
பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-2
எச்சரிக்கை: சரித்திரம் பேசப் போவதால் தூக்கம் வரலாம். ஒரு ஆறுதல். ஆழ்ந்த தூக்கம் வருவதை தவிர்க்க ஆழமாகப் பேச வில்லை.
உலகத்தில் அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அவதியுறும் காலத்தில் மக்களை நல் வழி படுத்த சுமார் 25 புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களில் கடைசியாக வந்தவர் கௌதம புத்தர் என்பதும் பௌத்த சமய கொள்கை. இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தராம்.எனினும் சரித்திரத்தில் அறியப்பட்டவர் கௌதம புத்தர் மட்டுமே.
புத்தர் வாழ்ந்த காலத்தில் பல மதங்கள் இருந்தாலும் ஜைன(சமண) மதம் வெகுவாக பரவியிருந்தது.ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் புத்தரின் சம காலத்தவர். சற்று வயதில் மூத்தவர்.
அதேகாலத்தில் வாழ்ந்த கோசலி மக்கலி என்பவர் ஆசீவகம் என்றழைக்கப்பட்ட மதத்தை தோற்றுவித்தவர் ஆவார். ஆசீவகம் தமிழ் நாட்டிலும் கால் பதித்து பின்னர் தானே அழிந்தது.
அதேகாலத்தில் இருந்த இன்னொரு முக்கியமான மதம் பிராமண மதம் எனப்பட்ட வைதீக மதமாகும். அம்மதத்தை பற்றி கடந்த பதிவில் பார்த்தோம்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் பாரத நாட்டில் இன்னும் வேறு சில மதங்கள் இருந்தாலும் போரும் போட்டியும் பௌத்த, சமண, ஆசிவகம் மற்றும் வைதீக மதங்களுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருந்தன.
கி மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டுக்குள் இந்த நான்கு மதங்களுமே தமிழகத்தை தமதாக்கிக் கொள்ள போராட துவங்கி விட்டன.
புத்தரும், மஹாவீரரும் மக்களை அன்பு வழிப்படுத்தி சமுதாய சீர் திருத்தம் செய்த பெரியோர்கள் ஆவர்.
அவர்கள் சமுதாயத்தை அழிக்க வந்தவர்களாக்கிய பழி அவர்களுக்குப் பின் வந்த அவர்கள் மதத்தினரையே சேரும்.
மதங்கள் தோன்றி வளர்ந்தமைக்கு அவற்றின் கொள்கைகளும், தோற்றுவித்தவரின் ஈடுபாடும் காரணம் என்றால் அவை அழிவதற்கும் காரணம் காலத்திற்கு ஒவ்வாத சில கொள்கைகளும் பின்னால் வந்த மத தலைவர்களின் செயல்களுமே.
மேலே கூறிய நான்கு மதங்களும் தமிழ் இந்தியாவை தமதாக்கிக் கொள்ள உழைத்தாலும் போட்டியில் முதலில் வென்றது பௌத்தமே.
பௌத்த மதம் தமிழ்நாட்டிற்குள் வந்த கதை, வாழ்ந்த கதை மற்றும் அழிந்த கதையை சற்று பார்ப்போம்.
பௌத்த மதத்தை தோற்றுவித்த சித்தார்த்தர் என்ற கௌதம புத்தர் கி மு 563 ல் தோன்றி 483 ல் (கிமு 6-5 நூற்றாண்டு) நிர்வாண மோஷம் அடைந்தார்.
அவர் நிறுவிய பௌத்த மதத்தை இந்தியா முழுதும் மட்டுமல்ல அருகில் உள்ள நாடுகளுக்கும் கொண்டு சேர்த்த பெருமை அசோக சக்ரவர்த்தியையும் அவரது சகோதரர் மகேந்திரனையும் சேரும்.
அசோக சக்ரவர்த்தி கி மு 273 முதல் 232 வரை தமிழ் இந்தியா தவிர ஏனைய இந்தியா முழுதும் ஆண்டார். கடல் கடந்து இலங்கையில் புத்த மதத்தை நுழைத்த அவர் சோழ, சேர, பாண்டிய மன்னர்களிடம் போராடி மதத்தைத் தினிக்க வில்லை.
தமிழ் இந்தியாவில் அவர் அறத்தை போதித்து அனைவரின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் இந்தியாவில் புத்த பிக்குகளை கொண்டு இலவச மக்கள் மருத்துவம், கால் நடை மருத்துவம், பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
ஒவ்வொறு கிராமத்திலும் புத்த பிக்குகள் தங்கிய விகாரை அல்லது பள்ளிகளின் கூடத்தில் கல்வி போதிக்கப் பட்டது. அது அனைவருக்குமான கல்வி. எளியவருக்கு உணவளிக்கப் பட்டது. புத்த மதத்தை மறந்தாலும் அவர்கள் கொடுத்த பள்ளிக் கூடம் என்ற பெயரை இன்றும் நாம் மறக்க வில்லை.
எளியவர்க்கு உணவு, சீறுடையுடன் கூடிய இலவச கல்வியை மீண்டும் தொடர்ந்த காமராசர்தான் 26 வது புத்தரோ?
அதற்கு முன் கல்விக் கூடங்கள் இல்லையா என்றால் இருந்தது. குரு குலமாகவும், திண்ணைப் பள்ளிகளாகவும் இருந்தன.
வெகு சிலருக்கென இருந்த கல்வியை வெகு ஜன கல்வியாக்கியது பௌத்தம்.
அசோகர் அறச்சாலைகள் அமைத்து மாற்றுத்திறனாளிகட்கும் எளியவர்க்கும் இலவச உணவு வழங்கச் செய்தார். பௌத்த காப்பிய நாயகியான மணிமேகலை அனைவர்க்கும் உணவு வழங்கி சிறைக் கூடத்தை அறக் கூடமாக மாற்றியதாக படித்தோம். அவை அசோகரின் செயலே.
இது போதாதா மக்களின் மனதில் புக. இப்பொழுதுதான் தெரிகிறது இலவசங்களின் பெருமை.
அன்று மதம் இன்று அரசியல்.
இலவசங்களால் எப்பொழுதும் ஏமாற்ற முடியாதே. மற்ற மதங்களை பின் தள்ளி முதலிடத்தில் நிற்க அனைவரும் மதிக்கும் கொள்கைகள் வேண்டுமே.
ஆம் மற்ற மதங்களை பின் தள்ளி சுமார் 500-600 ஆண்டுகள் பௌத்தம் தமிழ் இந்தியாவை தனதாக்கிக் கொள்ள ஒப்புயர்வற்ற அதன் கொள்கைகளே காரணம்.
கௌதமர் மதத்தை நிறுவி துறவிகளாகிய பிக்குகளும், பிக்குனிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார்.
பிக்கு சங்கத்தின் சட்ட திட்டங்களை வகுத்தார்.
பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும், பள்ளிகளையும் பிரபுக்களும் அரசர்களும் தானமாக வழங்கினர்.
திரிபடகம் என்ற விதிகள் தொகுக்கப்பட்டு எழுதா மறையாக ஓதப்பட்டு வந்தன.
துன்பத்திற்கு காரணமான 12 சார்புகளை அறுத்து, பிறப்பு-இறப்பு நீங்கி நிர்வாண மோஷம் எனும் வீடு பேற்றினை அடைவது பௌத்த மதத்தின் நோக்கம்.
அந்நிலையை அடைய பஞ்ச சீலம்(5), அஷ்ட சீலம் (8), தச சீலம் (10) என் இல்லறத்தார்க்கும், உயர் நிலை மக்களுக்கும், துறவிகளுக்குமான கொள்கைகள் வகுக்கப் பட்டது.
அடுத்த பதிவில் தமிழினத்தை தலை வணங்க வைத்த பௌத்த மத கொள்கைகளை பார்ப்போம்.
அவற்றைப் பார்த்தவுடன் நானும் புத்தரோ என எனக்குத் தோன்றியது. உங்களுக்கும் தோன்றலாம்.
( தொடரும்)