சரித்திரம் பேசுகிறது! –யாரோ

ராஜராஜன்- காந்தளூர்ச்சாலை

No photo description available.இராஜராஜனை நாயகனாக வைத்து கதை சொல்வது என்பது –  
ஜவ்வாது மேடையில் அமர்ந்து,
சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிய,
முக்கனியை தேன் அமுதத்தில் தோய்த்துச்
சுவைக்கும் அனுபவம் தான்!
சரித்திரத்துடன் கொஞ்சம் சொந்தச்சரக்கையும் சேர்த்து ஒரு விருந்து சமைப்போம்.

வருடம் கி பி 977

காந்தளூர்ச் சாலை இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் ‘வலிய சாலா’ என்னும் இடம். இது, அக்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கினார்கள். போர்க் கலைகள் மட்டுமின்றி போர் நுட்பங்களும், வியூகங்களும் கற்பிக்கப்பட்டன. வில்வித்தைப் பயிற்சி, களறிப்பயிற்சி, வர்மம் ஆகிய போர்க் கலைகள் போதிக்கப்பட்டன. இவற்றோடு ராஜாங்க நிர்வாகமும் பயிற்றுவிக்கப்பட்டது. நுட்பமான போர்த் தந்திரங்கள், தற்காப்புக் கலைகள், தாக்கும் நுட்பம் ஆகியவை அங்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில் இது போன்ற போர்ப் பயிற்சிக் கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. இங்கு வருடந்தோறும் போர் விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

அது அந்த வருட இந்திரவிழா நாள்.

காந்தளூர்ச்சாலையில் போர்ப்போட்டிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அப்போட்டிகளில், வெற்றிதனை மட்டுமே அடைந்து வந்தான் ஒரு வீரன்.
‘இந்த மாறனை வெல்பவர் யார்?’ – என்று விழாத்தலைவர் கூவினார்.
சில நொடிகள் கூட்டத்தில் அமைதி!

“‘நான் சற்றே சண்டையிட்டுப் பார்க்கலாமா?” என்ற குரல் கேட்டது. கூட்டத்திலிருந்து ஒரு வீரன் வந்தான். அவன் முகத்தில் சிவப்பு முகமூடி இருந்தது. கண்கள் மட்டும் அதன் நடுவே பளிங்கு போல பிரகாசித்தது.
கூட்டத்தில் உற்சாகம் கொப்பளித்தது.
விழா நடுவர் “சரி இரண்டு பேரும் சண்டையிடட்டும். இது வாட்போர். ஆயினும், இது வெறும் போட்டி மட்டும் தான். யாரும் யாரையும் கொல்லக்கூடாது. ஒவ்வொரு வீரனின் உயிரும் அவரவர் நாட்டைக் காப்பதற்குக் தேவை! நினைவிருக்கட்டும்.” என்று அறிவித்தார்.

வாட்போர் தொடங்கியது. மாறன் அந்த காந்தளூர்ச்சாலைப் பள்ளியின் மிகச்சிறந்த மாணவன். அவனது புகழ், சேர, சோழ, பாண்டிய நாடெங்கும் பரவிக்கிடந்தது. பாண்டியன் அமரப்புயங்கன் மாறுவேடத்தில் வந்து அந்தக் கூட்டத்தில் இருந்தான். பாண்டியப்படைக்கு வீரர்களை இந்தப்பள்ளியிலிருந்து தெரிவுசெய்ய வந்திருந்தான். இந்த மாறனைத் தனது பாண்டிய சைனியத்தில் ஒரு உபதளபதியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவனிருந்தான்.

போட்டி தொடங்கியது.

இருவரும் சமமாகவே போரிடுவது போலத் தோன்றியது. ஒரு நாழிகை இருவரும் சுழன்று சுழன்று வாளை வீசினர். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை என்று போலத் தோன்றினாலும், சிவப்பு முகமூடியான் முடிவில் வென்றான்.
மாறனின் முகம் குன்றிப்போனது. வெற்றி பெற்ற முகமூடியான் மாறனை அணைத்துக்கொண்டு அவன் காதில் ஏதோ சொன்னான். மாறன் – ‘தாங்களா? தங்களிடமா நான் சண்டையிட்டேன்” -என்று தவித்தான். முகமூடியான் தன்  உதட்டில் விரல் வைத்து ‘உஷ்..” என்றான். ‘உனக்கு விருப்பமிருந்தால் எங்கள் படையின் சேரலாம்” என்று சொன்னான்.

நடுவர் முகமுடியானைப்பார்த்து ‘ நீங்கள் இந்த வருட விழாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!. தங்கள் பெயர்?” என்று கேட்டார்.

‘அவர் பெயர் என்னவாக இருந்தால் என்ன? நான் இவரிடம் சற்றே சண்டையிட்டுப் பார்க்கலாமா?” -என்ற ஒரு இன்னொரு குரல் கூட்டத்தில் ஒலித்தது. அவன் ஒரு பச்சை முகமூடி அணிந்திருந்தான். அவன் கண்களில் ஒரு மின்னல் பளிச்சிட்டது.
அவன் குரலோ கணீர் என்றிருந்தது. கூட்டம் உற்சாகத்தில் கூச்சலிட்டது.

சிவப்பு முகமூடியான், வந்தவனைப் பார்த்து: “உனக்கு இன்றைக்கு அதிருஷ்டம் அஸ்தமித்து போலும்” என்று மெல்லச்சிரித்தான் .

பதிலுக்கு, பச்சை முகமூடியான் சிரித்திருந்தான்.  அதை அவனது முகமூடி மறைத்திருந்தது. ஆனால் அவன் கண்கள் அவன் சிரிப்பைத் தடை செய்யவில்லை.

“எனக்கு அதிருஷ்டம் தேவையில்லை.. உனக்கு வேண்டுமானால் இன்று அது நிரம்பத் தேவைப்படுமோ என்னவோ . ஆனால், இன்று உனக்கும் அது உதவப்போவதில்லை” என்றான் பச்சையன்.

நடுவர் ‘போட்டி தொடங்கட்டும். புதியவர் தனக்கு வேண்டிய ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கலாம்’ என்றார். புதியவன், சிவப்பு முகமூடியானைப் பார்த்து “உனக்கு எந்த ஆயுதம் பழக்கமோ அதிலேயே போரிடலாம்” என்றான்.

சிவப்பு முகமூடியான் “ஆயுதமில்லாமல் சண்டை செய்யலாம்” என்றான்.

“அப்படியே ஆகட்டும்” என்றான் புதியவன்.

இந்தச் சண்டை துவங்கு முன், மாறனின் தோல்வியால் சற்றே துவண்டிருந்த பாண்டியன் அமரப்புயங்கன், ‘சரி..இந்த முகமூடி வீரர்களின் சண்டையைத் தான் பார்ப்போமே’ என்று நினைத்தான்.

‘சபாஷ் .. இது சரியான போட்டி’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். மாறனை அழைத்து ‘மாறா! நீ சிறந்த வீரன்! “என்று சொல்லிவிட்டு அவன் காதில் மெல்ல ஏதோ சொன்னான். ஏற்கனவே ஆடிப்போயிருந்த மாறன் மேலும் திடுக்கிட்டான்.”பாண்டிய மன்னரே! தாங்களா?” என்று திடுக்கிட்டான். மாறனும் அமரப்புயங்கன் காதில் ஏதோ சொன்னான். இப்பொழுது அமரப்புயங்கன் பெரிதாகத் திடுக்கிட்டுப்போனான். “என்ன உண்மையாகவா? அந்த சிவப்பு முகமூடியான் என் நண்பன் சேர மன்னன் பாஸ்கரனா?” என்று மெல்லக் கூறியவன், ”நீ தோற்றதும் தென் தமிழ் நாட்டு மாவீரனிடம் தானே! உனக்கு விருப்பமிருந்ததால் எங்கள் படையில்  சேர்” என்று சொன்னான். மாறன் பாண்டியனுக்கு வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். அங்கிருந்து நகர்ந்தான்.

பாண்டியனுக்கு ஆச்சரியம் அதிகமாயிற்று. சேரனை அறைகூவி நிற்கும் இந்தப் புதிய இளைஞன் யாரோ? என் நண்பன் சேரனுக்குத் தெரியாத வர்மக்கலை ஒன்றுமில்லையே. இந்த முட்டாள் இளைஞன் இப்படி மாட்டிக்கொண்டானே”- என்று அவன் மீது பரிதாபமும் கொண்டான்.

இதுவரை கண்டிராத போர் அங்கு நடந்தது. சேரனின் வர்மக்கலை, களரி எதுவும் புதியவனிடம் ஒன்றும் நடக்கவில்லை. புதியவனும், ஏதோ மாணவனுக்குப் பயிற்சி அளிப்பது போல தற்காப்புப்போர் புரிந்தான். விரைவில் அவனது தற்காப்புப் போர் வலிந்து, தாக்குதலாக மாறத்தொடங்கியது. புதியவனின் பிடியிலிருந்து சேரன் தப்ப முடியவில்லை. சேரன் தோற்றான்!

அமரப்புயங்கன் பேரதிர்ச்சி அடைந்தான். சேரன், புலியிடம் பிடிபட்ட மான் போல ஆனானே!! ‘யாரவன் இந்த இளைஞன்’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.  போரில் தோற்ற சேரன் வெட்கத்துடன் ஓடி அருகிலிருந்த தன் குதிரை மீது ஏறிப் பறந்தான்.

மாறனுக்கும் ஆச்சரியம் தாளவில்லை. தன்னை வென்ற மாவீரன் சேரனை வென்றது யாரோ என்றாவலில், புதியவன் அருகில் சென்று அவனைப்பாராட்ட கை நீட்டினான். புதியவனும் கைநீட்டினான். அந்தக்கரங்களைப் பார்த்த மாறனின் தலை கிறுகிறுத்தது. மனம் பதைபதைத்தது. அதிர்ச்சியில் சிலையாக சில நொடிகள் நின்றான். இந்தச் சங்கு சக்கர ரேகையுள்ள கரங்கள் தென்னிந்தியாவிலே பொன்னியின் செல்வருக்கு மட்டுமே உள்ளது என்பது தென்னிந்தியாவில் பிரசித்தமான செய்தி. புன்னகை கண்களில் தெரிய அந்த பச்சை முகமூடியான், ‘மாறா! சோழநாட்டுப் படையில் சேர்வாயா?. எங்கள் நண்பனாக வா! என்னுடன் சேர்ந்து பொன்னுலகம் புனைவோம்’ என்று கூறியவன் – கண்ணிமைக்கும் நேரத்தில் தன் குதிரையின் மீது ஆரோகணித்துப் பறந்தான். அருகிலிருந்த குதிரையில் காத்திருந்த மற்றொருவரும் இளவரசன் குதிரையைத் தொடர்ந்தார். அது நமக்குப் பரிச்சயமான ஒரு வீரர் தான். ஆம். வல்லவரையர் வந்தியத்தேவர் தான்.

பாண்டியன் அமரப்புயங்கன் ‘மாறா! யாரவன்” என்று அமைதியாகக் கேட்க, மாறன் “மன்னா! அது சோழ இளவரசன் அருண்மொழித் தேவன்” என்றான் மெல்ல. அமரப்புயங்கன் திகைப்பூண்டை மிதித்தவன் போனானான். “என்ன அருண்மொழியா?” என்று திகைத்தான்.

இனி மாறனின் சிறுகதை:

மாறன் தஞ்சையில் பிறந்திருந்தான். மதுரையில் வளர்ந்திருந்தான். சேர நாட்டு உதகையில் பள்ளி பயின்றிருந்தான். சேர, சோழ, பாண்டிய நாடு அனைத்திலும் எல்லா இடங்களுக்கும் போயிருந்தான். இன்று தமிழ் நாட்டின் மூவேந்தரையும் இந்தக் காந்தளூர் சாலையின் போரின் விளிம்பில் காண்பது என்னே பாக்கியம் எனறு வியந்தான். அந்த மூவரும் தன்னை தங்கள் படையில் சேர அழைத்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. சேரனிடம் தோற்றதைக் கூட சற்று மறந்தான்.

மாறன் ஒரே நொடிதான் யோசித்தான். பொன்னியின் செல்வர் மீது மனம் தாவியது. அருகிருந்த அவனது குதிரையில் தாவினான். பொன்னியின் செல்வர் குதிரை சென்ற இடம் நோக்கிப் பறந்தான். பொன்னியின் செல்வர் குதிரையில் சென்று கொண்டே “வந்தியத்தேவரே! இந்தக் காந்தளூர்ச் சாலையை நான் நன்கு சுற்றிப்பார்த்தேன். இவ்வளவு பயிற்சிபெற்ற வீரர்களை சேர-பாண்டியர்கள் அடைவதால்தான் – நமது சோழப்படைக்குத் தோற்றும், மீண்டும் மீண்டும், அவர்கள் துளிர்த்து ஆலமரம் போலத் தழைத்து நம்மை எதிர்த்து வருகிறார்கள். நான் அரசனானால் செய்யப்போக்கும் முதல் காரியம் ‘இந்தக் காந்தளூர்ச் சாலையைக் கலமறுப்பது தான்” என்றான் அருண்மொழி. அதற்குள் மாறனும் அவர்களை நெருங்கி வந்தான். அருண்மொழி அவனை வரவேற்றான். மாறன் சில ஆண்டுகளில் தமிழகத்தைக் கலக்கப்போகிறான் – மற்றும் ராஜராஜனின் புகழ் பரவ அவன் காரணமாகப் போகிறான் – என்பதை அன்று யாரும் ஊகிக்க முடியவில்லை. அவற்றை விரைவில் பார்ப்போம். 

இராஜராஜ சோழன் ஒரு ‘நாயகன்’. அதிலும் ‘உலகநாயகன்’. தமிழகத்தின் தளபதி! மன்னாதி மன்னன்! சூப்பர் ஸ்டார்! அவன் கதையை மேலும் அசை போட்டு சுவைப்போம்!

One response to “சரித்திரம் பேசுகிறது! –யாரோ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.