒரு பக்கம். செய்வது தவறில்லை என்றும் எண்ணம். ப்ரீதம் செய்தாள்.
இந்த அறிதலால், முதல்முறையாக அபிநயாவிற்கு தன் அம்மா இதற்குக் குற்றவாளி இல்லை என்ற ஆதாரம் கிடைத்தது. திடுக்கிட்டாள். இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். தன் கணிப்பில், அம்மா சொல்லியவற்றில் ஒன்று நடக்கவில்லை என்பதைத் தினமும் ஒன்று நினைவு படுத்தி, அதைப் பற்றி முழுமையாக எழுதப் பரிந்துரை செய்தேன். செய்து வருவதாகக் கூறினாள்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு வந்தார்கள். பல தாள்களில் ஐம்பது சம்பவங்கள் விவரத்தைக் குறித்து. அனைத்தும் நண்பன் சுதீப் அறிந்ததால் கையோடு அவனையும் அழைத்து வந்தார்கள். பல வாரங்களுக்கு இவற்றை அலசி ஆராய்ந்து வருகையில், அபிநயா முதலில் புரிந்து கொண்டது போல ஆரம்பித்து, பிறகு அம்மா மீது பழி சுமப்பது தொடங்கியது. இதில், பலமுறை சுதீப் தெளிவுபடுத்த, அவன் விளக்கத்தைத் தருவதை ராஜா தடுத்தான். கணவனை அபிநயாவும் ஆமோதித்தாள். அபிநயா தனக்குத் தோன்றியதை உடும்பு பிடியாகப் பிடித்திருந்தாள்.
இந்த கட்டத்தில் அபிநயா மீண்டும் கர்ப்பிணி ஆனாள். முதன்முறை அம்மாவிடம் போய் இந்த செய்தி சொல்லி, என்னைப் பார்ப்பதையும் பகிர்ந்தாள். கோபம் பொங்க, அம்மா, தன்னை உதறிவிட்டுப் போன ரணம் ஆரவில்லை என்றும் அவளுடைய செயலால் அபிநயாவின் தங்கைக்குக் கல்யாணம் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கத்தையும் சொல்லித் துரத்தி விட்டதாகச் சொன்னாள்.
மருத்துவர் அபிநயாவை ஓய்வு எடுக்கப் பரிந்துரைத்தார்கள். பிரசவம் வரை ஸெஷன்களுக்கு வருவது கடினம் என்றார்கள். இப்போதைக்கு வீட்டை ப்ரீதம் பார்த்துக் கொள்கிறாள் என்றார்கள். அவளுக்கு வெளியூரில் அரசாங்கப் போஸ்ட்டிங் வந்துவிட்டது. போகவேண்டிய நிலை. நாளடைவில் ப்ரீதம் சென்ற
ஆனால் ப்ரேம் இது அவர்கள் குடும்பமாக வாழப் பாதிக்குமோ எனப் பயந்தான். அடுத்த மூன்று மாதத்திற்கு அம்மாவைப் பார்த்துக்கொள்ள வாராவாரம் ப்ரீதம் வந்தாள். ஏனோ அபிநயாவிற்கு ப்ரீதம் இங்கு வருவதால் கருவைப் பாதிக்கிறது என்று எண்ணி, அவள் வருவதை நிறுத்திவிட்டாள். இதுவரை ப்ரீதம் திருமணத்தை மறுத்த அபிநயா-ராஜா, வரும் குழந்தை ஆண் என எடுத்துக் கொண்டார்கள். ப்ரீதம் போனால் போகட்டும் என்றார்கள். சுதீப் தகவல் பகிர்ந்து, என்னைப் பார்க்க மறுப்பதை வருத்தத்துடன் சொன்னான். சுதீப்பை சமாதானம் செய்து, ஒருவருக்கு அந்த தயார் நிலை இல்லையேல் என்றால், அவர்களுக்குத் தன்னைப் பற்றிய புரிதல் பெறுவது கடினமான காரியம் என்றதை விவரித்தேன்.
ப்ரீதம், ப்ரேம் நிலைமையில் மாறுதல் ஏற்பட்டது. ப்ரேம் படிப்பு முடிக்கும் கட்டம். நகரத்தில் நல்ல வேலை கிடைத்தது. கூடவே பாட்டுப் பாடப் பல வாய்ப்புகள் குவிந்தன. இதுவரை குறித்தபடி ஸெஷன்களுக்கு வந்து கொண்டிருந்தது தடைப்பட்டது.
இந்த காலகட்டத்தில், ப்ரீதம் அங்கே ப்ரேம் இங்கே என்ற நிலை நிலவியது. ப்ரீதம் வேலையை விடத் தயாராக இல்லை. ப்ரேம் வாய்ப்பை விட்டு குக்கிராமத்தில் வாழ விருப்பப்படவில்லை. இருவர் மனதிலும் பல குழப்பங்கள் அலை மோதியது. உறவில் கீறல் விழுந்தது.
ப்ரீதம் எந்த நாள், நேரம் சொல்கிறாளோ அதை மனதில் வைத்தே ப்ரேம் ஸெஷன் நேரம் குறித்தான். அப்படியும் ப்ரீதம் வருவது கடினம் எனக் காரணம் சொல்லி விடுவாள்.
ப்ரேம் நேரத்திற்கு வந்துவிடுவான். ப்ரீதம் வருவதற்குக் காக்கும் நேரத்தில் முன்னாளில் விட்ட இடத்தில் மறுபடி அவனுடைய திறன்களை மேம்படுத்தும் வழியைப் பார்த்து வந்தோம்.
திறனைக் கூட்ட தன் பெற்றோருடன் உறவைச் சீர்திருத்த விரும்பினான். சமூகத்தில் மிகப் பிரபலமானவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த இடைஞ்சலும் தரவில்லை.
தான் கல்யாணம் செய்ததால் நிலவிய கசப்பைப் போக்க விரும்பினான். அவன் செய்ததைப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம். தெளிவு பிறக்க, நல்ல முன்னேற்றம் தென்பட்டது.
இது போய்க் கொண்டு இருக்க, ப்ரீதம் ப்ரேம் ஒன்றாகப் பார்க்கும் நாட்களில் ப்ரீதம் வருகைக்கு ப்ரேமால் காத்திருக்க முடியவில்லை. அவள் வருவதற்கு நேரம் ஆகும். வேலையிலிருந்து கிடைத்த ஒரு மணி நேரத் தவணை முடிவடையும். அரை மனதுடன் கிளம்புவான். அவன் சென்று இரண்டு மணிநேரத்திற்குப் பின் தாமதமாக தொலைப்பேசியில் ப்ரீதம் வரமுடியாததை என்னிடம் சொல்வாள். எதுவும் கேட்பதற்கு முன் துண்டித்து விடுவாள். இது ஐந்தாறு முறை நடந்தது.
அன்றும் அதே மாதிரி. யாரோ கதவைத் தட்டி உள்ளே வந்ததும், ப்ரேம், “மா அப்பா” என்றபடி நின்றான். அப்பா அவனை அணைத்து “மன்னிக்கவேண்டும் மேடம், இவனுடைய அம்மா அப்பா. கூட்டிட்டு போரோம்”. அவனைப் பார்த்து “என்னடா இதெல்லாம்? வாடா வீட்டுக்கு” அழைத்து வெளியில் சென்றார். மறுநாள் ப்ரேம் அப்பா திரும்ப வந்து, “தப்பா நினைக்கவில்லையே? ப்ரேம் நல்ல பையன். முன்பைவிடத் தெளிவு, காண்பிடன்ட், தாங்க யூ” சொல்லிக் கிளம்பினார்கள். ப்ரேமோ ப்ரீதமோ திரும்பி வரவில்லை.
******************************************