கவிதா மலை ஏழுமலை  – நாகேந்திர பாரதி

 

தமிழ் இலக்கிய உலகம் கொடுத்து வச்சது அவ்வளவு தான் சார் .ஆமா நான் இனிமே கவிதை எழுதுறதே இல்லை ன்னு முடிவு பண்ணிட்டேன். வருத்தப்படாதீங்க சார், உங்களுக்குத் தெரியறது மத்தவங்களுக்கு தெரியலையே .என்ன பண்றது .

இந்த ரமேஷ் இருக்கானே, அவனைப் பத்தி எவ்வளவோ உயர்வா நினைச்சி இருந்தேன். என்னோட கவிதைகளின் அரங்கேற்றம் எல்லாமே அவன் முன்னிலையில் தான். என்னோட ‘ஜீவாதாரண நுண்ணறிப்பு ‘ அப்படிங்கிற கவிதை முதல்ல அவனுக்கு புரியலைன்னாலும் பிறகு அரை மணி நேரம் ‘மிருதங்க விலாஸ் ஹோட்டல்’ல டிபன் வாங்கிக் கொடுத்து விளக்கம் சொன்னப்போ, ரொம்ப ‘ருசி’கரமான கதை ன்னு சபாஷ் போட்டான். இதே மாதிரி தான் என்னோட ‘முலங்கொன்று கேதாரம்’ கவிதையும் மிருதங்க விலாஸ் ஹோட்டல்ல தான் அவனுக்குப் புரிஞ்சது .

நான் என்னோட கவிதை வரிகளை அனுபவிச்சுச் சொல்றப்போ அவனும் அந்த பிளேட்டுல இருந்த அல்வாவை அனுபவிச்சுச் சாப்பிட்டு வாயிலே அல்வாவோட ‘ கழுதை நல்லா இழுக்குது’ அதாவது ‘கவிதை நல்லா இருக்குது’ ன்னு மதிப்புரை சொன்னபோது எனக்கு புளகாங்கிதமா இருந்தது . நான் அவனைப் பற்றி என்னவெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன். எல்லாவற்றையும் கெடுத்து விட்டானே. அவன் என் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவான். அதே கையோடு என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்குவான், என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படித் தகர்த்து விட்டானே பாவி.

‘அப்படி என்ன செய்துட்டான் ‘ ன்னு கேக்கிறீங்களா . மணி கிட்ட சொல்லி இருக்கான் சார். ‘என் கவிதை எல்லாம் ஒண்ணுமே புரியாதாம் . அவன் சாப்பிடுற நேரத்துல நான் சொல்லிச் சொல்லி அவனுக்கு வயித்து வலி வந்துருச்சாம் ‘. என்னங்க, கவிதையில காரம் இருந்தா அதுக்காக வயிற்றில் அல்சர் வருமா ‘.

பாரதியார் கிட்ட இது மாதிரி யாராவது சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பார், என்று எனக்குத் தெரியாது .ஆனால் நான் என் உணர்ச்சி வேகத்தை ‘கடுதாக சித்தி ‘என்கிற கவிதையில கொட்டித் தீர்த்துட்டேன் . அந்தக் கவிதையை மட்டும் அவன் படிச்சான்னா, நிச்சயம் தூக்கு போட்டுட்டு செத்துருவான் .ஆனா அதை அவனுக்குப் புரிய வைக்க அவன திரும்ப மிருதங்க விலாஸ் ஹோட்டலுக்கு நான் கூட்டிட்டுப் போக மாட்டேன்.

என்னமோ போங்க சார், எனக்கு உலகமே வெறுப்பு ஆயிடுச்சு. என்ன சார் இது, பாரதியாருக்கு அடுத்து இப்படி ஒரு நல்ல கவிஞனா நான் வந்து இருக்கேன். யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. இந்தப் பத்திரிகை ஆசிரியர்களை நினைச்சா பத்திண்டு வர்றது சார். நான் எழுதி அனுப்புற கவிதைகளை மட்டும் இல்ல, எவனோ எழுதின கவிதைகளை எல்லாம் கூட ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்திக் கிட்டு எனக்கே அனுப்பி விடுறாங்க. என்ன விஷயம்ன்னு கேக்குறப்போ ‘புரியாத கவிதைன்னு எது வந்தாலும் அது என்னோடது தான்னு நினைச்சு திருப்பி அனுப்பி விடுறாங்களாம்’. எல்லாம் என்னோட தப்பு தான் சார் .ஒவ்வொரு கவிதையோடவும் ஸ்டாம்ப்கள் ரெண்டு மூணு வச்சு அனுப்புறேன் இல்லையா . எனக்கு வேணும் . நான் என்ன அவங்க வீட்டு குப்பைக் கூடயா சார், என்ன சார் இது கிண்டல் பண்றாங்களா .

சரி அதை விடுங்க ,எங்க தெருவுல கூட நான் ஒரு பெரிய கவிஞன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அதனால நான் கொஞ்சம் நிமிர்ந்த மார்போடு அப்படி கம்பீரமா நடந்து போறது உண்டு. அதுக்காக , அதுக்காக இப்படியா சார் , அரை லூசுன்னா சார் சொல்றது. என் பையன் வந்து என்கிட்ட கேட்கிறான் .’அப்பா, அப்பா உங்கள அரை லூசுன்னு தெரு முழுக்க பேசிக்கிறாங்க . நீங்கதான் முழு லூசு ஆச்சேப்பா . எப்படி அவங்க அரை லூசுன்னு சொல்லலாம் . ‘

எனக்கு எப்படி இருக்கும் பாருங்க. நீங்களே சொல்லுங்க. ஒரு தலை சிறந்த கவிஞனுக்கு வீட்டிலேயே எவ்வளவு மரியாதை கிடைக்குது பாருங்க. இவங்களை என்ன செய்ய முடியும். எல்லாரையும் கண்டித்து ‘தூரப்பிரம்ம புஷ்பம்’ அப்படிங்கிற கவிதை எழுதினேன். வேற என்ன பண்ண முடியும் ஒரு கவிஞனால்ல . சொல்லுங்க .

,இந்த லட்சணத்துல, இவங்க எப்படி எனக்கு ‘கவிதாமலை’ன்னு பட்டம் கொடுப்பாங்க .’கவிதா மலை ஏழுமலை’ ன்னா எவ்வளவு நல்லா இருக்கு, இல்ல . அரை லூசு ஏழுமலைன்னா அசிங்கமா இல்ல . என்ன சார் இது, உங்களுக்குத் தெரியுது எனக்குத் தெரியுது . நான் அந்தப் பட்டத்திற்கு ரொம்ப பொருத்தமானவன்ன்னு. அரை லூசு இல்லே சார் , கவிதா மலை பட்டத்திற்கு. புரிய வேண்டிய உங்களுக்கே புரியலையே, நான் என்ன பண்றது .

இதே மாதிரிதான் , இந்த அடுத்த வீட்டுக் கிழம் , கிட்டுத் தாத்தா இருக்கே, இதுக்கு என்னோட கற்பனையை காப்பின்னு சொல்றதில்ல ஏக ஆனந்தம். நேத்து திடீர்னு ஒரு கற்பனை வந்துச்சு சார் . அருமையான கற்பனை. ‘நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே’ அப்படின்னு ஒரு அழகான வரி. என் கற்பனையைச் சுரண்டி வந்து கொட்டுறேன். இந்த கிட்டுக் கிழம் என்ன சொல்றது தெரியுமா. ஏற்கனவே சினிமா பாட்டில் வந்த வரியாம் இது. எனக்கு வந்த கோபம் இருக்கே, வயசானவர் என்கிறதால மரியாதையா விட்டுட்டு வந்துட்டேன்.

சரி நீங்க என்ன சொல்றீங்க, நம்ம மதிப்பு தெரியாத இடத்தில் ஏன் நம்ம கவிதையை விடணும் இல்லையா .ஆனா என்னோட மதிப்புத் தெரிஞ்சவங்க, உங்களைத் தவிர வேற ஒருத்தருமே இல்லையே சார், இந்த உலகத்திலே. ‘அதனாலதான் இனிமே கவிதையே எழுதப்போறதில்லை’ ன்னு முடிவு பண்ணிட்டேன் சார் . நீங்க புரிஞ்சு அழறீங்க. வேறு யாராவது படிச்சா வேணும்னே சிரிப்பாங்க. என்னோட அருமை தெரியாத ஜனங்க சார்.

 

2 responses to “கவிதா மலை ஏழுமலை  – நாகேந்திர பாரதி

  1. உங்களது கவிதைகள் , ‘ஜீவாதாரண நுண்ணறிப்பு’, ‘கடுதாக சித்தி’, ‘தூரப்பிரம்ம புஷ்பம்’ அனைத்தையும் உங்கள் வாயால் கேட்க ஆவலுடன் இருக்கிறேன். மிருதங்க விலாசில் சந்திப்போம்!

    Like

  2. நானும்தான் நண்பரே..! போகும்போது மறக்காமல் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.