‘
ஓ மை காட்.. அருணாவும், அகிலேஷ¤ம், குழந்தை நிம்-
மியும் ‘எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில்
அட்மிட் பண்ணியிருக்காங்கன்னு’ நேற்றைக்குத்தான் வந்தது
போல் இருக்கு.. ஆனா இரண்டு வாரம் ஓடி விட்டது’ என்றார்
மாதவன்.
‘ஆமாம்..’ என்றாள் அவர் மனைவி மீனாட்சி.
மாதவனும், மீனாட்சியும், மகள் அருணாவும், மாப்பிள்ளை அகிலேஷ¤ம், பேத்தி நிம்மியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘ஆமாம் அப்பா.. நாட்கள் போனதே தெரியலே.. பட், என்ன.. டென்ஷன் மிகுந்த நாட்கள்’ என்றாள் அருணா.
‘ஆமாம்..’ என்றான் அகிலேஷ்.
‘அப்பா… நீங்களும், அம்மாவும் இங்கே வைன்ட் அப் பண்ணி சென்னைக்கு வந்து எங்க கூடவே இருந்துடுங்க..’என்றாள் அருணா திடீரென்று.
‘எஸ் மாமா… அருணா சொல்றது ஸென்ட் பர் ஸென்ட் கரெக்ட்..’ என்றான் அகிலேஷ்.
திடுக்கிட்டு ஒரு நிமிடம் அவர்களையே பார்த்தார் மாதவன்.
‘என்னம்மா.. திடீரென்று… இதப் பார் அருணா.. எனக்காகட்டும்,அம்மாவுக்காகட்டும்.. உடம்பு ஒரு நாள் போல் இன்னொரு நாள் இருக்கிறதில்லே.. வயசாயிடுத்து இல்லையா. ஏதோ பிராப்ளம் கூடவே வந்துட்டிருக்கு..’
‘அதனாலதான் அப்பா நான் இதை ஸஜஸ்ட் பண்ணறேன்.. நீங்க எப்படி இருக்கீங்களோ.. அம்மா எப்படி இருக்காங்களோன்னு டெய்லி அங்கே உட்கார்ந்து கவலைப் பட்டுட்டு இருக்கிறதுக்கு நீங்க எங்க கண் முன்னாலேயே இருந்தால்
ரொம்ப நிம்மதியா இருக்கும் இல்லையா..?’
‘இதோ பாரம்மா.. இப்போ நீங்க ஹாயா பெரிய கவலைகள் ஒண்ணும் இல்லாம காலத்தை ஓட்டிட்டிருக்கீங்க.. நாங்களும் இந்த உடம்போட அங்கே வந்து இருந்தோம்னா உங்களுக்குப் பெரிய தொந்தரவு ஆகிடும்மா..”
‘அப்படி ஒண்ணும் இல்லேப்பா.. சென்னையில் மெடிகல் ·பெஸிலிடீஸ் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி.. அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்..’
சில நிமிடங்கள் யோசித்தவாறு அமர்ந்திருந்தார் மாதவன்.
‘என்ன மாமா… ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்களே..’ என்றான் அகிலேஷ்.
மெதுவாகச் சிரித்தார் மாதவன். ‘அருணா.. அகிலேஷ்.. இதுலே விந்தையான விஷயம் என்னன்னா மனுஷன் வயதாக வயதாக குழந்தையாக மாறி விடுகிறான்.. குழந்தையைப் போல் பிடிவாதங்கள்.. கோபங்கள்.. அடம் எல்லாம்
வந்துடுது..’
‘குழந்தையா மாறினா ரொம்ப ஈஸி தானேப்பா.. நானும் நிம்மியை வளர்த்திட்டுத்தானே இருக்கேன்.. அவளை மானேஜ் பண்ணலியா..? அவள விடவா நீங்க அடம் பிடிக்கப் போறீங்க..’ என்று சிரித்தாள் அருணா.
அவர்களைப் பார்த்து மெதுவாகச் சிரித்தார் மாதவன்.
‘அருணா.. எங்களுக்கு ப்ராக்டிகலா ஒரு வேலையும் இல்லையா.. ஐடில் மைன்ட் ஈஸ் டெவில் வர்க்ஷாப்ங்கற மாதிரி வேண்டாததையெல்லாம் நினைச்சுக்கிட்டே
இருக்கும். அதன் தாக்கம் சுற்றியிருக்கிறவங்களையும் தாக்கும்..’
‘அப்படி என்னதான்பா தாக்கும்?’
‘வயதாகறதாலே உடம்புலே ஹார்மோன், ப்ரஷர் கோளாறுகள் வந்து போகும். சட் சட்டுன்னு ஒண்ணுமில்லா ததற்கெல்லாம் கோபம் வரும். நாங்க ஒரு தடவ சொல்லி நீங்க உங்க மற்ற வேலை பளுவினாலே உடனே செய்யா விட்டால் கோபம் வரும், எரிச்சல் வரும். கத்தத் தோணும். சில நாட்கள் உங்க வேலை பளுவினால் எங்களுடன் பேசாமலே இருக்கலாம். அப்படி இருந்திட்டா ‘பார்த்தியா.. நம்மள அலட்சியப் படுத்தறாங்களோ..’ன்னு தோணும். ஏன் டி.வி.யையே எடுத்துக்கோயேன். எனக்கும், அம்மாககும் சில ப்ரோக்ராம்களைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோணும். சின்னஞ் சிறிசுகளான உங்களுடைய டேஸ்ட் வேறயா இருக்கும். ஒரு நாள் விட்டுக் கொடுப்பீர்கள். ரெண்டு நாட்கள் விட்டுக் கொடுப்பீங்க..பெர்மனன்டா விட்டுக் கொடுக்கணும்னா நேச்சுவரலா உங்களுக்கும் கோபம் வரும்.
அதே போல் நாங்கள் விட்டுக் கொடுக்கணும்னா எங்களுக்கும் கோபம் வரும். மனஸ்தாபங்கள் உண்டாகும். எங்க ரெண்டு பேருக்கும் காதுலே கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. அதனாலே டி.வி.யை கொஞ்சம் பெரிதாக வைத்துக் கொள்ள வேணும். அது படித்துக் கொண்டிருக்கிற நிம்மிக்கும், ஏன் ஏதாவது முக்கியமா வேலை செய்து கொண்டிருக்கிற உங்களுக்கும் சங்கடமாகப் போய் விடும். சொல்லப் போனால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. இருந்தாலும் இப்படியே ஒரு நிர்ப்பந்தத்துலேயே இருக்கணும்னா யாருக்குமே நிம்மதியா இருக்க முடியாது. ப்ரஷர் ஜாஸ்தியாகி ஜாஸ்தியாகி ஒருநாள்
வெடித்துச் சிதறி விடும்.
‘இன்னொரு வயசுக் கோளாறு.. மறதி.. உன்னிடம் ஒரு வேலையைச் சொல்லி இருப்பேன். அரை மணி நேரத்திலே நான் சொல்லி இருந்தது மறந்து விடும். எகெய்ன் சொல்வேன் வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உனக்கு ‘இந்த அப்பா எத்தனை தடவை சொல்வார்’ என்று அலுப்பு தோன்றும். அதை நீ சிறிது கடுமையாக ‘அதைத்தான் சொல்லிட்டீங்களே.. எத்தனை தடவை சொல்வீங்க’ன்னு எரிச்சலோடு சொல்லி விட்டால், என் இதயம் ஒரு நிமிடம் நின்றது போல் ஆகி விடும். சில சமயம் என் இயலாமையை நினைத்து அழுகையே வந்து விடும். உங்களுக்குப் பிடித்த டிஷஸ் எங்களுக்கு ஒத்துக்காது. எங்க பத்தியச் சாப்பாட்டையே நீங்க சாப்பிட்டிருக்க முடியாது.
நாங்க படுத்துட்டிருக்க நேரத்திலே உங்களுக்கு டி.வி.யை அலற விடத் தோணும். நீங்க மும்முரமாக ஆபீஸ், பள்ளி வேலை செய்து கொண்டிருக்கிறபோது எங்களுக்கு டி.வி. பார்க்கலாம்னு தோணும். இதெல்லாம் ப்ராக்டிகலா நடக்கலாம்னு சட்டென்று எனக்குத் தோணின சில விஷயங்கள். மேல்வாரியாப் பார்த்தா உப்புப் பெறாத விஷயங்கள். ஆனால் காலப் போக்கில் ஒருவனுடைய உள்ளத்தையே உலுக்கக் கூடிய விஷயங்கள். இதைப் போல தினப்படி ஏதாவது மோதல்கள் வந்து கொண்டே இருக்கும். போகப் போக எதற்கடா அனாவசியமா இப்படி ஒரு முடிவு எடுத்தோம்னு உங்களுக்கு தோண ஆரம்பிச்சிடும். இதெல்லாம் வேணுமா,,? உங்க நிம்மதி குலையணுமா..?’ என்றார் மாதவன்.
பெரிதாகச் சிரித்தாள் அருணா. ‘நீங்க சொன்ன மாதிரி குழந்தைத்தனமான விஷயங்கள்தானப்பா நீங்க சொன்னதெல்லாம். வயதாக வயதாக உங்களுக்கு குழந்தையின் குணம் அதிகம் இருந்தாலும் நீங்கள் குழந்தையில்லையப்பா.
நல்ல பக்குவம் கொண்ட பெரிய மனுஷன்… என்ன.. நாங்க அந்தக் குழந்தையை சிறிது தட்டி உட்கார வைத்து விட்டு உங்க அடல்ட் குணத்தை எழுப்பணும் பக்குவமாக… அவ்வளவுதான்.. அதையெல்லாம் சமாளிச்சுக்கலாம்.. அப்பா திறந்த மனதோடு உட்கார்ந்து பேசினா தீர்க்க முடியாத பிரச்னைகளே இந்த உலகத்துலே இல்லே…’ என்றாள்.
‘எனக்கும் நீங்க சொன்னதெல்லாம் ஈஸியா மானேஜ் செய்யக் கூடியதுதான்னு தோணுது.. அதனாலே கவலையே படாதீங்க.. பாக் பண்ண ஆரம்பியுங்க.. சென்னைக்கு வந்து எங்களுடனேயே இருந்துடுங்க..’ என்றான் அகிலேஷ்.
ஒரு நிமிடம் அவர்கள் இருவரையுமே மாறி மாறிப் பார்த்தார் மாதவன்.
பின் திடீரென்று. ‘நீங்க ரெண்டு பேரும் வரப் போகும் பிரச்னைகளை பக்குவமா, சுமுகமா தீர்க்கலாம்னு திடமா சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.. ஆனாஎனக்கு ஒரு குறை.. ‘பக்குவமா மானேஜ் பண்ணலாம் நீங்க எங்களோடு வந்துடுங்க’ என்று அகிலேஷின் பாரென்ட்ஸைப் பார்த்து உங்க ரெண்டு பேருக்கும் ஏன்மா சொல்லத் தோணலே.. அவங்களுக்கும் வயசாயிடுச்சு.. அவங்களும் எங்க நிலைமையிலேதானே இருப்பாங்க’ என்றார் மெதுவாக.
சுருக்கென்றது அருணாவிற்கு. ‘ஆமாம்.. இதுவரை நமக்கேன் தோணவே இல்லை.. அகிலேஷின் பாரென்ட்ஸ் அங்கே கிராமத்திலே இருக்கும்போது நாம் மட்டும் எப்படி அவர்களுடன் இருப்பது என்று சங்கடப் படுகிறாரோ அப்பா..’
இந்தத் திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை அகிலேஷ். ‘நான் என்னுடைய பாரென்ட்ஸை நம்முடனே வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னால், அருணா என்னவெல்லாம் பிரச்னைகள் உண்டாகும்னு சொல்வாளோ, அதை அப்ப-
டியே இப்ப மாமா சொல்ல அவள் எல்லாத்தையும் மானேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டா.. ஸோ லைன் ஈஸ் க்ளியர்.. கடவுளே.. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அவர்களும் நம்முடன் இருக்க மாட்டார்களா..’ என்ற ஏக்கம் அவன் மனதிலே இருக்கத்தான் செய்தது.
அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார் மாதவன். அவர்கள் மனதினிலே ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை ஒருவாறு அனுமானித்து கொண்டு, ‘அதற்கும் ஒரு வழிஇருக்கு.. உங்க வீட்டு மாடி போர்ஷன் காலியா இருக்கு இல்லையா.. அதுவும் டூ பெட் ரூம் வீடுதானே.. நீங்க அதை வாடகைக்கு வெளியில் கொடுக்க வேண்டாம்.. நீங்க மாடி போர்ஷனை யூஸ் பண்ணிக்குங்க.. கீழ் போர்ஷனை எனக்கும் சம்மந்திக்கும் விட்டுக் கொடுத்துடுங்க. நாங்க அங்கே இருந்துக்கறோம்.. நீங்க வேலைக்குப் போன டைம்லே எங்களுக்கும் போரடிக்காது.. நாங்களும் பாலிடிக்ஸ், ஸ்போர்ட்ஸ் பத்தி பேசிக் கொண்டு காலத்தை ஓட்டுவோம்.வித் ஒன் கன்டிஷன்..
நாங்க இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிற வாடகையை நிம்மி பேர்லே ஒரு அக்கவுன்ட் ஓபன் பண்ணி மாதா மாதம்டெபாஸிட் பண்ணுவேன்.. அது அவள் கல்யாணத்துக்கும், மத்த விசேஷங்களுக்கும் உதவியா இருக்கும். கூட்டு குடும்-
பமா இருந்தாலும், நீங்க ஆஸ் யூஷ்வல் தனியா மாடியிலே டிஸ்டர்பன்ஸ் இல்லாம இருக்கலாம். அகிலேஷ் நீங்க உங்க பாரென்ட்ஸ் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணுங்க.. எந்த டெஸிஷன் ஆனாலும் எமோஷனலா எடுக்காதீங்க.. ப்ராக்டிகலா முடியுமான்னு யோசித்து முடிவு பண்ணுங்க. கடைசியிலே புலி வாலைப் பிடித்த கதையா இருக்கக் கூடாது.. நல்லா யோசித்து முடிவு பண்ணுங்க..’ என்று சொல்லி எழுந்து அவர் அறைக்குப் போனார். மீனாட்சியும் உடன் சென்றாள்.
‘என்னங்க.. சம்மந்திகள் ஒரே வீட்டில் இருப்பது சரியா வருமா?’ என்றாள் மீனாட்சி சிறிது கவலையோடு.
‘ஏன் வராது மீனாட்சி.. நம்ம சம்மந்திகள் ரெண்டு பேரும் நல்ல மனுஷங்க.. அவர்களுக்கு ஒரே பையன்.. நமக்கு ஒரே பெண்.. வயதாக வயதாக நாம் யாராவது கூட இருந்தால் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். அருணா சொன்ன மாதிரி ஊரிலே பெற்றவங்க எப்படி இருக்காங்களோன்னு கவலைப் பட்டுட்டு இருக்காம, அவங்க கண் முன்னாலே இருந்தா அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும். நமக்கும் கூப்பிட்ட குரலுக்கு நம்மவர்கள் யாரோ இருக்கிறார்கள்னு தைரியமும், ஒரு பலமாகவும் இருக்கும்.. முயற்சித்துத்தான் பார்ப்போமே.’ என்றார் மாதவன்.
ஹாலில் ஏதோ பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார் மாதவன். அருணாவும், அகிலேஷ¤ம் வாயெல்லாம் பல்லாக வந்தார்கள்.
‘அப்பா.. அகிலேஷோடு அப்பா, அம்மா கிட்டே டிஸ்கஸ் பண்ணினொம். அவர்களுக்கு பரம சந்தோஷம். க்ரீன் ஸிக்னல் கொடுத்துட்டாங்க. நாங்க ஊருக்குப் போனதும் ரெண்டு ·பாமிலியையும் ஷிப்ட் பண்ணற வேலைகளைப்
பார்க்கறோம்’ என்று சொல்லியபடி, அம்மாவிடம் விஷயம்
சொல்ல சமயலறைக்குப் போனாள்.
‘மாமா.. தாங்க் யூ வெரி மச்..என்னை ஒரு சங்கடமான, இக்கட்டான நிலையிலிருந்து ரொம்ப சுலபமா காப்பாத்திட்டீங்க..’ என்று மாதவனை அப்படியே அணைத்து கொண்டான் அகிலேஷ்.
மனதிலே உள்ள ஒரு பெரும் அழுத்தம் குறைந்ததால் ஏற்படும் இன்ப உணர்வினால் அவன் உடம்பில் ஒரு சிறு நடுக்கம் தெரிந்தது. இரு கண்களிலும் நீர் தேங்கி இருந்தது.தன்னை அணைத்துக் கொண்ட அகிலேஷின் இந்த இன்ப உணர்வை உணர்ந்து கொண்ட மாதவன் அவன் முதுகை ஆதூரத்தோடு தடவிக் கொடுத்தார்.
மனதிருந்தால் மார்க்கமுண்டு.