அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். கூட்டம் அதிகமில்லை.
‘அம்மா தேவி அகிலாண்டேஸ்வரி.. போதும் அம்மா நீ செய்யும் சோதனை.. போதும் அம்மா நான் படும் வேதனை… தாங்க முடியலே.. நான் முன்னாலே இருந்த மாதிரி நாத்திகனாகவே மாறிவிட அனுமதி கொடு தாயே..’ என்று சற்று இரைந்தே வேண்டிக் கொண்டான் சிவகுரு.
கர்ப்பக் கிரகத்திற்குள், அம்பாளுக்கு கற்பூர தீபம் காட்ட கற்பூரத்தை எடுத்த அர்ச்சகர் இந்த விநோதமான வேண்டுதலைக் கேட்டு, அப்படியே வெலவெலத்துப் போய், குழப்பத்தோடு அந்தக் கற்பூரத்தை தட்டில் வைத்து விட்டு, வெளியே வந்து ஸந்நிதானத்திற்கு முன்னால் நின்றிருந்த சிவகுருவை நோக்கி வந்தார்.
‘என்ன ஸார்.. நான் என்னுடைய ஸர்வீஸிலே பக்தர்கள் பலர் பல வகையான வேண்டுதல்களை அம்மனின் காலடியில் வைக்கக் கேட்டிருக்கேன். ஆனா.. உங்க வேண்டுதல் ரொம்ப விநோதமா இருக்கே..’ என்றார் சிரமப்பட்டு வலிய வரவழைத்துக் கொண்ட ஒரு புன்னகையோடு.
‘அதையேன் கேட்கறீங்க.. ஸ்வாமி.. அடிப்படையிலே நான் ஆத்திகனல்ல.. நாத்திகனாகத்தான் இருந்தேன். ஆனா, இந்த ஆத்திகத்துலே அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆசையிலே எல்லா ஆன்மீக சொற்பொழிவுகளுக்கும் போவேன்.. அவர்கள் சொன்ன கடவுள்களின் வர்ணனைகள், லீலைகளையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு ஆன்மீகத்தில் ஒரு ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாட்டை அதிகரிக்கும் விதமாக, நம்மிடையே இப்பொழுது இருக்கும் பக்தர்கள் பலபேர், அவர்கள் கடவுள் மேல வைத்திருக்கும் மட்டற்ற பக்தியினால், அவர்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்கள், அனுபவங்களைச் சொன்னது அமஞ்சது…
‘எல்லாம் நல்ல படியாகத்தான் போயிட்டிருந்தது. நானும் எல்லாக் கோவில்களுக்கும் சென்று வழிபட ஆரம்பித்தேன்.
‘யார் கண் பட்டதோ.. தெரியலே.. திடீர்னு நான் பண்ணிட்டிருந்த வியாபாரத்துலே சுணக்கம் ஏற்பட்டது.. எனக்கும் என் மனைவி, குழந்தைகளுக்கும் வியாதிகள் பல வந்து வாட்ட ஆரம்பித்தது. பெரும் அவதிப்பட்டேன். தேவி.. நான் என்ன செய்யட்டும்..’ என்று அம்பாளின் காலில் விழுந்து மன்றாடினேன்.
‘அப்போதுதான் ஒரு குருஜியை சந்திக்க நேர்ந்தது.
‘அவரிடம் என்னுடைய நிலமையை விரிவாகச் சொன்னேன். குருஜி ஐந்து அம்பாள் கோவில்களிலும், திருச்செந்தூர் முருகனுக்கும், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தீஸ்வரனுக்கும், சென்னை மருத்தீஸ்வரன் கோவில் ஈஸ்வரனுக்கும் அபிஷேகம் பண்ணச் சொன்னார்.
‘அந்த நேரத்துலே என்னுடைய நண்பர் ஒருவர் குடும்பத்தோடு சக்தி ஸ்தலங்களுக்கும், திருச்செந்தூருக்கும், நவக்கிரகக் கோவில்களுக்கும் போகப் ப்ளான் பண்ணிட்டிருந்தார். அவரிடம் பணம் கொடுத்து, திருச்செந்தூர் முருகனுக்கும், வைத்தீஸ்வரனுக்கும், ஐந்து அம்மன் கோவில்களிலும், மருத்தீஸ்வரர் கோவிலிலும் அபிஷேகம் பண்ணச் சொன்னேன்.. அவர் அதுபடியே பண்ணி திரும்பி வந்த பிறகு, பிரசாதத்தைக் கொண்டு கொடுத்தார். ஒரு மாசமாச்சு… ரெண்டு மாசமாச்சு.. இதோ ஆறு மாசம் முடியப் போகுது… என் வாழ்க்கையிலே ஒரு முன்னேற்றமும் இல்லே… கஷ்டங்கள்தான் ஜாஸ்தியாய்ட்டு இருக்கு. நான் நாத்திகனாக இருந்தபோது கடவுளைத் திட்டினதை விட இப்போ இந்த ஆறு மாசத்திலே திட்டித் தீர்த்து விட்டேன்.. ஆனா அப்படி திட்டறது என் மனசுக்கு ஒப்பலே.. அதனாலதான் நாத்திகனாகவே மாறிவிட தேவி கிட்டே அனுமதி கேட்டு நிற்கறேன்..’ என்றான் சிவகுரு மூச்சு விடக் கூட இடைவெளி கொடுக்காமல்.
அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சகர் மெதுவாகச் சிரித்தார்.
‘என்ன ஸ்வாமி..என் நெலமையைப் பார்த்தா சிரிப்பு வரதா..?என்றான் சிவகுரு..
‘இல்லே ஸார்.. கஷ்டமா இருக்கு… இப்போ உங்களுக்கு உடம்பு சரியில்லேன்னா, டாக்டர் கிட்டே போவீங்க.. அப்புறம் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவீங்க.. உங்களுக்கு உடம்பு குணமாயிடும். ஆனா, அந்த மாத்திரைகளை பக்கத்தில் இருக்கும் உங்க நண்பருக்குக் கொடுத்து அவர் அதைச் சாப்பிட்டா உங்க வியாதி குணமாகுமா..? சரியாகாது இல்லையா… ? உங்க வியாதி குணமாக மருந்து வாங்கி நீங்கதான் சாப்பிடணும்.. அது மாதிரி, நீங்க இந்தக் கோவில்களுக்கெல்லாம் போய், அபிஷேக ஆராதனைகளை தரிசித்து மனதார வேண்டிட்டிருந்தீங்கன்னா நல்ல பலன் கிடைச்சிருக்கும். அம்பாள் கிட்டே ப்ராக்ஸி பிஸினஸ் சரிவராது..’
‘அதெப்படி ஸ்வாமி.. நான்தானே பைசா கொடுத்து அனுப்பினேன். அபிஷேகம் பண்ணச் சொன்னேன்.. அந்த பலன் எனக்குக் கிடைக்க வேண்டாமா..?’
‘பைசா கொடுத்து அனுப்பியது என்னவோ நீங்கதான்.. ஆனால் பக்தியோடு கடவுளிடம் வேண்டிக் கொண்டது உங்க நண்பராச்சே..’
‘அப்படிப் பார்த்தீங்கன்னா.. இப்போ நான் அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணச் சொன்னேன்.. அர்ச்சனை நீங்கதானே பண்ணினீங்க.. அப்போ எனக்கு பலன் கிடைக்காதா..?’
‘அதுக்குத்தான் நாங்க ஸங்கல்பம்னு ஒண்ணு பண்ணறோம்.. அர்ச்சனை பண்ண ஆரம்பிக்கும் முன்னாலே உங்க பெயர், நட்சத்திரம், கோத்திரம் எல்லாம் கேட்கறோம்.. அதையெல்லாம் சொல்லி, இன்னார் இன்னார்க்காக அர்ச்சனை பண்ணறேன் என்று சொல்லி அர்ச்சனை பண்ணுவோம். அதனாலே நீங்களே அர்ச்சனை பண்ணற பலன் உங்களுக்குக் கிடைக்கும். உங்க வேண்டுதல்கள் என்னவோ அதைச் சொன்னீங்கன்னா அதையும் சேர்த்துக்குவோம். இல்லேன்னா நாங்க அர்ச்சனை செய்யறபோது நீங்களே கடவுளிடம் டைரக்டா வேண்டுதல்களை ப்ரார்த்தனை மூலமா சொல்லலாம். அதாவது ஒரு வேலைக்கு நீங்க அப்ளிகேஷன் கொடுக்கற மாதிரி..
‘இப்போ நீங்க சொன்னதை வெச்சுப் பார்த்தா, உங்க அப்ளிகேஷனே அம்பாளுக்கு இன்னும் போகலே.. அந்த அப்ளிகேஷன் அவளை அடைந்தாத் தானே அதைப் பார்த்து உங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவாள்..
‘ இது எப்படீன்னா, அப்ளிகேஷன் போடாமலே, அந்தக் கம்பனி எனக்கு வேலை கொடுக்கலேன்னு சொல்ற மாதிரி இருக்கு.. நடந்ததெல்லாம் அப்படியே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாய் இருக்கட்டும். நீங்க் அந்த குருஜி சொன்ன மாதிரி அந்தக் கோவில்களுக்கெல்லாம் சென்று அபிஷேகம் செய்து அந்த தெய்வங்களை மனமுருக வேண்டிக்குங்க.. உங்களுக்கு தெய்வ கடாட்சம் கிட்டும்’ என்றார் அர்ச்சகர்.
நாத்திகனாக மாறும் எண்ணத்தைக் கைவிட்டு, ஒரு சிறு நம்பிக்கையோடு கோவிலிலிருந்து வெளியே வந்தான் சிவகுரு.
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:
‘ஆமா.. அவருடைய நண்பர் நல்லதுதானே செய்தார்.. ‘கடவுளே ரிஸல்ட் நல்லபடியா பாஸிடிவா வரணும்’னு தானே வேண்டிக்கிட்டார். பின்னே ஏன் அவர் நண்பரை இப்படித் திட்டறார்..’
‘அட நீ வேற.. அவங்க எதிர்பார்த்திட்டிருக்கிற ரிஸல்ட்..கோவிட் டெஸ்ட் ரிஸல்ட்.. அது பாஸிடிவா வரணும்னு அந்த நண்பர் சொன்னா இவருக்கு கோபம் வராதா…?’
‘ !?!?
— சிவமால்
————————————————————————————