பள்ளிக்கூட நாட்களில் வெள்ளிக்கிழமையோ, புதன்கிழமையோ மதியம் உண்ட களைப்பு தீர, ‘மாரல் சயின்ஸ்’ பீரியட் ஒன்று இருக்கும். அந்த வயதில், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் அது சொல்லும் நீதி போதனையில் இருக்காது!
சாதிகள் இல்லையடி பாப்பா, எம்மதமும் சம்மதம், ஆள்பவன் நீதி வழுவாமல் இருக்க வேண்டும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற அறிவுரைகளை சிறு கதைகள் மூலம் சொல்லிக்கொடுத்தார்கள்! கற்றுக்கொண்டவர்களுக்கு இப்போது வயது அறுபதைத் தாண்டியிருக்கும் – பின்னாட்களில் வந்த தலைமுறைக்கு நீதிபோதனைகள் அவசியம் இல்லை என முடிவு செய்து, அந்த வகுப்புகளையே தூக்கி விட்டார்கள்! இழப்பு குழந்தைகளுக்குத்தான். நல்ல சிறுகதைகளைக் கேட்பதும், அதனால் உந்தப்பட்டு, பின்னர் நல்ல புத்தகங்களை வாசிப்பதும் வழக்கொழிந்து விட்டன. சிரிப்புடனும், சிந்தனையுடனும் வளர்ந்த குழந்தைகள், இன்று அந்த வாய்ப்பே இல்லாமல் கையில் செல்லுடனும், பையில் ‘லாப் டாப்’ உடனும் சுற்றி வருகின்றன!
குட்டிக் கதைகள் வாசிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாவின் கதைகள், ஜென் தத்துவக் கதைகள், தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள், நாடோடிக் கதைகள், சின்ன அண்ணாமலை சிரிப்புக் கதைகள், தேவனின் சின்னஞ்சிறு சிறுகதைகள் இப்படித் தமிழ் மொழியில் ஏராளமான கதைத் தொகுப்புகள் காணக் கிடைக்கின்றன. தாத்தா, பாட்டிகளுக்கும், பெற்றோருக்கும் வீட்டில் குழந்தைகளுடன் கதைக்க நேரமில்லை. குறைந்த் பட்சம், இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையாவது ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று தோன்றுகின்றது.
சில குட்டிக் கதைகளைப் பார்க்கலாம்!
வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஏழை பக்தர் ஒருவர், இறைவனுடன் நேரில் பேசும் ஒரு பெரியவரிடம், “எனக்கு ஏன் கஷ்டத்திற்கு மேல் கஷ்டமாகக் கொடுக்கிறார் கடவுள்? நேற்று என்னுடைய சிறிய குடிசையும் இடிந்து விழுந்துவிட்டது. இப்போது தங்குவதற்குக் கூட இடமில்லை. நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறைவனிடம் கேட்டுச் சொல்லச் சொல்கிறார். இதைக் கேட்ட இறைவன், பெரியவரிடம், ‘எனக்கு ஒரு செங்கல் கொண்டுவந்து தரவேண்டும்’ என்கிறார். பெரியவரும் பக்கத்து ஊர் சென்று, நல்ல கட்டடங்களை விட்டு, இடிந்து போய் விழுகின்ற நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்திலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து வருகிறார். இறைவன், ‘ஏன் அங்கிருந்த நல்ல கட்டடங்களில் இருந்து எடுக்கவில்லை?’ என்று கேட்கிறார். அதற்குப் பெரியவர், ‘அந்தக் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளன. இடிந்த வீட்டிலிருந்து எடுத்தது நல்லதாகப் போயிற்று. இப்போது அங்கே ஒரு புதிய வீடு கட்டுவார்கள்’ என்கிறார். அப்போது இறைவன், “அந்த பக்தனுக்கு அதிகமான கஷ்டங்களைக் கொடுத்ததும் இதற்காகத்தான். அவனுக்கு வைராக்கியம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று சொல்கிறார்.
“துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது. துன்பங்கள் மனிதனைப் பக்குவப் படுத்துகின்றன” என்ற கருத்தை வலியுறுத்தும் கதை இது!
(தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் – தொகுதி – 1. வானதி பதிப்பகம்).
அதில் ஒரு கதை
மலிவான விலையில் கழுதை!
ஒவ்வொரு வாரமும் ஒரு கழுதையை சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கிறார் முல்லா. வழக்கமாக உடன் வரும் கழுதை வியாபாரி, “முல்லா, நான் கழுதைக்கு வேண்டிய தீவனத்தைத் திருடிக்கொண்டு வந்து போடுகிறேன். ஆனாலும் நீ விற்கும் குறைந்த விலைக்கு என்னால் விற்க முடியவில்லையே? அது உனக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்கிறான். அதற்கு முல்லா, “ப்பு… இது ரொம்ப சுலபம். நீ தீவனப் பொருளை மட்டும்தான் திருடுகிறாய். நான் கழுதையையே திருடிக்கொண்டு வருகிறேன். அதனால்தான் என்னால் உன்னைவிட மலிவான விலைக்கு விற்க முடிகிறது!” என்றார்! (சிந்திக்க, சிரிக்க முல்லாவின் கதைகள் – நர்மதா பதிப்பகம்)
கிணற்றுத் தவளை.
கிணற்றிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்த ஒரு தவளை, நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. சமுத்திரத்தில் வாழ்ந்த வேறொரு புதிய தவளை ஒன்று அந்தக் கிணற்றில் வந்து குதித்தது.
“நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்றது கிணற்றுத் தவளை.
“நான் கடல் தவளை. சமுத்திரத்திலிருந்து வருகிறேன்”
“சமுத்திரமா! அது எவ்வளவு பெரிது?”
“மிகவும் பெரிது” என்றது கடல் தவளை.
தன் கால்களை அகல நீட்டி, “நீ சொல்லும் சமுத்திரம் இவ்வளவு பெரியதாக இருக்குமோ?” என்றது.
“அது இன்னமும் எவ்வளவோ பெரியது” – கடல் தவளை.
இதைக் கேட்ட கிணற்றுத் தவளை, கிணற்றினுள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தாண்டிக் குதித்து,”உன் கடல் இவ்வளவு பெரியதாக இருக்குமா?” என்றது.
“நண்பா! கிணற்றைக் கடலுக்கு எப்படி ஒப்பிட முடியும்?” என்றது கடல் தவளை.
இதை நம்பாத கிணற்றுத் தவளை, “இப்படி இருப்பதற்கு எந்தக் காலத்திலும் வழியில்லை. என் கிணற்றைக் காட்டிலும் பெரியது ஒன்று ஏது? இவன் பொய்யன். இவனை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும்” என்று நினைத்ததாம்!
விரிந்த நோக்கம் இல்லாதவனின் விஷயமும் இப்படிப்பட்டதுதான். அவன் தனது கருத்தோ, அனுபூதியோ சிறந்ததென்றும், அதைவிடவும் சிறந்த கருத்தோ, அனுபூதியோ இருக்க முடியாது என்றும் நினைக்கின்றான்!
(ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள் – ஶ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை – 600004).
அந்தக் கதைகள் காட்டும் வாழ்வின் நிதர்சனங்கள் சுவாரஸ்யமானவை – பின்பற்றத் தக்கவை!
சுவாரஸ்யமான பகுதி.
LikeLike