ஒரு கூழாங்கல்லை ஊதியபடி
அகன்ற பாறையின் உச்சியிலேறி அமர்ந்திருக்கிறேன்.
எங்களூரில் மழை வரக்கூடுமா
இல்லையா என்பதை
இங்கமர்ந்து தான் பூட்டன் மக்களுக்குரைப்பானாம்.
அதன்பின் நான்தான்
அப்பாவத்தை என்
பரம்பரையிலேயே ஏற்றிருக்கிறேன்.
எதற்காக
உனக்காகத்தான்..
இதோ உலகின் முதல் துளி
என் உள்ளங்கையில்
கூலாங்கல்லாய்..
நேற்றைய மழை,
அதற்கு முந்தைய நாள் மழை,
போன வாரத்து மழை,
போன மாதத்து மழை,
போன வருடத்து மழை,
போன நூற்றாண்டு மழை,
ஏசு சிலுவையில் அறையப்பட்ட
அன்று பெய்த மழை,
புத்தனுக்கு முன்பான மழை,
இப்படி அத்தனை மழைகளிலும் இல்லாத ஒன்று இன்று இருக்கக் கூடுமென்றுணர்கிறேன்..
சென்ற கோடைகாலத்து
மைய நாளொன்றில்
நீதான் சொன்னாய்
இந்த மலையில் அந்த மழை
தொடும் நாள் நான் உன்னைக் காதலித்திருப்பேன் என்று..
அன்றும் மழை தான்..
உன்னையும் என்னையும்
மட்டும் நனைத்த கோடை மழை..
அன்று தொட்டு இன்று வரை
நீ வாயில் போட்டு என்
கையில் கொடுத்த கூலாங்கல்லும்
நான் அமர்ந்திருக்கும் பாறாங்கல்லும் தான் துணையெனக்கு..
வானம் ஒரு மசக்கைக்காரியைப் போல் திடுமென சோர்கிறது..
மேகம் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாய் இங்கும் அங்கும் கருமை கொண்டலைகிறது..
ஒரு பிரசவக்காரியின் அலறல் சத்தத்தை இடி நினைவு படுத்திச் செல்கிறது.. அந்தோ பனிக்குடம் உடைந்ததைப் போல் மழை கொட்டுகிறது..
சரிந்து விழுந்த சிசுவின் ரத்தமாய் என் கைகளில் மழைத்துளி பிசுபிசுக்கிறது.. பச்சைப் பிள்ளையை துடைத்த துணியாய் மழையோடு சேர்ந்த மண்வாசம் கவுச்சி வீசுகிறது..
முதன்முறையில் சேயின் முகம் பார்த்த தாயின் கண்ணொளியாய் மின்னல் வெட்டிச் செல்கிறது..
நிசப்தம்
பெரு நிசப்தம்
இரைச்சலைக் காட்டிலும் கொடுமை பயக்கும் அகலா நிசப்தம்.
வானில் ஒளியில்லை இடியில்லை கருமேகத்தில் அசைவில்லை மழையில்லை.
இனி எப்படி உனக்கும் எனக்கும் இருந்த உறவை இந்த உலகுக்கு எடுத்துரைப்பேன்..
இனி எப்படிப் புலங்கக்கூடும் நமக்குள் நாம் என்ற சொல்..
உன்னையும் என்னையும் இதே மொட்டைப் பாறையில் கலவிகூடப் பார்த்த மழை
இனி எப்படிச் சொல்லும்
நம் காதலைச் சாட்சி.
கைகளை உயர்த்தி எட்டும் வரைக்கும் நீட்டிப் பார்த்தேன் மழை இல்லை.
காற்றைப் பிழிந்து நுகர்ந்து பார்த்தேன் மழை இல்லை.
மேகம் சிலதை அசைத்துப் பார்த்தேன் மழை இல்லை.
கடலைக் குடித்து துப்பிப் பார்த்தேன் மழை இல்லை.
பூமி மீதும் ஏறிப் பார்த்தேன் மழை இல்லை.
மழை இறந்து போனது.
பிறந்த சிசு தாய் முகம் காணாமல் இறந்து போனதைப் போல்.
தாய் பிறந்த சிசுவைக் காணாமல் இறந்து போனதைப் போல்.
உனக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இறந்து போனதைப் போல்.
நம் காதல் இறந்து போனதைப் போல்.
மழை இறந்து போனது.
நான் மட்டும் மொட்டப் பாறையை கண்ணீரால் நனைக்கிறேன்.
நனைகிறேன்!!
அருமையான பதிவு
LikeLike