ராஜேந்திரன்
புலிக்குப் பிறந்தது என்ன?
புலிதான்.
இந்தப்புலியும் பாய்ந்தது.
இந்தியாவை வென்றது।
கடல் கடந்தும் வென்றது.!
சென்ற இடங்களெல்லாம் புலிக்கொடி நாட்டியது।
ராஜராஜன் பதினாறு அடி பாய்ந்தான்.
ராஜேந்திரன் முப்பத்திரண்டு அடி பாய்ந்தான்.
ராஜராஜன் செய்தது இமாலயச் சாதனை.
ராஜேந்திரனும் அதே போல சாதனைகள் செய்தான்.
அவன் சரித்திரத்தைப்பற்றிப் பேசலாமா நேயர்களே?
பொன்னியின் செல்வனுக்கும், வானதிக்கும் பிறந்தவன் ராஜேந்திரன்.
ராஜராஜன் தன் மகனுக்கு மதுராந்தகன் என்று தனது சிற்றப்பன் பெயரை வைத்தான். தாத்தா சுந்தர சோழர் போலவே, அவன் அழகில் மன்மதன் போல இருந்தான். 1012 வருடத்தில் ராஜராஜன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மதுராந்தகன் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றான். அப்பொழுது அவனுக்கு ‘ராஜேந்திரன்’ என்ற பட்டாபிஷேகப் பெயர் வழங்கப்பட்டது. ராஜேந்திரன், ராஜராஜனுடன் சேர்ந்து நாட்டின் ஆட்சியை நிர்வாகம் செய்தான்.
வருடம்: 1014.
ராஜராஜன், புகழுடன் பிறந்து, புகழுடன் வளர்ந்து, புகழுடன் காலமானான். ராஜேந்திரன் மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டான். பதவி ஏற்ற எட்டாம் ஆண்டில், தனது மூத்த மகன் ராஜாதிராஜனை யுவராஜாகப் பட்டமளித்து, நாட்டு ஆட்சியைப் பகிர்ந்து கொண்டான்.
ராஜேந்திரன் படையெடுத்து வென்ற இடங்களைப்பற்றிப் பேசுவது என்பது சில அத்தியாயங்களில் அடங்காது. ஈழம், பாண்டிய நாடு, சேர நாடு, மேலைச்சாளுக்கிய நாடு, வட நாடு, வங்காளம், மற்றும் கடல் கடந்து ஸ்ரீவிஜயம் வரை அவன் வென்ற இடங்கள் எண்ணிலடங்காது. பொன்னியின் செல்வன் கதையில் குடந்தை சோதிடர் சொன்னது போல -வானதியின் மகன் சென்ற இடங்களெல்லாம் புலிக் கொடி பறந்தது.
ராஜேந்திரனின் மெய்கீர்த்தி – பெரிய மெய்கீர்த்தி. மெய்கீர்த்தியில் ராஜேந்திர சோழன் போரிட்டு ஜெயித்த நாடுகளின் பட்டியல் இருக்கிறது. என்னென்ன நாடுகள் என்று தெரிந்துகொள்வதற்கே ஒரு ஆய்வு தேவை..
ராஜேந்திரன் ஆட்சிக்கு வந்த மூன்றாம் வருடம்:
ராஜேந்திரன் வென்ற இடங்களைப் பட்டியல் போடுவோம்.
- கிருஷ்ணா-துங்கபத்ரா ஆறுகளுக்கு இடைப்பட்ட ‘இடைதுறை நாடு’ (இன்றைய ராய்ச்சூர் மாவட்டம்)
- வனவாசிப் பன்னீராயிரம்: மைசூருக்கு வடமேற்குப் பகுதி.
- கொள்ளிப்பாக்கை: இன்றைய ஹைதராபாத்துக்கு வடக்கே குல்பாக் என்ற ஊர்.
- மண்ணைக்கடக்கம்: சாளுக்கியரின் தலைநகரமான மானியகேடா
- ஈழ நாடு
- பாண்டிய நாடு
- சேர நாடு
- வட நாடு
- வங்காளம்
- ஸ்ரீவிஜயம்
முதலில் ஈழ நாட்டு வெற்றியை சற்று விளக்கிவிடுவோமா?
ஆட்சிக்கு வந்த மூன்றாம் வருடம்:
ராஜராஜன் காலத்தில் தோற்று ஓடிய சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் ரோகண நாட்டில் ஒளிந்திருந்தான். பிறகு படைபெருக்கி, ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர் மீது படையெடுத்து, தான் இழந்த ஈழப்பகுதிகளை மீட்க முயன்றான். ராஜேந்திரன் ஈழம் மீது படையெடுத்தான். வென்றான். சிங்கள மன்னருக்கு வழிவழியாக வந்த முடியையும், அன்னவர் தேவியாராது அழகிய முடியையும் (முடி என்றால் தவறாக நினைக்க வேண்டாம்!! அது கிரீடம் தான்!!) கொண்டு வந்தான்.
நூறு வருடத்துக்கு முன், பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன், பாண்டியரின் மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் ஈழமன்னரிடம் அடைக்கலாமாகக் கொடுத்து வைத்திருந்தான். அப்பொழுது, பராந்தகசோழன், அந்த மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் ஈழத்திலிருந்து கொண்டு வருவதற்காகவே படையெடுத்துச் சென்றான். கிடைக்காமல் ஏமாற்றமடைந்தான். அதன் பிறகு வந்த எல்லா சோழர்களும் ஈழத்தில் அதைத் தேடி கிடைக்காமல் சோர்ந்தனர். பொன்னியின் செல்வனின் கதையிலும் அந்த தேடல் நடந்திருந்தது. ராஜராஜ சோழனுக்கும் கிடைக்கவில்லை. ராஜேந்திரன் அவற்றைக் கைப்பற்றினான்.
சோழர் கல்வெட்டுகள் சோழர் பெருமையாக கூறும்.
அதுபோல ஈழத்தின் மகாவம்சம் என்ற நூல் சிங்களப் பெருமையைப் போற்றிக் கூறும். ஒரே வெற்றியை இரு தரப்பும் தங்கள் பாணியிலும் கூறுவர். சரி.. கொஞ்சம் மகாவம்சம் ராஜேந்திரன் படையெடுப்பைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?
“ராஜேந்திரனின் படைவீரர்கள் ஈழநாட்டின் பல இடங்களில் கொள்ளையிட்டு, பொன்னும், மணியும், அணிகலன்களும், பல பொற்படிமங்களும் கவர்ந்தனர். மேலும் போரில் சோழ வீரர்கள் புறங்காட்டி ஓடி ஒளிந்து, சிங்கள வேந்தனை உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அழைப்பது போல வருவித்துச் சிறைப்பிடித்து, அப்பொருட்களோடு சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டனர்.”
இது மகாவம்சத்தின் கூற்று.
இதைப்படிக்கும் தமிழ் வாசகர்கள் கோபம் கொள்ளவேண்டாம்.
நான் சதாசிவப்பண்டாரத்தார் எழுதியதைத் தான் சொல்கிறேன்.
சோழர் கல்வெட்டுகள் சோழரின் வீர வெற்றியைத்தான் குறிக்கிறது.
சரி.. நாம் தொடர்வோம்.
ஈழவெற்றிக்குப் பிறகு, சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன், சிறைப் பிடிக்கப்பட்டு, சோழ நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டான். சோழ நாட்டில், பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து 1029 வருடத்தில் மாண்டான். ஈழ நாடு முழுவதும் சோழர் வசப்பட்டது.
மகாவம்சம் மேலும் சொல்கிறது (ஆஹா ..மறுபடியும் மகாவம்சமா? வாசகர்களே, சற்று சாந்தமாகப் படியுங்கள்).
மகிந்தன் மகன் காசிபனை ஈழத்து மக்கள் மறைவாக வளர்த்து வந்தனர். அவன் தந்தை மகிந்தன் 1029ல் சோழநாட்டில் இறந்த போது, ஈழ மக்கள் காசிபனை மன்னனாக முடி சூட்டினர். காசிபனும் படைதிரட்டி ஆறு மாதம் சோழப்படைகளுடன் போர் செய்து, ஈழத்தின் தென் கிழக்கில் இருக்கும் ரோகண நாட்டைக் கைப்பற்றினான், விக்கிரமபாகு என்ற பட்டப்பெயருடன் 12 வருடம் ஆட்சி செலுத்தினான்.
இதைச் சொல்வது மகா வம்சம்.
ஈழக்கதை முடிந்தது. இன்னும் எத்தனையோ போர்கள் பற்றியும் அந்த வெற்றிகளைப் பற்றியும் எழுதவேண்டும்.
நான் காத்திருக்கிறேன்.
நீங்களும் காத்திருங்கள்!