கோணங்கி மனசு -S.L. நாணு

தனியாக இருக்கும் வயதானவர்கள் டார்க்கெட் - மலப்புரத்தில் அடுத்தடுத்து நடந்த  கொலைகள்/elderly people back to back murder in kerala hrp – News18 Tamilஇரவுத் தூக்கம் மறந்து வெகு காலமாகிவிட்டது.. இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு.. மோட்டு வளையை வெரித்து.. மனதில் ஏதேதோ சிந்தனையோட்டங்கள்.. சில திகிலூட்டுபவையாகக் கூட..

இது வழக்கமாக வயதானவர்களுக்கு வரது தான்.. இன்சோம்னியா.. நானே டாக்டர் தான்.. சர்ஜன்.. எனக்குத் தெரியாதா? டிராங்குலைஸர் முயற்சி பண்ணினேன்.. மைல்ட் டோஸ் தான்..”

ஆனால் வேலைக்காகவில்லை.. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டோஸ் ஏறியும் பாச்சா பலிக்கவில்லை.

தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது..

“தூக்கமின்மை உடம்பை வீழ்த்தி விடும்.. விரைவில் மரணமும் சம்பவிக்கலாம்”

தற்செயலாக வந்த வாட்ஸாப் பதிவு தலைப்புச் செய்தி சொன்னது.. எனக்குத் தெரியாதா? நானே ஒரு டாக்டர்.. சரி.. ஓய்வு பெற்ற டாக்டர்..

ஆனால் கொஞ்சம் நிம்மதி..

இரவு தூக்கம் ஏமாற்றினாலும் காலையில் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டு பிளேட்டை சிங்க்கில் போடுவதற்குள் கண்களை இருட்டிக் கொண்டு வரும்.. அப்படியே கட்டிலில் சாய்ந்து விடுவேன்.. சாப்பிட்ட உடனே படுக்கக் கூடாது என்று டாக்டர் மூளை எச்சரிக்கும்.. ஆனால் அந்த எச்சரிக்கை முடிவதற்குள் நான் குறட்டை விட்டுக் கொண்டிருப்பேன்.. அடுத்த ஒன்றரை இரண்டு மணி நேரம் எதுவும் உணராத பற்றற்ற நிலை.. மொபைல் சிணுங்கலோ.. அழைப்பு மணியோ.. எதுவும் உரைக்காது..

சில சமயங்களில் தூக்கம் விழித்து நான் கதவைத் திறக்கும் போது.. பக்கத்து வீடு.. எதிரி வீட்டிலெல்லாம் பதட்டம் கலந்த கவலைப் பார்வை..

“ரொம்ப நேரமா பெல் அடிச்சும் கதவைத் திறக்கலையா? அதான் கொஞ்சம் கவலையாப் போச்சு”

“போலீசுக்கு சொல்லிட்டு கதவை உடைக்கலாமான்னு கூட நினைச்சோம்”

எனக்கு சிரிப்பு தான் வரும்..

எனக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று இவர்களுக்குக் கவலையா? இல்லை அப்படி ஏதாவது ஆகி விட்டால் பொறுப்பு அவர்கள் தலையில் விழுந்து விடுமோ என்ற கலவலையா?

“தனியா இருக்கீங்க.. பேசாம துணைக்கு பொண்ணு யாரையாவது வேலைக்கு வெச்சுக்குங்கம்மா.. உதவியா இருக்கும்?”

இது போன்ற உபதேசங்களும் நிறைய..

“வீட்டை சுத்தம் பண்ண.. துணி துவைத்து காயப் போட்டு மடிச்சு வைக்க, பாத்திரங்கள் துலக்க.. செல்வி வந்திட்டுப் போறா.. எடுப்புச் சாப்பாட்டுக்கெல்லாம் தடா.. சுயபாகம் தான் எனக்கு ஒத்துவரும்.. தெம்பாத் தானே இருக்கேன்?.. அப்புறம் எதுக்கு ஒரு துணை? துணைக்கு வந்தவ என்ன செய்யறதுன்னு தெரியாம போரடிசுண்டு மொபைலை நோண்டிண்டு உட்கார்ந்திருக்க.. அவளுக்கு நான் தண்டம் சம்பளம் கொடுக்கணுமா?”

“இல்லை.. வயசாச்சு.. திடீர்னு ஏதாவது எமர்ஜென்ஸின்னா உதவி பண்ண..”

“யாருக்கு வயசாச்சு? ஐயாம் ஜஸ்ட் செவண்டி த்ரீ.. இது ஒரு வயசா? அடுத்த மாசம் ஹரித்வார் ட்ரிப் போகலாம்னு இருக்கேன்.. முடிஞ்சா ட்ரெக்கிங் பண்ணணும்”

நான் சொன்னதில் கொஞ்சம் பிடிவாதம் தெரிந்தது..

அதாவது இவர்கள் சொல்லி நான் என்ன கேட்பது என்று..

உண்மையில் யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் கொஞ்ச நாட்களாகவே இருக்கிறது என்பது தான் உண்மை.. அதுவும் இஸ்கீமியா கண்டிஷன் என்று என் இதயத்தைப் பரிசோதித்த கார்டியாலஜிஸ்ட் மளிகை லிஸ்ட் போல் முழ நீளத்துக்கு மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்ததிலிருந்து அந்த நினைப்பு இன்னும் அதிகமாகியிருந்தது…

ஆனால் மற்றவர்கள் அதைச் சொன்னவுடன் என் கோணங்கி மனசு ஏற்க மறுக்கிறது.. என் ஈகோ அரணாக நிற்கிறது.. இனி ஒரு பெண்ணை துணைக்கு வைத்துக் கொள்ளும் எண்ணமே மனதில் புகாதபடி அது பார்த்துக் கொள்ளும்..

நான் செய்வது சரியா தவறா என்ற குழப்பமே எனக்குக் கிடையாது.. நான் செய்தது தான் சரி என்ற தீர்மானம் எனக்குள் உரைந்திருக்கும்..

இந்த ஈகோ கலந்த பிடிவாதம் தான் சின்ன வயதிலிருந்தே என்னை செலுத்திக் கொண்டிருக்கிறது..

“தலைல எண்ணை வெச்சுக்கோடி”

அம்மாவின் குரல் கெஞ்சும்..

எண்ணை பாட்டிலை கையிலெடுத்தவள் அதை கீழே வைத்து விட்டு..

“முடியாது.. எனக்கு எண்ணை தடவிக்க வேண்டாம்”

“எண்ணை தடவிக்கலைன்னா முடி வளராது.. அதோட சிக்காயிரும்”

“ஆகட்டும்”

அதிலிருந்து தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளவில்லை..

இப்போது என் தலை முடியைத் தொட்டுப் பார்க்க..

பாய் கட்..

அம்மா சொன்னது போலவே சீக்கிரமே என் தலை முடி வளர்ச்சியை நிறுத்திக் கொண்டு செம்பட்டையாகி.. மற்றவர்களின் பின்புற கேலிகளுக்கு ஆளாகி..

ஆனால் நான் கவலைப் படவில்லை.. பிறர் சொன்னதை நான் கேட்கவில்லை என்ற ஒரு வெற்றி மிதப்பு மனதில் சிம்மாசனமிட்டிருந்தது..

பி.யு.ஸி. முடித்தவுடன் இஞ்சினியரிங் படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்..

“உன் மார்குக்கு இஞ்சினியரிங் சுலபமாக் கிடைக்கும்.. உடனே அப்ளை பண்ணு”

அப்பா சொன்னவுடன் என் கோணங்கி மனசு விரைத்துக் கொண்டது..

“முடியாது.. எனக்கு இஞ்சினியரிங் வேண்டாம்.. மெடிஸின் தான் படிக்கப் போறேன்”

கல்வி வியாபாரமாகாத அந்தக் காலத்தில் எனக்கு தகுதி அடிப்படையில் மருத்துவ சீட் கிடைத்தது..

கைனகாலஜியில் சாதனை புரிய வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்..

“பேசாம கைனியே எடுத்துக்கோ.. பொம்பளைகளுக்கு அது தான் நல்லது”

அம்மா உபதேசம் செய்தவுடன் மீண்டும் கோணங்கி மனசு..

“முடியாது.. நான் சர்ஜரி தான் எடுத்துக்கப் போறேன்”

அப்பாவுக்கு டென்ஷன்..

“சர்ஜரியா? வேண்டாம்.. சொல்றதை கேளு.. பொம்பளை சர்ஜனுக்கு அவ்வளவு டிமாண்ட் கிடையாது”

“நான் டிமாண்ட் உண்டு பண்ணுவேன்.. இதுக்கு மேல டிஸ்கஷன் வேண்டாம்.. நான் சர்ஜரி தான் படிக்கப் போறேன்”

சர்ஜரி படித்து முடித்து ஆணாதிக்க சூழலில் நிறைய கிண்டல்கள்.. கேலிகள்.. அவமானங்கள்.. அதையெல்லாம் திறமையால் முறியடித்தேன்..

அந்த ஆணாதிக்கக் கும்பலில் ஒரு தனி முகம்.. அஜயன்.. எப்போதும் ஒரு ஆதரவுப் பார்வை.. எனக்குப் பிடித்தது.. அவனுக்கும் தான்..

வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருக்க..

“ஒரு வரன் வந்திருக்கு.. பையனும் டாக்டர்.. உன் சித்தப்பனுக்குத் தெரிஞ்ச குடும்பம்.. பொண்ணு பார்க்க எப்ப வரலாம்னு நீ சொன்னா..”

“… …”

“என்னம்மா எதுவும் பேச மாட்டேங்கறே.. நான் ரிடையர் ஆறதுகுள்ள உன் கல்யாணத்தை முடிச்சாத் தான் எனக்கு நிம்மதி..”

சைக்கிள் கேப் கிடைத்தால் போதுமே.. உள்ளே புகுந்து விடும்..

வேறு யாரு? என் கோணங்கி மனசு தான்..

“ஏம்பா.. நீ ரிடையர் ஆகப் போறேன்னு நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?”

“அதில்லைம்மா.. உனக்கும் வயசாயிட்டிருக்கு..”

“என்ன பெரிய வயசு? முடியாது.. நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை”

அப்பாவுக்கு அதிர்ச்சி..

“என்ன.. என்ன சொல்றே?”

“நான் சொன்னா சொன்னது தான்.. எத்தனை வயசானாலும் நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை.. இது நிச்சயம்”

பாவம் அஜயன்.. அவனுக்குப் பெரிய அதிர்ச்சி..

ஆனால் அதெல்லாம் எனக்கு அப்போது உரைக்கவில்லை..

பல வருடங்கள் கழித்து ஒரு மாலில் அஜயனை மனைவி மகளுடன் பார்த்த போது மனதில் லேசாக ஒரு உரசல்..

காலம் கடந்த உணர்வுகள்..

என் கோணங்கி மனசு மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால்..

பிரம்மன் சித்தம்.. இன்று வரை என் கோணங்கி மனசின் ஆதிக்கம் குறையவில்லை.. சொல்லப் போனால் அதிகமாகிக் கொண்டே தான் போனது..

பலரின் பார்வையில் அது பைத்தியக் காரத்தனமாகத் தெரிகிறது என்பதும் எனக்குத் தெரியும்..

இருந்தாலும் வெளி வர முடியாத வியூகம்..

அன்று..

அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தேன்..

“கொரியர்..”

கவரை நீட்டினான்..

நான் வாங்கிப் பார்க்கும் விநாடியில் சடாலென்று என்னைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை சாத்தினான்..

இப்போது அவன் கையில் கத்தி.. பார்வையில் கொலை வெறி..

“ஐயோ.. என்னை ஒண்ணும் பண்ணிடாதே.. பீரோவுல பணம் இருக்கு.. நகை இருக்கு.. தாராளமா எடுத்துக்கோ”

சொல்ல நினைத்தேன்..

அதற்குள் அவன் கர்ஜித்தான்..

“மரியாதையா பணம், நகைலாம் எங்க வெச்சிருக்கேன்னு சொல்லு.. இல்லை குத்திருவேன்”

சில மணிநேரங்களில் எல்லா டி.வி. சேனல்களும் முக்கியச் செய்தியை அறிவித்தன..

 

 

 

 

 

 

 

 

2 responses to “கோணங்கி மனசு -S.L. நாணு

  1. அருமை… மனசு கோண வாழ்க்கை கோணுவது புரிவதற்குள்…the end

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.