மூடிய மண்ணைக் கீறிக் கொண்டு வெடித்தது நெல்மணி. இளந்தளிர் பசுமையாய் முட்டி முன்நின்றது. அது! பனிக்காலம் துளிர்த்த தளிரில் பனிநீர், பட்டை தீட்டிய வைரமாய் மின்னியது. ஞாயிரும் தன் பங்கிற்கு கதிர் வீச்சால் பசுமையை விசாலமாக்கியது. வரப்பில் செல்வோர் வியந்து பார்க்கும் அளவுக்கு வரப்புயர நாற்றுகள் வளர்ந்து நின்றது.
இடுப்பில் மூன்று சுற்றில் ஒரு சிவப்பு அரைஞாண் கயிறு. இரு கால்களுக்கு இடையே வெள்ளை நிற கோவணம். கால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு நாற்றுகளை ஒவ்வொன்றாகப் பறித்து, சிறு சிறு கட்டுகளாய் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் மாயழகு. உட்கார்ந்தபடியே நகர்ந்து நகர்ந்து போய் நாற்றுகளை முழுவதுமாகப் பறித்து முடித்தார். அதன் பிறகு தொழியடித்த நிலமெங்கும் ஒவ்வொரு கட்டாகத் தூக்கி எறிந்தவாறு நின்றார்.
காலை பத்து மணி ஆகிவிட்டது. நடவு நடுவதற்கும் உழவு ஓட்டுவதற்கும் ஆட்கள் வரத் தொடங்கினர். பத்துப் பெண்கள் நான்கு ஆண்கள் என பதினான்கு பேர் வந்து சேர்ந்தனர். இவர் காலை ஆறு மணிக்கெல்லாம் நாற்று பிடுங்குவதற்கு வந்துவிட்டார். அந்த பத்து பெண்களில் மாயழகுவின் மகளும் வந்தாள். அப்பனுக்கு தூக்குச் சட்டியில் கஞ்சியும் மிளகாய் வற்றலும் கொண்டு வந்து கொடுத்தாள். வரப்பின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அதைக் குடித்து முடித்தார்.
ஆண்கள், மாட்டை ஏரில் பூட்டி தொழியடித்தனர். பெண்கள் நாற்றுக் கட்டுகளை எடுத்து இரு கை கூப்பி வருண பகவானை வேண்டி நடவு செய்யத் தொடங்கினார்கள்.
மாயழகுவின் ஒரே மகள் வள்ளி. தாய் இல்லாத குறை தெரியாமல் தகப்பனின் அரவணைப்பில் வளர்ந்தவள். சேதமடைந்த பழைய ஓட்டு வீடுதான் இவர்கள் வசிப்பிடம். அந்த வீட்டை சீர் செய்வதற்குக் கூட வருமானம் இல்லை. ஏதோ பள்ளிக்கூடம் போவதும் வீட்டு வேலைகள் பார்ப்பதும் அப்பனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்துவதுமாக, அவள் இளமைக் காலம் கடந்தது. படித்தது பத்தாம் வகுப்பு, அதுவே பெரும் பாட்டுக்கு இடையில் கிடைத்த அறிவு ஒளிதான்.
வள்ளிக்கு படர்ந்த முகம். மாநிறம்தான் என்றாலும் கார்மேகக் கூந்தலை ஜடையாகப் பின்னி முதுகில் போட்டு நடக்கும் போது, தெருவில் உள்ளவர்கள் கண்ணெடுத்துப் பார்க்காமலில்லை. ஒருமுறை மாயழகு வள்ளியைப் பார்த்து, என்னையப் பெத்தவ மாதிரி கவனிச்சுக்கிர ஆத்தா; உன்னைய பெத்ததுக்கு நான்தான் புண்ணியம் பன்னிருக்கணும் என்று நெகிழ்ந்து கூறினார்.
அதெல்லாம் ஒன்னுமில்லை அப்பா, இது என்னோட கடமை என்று சொல்லுவாள். பக்குக்குவமான பொண்ணு. தனக்கு வயதாகிறது என்று ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. நடவு நடும் பெண்களில், இவளைத் தவிர மற்ற எல்லோரும் கல்யாணம் முடித்தவர்கள். அந்தப் பெண்களின் வயதுதான் இவளுக்கும் இருக்கும்.
காலை நேரம் என்பதால் சூரியன் சுல்லென்று வரத்தவரவில்லை. தண்ணீருக்குள் நிற்பதால் பாதச் சூடு இல்லை. அக்கா! இருங்க இதோ வாரேன் என்று வள்ளி தொழியில் இருந்து ரோட்டுக்கு வந்தாள். தன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து ரோட்டோரம் விரித்தாள். அதில் மூன்று நாற்றுக் கட்டுகளை வைத்து, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு மறுபடியும் நடவுப் பணியைத் தொடர்ந்தாள்.
அங்கிருந்த மற்ற பெண்கள் வள்ளியைப் பார்த்து இன்னைக்கு டீத் தண்ணிக்கு ஏதோ அச்சாரம் போட்டுவிட்டாள் என்று மனதில் மகிழ்ந்தனர். நாற்றுக் கட்டுகளை ரோட்டோரம் வைத்தால் அந்த வழியாகப் போவோர் வருவோர் தங்களால் இயன்ற ஏதேனும் ஐந்து அல்லது பத்து ரூபாய்களை போட்டுச் செல்வர். அதனை அங்கு வேலை செய்யும் அனைவரும் மாலை நேரம் வீட்டிற்கு போகும் போது வழியில் உள்ள கடைத்தெருவில் டீ, பண்ணு ஏதேனும் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
மாதங்கள் கடந்தன, நாற்று வளர்ந்து கதிர் பிடித்தது. ஊடே சில இடங்களில் களைகளும் வந்தன. அதனைக் களையெடுக்க வேலையாட்கள் வந்து வயலில் இறங்கினார்கள். தேவையற்ற களைகள் பிடுங்கி எரியப்பட்டன.
கதிர்கள் முற்றி நெற்பயிர்கள் அருவடைக்குத் தயாராக இருந்தது. கூலி ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கலாய் கட்டப்பட்டு, பெண்கள் தங்கள் தலையில் தூக்கியவாறு களத்துமேட்டுக்குக் கொண்டு வந்து சேர்ந்தனர். தலையில் துணியைக் கட்டிக்கொண்டதுடன் அனைவரும் தங்கள் கணவனின் சட்டைகளை எடுத்து வந்திருந்தனர், அதனைச் சேலையின் மீது அணிந்து கொண்டனர். அப்போதுதான் நெல் தாள்கள் பட்டு அரிப்பு வராது. வள்ளி மட்டும் தகப்பனின் சட்டையை அணிந்திருந்தாள்.
கட்டுகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்து உரல், கற்கள் மீது அடித்துக் கொண்டிருந்தனர். நெல் மணிகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டன. வள்ளி முரத்தில் நெல் மணிகளை அள்ளி, காற்றில் தூற்றி பதர் நீக்கிக் கொண்டிருந்தாள். மாயழகு மாடுகளை பிணைத்து நெல் தாள்களின் மீது பிணை ஓட்டிக் கொண்டிருந்தார்.
பிணையடித்துக் கொண்டிருந்த மாயழகு சற்று, பிணையை நிறுத்தி வள்ளியின் முகத்தைப் பார்த்தார். வியர்வைத் துளிகள் படர்ந்திருந்தது, அதைக் கைகளால் துடைத்துக் கொண்டிருந்தாள். இந்த வயல் காட்டில் நாற்று நட்டு, களையெடுத்து, முற்றிய கதிர்களை அறுத்து, கதிர் அடித்து வீட்டுக்கு வளம் சேர்க்கும் இவளின் வாழ்க்கையில் கல்யாணம் கனவாய்க் கரைவதை எண்ணி நொந்துகொண்டார். அவளுடைய அம்மா இருந்த இப்படி விட்டிருப்பாளா? வக்கற்றவனாக இருப்பதை நினைத்து நினைத்து கண்கலங்கினார்.
இவர் நின்றதைக் கவனித்த வள்ளி அருகே வந்து, என்ன ஆச்சு அப்பா! தூசி எதுவும் கண்ணுல விழுந்துரிச்சா? கதிர் சுனை எதுவும் அரிக்குதா? கதிர் நல்லா முற்றி இருக்கு அதான் தாள்கள் மிகவும் சுனை பிடித்திருக்கிறது. அந்தக் கயிற்றை குடு என்று வாங்கி, இவள் பிணை ஓட்ட ஆரம்பித்தாள்.
மாயழகு கண்களில் நீர் வடியத்தான் செய்தது. அவர் என்ன செய்யமுடியும். பல ஆண்டுகளாய் பண்ணையம் பார்த்து பழக்கப்பட்டு போச்சு. கூலி வேலை செஞ்சு வயத்த கழுவுரதுக்கே சரியா இருக்கு. இதுல எங்கே போய் நகை, நட்டு வாங்கி மகளுக்கு கல்யாணம் முடிக்கிறது.
அருகே இருந்த வேப்பமர நிழலில் வந்து உட்கார்ந்தார் மாயழகு. துண்டை உதறிவிட்டு தரையில் விரித்து அப்படியே சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். அருகே வந்து நின்ற பண்ணையார், என்ன மாயழகு அப்படியே படுத்துட்டீங்க. வேலை முடிஞ்சு போச்சா என்ன? என்று இயல்பான தொனியில் கேட்டார்.
இல்லைங்க அய்யா.. ஒரு மாதிரி இருந்துச்சு அதான்.. என்று இழுத்தார்.
‘மாயழகு நீயும் இந்த வயக்காட்டுல கிடந்து உழைச்சிக்கிட்டுதான் இருக்க, என்ன புண்ணியம். ஒரு பைசா கூட சேத்து வைக்க முடியிரதில்லை. உன்னுடைய மகள நெனச்சாத்தான் பாவமா இருக்கு’ என கரிசனம் காட்டுவது போல பேசினார்.
ஏற்கெனவே மனம் நொந்து இருக்குர மனுசனுக்கு, அவர் கூறும் ஆறுதல் மேலும் வேதனையைத் தந்தது. ‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்று சொல்வார்களே அதைப் போலத்தான், துன்பத்தில் உள்ளவனுக்கு ஆறுதல் என்ற பெயரில் மேலும் துன்பத்தைத் தூண்டும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பண்ணையார் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டு மறுபடியும் துண்டை எடுத்து உதறிவிட்டு பிணை ஓட்டச் சென்றார். பண்ணையாருக்கு வந்த வேலை முடிந்ததில் சந்தோஷம். இருக்காதா பின்னே முதலாளி ஆயிற்றே.
வேலை முடிந்தது. ஆட்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது உடன் வந்த முருகையன், மாயழகுவின் முகம் வாடியிருப்பது கண்டு அவரிடம் ஏன்? அண்ணே இப்புடி பட்ட மரம் காத்துல நடக்குர மாதிரி வர்றீங்க? என்று பேசத் தொடங்கியவர், இப்போதுள்ள சமூகம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை எதார்த்தமாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.
முருகையன் ஒரு கம்யூனிஸ சமூகப் போராளி நிறைய வீதி நாடகங்கள் போட்டு நடிப்பவர். அதில் ஒன்றும் வருமானம் இருக்காது, மன நிறைவுதான் கிடைக்கும். வயிற்றுக்கு ஏதாவது வேண்டுமே! அப்போதுதானே உயிர் வாழ முடியும், அதான் இந்தமாதிரி கூலிக்கு உழவு ஓட்டும் வேலை செய்து வருகிறார்.
சொத்து சொகம் இருக்குர பெண் பிள்ளைகளையே செவ்வாய் தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் அப்புடி இப்புடின்னு சொல்லுர காலத்துல வரதட்சணை இல்லாமல் கல்யாணம் முடிக்குறது சாத்தியமில்லைதான். யாரோ ஒரு ஜோதிடனால் சிறைக்குள் அடைக்கப்பட்ட கைதிகளாய் பெண்கள் கன்னியராய் காலம் கழிக்கின்றனர். தோஷம் இருப்பதானாலே, தங்கள் வாழ்வு இப்படி ஆகிவிட்டது என்று அவர்களே நொந்து கொள்ளும் அளவுக்குப் புறந்தள்ளப்படுகிறார்கள்.
சுத்தச் ஜாதகக்காரர்கள் என்று சொல்லி திருமணம் முடிந்து பிறகு ஒத்துவராமல் முறித்துக்கொண்டு சிலர் போவதை இந்த சமூகம் ஏன்? உணர மறுக்கிறது. இவர்களைப் பொருத்தளவில் திருமணம் என்பது முதலீடு இல்லாத வருமானமும் ஆடம்பமும்தான். இதை எத்தனை வீதி நாடகங்களில் நடித்துக் காட்டியிருக்கேன். இப்படியே முருகையன் பேசிக்கொண்டு வந்தார்.
மாயழகு ஒன்றும் பேசாமல் முருகையன் சொல்வதையெல்லாம் கவனித்தவாறு நடந்தார்.
சரிங்க அண்ணே! வீட்டுப் பக்கம வந்துட்டோம் நான் சொல்லுறத கேளுங்க, நல்ல வாழ்க்கைத் துணைகளைப் புறந்தள்ளிவிட்டு வாழத்தெரியாதவர்கள் வாழ்கிற சமூகம் இருக்கத்தான் செய்கிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஏழையாக இருக்கக் கூடாது என்ற எழுதப் படாத சட்டம் இந்தச் சமுதாயத்தில் ஆணிவேராக வேரூன்றியுள்ளது. அதில் வள்ளியைப் போன்று எத்தனை பேர் இருக்கிறார்களோ?. வரதட்சணை கேட்பவர்களை எந்தச் சட்டம் தண்டித்திருக்கிறது. யாராவது பெண் கேட்கும் போது இவ்வளவு விலை பேசுகிறார்களே என்று வழக்குத் தொடர்ந்தது உண்டா? நம்மால் அவ்வளவு கொடுக்க முடியாது என்று அப்படியே ஒதுங்கி விடுகிறார்கள். இந்த நிலை எப்போது மாறுமோ என்று கூறிவிட்டுச் சென்றார்.
******
வீட்டுக்கு வந்து சேர்ந்த மாயழகு, வீட்டின் வாசலில் உள்ள தொட்டியில் கால்களைக் கழுவிவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தார். ஏ…. ஆத்தா ஒரு செம்பு தண்ணி கொண்டு வா! என்று வள்ளியைக் கூப்பிட்டார். அவளும் தண்ணீர் கொடுத்துவிட்டு அரிசியை உலையிலே போட்டுருக்கேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனாள். அன்றைய பொழுது கழிந்தது.
மறுநாள் காலையில், இன்னைக்குக் கீழப்பட்டி பண்ணையார் வீட்டு வயல் வேலை இருக்கு நேரமாச்சு, நான் கிளம்புறேன் என்று துண்டை உதறி தோளில் போட்டு நடந்தார் மாயழகு. அவளுக்கும் மனதில் வருத்தம் இருக்கத்தான் செய்தது. அவள் வயதிலுள்ள பெண்கள் எல்லாம் பிள்ளை பெற்று தாயாகிவிட்டனர்.
முற்றிய கதிராய் வயலில் நிற்கும் வள்ளி கல்யாணம் பண்ணாமல் மண்ணுக்கு உரமாகிவிடுவாளோ? என்ற பயம் அப்பப்போ மாயழகுவுக்கு வந்துதான் போனது.
அப்பன் என்னைய நெனச்சுதான் கவலைப்படுது என்று கண்கலங்கி தாவணி முனையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். சரிப்பா நீ போ நான் கஞ்சி எடுத்துக்கிட்டு வாரேன் என்று சொல்லியவாரு வீட்டிற்குள் சென்றாள்.
தூக்குச் சட்டியில் சோற்று பருக்கைகளை அள்ளிப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்தாள். தலையை வாரிக்கொண்டு சீப்பை ஓட்டின் இடையே சொருகி வைத்துவிட்டு, அருகே இருந்த ஊறுகாய்ப் பொட்டலத்தை எடுத்து முந்தானையில் முடிந்து கொண்டு கிளம்பினாள். சூரிய உதயம் இருந்தது. அவள் முகம் மங்கலாய்த்தான் தெரிந்தது. நாற்றுகளுக்கிடையே உள்ள களைகளைப் பிடிங்கினாள். இவள் வாழ்க்கையில் உள்ள கவலைகளை யார் களைவார்கள்?. நாற்றுக்கே உணர்வெழுந்தது போல சில்லென்ற காற்றில் நடவுகள் அவள் பாதம் தொட்டுச் சென்றன தெய்வமென்றெண்ணி.
வள்ளியின் திருமணம் முருகனால் நிறைவேருமோ? தெரியாது. முருகனைக் காண அவள் இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டுமோ?…
இந்தக் கதையில் ஏராளமான ‘ற’ கர ‘ர’ கர எழுத்துக் குழப்பங்கள் உள்ளன. ஆசிரியர் transiliteraion keyboard ஐ பயன்படுத்துகிறார்போல. சற்றே கவனம் தேவை.
LikeLike