திருப்பூரில் புலி – எஸ் எஸ் -யாரோ -வசவுராஜ்

இது ஓர் இலக்கியக் குறிப்பு குழு! வாட்ஸ் அப்பில் இருப்பது! தினமும் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பதிவுகள் பதிவாகும் . ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுதான் இதன் நோக்கமோ என்று பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் வரும்.

அட்மின் ஓர் அப்பிராணி! அவர் சொல்வதை மற்றவர் மட்டுமல்ல அவரே கேட்கமாட்டார். இவர் தொல்லை பொறுக்க முடியாமல் வாட்ஸ் அப்பை விட்டே போனவர் பலர்.

யார் அந்த முதுகெலும்பில்லாத அட்மின் என்று கேட்கிறீர்களா? அடியேன்தான்.

இன்னொரு முக்கியமான செய்தி. இதற்கும் குவிகம் இலக்கியத் தகவலுக்கும் சம்பந்தமில்லை ! சம்பந்தம் இருப்பதாகத் தோன்றினால் அது தற்செயலாக ஏற்பட்டதே தவிர வேறொன்றும் இல்லை பராபரமே!

இப்பவாவது விஷயத்துக்கு வருவோம்.

ஒருநாள் என் மாமியார் வீட்டுக்குப் (கே கே நகர்தான் )போய்விட்டுத் திரும்பும்போது மனைவியை விட்டுவிட்டு என் மந்தைவெளி வீட்டுக்கு. புறப்பட்டுவிட்டேன்.. வரும்போது பஸ்சில் செம கூட்டம். இறங்கி பாக்கெட்டில் கையைவிட்டால் கைபேசியைக் காணோம். பக்கத்தில் அண்ணாச்சி கடைக்குப்போய் அவர் போனை வாங்கி என் போனுக்கு டயல் செய்தேன். மூன்று முறை முயற்சிசெய்தும் யாரும் எடுக்கவில்லை. என் BP அதிகமாகிக்கொண்டே போனது. நாலாவது தடவை அடித்ததும் எனக்குத் தெரிந்த குரல் கேட்டது. என் மனைவிதான். ‘போன் தொலைஞ்சு போச்சோன்னு நினச்சேன். உன்கிட்டதான் இருக்கா அப்பாடா ‘ என்று பெருமூச்சு விட்டேன்.

‘நீங்க கிளம்பும்போது நான்தான் விளக்கமா சொன்னேனே ! என் போனை நம்ம வீட்டில மறந்து வைச்சுட்டேன். உங்க போனை இங்க வைச்சுட்டுப்போங்க! நாளைக்குக் கொண்டு வரேன்னு’ நீங்களும் சரின்னு சொன்னீங்களே ! மறந்து போச்சா? என்று கேட்டாள். அவள் சொன்னமாதிரி ஞாபகம் இல்லை.

ஆனால் அந்த ஒருநாள். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாகிவிட்டது.

மறுநாள் மாலை என் சகதர்மிணி வரவை – மன்னிக்கவும் என் செல்போன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.உள்ளே நுழையும் போதே. ‘உங்களைக் கைது பண்ணப் போறாங்களாமே ? உங்க போனில ஒரு எஸ் எம் எஸ் வந்திருக்கு’ என்று மிகவும் கேஷுவலாக சோல்லிவிட்டு போனை என் மூஞ்சியில் கிட்டத்தட்ட விட்டெறிந்து விட்டு உள்ளே போனாள் என் அருமை பத்தினி.

போனை வாங்கி அவசர அவசரமாகப் பார்த்தேன். ‘ உங்கள் இலக்கியக் குறிப்பு வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஆகிய நீங்கள் தேசத் துரோகம் மற்றும் சைபர் கிரைம் ஆகிய இரண்டு குற்றங்களைச் செய்திருக்கிறீர்கள் ! நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால். உங்களைக் கைது செய்ய நேரிடும் –எனவே இன்னும் 24 மணி நேரத்தில் நேற்றைய வாட்ஸ் அப் பிரிண்ட் அவுட் ஒன்றை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவும்” – கமிஷனர் சைபர் கிரைம்

நான் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.

இலக்கியத் தகவல் வாட்ஸ் அப்பை பய பக்தியுடன் திறந்தேன். நேற்று மட்டும் 247 பதிவுகள். இதுக்கே அட்மினைக் கழுவில் ஏற்றலாம். அவசர அவசரமாகப் படித்தேன். வழக்கம்போல காமா சோமான்னு பதிவுகள். பயத்தில் படித்ததால் ஒன்றும் புரியவில்லை. பிரிண்ட் அவுட் ஒன்று எடுத்து நிதானமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அந்தப் பதிவுகளை இங்கே தந்திருக்கிறேன். அவசர அவசரமாக பிரிண்ட் எடுத்ததால் யார் பதிவிட்டது என்ற பெயர் வரவில்லை. பெயரா முக்கியம் ? என்ன எழுதியிருக்கிறார்கள் என்னை அரெஸ்ட் செய்யும் அளவிற்கு ?

1. திருப்பூரில் புலி இருந்ததாமே ! ( இதுதான் ஆரம்பம் )

2. அது புலித் தோல் போத்திய பசுவாக இருக்கலாம்

3. புலி என்றதும் எனக்கு அசோகமித்திரன் எழுதிய புலிக்கலைஞன் கதை ஞாபகம் வருகிறது
4. புலி பக்கோடா தின்ற கதையா
5. அந்தப் புலிக் கலைஞன் ஆக நடிக்க ஆசை என்று நாகேஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
6. புலியைக் கொன்று விடுவோம் என்ற தலைப்பில் அடுத்த வாரம் கவிதைக் கூட்டம் நடைபெறும்
7. என்னது?
8. சாரி புலியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில்
9. புலிக் கவிதையில் பிழையா அது சொற்குற்றம் அல்ல! பொருள் குற்றம்.
10. வாட்ஸ் அப்பில் எழுதினால் எதுவும் குற்றம் ஆகாது. திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார் ‘பொய்மையும் வாட்ஸ் அப் உடைத்து’ என்று
11. திருக்குறளில் புலி என்று 3 தடவை வருகிறது
12. அது தவறான தகவல்
13. வந்த புலிக்குக் காய்ச்சல் ஏதாவது இருக்குமோ? அதுதான் புலிக்காச்சலா?
14. இதோ என் புலிக் கவிதை!
புலிக்குப் புள்ளி உண்டு
மானுக்குப் புள்ளி உண்டு
புலி மானை உண்டால்
.
15. எதற்காக கடைவரியில் வெறும் புள்ளி .
16. அது வெறும் புள்ளி அல்ல முற்றுப்புள்ளி.
17. மானின் கதை முடிந்தது என்பதைப் படிமமாகக் கூறியுள்ளார்.
18. இந்தக் கவிதையில் முதல் மூன்று வரிகளை எடுத்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.
19. மொத்தமே மூன்று வரிகள்தானே . அப்போது ஒன்றுமே இருக்காதே
20. இல்லை முற்றுப்புள்ளி மட்டும் இருக்கும். அது தனியே பேசும்
( இதற்குப்பின் 195 பதிவுகள் . புலிக்கவிதையைப் பாராட்டி -திட்டி விமர்சகர்களைப் பாராட்டி திட்டி பாராட்டுக்கு நன்றி கூறி நன்றிக்கு நன்றி கூறி.! ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டார்களே தவிரத் தேசத்தையோ அரசையோ யாரும் திட்டவில்லையே .. மேலே தொடருவோம்)
21. திருப்பூரில் புலி என்று சொல்லியிருக்கிறார். அதை விடுத்து புலிக் கவிதை என்று புதுக் கவிதைக்குப் போய் விட்டீர்கள். கள் தோன்றி சாராயம் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த ‘குடி’யின் மரபில் வந்தவர் நாம். இதோ ‘பனியன் போட்ட புலி’ என்ற ஈற்றடியில் நான் எழுதிய நேரிசை வெண்பா . என் முக நூலில் பதிவிட்டிருக்கிறேன். அதன் லிங்க் இதோ.. ( இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ/)
22. பாரதி சொல்லாத புலிப்பாட்டா? ‘தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய் நன்நெஞ்சே’ என்று புலிக் குரலில் பேசுகிறான் பாரதி
23. புலிகளைப் பற்றி இத்தனை வரிகளா இது என்ன வரிப்புலியா? இந்தத் தன்மானச் சிங்கம் இனி இந்தத் தளத்தில் இருக்காது. புலி நடப்பு – வெளி நடப்பு செய்கிறேன்.
24. (999999999 left)
25. திருப்பூரில் புலியா ? சான்ஸே இல்லை. பெரிய பூனையாகத்தான் இருக்கும். புலியும் பூனையும் ஒரே ஜாதி தானே?

26. இதிலும் ஏன் ஜாதிப்பிரச்சினையைக் கொண்டு வருகிறீர்கள்? புலியும் பூனையும் ஒரே இனம். தமிழ் இனம். தமிழ் இனத்தைக் குறை சொல்வோர் கைபர் போலன் கணவாய் வழியே திரும்பப் போகட்டும்.

27. நான் என்ன புலி ஹிந்தி, பூனை தமிழ் என்றா சொன்னேன்?

28. ஒரே ஜாதியாக இருந்தாலும் புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?

29. ஏன் அம்மாவாசைக்கும் அப்துல் கலாமுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?

30. அப்துல் கலாம் நாம் மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி பழமொழியில் வருவது அப்துல் காதர்.

31. புலியின் நகச்சுவையை உணர்ந்து இருந்தீர்கள் என்றால் இப்படி நகைச்சுவையாகப் புலியைப் பற்றிப் பேசியிருக்க மாட்டீர்கள்.

32. விடுதலைப் புலி ஐயா அது! உறங்கும் புலியைச் சீற வைக்காதீர்கள் ( இதுவா இருக்குமோ)

33. ஐயோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

34. நீங்கள் சொல்லாவிட்டால் என்ன நாங்கள் அப்படித்தான் புரிந்துகொள்வோம். அதைத் தடுக்க உங்க பாட்டன் வந்தாலும் முடியாது

35. புலி இந்தியாவில் தேசிய மிருகம். அதைக் கேவலமாகப் பேசுபவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தாலும் செய்யலாம். என்பதை இந்தத் தளத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ( இதைக் கொஞ்சம் தீவிரமாக ஆராய வேண்டும்)

36. ஏன் இப்படி இலக்கியக் கூட்டங்களில் எல்லோரும் பதிவு செய்கிறீர்கள்? தேவையானால் ரிஜிஸ்டர்ட் ஆபீஸ் போய் அங்கே பதிவு செய்யுங்கள்.

37. சாரி ஜென்டில்மேன் , உங்கள் அனைத்து விவரங்களும் தவறு. இது ஐயப்பன் பூஜைக்காக .. கட்சிக்காரர் அழைத்து வந்த நிஜப் புலியாம். ( இதுவாக இருக்குமோ?) ஒரு மண்டலம் அது விஜிடேரியன். புல் மட்டும்தான் சாப்பிடுமாம்.

38. புல் சாப்பிடாது . விஜிடேரியன்களை மட்டும் சாப்பிடும்.

39. அந்தக் காலத்தில் புலிப் பல்லைக் காட்டியே திருமணம் செய்வார்களாம். இன்றைக்கு வெறும் பல்லைக் காட்டியே திருமணம் செய்கிறார்கள்.

40. முறத்தால் புலியை அடித்தவர் தமிழப் பெண்மணி!
பனியனால் புலியை விரட்டியவர் திருப்பூர் அம்மணி!

41. இப்போ ஒரு நிருபர் விவரமா இதைப் பத்தி வேறொரு வாட்ஸ் அப்பில்ல சொல்லியிருக்கிறார். புலியை வைத்து ஜட்டி விளம்பரப்படம் எடுக்கப் போறாங்களாம்.

42. எந்தப் பத்திரிகை நிருபர்? தினமலரா? தினத் தந்தியா தினமணியா தமிழ் ஹிந்துவா ? அதை வைத்துக் கொண்டுதான் அது எவ்வளவு உண்மை என்று கண்டுபிடிக்க முடியும்

43. இந்தப் பின்னூட்டம் நேயர் பிடித்த புலிவால் மாதிரி போகிறதே . அட்மின் தூங்குகிறாரா? நான் கரடி மேட்டரைப் போட்டதுக்குக் கரடியாய்க் கத்தினாரே ! இலக்கியக் கூட்டத்தில் புலியை விட்டவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்.

44. ஐயா! நான்தான் தெரியாமல் போட்டுவிட்டேன்.உண்மையில் திருப்பூரில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த புலிக்குத்துப் பல் ஒன்றை ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் கண்டுபிடித்தார்களாம். அதைப் பற்றி வழக்கம் போல நான் கொஞ்சம் கிரிப்டிக் ஆகப் போட்டது தப்பாகிவிட்டது. அதே சமயத்தில் திருப்பூரில் ஒரு கோடவுனில் புலி இருந்தது என்று ஒரு செய்தியும் வந்ததா? கன்யூஷன் ஆரம்பமாகிவிட்டது. இத்துடன் நான் ஆரம்பித்த திருப்பூர் புலிக் கதை முடிவுற்றது. இந்தப் பதிவுகளில் நிறைய ஆட்சேபணைக் கருத்துக்கள் இருந்ததால் சில முன்னாள் நண்பர்கள் (?) இதைவைத்து விவகாரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வந்தது. அட்மின் ஏன் நடுவில் பதிலே போடவில்லை அவரும் ஆட்சேபனைக் கருத்துக்களுக்கு உடந்தையா?

இவ்வளவுதான் பிரிண்ட் அவுட்டில் இருந்தது.

அட்மின் ஆகிய நான் தீர்மானம் எடுத்து குழுவில் பதிவு செய்தேன். இல்லை போட்டேன்.

ஒருநாள் ஒரேஒரு நாள் நான் வாட்ஸ் அப்பில் கலந்து கொள்ளாதது எவ்வளவு பெரிய குற்றமாகிவிட்டது. என்னை அரெஸ்ட் செய்யப் போவதாக மிரட்டல் எஸ்எம் எஸ் வேறு வந்துள்ளது. நான் பனங்காட்டு நரி , எந்த சலசப்புக்கும் அஞ்ச மாட்டேன். ஏனென்றால் என மனைவி மாமியார் இருவரும் லா படிக்காத வக்கீல். அதுமட்டுமல்ல கேரளா ஹை கோர்ட், வாட்ஸ் அப்பில் வரும் பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பாளி அல்ல; பதிவு போட்டவர்கள்தான் பொறுப்பு என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இது இலக்கியத் தகவல் களம் , மற்ற எதுவும்போடவேண்டாம்’ என்று நான் எருமையாக் கத்தினாலும் யாரும் கேட்கவில்லை. அதனால் நான் இப்போது இந்தக் குழுவைக் கலைக்கப் போகிறேன்.

அதற்குமுன்,

இவ்வளவு பேர் திருப்பூரில் புலியைப் பற்றி விசாரித்ததால் அதைப் பற்றி விவரம் சேகரித்து விரிவான கட்டுரை எழுதும்படி நமது திருப்பூர் நண்பர் வசவுராஜ்  அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவரது கட்டுரை நம் மின்னிதழில் வரும்.

அதைப் போல புலிக்குத்துக்கல் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்து சரித்திரக் கதை ஒன்று எழுதும்படி நமது ஆஸ்தான சரித்திரப் பேராசிரியர் ‘எவரோ” அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதுவும் மின்னிதழில் வரும்.

இத்துடன் இந்த வாட்ஸ் அப் குழு கலைக்கப்படுகிறது.

(குறிப்பு: ‘இலக்கியத் தகவல் மட்டும்’ என்ற புது வாட்ஸ் அப் குழு நாளை ஆரம்பிக்கிறேன். அதில் உங்கள் அனைவரையும் இணைத்துக் கொள்கிறேன். )

எவரோ கதை

திருப்பூரில் புலியைப்பற்றி சரித்திர ஆராய்ச்சி செய்யாலமென்று, திருப்பூர் நூலகத்துக்குச் சென்று ‘(நீலகண்ட) சாஸ்திரி, (சதாசிவ) பண்டாரத்தார்’ என்று எல்லா சரித்திர ஆய்வாளரின் புத்தகங்களைப் படித்து முடித்தேன். அதில் கிடைத்த தகவல் சோழரகளின் புலிக்கொடி ‘இரண்டாம் புலிகேசி’ இவை மட்டும் தான்.

சரி.. நாம் நேரடியாக ஆராய்ச்சியில் இறங்கலாம் என்று முடிவெடுத்தேன். திருப்பூர் பனியன் கம்பெனியிலிருந்து ஒரு வலைபனியன் வாங்கிக் கொண்டேன். திருப்பூர் புலியைப்பற்றி சாஸ்திரி, பண்டாரத்தார் இருவரும் அறியாத ஏதேனும் புதிய கல்வெட்டுகள் கிடைக்கிறதா என்று தேட திருப்பூரில் ‘வலை’ போட்டுத் தேடினேன். வலையில் ஒன்றும் சிக்கவில்லை.

இளங்கோ நகரில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அருகில் ஒரு தடயம் கிடத்தது. கோவிலின் எதிரில் ஒரு வீடு – இரட்டை மாடி.. பச்சை வண்ண சுவர்.. அங்கு ஒரு பெண் ஒரு புலிக்குப் பால் ஊற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டேன். ஆகா.. இதுதான் திருப்பூர் புலியோ? தமிழ்ப்பெண்கள் முறத்தை வைத்துப் புலியைத் துரத்தியது பற்றி சரித்திரம் பேசியது.. பனியனால் புலியை விரட்டிய அம்மணி திருப்பூரில் உள்ளார் என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் புலிக்கே பாலா? அதுவும் கொஞ்சம் மெய்டன் ஓவராக அல்லவா இருக்கிறது. சற்றே அருகில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது. அது புலியல்ல .. பூனையென்று! அட சட்! பாலூற்றின பெண்புலியும் வேறு யாருமல்ல. திருப்பூர் நிருபர் வசவுராஜ் அவர்கள்தான்.

தன் முயற்சியில் சற்றும் தளராத நான் – வேதாளம் மாதிரி அங்கிருந்து புறப்பட்டேன். பெருமாநல்லூர் அருகே பொங்குபாளயத்தில் சிறுத்தை வந்ததாகச் செய்தி வந்தது. முதலில் அது கார்த்தி நடித்த சிறுத்தை படத்தைப் பற்றிய செய்தி அல்ல என்பதை உறுதிப் படுத்திக்கொண்டேன். அடுத்து சுடச்சுட வந்த செய்தி! ‘பிரேக்கிங் நியூஸ்!’ அவிநாசி அருகில் பாப்பான்குளத்திலிருந்து நேரே அந்தப் புலி அங்கு வந்திருந்தது. அங்கு அதன் கழிவு கிடைத்தது. அதை ஆராய்ச்சி செய்ததில் புலிக்கு டயேரியா என்பது நிரூபணமாயிற்று.

வனத்துறையினர் புலியைத் தேடியதில், அதன் எச்சம் தான் கிடைத்தது. பொதுவாகவே, எனகக்கு இலக்கிய அறிவு கொஞ்சம் அதிகம். அதன் காரணமாக, ‘நாட்டில் புலியிருப்பது அதன் எச்சத்தால் அறியப்படும்’ என்று வள்ளுவர் சொல்லியிருப்பதை நான் அங்கு நினைவு கூர்ந்தேன். புலி தென்படாமையால், வனத்துறையினர் ஒரு நூதனமான திட்டத்தை வரைந்தனர். அது என்ன? கண்களில் விளக்கெண்ணை போட்டுத் தேடுவது. பிரச்சினை அங்கு தான் உருவாயிற்று. பொங்குபாளையத்தில் விளக்கெண்ணை கிடைக்கவில்லை. வனத்துறை அதிகாரி கோபப்பட்டுவிட்டார். தன் உதவியாளரைக் கூப்பிட்டு: “யோவ் விளக்கெண்ணை! திருப்பூர் சந்தைக்குப் போய் விளக்கெண்ணை வாங்கிட்டு வாய்யா! விளக்கெண்ணை இல்லாமல் புலியை எப்படிப் பிடிப்பது?”

விளக்கெண்ணை இல்லாமல் புலியைக் கண்டு பிடிக்கத் தாமதமானது. புலியும் ‘அண்ணாத்த ஆடுரார் ஒத்திக்கோ’ என்று கமல் போல அங்குமிங்கும் திரிந்தது.

ஓருவழியாக விளக்கெண்ணை வந்ததோ! வனத்துறையினர் பெருமூச்சு விட்டனரோ!. எல்லா வனத்துறையினரும் தங்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டனர். இப்பொழுது அவர்களுக்கு இப்பொழுது புலி ஒரு சுவருக்குப் பின் மறைந்திருந்தது தெள்ளந்தெளிவாகத் தெரிந்தது.

பிறகு அந்தப்புலியை மயக்க மருந்து தோய்ந்த அம்பினால் அடித்தனர். மயக்கத்தால் புலி விழுந்தது. அதைக் கைது செய்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. புலிக்கு விலங்கு போடுவது அப்படி என்ற ஒரு கேள்வி எழுந்தது. வனத்துறை அதிகாரி அதற்கு அற்புதமான ஒரு பதிலைச் சொன்னார்:

‘புலியே ஒரு விலங்கு.. அதற்கு ஒரு விலங்கு தேவையா?’ என்றார். கூடியிருந்த மக்கள் அனைவரும் கைகொட்டிச் சிரித்தார்கள்!

புலி பிடிபட்ட இந்தச் சேதியை வாட்ஸ்அப்பில் ‘வசவுராஜ்’ மற்றும் இலக்கிய சேதியின் முன்னாள் அட்மின் இருவருக்கும் அனுப்பினேன். அந்தச் செய்தி பின் வருமாறு:

‘விளக்கெண்ணையும் கிடைத்தது .. புலியும் கிடைத்தது”.

உடனே அட்மினிடம் இருந்து பதில் வந்தது.

‘தேசிய மிருகமான புலியைப்பற்றி தவறான செய்தியைப்பரப்பியதற்காக.. கம்பியை எண்ணிக்கொண்டிருக்கிறேன். விரைவில் எண்ணி முடித்து .. ஒருவேளை விடுதலையானால். உங்கள் புலிக்கதையை நிச்சயம் மின்னிதழில் போடுகிறேன்’

நம் கதை வந்தமாதிரிதான் என்று எண்ணிக்கொண்டேன்.

நான் அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போது அட்மினும் ‘கம்பி’யை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

வசவுராஜிடமிருந்து பதில் வந்தது:

‘பூனை என்று இப்ப பால் ஊத்தப்போனேன்.. நிஜமாகவே புலி வந்திருக்கு.’

இன்னொரு புலியா?
திருப்பூரில் புலிக்குப் பஞ்சமில்லை போலும்.

வசவுராஜா கதை :

பூனை என்று நினத்து புலிகக்குட்டிக்குப் பால் ஊத்தினேன். பாலைக்குடித்த பின்னர் வீட்டுக்குள் வந்து சோபாவில் சோம்பல் முறித்து படுத்துத் தூங்கிவிட்டது.

 

 

One response to “திருப்பூரில் புலி – எஸ் எஸ் -யாரோ -வசவுராஜ்

  1. இந்தக் கதையில் (அல்லது கட்டுரையில்) ‘புலி’ என்ற வார்த்தை எவ்வளவு தரம் வந்துள்ளது என்பதைச் சரியாகக் கண்டுபிடித்து அட்மினுக்குத் தெரிவித்தால் 172 மணி நேரத்துக்குள் வரும் முதல் சரியான விடைக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் புலித்தோல் பரிசாக வழங்கப்படலாம் என்றும் சிபாரிசு செய்கிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.