( கண்ணன் பிறந்து மூன்று மாதம் ஆன பிறகு அதைக் கோகுலத்தில் கொண்டாடும் நேரத்தில், அவனைக் கொல்லக் கம்சன் அனுப்பிய சகடாசுரன் வருகிறான்)
கோகுலக் காட்சிகள்
மூன்று மாதக் குழந்தையான கண்ணன் குப்புறத்திக் கொள்ளல்
செப்புயர் மூன்று திங்கள்
சென்றபின் குழந்தைக் கண்ணன்
குப்புறத் திரும்பும் போதும்
குளிர்தரை தவழும் போதும்
கப்பிய அழகில் உள்ளம்
களித்தவக் கோகு லத்தார்
இப்புவிப் பிறவிப் பேற்றை
எளிதினில் அடைந்தார் ஆங்கே!
கவிக்கூற்று
(கவிஞர்,தன்னை யசோதையாகக் கற்பனை செய்து பாடியவை )
1) விளையாட அம்புலியை அழைத்தல்
(குழந்தைக் கண்ணன் தவழ்ந்து போய் நிலவைக் காட்டுகிறான்.
அவனோடு விளையாட வருமாறு அம்புலியை அழைத்தல் )
தவழ்ந்து தவழ்ந்து சிறுகுட்டன்
தரையில் புழுதி அளைகின்றான்
அவிழ்ந்த வெள்ளை விண்மலராய்
அழகு தோன்றும் அம்புலியே
கவிழ்ந்து கொண்டு கைகாட்டிக்
கண்ணன் அழைத்தல் காணாயோ
குவிந்த முகிலின் கூட்டத்தைக்
கொஞ்சம் விலக்கி வாராயோ
குழலை யாழை ஒத்திருக்கும்
குதலைச் சொல்லால் அழைக்கின்றான்
அழவும் அவனை விடுவாயோ
அங்கே நின்று கெடுவாயோ
முழவு மேளம் வரிசங்கம்
முழங்க ஆடல் பாடலென
விழவு மன்னும் கோகுலத்தில்
விரும்பி ஆட உடனேவா
( குதலை – மழலை,)
குழந்தை என்று மதியாமல்
குளிர்ந்த முகிலுள் உறங்குதியோ
செழுந்த ளிர்க்கை நீட்டியுனைச்
சிரித்து மகிழ அழைக்குமவன்
எழந்து வெகுண்டால் பாய்ந்துன்னை
இழுத்துப் பற்றிக் கொடுவருவான்
விழுந்த மதியாய் ஆகாமல்
விரும்பும் மதியாய் விளையாடு
மழலை மிழற்றும் கிண்கிணியின்
வளரும் ஓசை செவிமடுத்து
நழுவி இறங்கும் உன்வரவால்
நகைத்துக் கண்ணன் மகிழ்வானேல்
முழவை வான இடியொலிக்கும்
மூடும் முகிலை மினல்கிழிக்கும்
உழவும் சிறக்க மழைபிறக்கும்
ஊரும் உலகும் நனிசெழிக்கும்
2)குழந்தையின் தளர்நடை கண்டு மகிழ்தல்
காலின் சதங்கை மணியொலிக்கக்
களிற்றின் கன்றாய் அசைந்துசெலும்
ஆலின் இலையாய் குறுநடையாய்
ஆடல் வெல்லும் அணிநடையாய்
பாலின் கடலில் பாம்பணைமேல்
படுத்துக் கிடந்த பரந்தாமா
சால அழகுத் தடம்பதிக்கும்
தளிரே மயக்கும் தளர்நடையாய்!
3) நீராட்டல்
உடல் அழுக்கு நீங்க நீராடச் சொல்லல்
காராடும் வண்ணா உன்றன்
களைத்தவுடல் முழுதும் பூழி
ஊரோடி உண்ட ளைந்த
உறிவெண்ணெய் நாறும் மேனி
தாராடும் தேய்வை மார்பில்
தரையுருண்டு சேர்ந்த சேறு
நீராட வேண்டும் வாராய்
நிற்பாயே ஓட வேண்டா!
(காராடும் – கருமை தங்கும்)
( பூழி ,- புழுதி)
(தார் மாலை)
(தேய்வை,- சந்தனக் குழம்பு)
இளம் பெண்கள் கேலி பேசுவர் என்று கூறுதல்
நிற்பரே கூட்ட மாக
நின்னுடல் புழுதி கண்டு
பொற்றொடி சிறிய பெண்கள்
புறத்திலே கேலி பேசி.
இற்புறம் போக வேண்டா
இன்றுநீ ராட வாவா
பொற்புறு சுவைசேர் அப்பம்
புசிக்கலாம் குளித்து விட்டு!
( பொற்றொடி- பொன்வளையல்)
( இற்புறம் – வீட்டை விட்டு வெளியே)
கண்ணன் ஜன்ம நட்சத்திர விழா
பேரைச் சொல்ல வந்தபிள்ளை
பிறந்த நாள்மீன் சிறப்பாக
ஊரை அழைத்துக் கொண்டாடி
உவகை அடைந்தாள் யசோதையன்னை.
ஓர மாகத் தோட்டத்தில்
உயர்ந்த வண்டி ஒன்றின்கீழ்ச்
சீராய் அமைந்த தொட்டிலிலே
சின்ன மகனை உறங்கவைத்தாள்!
(பிறந்த நாள்மீன் – ஜன்ம நட்சத்திரம்)
(நாள்மீன்- நட்சத்திரம்)
கம்சன் சகடாசுரனை ஏவுதல்
குழந்தைக் கண்ணன் அரக்கியுயிர்
குடித்த செய்தி கேட்டவுடன்
செழுந்தீச் சினத்தால் ஆத்திரத்தால்
சிந்தை மிகுந்த அச்சத்தால்
உழந்தான் கம்சன், சக்கரத்தின்
உருவம் எடுத்துப் பெருங்கொலைகள்
விழைந்து புரியும் கொடியவனை
விரைவாய் உடனே வரச்சொன்னான்.
சக்கரத்தான் தனைக்கொல்லச் சகடத்தான் துணைகொள்ள
அக்கணத்தில் முடிவெடுத்த அரக்கனவன் ஆணையிடக்
கொக்கரித்து வந்தடைந்தான் குழந்தையுயிர் போக்குதற்குத்
தக்கதொரு வழியுண்டு தவறாமல் முடிப்பனென்றான்
(சக்கரத்தான் — சக்கரப் படை கொண்ட கண்ணன்)
( சகடத்தான் – சகடாசுரன்)
கோகுலம் வந்த சகடாசுரன் வண்டிச் சக்கரத்துள் புகுதல்
விருந்தினர் பேண மங்கை
விழைவுடன் சென்றாள். வஞ்சப்
பருந்தென அரக்கன் வந்தான்
பாலகன் உறங்கக் கண்டான்.
குருந்தினைக் கோழிக் குஞ்சாய்க்
கொல்லவே எண்ணி அங்குப்
பொருந்தியே வண்டிக் காலுள்
புகுந்தவன் மறைந்து கொண்டான்
( மங்கை – யசோதை,)
(குருந்து – குழந்தை)
( வண்டிக் காலுள் – வண்டிச் சக்கரத்துள்)
(தொடரும்)
சலங்கை கட்டி ஓடி வரும் கண்ணணை
கண்முன்னே படம் பிடித்து காட்டுகிறது
தங்கள் கவிதை அருமை
LikeLike
ஐயா உங்கள் கண்ணன் கனியமுது கவிதைகள் மூலம் கண்ணன் திருவிளையாடல்களை அகக்கண்ணால் காண கோகுலத்திற்கே அழைத்து சென்றுவிட்டிர்கள்
LikeLike