அதிசய உலகம்
‘நெத்தியடி’
‘மாமி! சுடச்சுட ஒரு அறிவியல் செய்தி! 60 மில்லியன் வருட முன் ஒரு பெரிய விண்கல் (asteroid) பூமியில் விழுந்து, பிரளயம் ஏற்பட்டு, டைனசார் உட்பட பல உயிரினங்கள் அழிந்தது” என்று தொடங்கினாள் அல்லிராணி.
“பழைய கதை..” என்று அங்கலாய்த்தாள், அங்கயற்கண்ணி மாமி.
“ஆனால் மாமி! அது போல ஒருநாள் இன்னொரு விண்கல் இவ்வுலகத்தை அழிக்க வராமல் போகுமா?”
“வந்தால்? அழிய வேண்டியது தான்”
“மாமி! அப்படி வரக்கூடிய விண்கல்லை தள்ளிவிட முடிந்தால்?”
“அதற்கு கல்கி தான் அவதாரம் எடுத்து வர வேண்டும்” – மாமி.
“மாமி! நமக்கு இருப்பதோ ஒரே பூமி. அதை நாம் தானே காக்க வேண்டும். நாசா (NASA)வில் ஒரு பரிசோதனை நடந்தது.
ஒரு சின்ன விண்கல்.
அதன் நீளம் 500 அடி.
அதன் பெயர் டிமோர்பஸ் (Dimorphos ).
அது டிடிமோஸ் (Didymos) என்ற அதன் தாயார் விண்கல்லைச் சுற்றி வருகிறது. சுற்றி முடிக்க 11 மணி நேரம் 55 நிமிடம் ஆகிறது.
இந்த விண்கல்லை, ஒரு ராக்கெட் வைத்து மோதித் தள்ள நாசா திட்டமிட்டது.” என்றாள் அல்லி!
“அது பூமியை நோக்கி வந்துகொண்டிருந்ததா?”- என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் மாமி.
“இல்லை. அதை இடித்துத்தள்ளுவது என்பது ஒரு பரிசோதனைக்காகத்தான்.”
“நெத்தியடி! அப்புறம்?” மாமியின் ஆவல் அதிகரித்தது.
“டார்ட் (DART) என்ற திட்டத்தில், டிமோர்பஸ் மீது நாசாவின் ராக்கெட், மணிக்கு 22000 கிலோமீட்டர் வேகத்தில் மோதியது”
“அட, ராக்கெட் செம ஸ்பீட்! நல்ல வேளை அங்கு டிராஃபிக் போலீஸ் ஒன்றும் இல்லை” என்று சிரித்தாள் மாமி.
“உங்க மொக்கையைக் குப்பையில போடுங்க!” என்று சிரித்த அல்லி தொடர்ந்தாள்.
“அப்படி இடித்துத் தள்ளப்பட்ட விண்கல் நகர்ந்தது. அதன் ஆர்பிட்டல் நேரம் 32 நிமிடம் குறைந்து, 11 மணி 23 நிமிடம் ஆனது.” என்றாள்.
உடனே மாமி, “அதை மோதித்தள்ளாமல், உடைத்தே எறிந்திருக்கலாமே? முருகன், அந்த கிரவுஞ்ச மலையை வேல் கொண்டு உடைத்தது போல” என்றாள்.
“அப்படி உடைத்தால், உடைந்த பகுதிகள் என்ன செய்யுமோ? யாரோ அறிவர்?”- அல்லி கூறினாள்.
“ஆஹா! சூரபத்மனை முருகன் வேல் வைத்து பிளக்க, அது சேவலும் , மயிலுமாகி தாக்க வந்ததைப் போலவா” என்ற மாமி தொடர்ந்தாள்.
“அல்லி! நீ பிறந்த வருடம் 1997. அப்ப வந்தது ‘ஆர்மகெட்டான்’ என்ற ஒரு ஹாலிவுட் படம். புரூஸ் வில்லிஸ் ஹீரோ. அந்தப்படத்தில், இதே போல, ஒரு விண்கல் பூமியை நோக்கி வர, அங்கு ராக்கெட்டில் போய் இறங்கி, அங்கு பள்ளம் தோண்டி, அணுகுண்டு வைத்து, அந்த விண்கல்லை உடைத்து பூமியைக் காப்பாற்றினார்கள். அது போலவே ஒரு நாள் நடக்கும் போலிருக்கே” என்றாள் மாமி!
அல்லி ஆமோதித்தாள்!
இது ஒரு அதிசய உலகம்!