திருமண அழைப்பிதழ்
காலை ஆறு மணிக்கு நான் பரபரப்புடன் பட்டு வேஷ்டி சட்டையில் கிளம்பியதை பார்த்து என் பையன் குளம்பிப் போயிருந்தான்.
அவன் கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்த்த நீர் என்னை ஏதோ செய்தது.
“என்னப்பா” என்றேன் நான்.
“ஒன்றுமில்லையப்பா. அம்மா போனதுக்கப்பரம், உங்களை பட்டு வேஷ்டியில் இப்பதான் பாக்கிறேன்,அதான்” என்றான்.
“ அது சரி. இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்டீங்க” என்றான் என் பையன்.
“ கல்யாணத்துக்குப்பா” என்றேன் நான்.
“எங்கேயப்பா கல்யாணம். யாருக்கு? பத்திரிக்கை ஒன்றும் வீட்டுக்கு வந்த மாதிரி தெரியலயே” என்றான் பையன்.
நான் சற்று வளைந்து நெளிந்து “ ஒன்றுமில்லையப்பா, நம்ம முருகன் கோவில்ல, எனக்குதான் கல்யாணம்” என்றவுடன் அதுவரை நின்று கொண்டு பேசியவன் சற்று தடுமாறி அமர்ந்தான்.
சிறிது நேரம் பேச்சு மூச்சில்லை. கதவு ஓரத்தில் நின்ற என் மருமகள் அதிர்ச்சியை அடக்க முடியாமல் கைகளை ஆட்டியதில் வளையல் சப்தம் அமைதியை கலைத்தது.
“7.30-9.00 முகூர்த்தம் கிளம்பனுப்பா” என்றேன் நான் அமைதியைக் களைத்து.
தன் நிலைக்கு திரும்பிய என் பையன் ஆச்சரியம் கலந்த வெறுப்பா அல்லது கவலையா என அறிய முடியாத பாவனையுடன் “ நீங்க யாருக்கிட்டேயும் சொல்லவேயில்லை( இங்கு அப்பா என்ற வார்த்தை வர வில்லை)” என்றான்.
“ இதைப்போய் யாருக்கிட்ட சொல்றதுப்பா” என்றேன் நான்.
இப்பொழுது அவன் பாவனை கோபத்திற்கு மாறியது.
“ தெரியுதுல்ல, எழுபது வயசில சொந்த காரவுங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. அவங்களை விடுங்க, நீங்க அடிக்கடி Zoom ல பேசுவீங்களே, உங்க friends எல்லாரும் இதைக் கேட்டா கேமராவை mute பண்ணிட்டு சிரிக்க மாட்டாங்கலாப்பா” என்று கோபத்தை வார்த்தைகளாக மாற்றி கொட்டினான்.
கோபத்தில் சற்று இரைந்து பேசியதால் பாவம் மூச்சு வாங்கிற்று அவனுக்கு. நல்ல வேளை சத்தத்தில் பேரக் குழந்தைகள் எழுந்திருக்க வில்லை.
மேலும் அவன்” பெண் அதான் இந்த வீட்டுக்கு வரப் போற என் சித்தி யார்” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாமல்.
இப்பதான் நான் செஞ்ச தப்பு எனக்கு உறைத்தது. அவனிடம் ஆரம்பத்திலேயே விவரமாக சொல்லியிருந்தால் தப்பா நினைச்சிருக்க மாட்டான்.
நான் “ பைத்தியக்காரா! பெண் பார்த்து திருமணம் செய்யிர வயசா எனக்கு. இல்லை உங்க அம்மா மாதிரி யாராவது பிறந்து வந்திருக்காங்களா” என்ற நான் அவனை மேலும் குழப்பாமல் “ நான் செய்யப் போறது sologamy யப்பா என்றேன்.
மேலும் “ ஒரு மாலைக்கு சொல்லியிள்ளேன். முருகன் முன் மாலையணிந்து என்னை நானே சுய திருமணம் (sologamy or self marriage )செய்து கொள்ள போகிறேனப்பா” என்றேன் நான்.
“தேன் நிலவாக காசியில் ஒரு வாரம் சென்று தங்கப் போகிறேனப்பா” என்றும் கூறினேன்.
“ என்ன gamy, புதுசா இருக்கு. உங்களுக்குன்னு ஏம்பா இப்படி எல்லாம் தோணுது” என்றான் கோபம் இறங்கி இரக்கத்துடன்.
“இல்லப்பா. கஷ்மா பிந்துன்னு 24 வயது பெண் குஜராத், வடோதராவில இந்த மாதம் தன்னைத் தானே கல்யாணம் செஞ்சுக்க போறதா சொல்லி இருக்காங்க.
இருபது வருஷங்களா வெளி நாடுகள்ல மட்டும் அங்கும் இங்குமாய் நடந்து வந்ததை இந்தியாவிலேயே முதல் நபராய் அந்தப் பெண் செய்யப் போகுதுன்னு வடக்கே எல்லா பேப்பர்லேயும் போட்டோவோட முதல் பக்கத்தில வந்திருக்காம்பா” என்றேன்.
“ குடும்பம் குட்டிகளோட வாழ வேண்டிய அந்தப் பெண் அப்படி பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. ஆனால் அந்தப் பெண்ணோட சுய திருமணம் 11 ந்தேதி. இன்னைக்கு தேதி 9. இப்ப நான் சுய திருமணம் செஞ்சுக்கிட்டா என் பேர் பேப்பர்ல இரண்டாவது பக்கத்திலயாவது இந்தியாவிலேயே முதன் முறையாக சுய திருமணம் செய்து கொண்டவர்னு போட்டோவோட வருமேங்கற நப்பாசைப்பா. இதுவரைக்கும் என் பேரு பேப்பர்ல வந்ததேயில்லப்பா” என்றேன் அசட்டுச் சிரிப்புடன்.
“ பேப்பர்ல பேரு வர வேற வழிஇருக்கு.
அந்த sologamy பத்தி சொல்லுங்க”என்றான் என் பையன்
By marrying herself, Ms Bindu said, she would be dedicating her life to “self-love”.
“Self-marriage is a commitment to being there for yourself, to choosing the livelihood and lifestyle that will help you grow and blossom into the most alive, beautiful, and deeply happy person you can be.”
“ அது என்னமோ வாழ்க்கையை “self love “ க்காக அற்பணிக்கரதாம்பா. அந்த பொண்ணு என்ன என்னமோ சொல்லுது. அதோட வாழ்க்கையை அதே யாரோட தயவும் இல்லாம அமைச்சுக்க போகுதாம். அப்ப கல்யாணமே வேண்டாம்னு இருந்துட வேண்டியதுதானே. ஆனால் எல்லா பெண்களையும் போல கல்யாணமும் செஞ்சுக்கனுமாம். சிகப்பு கலர்ல புடவை எடுத்திட்டாங்க. கோவாவில 15 நாள் தேன் நிலவு, தனியாத்தான். அவங்க வழக்கப்படி மருதாணி இடும் விழா ரோடுல டான்ஸ் ஆடுவாங்களே சங்கீத் அந்த விழா கல்யாண விருந்து எல்லாம் உண்டாம். கல்யாணத்துக்கு அர்ச்சகர் எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சு. அக்னியை ஏழு வலம் வந்து தானே தாலி கட்டிக்க போகுதாம். பாவம் அங்கே ஆளும் கட்சி கோவில்ல இந்த கண்றாவதியெல்லாம் கூடாதுன்னு அனுமதிக்கலயாம். நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பத்திரிக்கையெலாம் போயிடுச்சு. அதைப் படிச்சிட்டுதாம்பா நான் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன்” என்றேன்.
“பிரேசில்ல ஒருத்தர் சுய கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆறே மாத த்தில வாழ்க்கை வெறுத்து அவரையை அவர் விவாகரத்து பண்ணிட்டாராம்பா. அந்த பெண் கல்யாணத்தை சட்ட பூர்வமா அங்கீகாரம் செய்யனும்னு கோரிக்கை வச்சிருக்குப்பா. இப்ப நானும் சேர்ந்திட்டா ஒரு சங்கம் அமைச்சு நான் தலைவரா ஆயிடலாம்னு பார்த்தேன்” என்றேன்
என் பையன் “ கேக்க சுவையாத்தான் இருக்கு, ஆனால் உங்களுக்கு தலைவர் பதவியெல்லாம் சரிப்பட்டு வராது, பேசாம நீங்க குவிகத்தில நடுப் பக்கம் என எழுதுவீங்களே அதுக்கு எழுதி அனுப்பிடுங்கப்பா” என்றான்
எனக்கு அதுவும் சரியாகத்தான் பட்டது.