கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் நடந்த உத்தம உண்மையில் ஹீரா -அதீனி – வீனஸ் மூன்று பெண் தெய்வங்களுக்கும் இடையே நடக்கும் போட்டியே என்பது அந்த முதல் கட்டத்திலியே தீர்மானமாயிற்று.
ஹீரா ஜீயஸின் மனைவி . வீனஸும் அதீனியும் ஜீயஸின் வெவ்வேறு மனைவிக்குப் பிறந்த மகள்கள். அழகிப்போட்டியில் தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக பாரிஸின் பக்கம் இருப்பவள் வீனஸ். தங்களைத் தேர்ந்தெடுக்காததால் ஹீராவும் அதீனியும் பாரிஸூக்கு எதிராக கிரேக்கர் பக்கம் இருப்பவர்கள். கடவுளர் தலைவர் ஜீயஸ் ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரை ஆதரித்து தன் நிலையைச் சமன் படுத்திக் கொள்வார்.
அதீனி பாரிஸை அழிக்க மற்போருக்கு ஏற்பாடு செய்தாள். போரின் நடுவில் வீனஸ் பாரீஸைக் காப்பாற்றி அந்த இடத்தைவிட்டே அவனைத் தூக்கிச் சென்று ஹெலனிடம் சேர்ப்பிக்கிறாள்.
தான் வெற்றி அடைந்ததாக மெனிலியஸ் அறிவித்து ஹெலனைத் தன்னிடம் அனுப்பும்படி உத்தரவிட்டான். வாக்குறுதிப்படி இது நடந்திருந்தால் போர் இல்லாமல் அமைதியாக முடிந்திருக்கும். ஆனால் அதீனியும் ஹீராவும் டிராஜன்களை வாக்குறுதியை மீறிப் போரைத் துவங்கச் செய்தனர்!
டிராய் நாட்டு தலை சிறந்த வில்லாளி பாண்டரஸிடம் கூரிய அம்பு ஒன்றைக் கொடுத்து மெனிலியஸ் நெஞ்சுக்குக் குறிவைத்து அவனைக் கொல்லும்படித் தூண்டினாள் அதீனி!
அவனும் வில்லை வளைத்து அம்பைப் பாய்ச்சினான்.
ஆனால் அதீனியே அந்த அம்பின் திசையை மாற்றி மெனிலியஸைக் கொல்லாமல் அவனை இலேசாகக் காயப்படுத்தும்படி செய்தாள்.
விளைவு?
கிரேக்கர் கோபம் கொண்டனர்.
வாக்குறுதியை மீறிய டிராய் நாட்டு வீரர்களையும் அந்த நாட்டையும் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டான் தளபதி அகெம்னன்!
அமைதி அழிந்தது!
மாபெரும் யுத்தம் தொடர்ந்தது. படை வீரர்கள் மோதினார்கள். பிணக் குவியலாக மாறியது அந்தப் பிரதேசம். இரு புறமும் தளபதிகள் எதிரிப் படைத் தளபதிகளைக் கொன்று அவர்கள் முன்னேற்றத்தை முடக்க ஏற்பாடுகள் செய்தனர்.
கிரேக்கர்களைக் கடவுளர் அதீனி தூண்டிப் போரை வீராவேசமாக நடத்தும்படி ஆணையிட்டாள். அதேபோல் ஏரீஸ் என்ற போர்க் கடவுள் ஹெக்டர் தலைமையில் வந்திருக்கும் டிராஜன்களைத் தீவிரமாகப் போரிடும்படி தூண்டினான்
ஓடிசியூஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரன் டிராஜன் படைகளை துவம்சம் செய்தான். பிரியம் மன்னனின் மகன்களில் ஒருவனைத் தனது ஈட்டியால் குத்திக் கொன்றான் ஓடிசியூஸ்!
தங்கள் இளவரசர்களில் ஒருவன் கொல்லப் பட்டதைக் கண்ட டிராஜன்படை பின் வாங்க ஆரம்பித்தது. ஆபோவது அப்போலோ கடவுள் டிரோஜன்களை நோக்கி,’ பின் வாங்காதீர்கள்; முன்னேறித் தாக்குங்கள்!’ என்று ஆணையிட்டான். அதேசமயம் அதீனி கிரேக்கரை இன்னும் பயங்கரமாகத் தாக்கும்படி தூண்டினாள்!
தங்கள் மன்னன் மெலியசைக் கொல்லமுயன்ற பாண்டரஸைத் தேடிக் கண்டுபிடித்துக் கொல்லப் புறப்பட்டான் டயாமிடிஸ் என்ற மாபெரும் கிரேக்க தளபதி. இருவருக்கும் இடையே பெரும் யுத்தம் நடந்தது. பாண்டராஸ் தன் அம்புத் திறமையைக் காட்டி டயாமீடிசை மரணக் காயப் படுத்தினான். ஆனால் ஆதீனியால் காப்பாற்றப்பட்ட டயாமிடீஸ் கடுங் கோபத்துடன் பாய்ந்து ஈட்டியால் பாண்டரஸைக் குத்திக் கொன்றான்.
அதற்குப் பழிவாங்க பாண்டரஸின் தோழன் ஈனியாஸ் பாய்ந்து வந்தான். அவன் வீனஸ் தேவதையின் மகன். டயாமிடீஸ் ஒரு பெரிய பாறையை அவன் மீது வீசி அவனைக் காயப்படுத்தினான். வீனஸ் பாய்ந்துவந்து அவனைச் சாகாமல் காப்பாற்றினாள். ஆனால் டயாமிடீஸ் வீனஸ் தேவதையின் கரங்களிலும் ஈட்டியைப் பாய்ச்சி அவளையும் காயப்படுத்தினான். போர்க் களங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லாத காதல் தேவதை வீனஸ் அப்போலோவிடம் தன் மகனைப் பார்த்துக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டு மிகுந்த துயருடன் பறந்து தேவர்கள் இருக்கும் ஒலிம்பஸ் மலைக்குச் சென்றாள்.
அப்பல்லோ ஈனியாஸிற்கு துணையாக இருக்கிறார் என்பதைத் தெரிந்ததும் அவனை விட்டுவிட்டு விலகினான் டயாமிடீஸ். அப்போலோ ஈனியாசைக் குணப்படுத்த அனுப்பிவிட்டு டிரோஜன்களின் தலைவன் ஹெக்டரைத் தீவிரமாகப் போரிட்டு கிரேக்கர்களைக் கொன்று குவிக்கும்படி உத்தரவிட்டார். அப்பல்லோவின் உத்தரவுப்படி போர்க்கடவுள் ஏரிஸும் ஹெக்டரின் உதவிக்கு வந்தான்.
மகா போர் வெறியனான டிராஜன்களின் தலைவன் ஹெக்டர் மிகுந்த கோபாவேசத்தோடு வருவதைப் பார்த்த கிரேக்கப் படை தடுமாறியது. ஹெக்டருடன் கடவுளர் ஏரிஸும் வருவதைக் கண்ட டயாமிடீஸ் ‘கடவுளர்களுடன் நான் போரிட்டால் நம் அனைவரது அழிவும் நிச்சயம்,பின்வாங்கிச் செல்வதுதான் சரி, பின்னர் மனிதர்களுடன் போரிடலாம்’ என்று தன் படையினரை நோக்கிக் கூறினான்.
ஹெக்டரின் அதகளம் ஆரம்பித்தது. அவனது போர் வெறிக்கு முன் கிரேக்கப் படை தடுமாறியது. அதைப் பார்த்த ஹீராவும் ஆதீனியும் போர் முனைக்கு வந்தார்கள். எதிரிக்கு உதவும் தங்கள் கடவுளர்களின் ஒருவனான ஏரிஸை எதிர்க்கவும் துணிந்தனர்.அவர்கள் இருவரும் அளித்த தைரியத்தில் டயாமிடீஸ் கடவுளர் ஏரிஸையே தன் ஈட்டியால் தாக்கிக் காயப்படுத்தினான். பயங்கர கூக்குரலுடன் ஏரிஸ் அங்கிருந்து அகன்றான். அதிகக் கண்ட ஹீரா அதீனி இருவரும் அங்கிருந்து சென்றனர். அதனால் கிரேக்க -டிரோஜன் போர் மீண்டும் மனிதர்களின் வடிவில் தொடர்ந்தது.
உண்மையில் இந்தப் போர் கடவுளர்களிடையே நடக்கும் போரே! அப்பாவி மனிதர்கள் கடவுளர்களின் போட்டி பொறாமை ஆகியவற்றைத் தங்கள் மேல் திணித்துக்கொண்டு சிக்கிச் சிதறித் தவித்தனர்.
டிரோஜன்களின் தலைவனும் மிகச் சிறந்த போர்த் தளபதியுமான ஹெக்டர் இதை நன்கு உணர்ந்திருந்தான்.தங்கள் பொன்னாடும் கோட்டைகளும் கொத்தளங்களும் கிரேக்க வீரர்களால் அழிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்த அவன் இறுதிப் போருக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டு மனைவி மகன்களிடம் இறுதி விடை பெற்று போர் முனைக்கு வந்தான். தானும் தன் தந்தையும் தன் சகோதரரும் தன் இனமும் அழியும் நாள் அதிகத்தூரத்தில் இல்லை என்பதை நன்கு உணர்ந்த ஹெக்டர் தான் அழியுமுன் கிரேக்கத்தின் பெரும்படையை அழிக்காமல் விடுவதில்லை என்று மனதுக்குள் வைராக்கியம் செய்துகொண்டான். தன் தம்பி பாரிஸின் நடவடிக்கையால் இந்தப் போரே இலியம் நகரின் மீது திணிக்கப்பட்டுள்ளது என்பதை நன்குணர்ந்த ஹெக்டர் அதற்காகத் தம்பியைக் குறை கூறாமல் டிரோஜன்கள் வீரத்தில் கிரேக்கருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினான். தன் மனத்தில் ஏற்பட்ட அத்தனை சஞ்சலங்களையும் ஒதுக்கிவிட்டு போர் வெறியை மட்டும் நெஞ்சில் ஏற்றிக்கொண்டு போர்முனைக்கு வந்தான்.
ஹெக்டரின் தூரத்துச் சகோதரன் ஒருவன் கடவுளர்களின் எண்ணத்தை அறிந்து அதன்படி ஹெக்டரை தனி யுத்தத்திற்குச் சூளுரைக்கும்படி வேண்டிக்கொண்டான். ஏற்கனவே பாரிஸ் துவங்கிய தனி மனிதப் போரில் அவன் பாதியில் ஓடி ஒளிந்து அதனால் டிரோஜன்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் இதன் மூலம் மாற்ற விரும்பினான். தன்னை வெல்லக் கிரேக்கத்தில் எவனாலும் முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஹெக்டருக்கு நிறையவே இருந்தது.
ஹெக்டரின் சவாலைக் கேட்டதும் கிரேக்கப் படையில் சற்று அமைதி நிலவியது. ஹெக்டருடன் எப்படித் தனியே போரிடுவது என்ற தயக்கம் அனைவரது முகத்திலும் தெரிந்தது. மன்னன் மெலிசியஸ் கடும்கோபம் கொண்டு தானே போரிடப் போவதாகவும் அறிவித்தான்.அதைக் கண்ட மற்ற தளபதிகள் அனைவரும் ஒருமித்தமாக முன் வந்தனர். அவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று திருவுளச் சீட்டுப் போட்டார்கள். மாவீரன் அஜாக்ஸுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
ஈட்டியும் கேடயத்தையும் அணிந்த ஹெக்டரும் அஜாக்ஸும் போருக்குத் தயாரானார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மிகப் பலமாகத் தாக்கினர். இருவருடைய பலமும் சமய அளவில் இருந்தது. பல முறை அஜாக்ஸின் ஈட்டி ஹெக்டரின் உடலைக் கிழித்து இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஹெக்டரும் அஜாக்ஸை பல முறை தாக்கி நிலை குலையச் செய்தான். அஜாக்ஸ் எறிந்த பெரிய பாறையில் மாட்டிக்கொண்டு சற்றுநேரம் தவித்தான் ஹெக்டர். ஆனால் அப்போலோ அவன் உதவிக்கு வந்து அவனை அந்த இக்கட்டிலிருந்து விடுவித்தான்.
காலையிலிருந்து இரு மாபெரும் வீரர்களும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கும்போது மாலை மயங்கி இரவு வந்தது. இரவில் போரைத் தொடரக்கூடாது என்ற கடவுளர் ஜீயஸின் கருத்தை அவரது தூதன் கூற வாழா சாவா என்ற தனிமனிதப் போரை அன்றைக்கு நிறுத்தி மறுநாள் தொடர இரு வீரர்களும் ஒப்புக் கொண்டனர்.
வெற்றி தோல்வி என்று யாருக்கும் கிடைக்காத அன்றைய இரவு கிரேக்கர் டிரோஜன் இரு அணிகளும் தங்கள் போர்த் திட்டம் பற்றி மந்திராலோசனை செய்ய நல்ல வாய்ப்பாக அமைந்தது. இறந்தவர்களின் உடலை மரியாதையுடன் எரிக்க போர் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று கிரேக்கர்கள் விரும்பினார்கள். அதேசமயம் மாபெரும் இன அழிவைத் தவிர்க்க பாரிஸ் ஹெலனையும் அவளுடன் கொண்டுவந்த திரவியங்களையும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தை டிராய் நாட்டு அமைச்சர் முன்மொழிய அதற்கு பாரிஸ் என்ன சொல்லப்போகிறான் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்!
(தொடரும்)