உள்ளம் பொறுக்கவில்லை, பாரதியே- இன்றும்
கெட்டலையும் மானுடரை நினைந்துவிட்டால்!
🔸
நஞ்சினையே அமுதமெனக் குடித்து, குடித்து,
நிலைகுலைந்து, வாழ்வில் சரிந்திடுவார்!
பிஞ்சுவான இளசுகளையும் பாவமென விடாது
கடித்துக் குதறிடும் கொடும் மிருகமாவார்!
அஞ்சாமல் அட்டூழியங்கள் செய்து – கணக்கில்
அடங்காது சொத்துக்களை குவித்திடுவார்!
வஞ்சனைகள் பலபுரிந்து சமுகத்தை – மதம்
குலம், சாதி, இனமெனப் பிய்த்திடுவார்!
🔸
வாய்குளறி ஒரு வார்த்தை பேசிடினும்- இல்லை
அறியாமல் ஏதோ ஒன்று எழுதிடினும்
ஓயாமலதை ஊதிப் புகைய வைத்து- பின்பு
நெடுநாள் வரை ஓலமிடுவார்!
தீயொழுக்கம் பூண்ட துறவிவேடனையும்
மதகுருவா மதித்துப் போற்றிடுவார்!
மாயங்கள்பல புரிந்து மாநிலம் கெடுப்பாரை
மண்டுகளாய் மனமார ஆதரிப்பார்!
🔸
சாத்திரங்கள் நன்றாய் அறியார்- அறிந்தும்
காழ்ப்புணர்ச்சி உள்ளத்தில் ஊறிடவே
கோத்திரம் ஒன் றாயினும் – ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குதறிடுவார்!
நாத்திறம் நிறைவஞ்சகனை நம்பிடுவார் -ஊழல்
சூதுவாது புரிவாரைப் போற்றி டுவார்! மிகவே
ஆத்திரங்கொண் டேஇவன் ஆரியன் -இவன்
திராவிடன் என்றுபெருஞ் சண்டையிடு வார்!
🔸
மாறியே நாடும் வலியின்றி நலமுடன் – வளம்
மிகுந்து செழிக்க வழிகாண்பது விடுத்து,
நாறிய பழங்கதைகள் தோண்டிக் கிளறி,
ஆறிய புண்ணையும் ரணமாக்கிடுவார்!
மேடையும், ஏடுமா, ஏச்சுக்கும், பேச்சுக்கும்?
சமூக வலை தளங்களும் சாக்கடையாம்!
படுமட்ட சொல்லெடுத்து திட்டித்தீர்த்து
பண்பற்று பொழுதினைப் போக்கிடுவார்!
🔸
எண்ணற்ற பெருமைகள் ஏந்தியது பாரதம்- நல்ல
இயற்கை வளங்கள் நிறைந்தது நம்நாடு;
கண்ணிலாக் குருடராவார்; நெடுநோக்குப் பார்வையும்
நிதானமும் அரசினரும் இழப்பார்!
மண்ணிலே வளர்ந்து வளங்கொழிக்கும் நாடாய்
மன்னியே நிலவிட வழிவகுக்கார்!
புண்ணிய நாட்டினிலே வேற்றுமைகள் கலைந்து
பொங்கும் மகிழ்வோடு ஒற்றுமையாய் வாழார்!
🔸
உள்ளம் பொறுக்கவில்லை, பாரதியே- இன்றும்
கெட்டலையும் மானுடரை நினைந்துவிட்டால்!