‘என் மருந்து என்னிடம்’
‘தலை வலிக்கிறதா?
ஸ்ட்ரெஸ்-ஆ?
அமாய்யா ஆமாம் ..
ஆஸ்பிரினை எடுத்துக்கொள்ளுங்கள்!
தலைவலி போய்விட்டதா?’
இது சினிமா ஆரம்பிக்கும் முன் வரும் விளம்பரம் அல்ல.
ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid)) என்பது ஒரு மருந்து. இது பொதுவாக வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
சரி! உங்களுக்கு ஆஸ்பிரின் கிடைத்தது.
அதனால் உங்கள் வலி போயிற்று!
ஆனால் மற்ற உயிரினங்கள், தங்களுக்கு அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) வந்தால் என்ன செய்யும்?
உதாரணத்துக்கு, ஒரு தாவரம் என்ன செய்யும்?
சரி .. நேரடியாகவே கேட்கிறேன்.
‘தாவரங்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் வந்தால், ஆஸ்பிரினுக்கு எங்கே போகும்?’
‘ஒரு பைத்தியக்கார டாக்டருக்குப் பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியக்கார டாக்டர் எந்த பைத்தியக்கார ..’ என்று வரும் நகைச்சுவை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மேலும், என்னை ஒருமாதிரியாக நீங்கள் பார்ப்பது வேறு என் மனக்கண்ணில் விரிகிறது.
‘இப்படி லூசுத்தனமான கற்பனை ஏன்?’ என்றும் நீங்கள் கேட்கலாம். ஆனால் இது இயற்கையில் ஒரு அதிசயம்!
‘தாவரங்கள் தங்கள் உபாதைகளுக்குத் தேவையான ஆஸ்பிரினைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும்!’
‘இந்த ஆட்டத்துக்கு நான் வரல’ என்று தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்.
இதைச் சொன்னது நான் அல்ல!
இதைச் சொல்வது உயிரியல் ஆராய்ச்சி!
‘Nature’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற அறிவியல் பத்திரிகையில் வந்த ஆய்வுக்கட்டுரை சொல்வது இது.
கலிபோர்னியா பல்கலைக்கழகம் உயரியல் ஆய்வாளர் ‘வான் டி வென்’ சொல்வது:
“தாவரங்கள் அழுத்தத்துக்கும், ‘வலி’க்கும் உதவும் பொருட்டு, தாங்களே தங்கள் வலிநிவாராணிகளை உருவாக்கி, உபயோகப்படுத்திக் கொள்கிறது” என்கிறார்.
இயற்கை தான் உயிரினங்களின் தற்காப்புக்கு எத்தனை அம்சங்களைத் தந்திருக்கிறது?
இது ஒரு அதிசய உலகம்!